“டூ மினிட்ஸ், ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்…” என வேகமாய் அவன் உள்ளே சென்றான்.
சுதந்திரம் பார்த்திவ் கிருஷ்ணாவின் மேனேஜர், பிஏ, வெல்விஷர் இப்படி நிறைய சொல்லிக்கொண்டு செல்லலாம்.
இயக்குனர் சாரங்கபாணிக்கும் நம்பிக்கையானவர். அவரின் அறிமுகத்தில் தான் சுதந்திரம் பார்த்திவ்விடம் வேலை என்று சேர்ந்திருந்தார்.
வயதில் மூத்தவர் என்பதால் பணி நிமித்தமாகவே இருந்தாலும் பார்த்திவ்வின் மரியாதை அவரிடம் என்றும் குறைந்ததில்லை.
இப்போதும் காலையே வந்து காத்துக்கொண்டிருந்தவரிடம் உடை மாற்றி வந்தவன் இன்முகத்துடன் வரவேற்றான்.
“என்ன அங்கிள் காபி குடிச்சாச்சா?…” என்றதும்,
“இவ்வளவு நேரம் குடிக்காம இருப்பேனா பார்த்திவ்? வந்ததும் அம்மா குடுத்துட்டாங்க…” என்றார் சுதந்திரம்.
“இன்னைக்கு உங்க பொண்ணு ஸ்கூல்ல பங்க்ஷன் இருக்குன்னு சொன்னீங்களே? எப்போ?…” என அவர் தனக்கு ப்ரோக்ராம் சொல்லும் முன் தான் அவரினதை கேட்டான்.
“ஈவ்னிங் தான் பார்த்திவ்…” என்றவர் பார்த்திவ்வின் ப்ரோக்ராமை சொல்ல ஆரம்பித்தார்.
“இன்னைக்கு சாரங்கபாணி ஸார் வீட்டுக்கு இன்விடேஷன்ஸ் செலெக்ட் செய்ய போகனும். கூடவே நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் சைன் பண்ணனும். அங்க இருந்து அவுட்டோர்ல இருக்கற ரெசார்ட் போறோம். ப்ரீ வெட்டிங் ஷூட் நடக்க போறதுக்கு முன்னாடி அங்க ஒரு விசிட். நைட் ஏழு மணிக்கு ஹோட்டல் தாஜ்ல ப்ரடியூசர் ராம்கணேஷ் கூட ஒரு மீட்டிங்….”
அவர் சொல்லி முடிக்கவும் நெற்றியை கீறியபடி கண் மூடி யோசித்தான் பார்த்திவ் கிருஷ்ணா.
“என்ன பார்த்திவ்? எனி சேஞ்சஸ்?…” என அவர் புருவம் சுருக்கி கண்ணாடியை சரி செய்தபடி கேட்க,
“எஸ் அங்கிள், இன்விடேஷன் பார்க்க ஈவ்னிங் போவோம். ராம்கணேஷ் ப்ரோக்ராம் நாளை மறுநாள் சேஞ்ச் பண்ணிடுங்க. நாளைக்கு அம்மா அப்பா வெட்டிங் டே. ஸோ எந்த ப்ரோக்ராமும் வேண்டாம்…” என்று சொல்ல,
“ஓகே அப்போ ரிசார்ட்…”
“அதுக்கு இப்போ போவோம் அங்கிள். நான் ஸாருக்கு கால் பண்ணி சொல்லிடறேன். அம்மாவும் ஆராதனாவை பார்க்க வரனும்னு சொன்னாங்க…” என்று புன்சிரிப்புடன் சொல்ல,
“மருமகளை வாரம் ஒருமுறை பார்க்கலைன்னா அம்மாவுக்கும் அந்த வாரம் முடியாது…” என்றார் சுதந்திரம்.
“இல்லையா பின்ன? கல்யாணம் வைக்க இன்னும் நாலு மாசமாகும்ன்னு சொல்லிட்டாங்க. அதுக்காக மருமகளை பார்க்காம இருக்க முடியுமா?…” என வந்தமர்ந்தார் மஞ்சுளா.
பார்த்திவ்வின் தாய். மகனின் திருமணம் முடிவானதில் இருந்து ஆராதனாவிற்கான பரிசுப்பொருட்கள் வாரம் இருமுறையோ, ஒருமுறையோ அவளிடம் நேரில் சந்தித்து தந்துவிட்டு பேசி இருந்து தான் வருவார் அவர்.
