“சர்ப்ரைஸா இருக்கட்டும் அங்கிள். அதான் அம்மாவுக்கும் எந்த ரிசார்ட்ன்னு சொல்லலை. இல்லைன்னா மருமகளுக்கு போன் பண்ணி சொல்லிருப்பாங்க. ஆராதனா ஷூட் அன்னைக்கு பார்த்துக்கட்டும்…” என்ற பார்த்திவ்,
“உள்ள போகலாம்…” என்றவன் உள்ளே செல்ல உடன் சென்றார் சுதந்திரம்.
“ஒரு ரூம் அரேஞ்ச் பண்ணிடுங்க. நாங்க பார்த்துட்டு வரோம்…” என மேனேஜரிடம் சொல்லிய பார்த்திவ் தன் பிரபஷனல் கேமராவை கையில் எடுத்துக்கொண்டான்.
புகைப்பட விரும்பியான அவன் முன்னிருந்து ஒவ்வொரு இடத்தையும் படம் பிடித்துக்கொண்டே செல்ல அவர்களுக்கு வெல்கம் ட்ரிங் வந்தது.
“வீக் டேய்ஸ் எப்பவும் இப்படி ட்ரையா இருக்குமா?…” என பேச்சு கொடுத்தார் சுதந்திரம்.
“எஸ் ஸார். சிட்டில இருந்து ரொம்ப லாங். ஆனாலும் இந்த அமைதி வேணும்ன்றவங்க தேடி வருவாங்க. அதோட நிறைய பெரிய இடத்து பசங்களுக்கு இங்க தான் பீஸ்ஃபுல்லா இருக்குன்னு வருவாங்க…” என்றார் மேனேஜர்.
ஜூஸை பருகியபடி தோளில் கேமராவுடன் அந்த கார்டனில் நடந்தான் பார்த்திவ் கிருஷ்ணா.
கண்ணுக்கு குளுமையும், மனதிற்கு அமைதியும் தரும் அந்த இடங்களில் சிறு சிறு பறவைகளின் சத்தங்கள் கூட இசையாய் தீண்டியது அந்த இசை கலைஞனின் மனதை.
தானாகவே ஒரு புன்னகை இதழ்களில் உறைந்து நிற்க பின்புறம் இருந்த நீச்சல் குளத்தின் அருகே சென்றவன் மெல்லிய காற்றில் அலையலையாய் நகரும் நீரலையை பார்த்தபடி நின்றான்.
எங்கோ மெல்லிய சிரிப்பு சத்தம் அவனின் காதில் சமீபிக்க பரிட்சயப்பட்ட அந்த சத்தத்தில் திரும்பி பார்த்தவன் கண்கள் இடுங்கியது.
அவரும் பார்த்துவிட்டு தான் வந்திருப்பார் என்பதை அவரின் அதிர்ச்சியிலும், நடுக்கத்திலும் கண்டுகொண்டான் பார்த்திவ்.
கண்கள் இரண்டும் சிவப்பேற ஆரம்பித்தது. ஆனாலும் கட்டுப்படுத்திக்கொண்டான் அவன்.
“ப்ரெண்ட்ஸா கூட இருக்கலாம் பார்த்திவ்?…” என தானே நம்ப முடியாத ஒரு விஷயத்தை அதிலும் அந்த காட்சியை பார்த்துவிட்டு இப்படி சொல்வது அபத்தம் என்று அவருக்கே புரிந்தது.
“ஹாங், பிரண்ட்ஸா?…” என்றவன் இதழ்கள் ஓரமாய் இகழ்ச்சியாய் வளைந்தது.
“மிஸ்டர்.சாரங்கபாணியை வர சொல்லுங்க…” என்று சொல்லி அந்த கார்டனில் காட்டேஜின் முன்னால் இருந்த கல் பெஞ்சில் அமர்ந்துகொண்டான் பார்த்திவ்.
இதயம் சுக்கு நூறாக நொறுங்கி இருந்தது. பூட்டப்பட்ட அறை கதவை பார்த்தவன் சற்று முன் தனக்கு வந்த குறுஞ்செய்தியையும் அதில் காதலுக்கு அறிகுறியாய் விளங்கும் இதயத்தை சுமக்கும் சின்ன சின்ன பொம்மைகளை பார்ப்பதுமாக இருந்தான்.
உடலெல்லாம் தகதகவென தீப்பற்றி எரிய துவங்க எத்தனை முயன்றும் தன் மனதை நிதானப்படுத்த முடியவில்லை.
“இல்லை, அர்ஜன்ட், இங்க வாங்கன்னு மட்டும் சொன்னேன்….”
“குட், அங்கிள் இது வேற யாருக்கும் தெரியக்கூடாது….” என்றவன் கால் மேல் காலிட்டு கைகள் இரண்டையும் பின்னந்தலையில் கோர்த்து அமர்ந்துகொண்டான்.
