சில நொடிகளில் மீண்டும் மேனேஜர் சுதந்திரத்திற்கு அழைத்து அழைப்பை ஏற்கவில்லை என்று சொல்ல,
“பார்த்திவ்…” என்ற பொழுதே,
“புரிஞ்சது அங்கிள்…” என்றான் பார்த்திவ்.
ஸ்ருதியின் இந்த அலட்சியத்தில் மனமெல்லாம் சிறு சோர்வு. உண்மையில் அத்தனை மனஉளைச்சலில் இருந்தான் பார்த்திவ்.
பாடலை முடித்துக்கொடுக்க இருந்த கால அவகாசத்திற்கு முன்பே அவர்கள் நெருக்கடி கொடுக்க, அதுவும் அதிகாரமாக சொல்லியிருந்தால் தூக்கி போட்டுவிட்டு சென்றிருப்பான்.
அத்தனை முறை தயாரிப்பாளரும், இயக்குனரும் இறைஞ்சுதலாக கேட்டதும் மறுக்கமுடியவில்லை பார்த்திவ்வால்.
இதில் இன்னொருவர் இன்னொரு படம் சாரங்கபாணியுடன் இணைந்து பணியாற்ற ஒரு வற்புறுத்தல்.
எத்தனைமுறை மறுத்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் தொடர்புகொள்ளவே அந்த ஆற்றாமை வேறு புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறார்களே என்று.
இறுதியாக பணியாற்றிய படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பிற்காக பார்த்திவ் சில முடிவுகள் எடுத்திருந்தான்.
சாரங்கபாணியுடன் இனி எக்காலத்திலும் பணியாற்ற போவதில்லை என்ற அறிவிப்பை ஊடக வாயிலாக வெளியிட காத்திருந்தான்.
அதனை அவர்களிடம் பகிரங்கமாக அறிவிப்பாக தெரியப்படுத்தும் வரை இதை எல்லாம் பொறுத்து தான் ஆகவேண்டும்.
இதில் இந்த ஒருவாரமும் தன்னை எங்கே என்று கூட தேடாத பெண் மீண்டும் வந்ததிலிருந்து நொடிக்கு நொடி தன்னை மையம் கொள்ள,
‘இப்போது மட்டும் தான் தென்படுகிறோமா?’ என்றொரு கோபம். கோபம் என்பதை விட வேறு எந்த வார்த்தைகளை கொண்டும் அவனால் அதனை நிரப்ப முடியவில்லை.
கோபத்திற்குள்ளேயே அதனை அடக்கிவிட்டான். எல்லாம் சேர்ந்து ஸ்ருதியிடம் மொத்தமாய் சேர்த்தாகிவிட்டது ஆவேசமாக.
இப்போதும் அன்று மாலை வரை தான் அவனின் காத்திருப்பு எல்லாம். அதன் பின் தானாக இருமுறை அழைக்க அழைப்பை எடுக்கவே இல்லை ஸ்ருதி.
“பிக்கப் ஸ்ருதி…” என தனக்குள் சொல்லிக்கொண்டாலும் மீண்டும் அழைக்கவில்லை.
மறுநாள் அவளாக வருகிறாளா என பார்க்க இல்லை. அவளின் கோபமும், குட்பை என்ற வார்த்தையும் சுர்ரென தாக்கியது பார்த்திவ்வை.
நள்ளிரவு நெருங்க சுபாஷ், சுதந்திரத்தை வீட்டிற்கு அனுப்பியவன் ஸ்டூடியோவிலேயே இருந்துகொண்டான் பார்த்திவ்.
——————————————————–
விடுதியில் இரவு உணவை முடித்துவிட்டு வந்த ஸ்ருதி சுபஷ்வினியிடம் பேசி வீட்டில் எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.
இன்னும் நடந்த சண்டையை அவளிடம் சொல்லவில்லை. சொன்னால் அத்தனை திட்டுவிழும் என வாயை திறக்காமல் ரகசியம் காத்தாள் சுருதி.
போன் பேசி வைத்த பின்னர் உறக்கம் வராமல் படுக்கையிலேயே புரண்டுகொண்டிருந்தாள்.
கண்ணை மூடினால் அத்தனைபேர் முன்பும் தன் முகத்தில் அவன் வீசி எறிந்த தாள்களும், மைக்கை தட்டிவிட்டு அவளை தள்ளாமல் தள்ளிவிட்டு அவன் சென்ற கோப காட்சியும் தான் வந்து நின்றது.
“ரௌத்திரம், அப்பப்பா, எத்தனை கோபம்?…” என முணுமுணுத்தவள் இதழ்களில் மெல்லிய ரசனை.
“ரோஷம், மானம், சூடு, சொரணை இதெல்லாம் எங்க போச்சு ஸ்ருதி உனக்கு? மொத்தமா லூஸாகிட்ட…” என தன் தலையில் அடித்துக்கொண்டவள் புரண்டு படுத்தாள்.
இரு நாட்களாக எங்கும் செல்லவில்லை. அறைக்குள்ளேயே தான் முடங்கி கிடக்கிறாள்.
அவனின் ஸ்டூடியோ மேனேஜரிடமிருந்து அத்தனைமுறை அழைப்பு வந்தும் ஏற்கவில்லை ஸ்ருதகீர்த்தி.
“பிராந்தன்…” தன் போனில் கூகுளில் அவனின் புகைப்படத்தை தேடி எடுத்து பார்த்தவள் தன் விரல்கள் கொண்டு அவன் முகத்தை தட்டிக்கொண்டே இருக்க அறைக்கதவும் தட்டப்படும் சத்தம்.
