“நான் போறேன். காரை லாக் பண்ண கூட இல்லை நீங்க. யாராச்சும் பார்த்தா கூடிருவாங்க. உங்க மேல அப்பறம் கூட்டத்தை சேர்த்த நியூசென்ஸ் கேஸாகிரும்…” என்றதற்கும் அசரவில்லை.
“எப்படியும் போங்க…” என்றவள் கதவை மூடிவிட்டு தனது வாகனத்தை விடுதிக்குள் கொண்டு நிறுத்தினாள்.
மீண்டும் வெளியே வந்து எட்டி பார்க்க கிளம்பவில்லை பார்த்திவ். பத்து நிமிடங்கள் கூட தாண்டவில்லை.
மறுபடியும் இன்னும் கார் கதவு திறக்கிறதா என பரிசோதிக்க அப்படியே தான் இருந்தது.
கோபமான கோபம். அன்றைய நாளை விட இன்று தான் இன்னும் ஸ்ருதிக்கு அவன் மேல் எரிச்சல் கூடியது.
படாரென கதவை அறைந்து சாற்றியவள் மறுபக்கம் காரில் ஏறி அமர்ந்துகொண்டதும் உடனே சென்ட்ரல் லாக் போடப்பட்டது.
“இவ்வளோ கோபமும், பிடிவாதமும் நான் பண்ண வேண்டியது. ஒரு கையெழுத்தை போட்டுட்டோமேனு தான் பேசாம இருக்கேன். இப்படியே பண்ணுனீங்க, ஊரை விட்டு ஓடி போய்ருவேன்…” என்றாள் ஸ்ருதி அத்தனை சத்தமாக.
“குட் டிசிஷன்…” என அப்போது தான் வாயை திறந்தான் பார்த்திவ்.
“நான் ஏன் ஓடனும்? நீங்க ஓடுங்க. எனக்கென்ன தேவைக்கு? ஒரு பேச்சுக்கு சொல்லிட்டா செய்வாங்களா?…” என்றவள்,
“விண்டோவ் ஓபன் பண்ணுங்க. எனக்கு என்னமோ மாதிரி இருக்கு….” என்றாள்.
அவள் பக்கம் மட்டும் ஜன்னல் கதவை திறந்துவிட்டவன் மௌனமாக ஓட்டிக்கொண்டு வர அந்த அமைதியும் அவ்வளவு எரிச்சல்.
“அப்படி என்ன கோபம் உங்களுக்கு? அப்போ உங்களுக்கு மட்டும் கோபம் வரலாம். எங்களுக்கெல்லாம் வர கூடாதா? நான் ரோஷப்பட்டு வரமாட்டேன்னு சொன்னா அக்ரிமெண்ட் பேப்பரை காமிப்பீங்களா?…” என்றதற்கு பதிலில்லை அவனிடம்.
“என்ன ஒரு மென்டாலிட்டி? அவ்வளோ கோவம் வருது. வரலைன்னு காரணம் தெரிஞ்சும் கேட்கறீங்க. நான் வேற காரணம் சொன்னதும் அதெல்லாம் ஒரு விஷயமான்னு ஒரு லுக். அவ்வளவும் ஆணவம்…” என்று பேசினாள்.
“நான் ஒருத்தி எவ்வளோ பெரிய விஷயம் சொல்லியிருக்கேன். உங்களுக்கு ப்ரப்போஸ் பண்ணியிருக்கேன். கொஞ்சமும் அப்படியா, ஏன் இப்படியெல்லாம் ஒரு கேள்வி இல்லை. தூசியா தூக்கி போட்டாச்சு இல்ல?…” என்று கேட்க,
“நீ ப்ரப்போஸ் பண்ணலையே? இன்பர்மேஷன் மாதிரி தானே குடுத்த?…” என்றான் பார்த்திவ் அதற்கு பதிலாக.
“இதுவேறையா? கண்டிப்பா பண்ணவே மாட்டேன். அப்பவும் அதை மதிக்கமாட்டீங்க. என்னோட கவனம் எல்லாம் இனிமே ம்யூஸிக்ல மட்டும் தான். இந்த அக்ரிமென்ட் முடியவும் பிச்சுக்கோன்னு போய்ருவேன்…” என கோபத்தை எப்படி எல்லாம் காண்பிக்கவேண்டுமோ அப்படியெல்லாம் பேசி காண்பிக்க அவளுக்கு தெரியவில்லை பார்த்திவ்வின் முக பாவனைகள்.