இன்றும் தான் வாங்கி வைத்திருக்கும் அவளுக்கான பரிசை கொண்டுசெல்ல தான் கிளம்புவதாக சொல்ல,
“சரி சரி, அங்க இருந்து ஸாரோட பொண்ணு சீர்வரிசைன்னு எதுவும் எடுத்துட்டு வர வேண்டாம். நீங்களே குடுத்து கொண்டுட்டு வந்திருவீங்க. அவ்வளோ குடுக்கறீங்களே?…” என்றார் சுதந்திரம் சிரிப்புடன்.
எளிமையும், புதுமையுமான ஒரு மனிதி. எந்த இடத்திலும் நடுநிலை தவறாதவர். மகனின் உயர்வு இத்தனை பெரிதாக இருந்தாலும் இன்றும் பழமையை மறக்காதவர்.
அவரின் சொந்தங்கள் வீட்டு திருமணம், விசேஷ நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் கலந்துகொள்ள தானே முன் சென்று நிற்பார்.
“காசு, பணம், புகழ் எல்லாம் உலகத்துக்கு. சொந்தத்துக்கு சொந்தம் மட்டும் தான் பதிலா இருக்கும். என்னை கூப்பிடாம நடத்திடுவியா நீ?…” என உரிமையுடன் சண்டை பிடிக்கும் மென்மையானவர்.
அதனைக்கொண்டே எப்போதும் மஞ்சுளா என்றால் அவர்களின் சொந்தங்கள் இடையே தனி பிரியம்.
பணத்தை வைத்து எதையும் எடைபோடும் ஆள் இல்லை. அவர் மட்டுமல்லாது அவரின் கணவர் அறிவழகனும் அப்படியே. பிள்ளைகளையும் அந்த தன்மை மாறாமல் வளர்த்திருந்தார்.
“எத்தனை வேலை இருந்தாலும் உன் அத்தை வீட்டு விசேஷத்துல நீ அவங்க மருமகனா தான் வந்து நிக்கனும் பார்த்திவ். வேலை எப்பவும் இருக்கறது தான். ஆனா இந்த மாதிரி சந்தர்ப்பம் தான் நாம ஒண்ணா இருக்க கூடிய நேரம். இழக்க கூடாது…” என்பார்.
அறிவழகன் தடயவியல் துறையில் அதிகாரியாக இருந்து உடல்நிலை காரணமாக விருப்ப பெற்றிருந்தார்.
பார்த்திவ்வின் தம்பி பிரமோத் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் படிப்பில் இறுதியில் இருந்தான்.
இசை குடும்பம் என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் முன்னோடிகள் இல்லை.
இசையில் லயித்த பார்த்திவ்க்கு சாரங்கபாணியின் மூலம் பிரகாசமான வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை கப்பென்று பிடித்துக்கொண்ட அவன் திறமையும் இப்போது முன்னணி இசையமைப்பாளனாக அவனை நிறுத்தி இருந்தது.
இதோ திருமணம் என்று அவர் தன் மகளையே தர முன்வர இரு குடும்பங்களின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் இனிதே நடந்து முடிந்திருந்தது.
மஞ்சுளாவுடன் சுதந்திரம் பேசிக்கொண்டிருக்க பார்த்திவ் அவனின் போனில் வந்திருந்த குறுஞ்செய்தியை பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆராதனா தான் அத்தனை அனுப்பி இருந்தாள். வீட்டிற்கு வருவதை பற்றி கேட்டிருக்க மாலை என சொல்லியிருந்தான் பார்த்திவ்.
“என்னப்பா நாங்க பேசிட்டிருக்கோம். நீ போன்லயே இருக்க? என்ன ஆராதனாவா?…” என்றார் மஞ்சுளா.
“தேங்க்ஸ்ப்பா…” என்று சுதந்திரம் சந்தோஷமாக சொல்ல அவரை முறைத்தவன்,
“இதுதானே வேணாம்ன்றது. நான் ப்ரோக்ராம் மாத்தினா நான் போகனும்னு சொல்லமாட்டீங்களா? எல்லாம் நானே சொல்லனுமா?…” என கேட்க,
“நீ சொல்லிடுவன்னு தான் நான் சொல்லலை…” என சிரித்தார் சுதந்திரம்.