இந்த நேரத்தில் யார் எனும் யோசனையுடன் கதவை திறக்க கீழே ரிசப்ஷனில் இருக்கும் பெண்.
“உனக்கு விஸிட்டர்…” என சொல்லிவிட்டு செல்ல, இந்த நேரத்தில் யார் என்ற யோசனையுடன் இறங்கி கீழே சென்றாள் ஸ்ருதி.
“எங்க?…” என கேட்டபடி விஸிட்டர் ஹாலை பார்க்க அங்கே யாருமில்லை.
“வெளில வெய்ட் பன்றாங்க….” என்றவள்,
“போய்ட்டு சீக்கிரம் வந்திரு ஸ்ருதி. மேம் சீட்ல இல்லை…” என்று புதிர் போட,
“ஏன் அந்த விஸிட்டர் உள்ள வரமாட்டாங்களா? அவ்வளோ பெரிய அப்பாடக்கரா?….” என்று கேட்டுக்கொண்டே வெளியே சென்றாள்.
“அதான் என்ன காரணம்?…” என்றவனை தீர்க்கமாக பார்த்துக்கொண்டே வேண்டுமென்றே,
“ஹ்ம்ம், எனக்கு உங்களை பிடிக்குது. விரும்ப ஆரம்பிச்சுட்டேன். இன்னும் ரெண்டுநாள் போச்சுன்னா ப்ரப்போஸ் பண்ணிடுவேனோன்னு தோணிருச்சு. அதான் வரலை. இப்ப ஓகே வா? காரணம் தெரிஞ்சிருச்சா?…” என இதையும் இலகுவாகவே சொல்லியவள் அவன் அதிர்வான் என்று பார்க்க,
“ஸோ வாட்? இப்ப சொல்லியாச்சே. கிளம்பு…” என்ற பாவனையில் ஸ்ருதகீர்த்தி தான் திகைத்தாள்.
இதுவா அந்த காரணம் என கோபப்படுவான், கொந்தளிப்பான், இங்கேயே இப்படியே விட்டு செல்வான் என நினைக்க அது ஒருவிஷயமே இல்லை என்பதை போல் நின்றதை கண்டு பேச்சின்றி அவனை பார்க்க,
“அக்ரிமென்ட் படி இன்னும் மூணு வருஷத்துக்கு மேல என்னோட ம்யூஸிக்ல நீ பாடித்தான் ஆகனும்….” என கட்டளை குரலில் சொல்லிவிட்டு,
“காஸ்ட்யூம் மாத்தனுமா? இல்லை இப்படியே தான் வரதா இருக்கியா ஸ்ருதி?…” என கேட்டுக்கொண்டே கார் கதவை திறந்து அவன் ஏறி உள்ளே அமர தன்னுடைய குனிந்து பார்த்தாள்.
எங்கும் செல்லாததால் முட்டிவரை இலகுவான பேண்டும், டிஷர்ட்டும் அணிந்திருந்தவள் வெளியில் வருவதால் ஒரு ஷாலை கழுத்தை சுற்றி போட்டிருந்தாள்.
அவ்வளவு ரோஷமாக சொல்லிவிட்டு வந்தோமே? இப்போது அக்ரிமெண்டை வைத்து அழைக்க உடனே மறுக்காமல், விவாதம் செய்யாமல் செல்கிறோமே என ஒரு மனது அவளை பிடித்து ஆட்டியது.
“என்னன்னாலும் நியாயமா நடக்கனும் மோளே. சொல்றதை சொல்லியாச்சு. அதுக்கு மேல அவங்க இஷ்டம். நாம பாட தான் போறோம்…” என சொல்லி கிளம்பி கீழே வந்தவள் பார்த்திவ் பக்கமிருந்த கண்ணாடியை தட்டிவிட்டு அவன் திறந்ததும்,
“நான் என் ஸ்கூட்டில வரேன்…” என்று சொல்லி அதில் கிளம்ப அவன் தன் பின்னே வருவதற்கான அறிகுறியே இல்லை.
சில நொடிகள் நின்று பார்த்தவள் தன் வாகனத்தை திருப்பிக்கொண்டு மீண்டும் விடுதி வர இன்னும் பார்த்திவ் அங்கேயே தான் இருந்தான்.
“ஸார்…” என மீண்டும் கண்ணாடி கதவை தட்டினாள்.
திறக்கவில்லை. ஆனால் உள்ளிருந்து அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான் பார்த்திவ்.
“அடங்கமாட்டேன்றானே? எனக்கு வேற டென்ஷனாகுது…” என்று பல்லை கடித்தவள் அங்கேயே நிற்க பார்த்துக்கொண்டிருந்தவன் கையை கட்டியபடி கண்ணை மூடிக்கொண்டான்.
“முடிஞ்சது. இன்னைக்கு இங்க ஒரு கூட்டமே கூட போகுது. எனக்கென்ன?…” என்றவள்,
“ஹலோ…” என்று மீண்டும் கதவை தட்டி அழைக்க இப்போது கண்ணாடியை கூட இறக்கவில்லை பார்த்திவ்.
ஸ்ருதி கார் கதவை திறக்க சட்டென அது திறந்துகொண்டது. ‘இவனை’ என நினைத்தவள்,
“இவ்வளோ பிடிவாதம் பண்ணினா நான் உங்களுக்கு மேல பண்ணுவேன் ஸார். வந்தா என் ஸ்கூட்டில தான் வருவேன். இல்லைன்னா வரமாட்டேன்…” என்று சொல்ல அவன் பேசினால் தானே?
இப்படித்தானே இருநாட்கள் என்னுடன் பேசாமல் அலைகழித்தாய் என்பதை போலிருந்தது அவனின் இந்த செயல்.