இருளில் அவன் முகம் விகசித்துக்கொண்டிருந்ததை காணாமல், அவள் பேச்சை ரசித்துக்கொண்டிருந்ததை உணராமல் இன்னுமின்னும் பேசி பேசி சோர்ந்தவள்,
“என் வாய்ஸ் மட்டும் இந்த காருக்குள்ள. என்னாலையே கேட்க முடியலை…” என கோபமாய் அவன் காரின் டேஷ்போர்டை திறந்தாள்.
குட்டி குட்டியாய் நிறைய பென்ட்ரைவ்கள் அதற்குள் இருக்க தேடி தேடி ஒன்றை எடுத்து இணைப்பில் பொருத்தி ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.
பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்க புருவம் சுருக்கியவள் திரும்பி அதனை பார்த்தாள். அதில் அடுத்த பாடலை ஒலிக்கவிட மேலும் கண்கள் இடுங்கியது.
அடுத்தடுத்து பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்க இறுதி வரை சென்றவள் தன் மூச்சை ஆழ உள்வாங்கினாள்.
தொண்டை வரை முட்டி மோதும் அந்த வார்த்தைகள் வெளிவந்துவிடாமல் இருக்க பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள ஸ்டூடியோவும் வந்தது.
காரைவிட்டு இருங்குகையில் அந்த பாடல் தொகுப்பு அடங்கிய பென்ட்ரைவ்வை உருவி கையில் வைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
பார்த்திவ் வரும் வரை லாபியில் அமர்ந்திருந்தவள் அங்கு ஒருசிலரை தவிர வேறு யாரும் இல்லை என்பதையும் உணரவில்லை.
“வா ஸ்ருதி…” என்ற அழைப்புடன் அறைக்குள் செல்ல எழுந்து உள்ளே சென்றவள் தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டாள்.
“தண்ணியை குடி…” என்று அவளுக்கு தந்துவிட்டு எதிர் இருக்கையில் அமர்ந்தவன்,
“திட்ட வேற ஏதாவது இருக்கா?…” என கேட்க,
“இதுக்கு மேல கேட்க கூடாதுன்னு என்னால கண்ட்ரோலா இருக்க முடியலை ஸார். இந்த பென்ட்ரைவ்ல இருக்கறது எல்லாம் நான் அந்த சேனல்ல பாடின பாட்டுகள் தானே? இதை எல்லாம் சேர்த்து வச்சிருக்கற நீங்க அன்னைக்கு மட்டும் ஏன் அப்படி ஒரு முடிவு எடுத்தீங்க?…” என்றாள் பார்த்திவ்விடம்.
“அங்க எடுக்கப்பட்டது என் முடிவா? வாட் எ ஜோக்?…” என்று மென்னகை புரிந்தவன்,
“ஓகே கிளியர் பண்ணிடலாம்….” என கூறி அந்த இறுதி போட்டியில் நடந்த விஷயங்களை எல்லாம் கூற ஸ்ருதிக்கு அவள் உணர்ந்த விதத்தில் மகிழ்ச்சி மழையாய் பொழிந்தது.
“அந்த நேரம் உன்னை தேடினோம். அந்த ஷோல உன்னோட பயோக்ராபில பெருசா எந்த விவரமும் இல்லை. எங்க இருக்க, என்ன எதுவும் இல்லை. சேனல் தரப்புலையும் உன்னை பத்தி கேட்டதுக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை….” என்றவன்,
“உண்மையை சொல்லனும்ன்னா அந்த நேரம் பத்தோட பதினொன்னா தான் உன்னை நான் தேடினது. ரொம்ப தீவிரமா தேடியிருந்தா அப்பவே கண்டுபிடிச்சிருப்பேன் போல? ஆனா என்னோட ஸ்க்ட்யூல் அதுக்கு இடம் தரலை….”