“சரி சரி. வந்து ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு கிளம்புங்க…” என எழுந்த மஞ்சுளா,
“பார்த்தி லஞ்ச்க்கு வந்திடுவியா?…” என்றார்.
“நோ ம்மா. சிட்டியை விட்டு ரொம்ப அவுட்டர்ல இருக்கு ரெசார்ட். போகவே மதியம் ஆகிடும். நான் அங்கயே லஞ்ச் பார்த்துக்கறேன்…” என அவனும் எழுந்துகொண்டான்.
“எதுக்குப்பா அவ்வளோ அவுட்டர்ல?…” மஞ்சுளா கேட்க,
“ரொம்ப அமைதியான இடம். இன்னொன்னு பக்கத்துல மாதிரி ரொம்ப கசகசப்பும் இருக்காது. புக் பண்ணிடலாம்ன்னு மூவு பண்ணியாச்சு. ஆனாலும் நேர்ல பார்த்தா தான் பார்த்திவ் திருப்தின்னு சொல்லிட்டார்…” சுதந்திரமும் சொல்ல,
“ஓகே, கிளம்புங்க…” என மஞ்சுளா கீழே இறங்கிவிட்டார்.
அதன் பின் பத்து நிமிடங்கள் கழித்து பார்த்திவ்வும், சுதந்திரமும் வந்தனர். காலை உணவை முடித்துக்கொண்டு முதலில் ரெக்கார்டிங் ஸ்டூடியோ சென்றவர்கள் அங்கிருந்து நேராக ரிசார்ட் கிளம்பினார்கள்.
“கல்யாணம் முடிஞ்சதும் எவ்வளவு நாள் கேப் பார்த்திவ்?…” என கேட்டார் சுதந்திரம்.
“எதுக்கு கேப் அங்கிள்?…” பார்த்திவ் குறும்புடன் கேட்க,
“எதுக்குன்னு நீங்க நினைச்சீங்கப்பா?…” என சுதந்திரமும் சிரிப்புடன்.
“அது இருக்கட்டும். நீங்க எதுக்கு சொன்னீங்கன்னு கன்பார்ம் பண்ணிக்க தான் கேட்டேன்…” என கண் சிமிட்ட,
“நான் கேட்கவே இல்லை போங்க…” என்றவரின் பின்வாங்குதலில் அப்படி ஒரு சிரிப்பு பார்த்திவ் முகத்தில்.
“நான் பேசவே இல்லை…” என வாயை மூடிக்கொண்டார் சுதந்திரம்.
“சுதந்திரத்துக்கு பேச்சு சுதந்திரம் இருந்தும் சைலன்ட்…” என சொல்லி சிரித்தபடி தான் வந்தான் பார்த்திவ்.
முகத்தில் கல்யாண களை சொட்டியது. அதுவும் அவ்வப்போது ஆராதனாவிடமிருந்து குறுஞ்செய்தி வர பார்க்கும் பொழுதே குழிந்த அவன் கன்னங்களில் புன்னகை நிரம்பியது.
“ரைட் ரைட்…” என சிரித்தபடி சுதந்திரமும் முன்னே திரும்பி அமர்ந்துகொண்டார்.
ட்ரைவர் சுபாஷிடம் பேசிக்கொண்டே அவர் வர பார்த்திவ் ஆராதனாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
நேரம் செல்ல செல்ல தான் அனுப்பிய செய்திக்கு கால தாமதமாக பதில் வர பார்த்துவிட்டு வேலை போல என தொந்தரவு செய்யவில்லை.
“சொல்லுங்க அங்கிள்…” என அடுத்து சுதந்திரத்திடம் வர,
“அங்கிள் உங்களைத்தான்…” என சுபாஷும் கிண்டலாய் சொல்ல,
“போன் இருந்தா மனுஷனை கண்ணுக்கே தெரியாதே. நான் ரெஸ்ட்…” என்று வேண்டுமென்றே கண்ணை மூடி திறக்க என ரிசார்ட் வரை கலகலப்பாய் இருந்தது அந்த பயணம்.
மூன்றுமணி நேரம் ஆகியிருந்தது சாலை நெரிசலில் சிக்கி நின்று நிதானித்து ஊர்ந்து அங்கே வந்து நிற்க.