“என்னோட வேலை, கமிட்மெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப உன்னை நினைக்க வைக்கலை. அதை மறந்து ரொம்ப தூரம் நான் வந்துட்டாலும் உன்னோட வாய்ஸ் மட்டும் எனக்குள்ள ஒலிச்சுட்டே இருந்துச்சு. அழுத்தமான தேடல் இல்லைன்னாலும் நான் தேடினது நிஜம். சமீபமா ரொம்ப தேடினது இன்னும் நிஜம்…” என்றான் புன்னகையுடன்.
பார்த்திவ் சொல்லி முடித்ததும் கண்களை மூடியபடி அவள் மனது உணர்ந்த நிம்மதியை முழுதாய் கிரகிக்க முயன்றாள் ஸ்ருதி.
அவனை சந்தித்த நாட்களுக்கு முன் இடைப்பட்ட நாட்களில் எத்தனை முறை இதற்காக தவறாக புரிந்துகொண்டு அவனை பேசியிருப்பாள்.
இப்போது நினைக்கையில் ஸ்ருதியின் மனதெல்லாம் மயிலிறகாய் இலகுவாகிவிட்டது.
“ஓகே வா?…” என கேட்டவன் அவளின் பார்வையில்,
“ஸாரி நேத்து நான் அப்படி நடந்திருக்க கூடாது. கொஞ்சம் எமோஷனல் ப்ளஸ் கடுப்ஸ்ல இருந்தேன். அதான் உன்கிட்ட காமிச்சிட்டேன். தனியா காமிச்சிருக்கனும். நீ என்னை ரொம்பவே டெம்ப்ட் பண்ணிட்ட…” என்றதும் ஸ்ருதி மௌனமாகவே இருந்தாள்.
“கிளாஸ் வேண்டாமா ஸ்ருதி?…” என சிரிப்புடன் பார்த்திவ் கேட்க காரணமின்றிய கண்ணீர் அவள் கண்களில் தித்திப்பாய் வடிந்தது.
“என்ன?…” என்றான் மீண்டும்.
“ம்ஹூம்…” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை.
“ஓய் வாலு, ஒழுங்கா வாயை திறந்து பேசு. இல்லையா கார்ல வரப்போ திட்டுனியே, அப்படியாச்சும் திட்டு. இல்லைன்னா எனக்கு ஒன்னும் ஓடமாட்டேங்குது. இந்த இரிட்டேட்டிங்க்ல இங்க நிறையபேரை புடிச்சு வாங்கிவிட்டுட்டேன்…” என்று சொல்லவே செய்ய,
“ம்ஹூம்…” என்றவள் தன் இதழ்களுக்கு நடுவே விரலை வைத்துக்கொள்ள,
“வெறுப்பேத்தற நீ. ஒருவாரம் நீ அப்படி பேசாம இருந்ததுக்கு தான் என்கிட்ட பாட்டு வாங்கின. திரும்ப பன்ற. திரும்ப திரும்ப பன்ற…” என விரல் நீட்டி பார்த்திவ் எச்சரிக்க வார்த்தைகளற்ற புன்னகை ஸ்ருதி இதழ்களில்.
“பேசாம நீ இங்க இருந்து போக முடியாது. அக்ரிமென்ட் இருக்கு…” என்று வேறு பார்த்திவ் மிரட்ட இன்னும் புன்னகைத்தாள் ஸ்ருதி.
புன்னகை கொஞ்சம் விரிந்தது. இதழ் மலர்ந்தது. சுவாசம் பெற்றது. ஸ்வரம் பெற்றது. இசையாய் உருவகம் பெற்றது.
அவனுக்கு தன்னை புரிகிறதா, தன் விருப்பத்தை எப்படி ஏற்றுக்கொண்டான் எதுவும் தேவையிருக்கவில்லை.
ஆனால் இந்த நிமிடம் மனம் விட்டு ஒரு புன்னகை. அழகாய், ஆர்ப்பரிப்பாய், விழிநீருடன் வெள்ளமாய் பிராவகமெடுத்தது.
பார்த்திவ் அவளின் அழுகையையும், புன்னகையையும் கண்ணகற்றாமல் பார்த்தவன் அதற்கு எவ்வித இடையூறும் தரவில்லை.
அவன் தனது கைபேசியில் அதனை பதிவாய் சேமித்துக்கொள்ள வழியும் நீரை புறங்கையால் துடைக்க துடைக்க அவள் புன்னகை விரிந்தது.