அவனின் அந்த தோற்றமே அச்சுறுத்துவதாக இருந்தது சுதந்திரத்திற்கு. ஆனாலும் மனது உலைக்களமாய் கொதித்தது.
முகம் அருவருப்பில் சுருங்க தானும் கை கட்டி அங்கே மரத்தில் சாய்ந்து நின்றுகொண்டார்.
அவர்களை அவசரமாக தேடி வந்த மேனேஜரையும் பார்க்க அவருக்கும் தெரிந்திருந்ததில் கூசி போனது பார்த்திவ்விற்கு.
“ஸார்…” என இழுத்தவரிடம்,
“ப்ளீஸ், அமைதியா இருங்க. நாங்க பார்த்துக்கறோம்…” என்று சொல்ல அவனின் வார்த்தையை மீற முடியவில்லை.
இதை அவருமே எதிர்பார்க்கவில்லை. பார்த்திவ்விற்கான அறையை தயார் செய்ய சென்றவர் வெளியே வரும் பொழுது தான் அந்த ஜோடியை கவனித்தார்.
பார்த்ததும் அத்தனை பதட்டம். அதிலும் அவர்களை பார்த்திவ்வும் பார்த்திருந்ததில் இன்னுமே வெடவெடத்து போனார்.
உண்மைக்கும் பார்த்திவ்வினது பரிதாபமான நிலை தான் அவருக்கு தோன்றியது.
ஒன்றும் செய்ய முடியாமல் கையறு நிலை. இதில் தங்கள் ரிசார்ட் பெயரும் அடிபடுமோ என்று யோசித்தார்.
இறுதியாக ஆராதனா அனுப்பியிருந்த குறுஞ்செய்தி. ப்ரெண்டுடன் வெளியில் செல்லவிருப்பதாக போனை அணைக்க போவதாய் சொல்லியிருந்தாள்.
பார்த்திவ் சாரங்கபாணி அங்கே வரும் வரை அசையவில்லை. எங்கும் நகரவில்லை.
அவரும் வந்துவிட்டார். வந்தவர் நடந்ததையும் பார்த்துவிட்டார். மரியாதை இழந்து நின்றும்விட்டார்.
————————————————————-
எல்லாம் முடிந்தது. நிச்சயத்திற்கான அனைத்தையும் திருப்பி அனுப்பிவிட்டான் பார்த்திவ்.
ஒருவாரம் ஆகிவிட்டது. நிச்சயம் முறிந்த விஷயங்கள் வெளியே கசிந்துவிட அவனே சிலருக்கு மறுக்காமல் ஆம் என்றிருந்தான்.
தொலைக்காட்சி செய்திகள், வலைத்தளங்கள், செய்தித்தாள்கள் என அத்தனையிலும் முழுக்க முழுக்க தீ பற்றிக்கொண்டதை போல பரபரப்பு தகவல்.
இசையமைப்பாளர் பார்த்திவ்கிருஷ்ணாவிற்கும், திரைப்பட இயக்குனர் சாரங்கபாணி மகள் ஆராதனாவிற்கும் நடக்கவிருந்த திருமணம் நிச்சயதார்த்தத்துடன் முறிந்தது.
திருமண முறிவை பார்த்திவ்கிருஷ்ணா தரப்பினர் உறுதி செய்துகொண்ட வகையில் இயக்குனர் தரப்பிலிருந்து எந்த எதிரொலியும் இல்லை.
இது பார்த்திவ்கிருஷ்ணாவின் முடிவா? அல்லது வேறு எதுவும் ரகசியம் உள்ளடங்கி உள்ளதா? என பூடகமாகவே இருக்கிறது.
இப்படி அவரவர் யூகங்களை எல்லாம் வர்ணனைகள் கொண்டு வார்த்தைகளாக்கி வியாபாரம் செய்துகொண்டிருந்தனர்.
“பார்த்திவ் சாரங்கபாணி நம்ம வீட்டுக்கு வரனும்னு கேட்டிருக்கார். என்ன செய்யட்டும்?….” என்றார் அவனின் தந்தை அறிவழகன்.
“வேண்டாம். யாருக்கும் அப்பாயின்மென்ட் குடுக்காதீங்க. எனக்கு விருப்பமில்லை…” முடிவாய் மறுத்துவிட்டான் பார்த்திவ்.
அவனால் இன்னும் அந்த காட்சியில் இருந்து மீள முடியவில்லை. துரோகம். என்னை என்ன நினைத்தனர்? ஆவேசத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“அவன் தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டானே? திரும்பவும் ஏன் தொந்தரவு செய்றீங்க? என் பிள்ளை முடிவு செஞ்சா அதுக்கு ஒரு காரணம் இருக்கும்…” என்றார் பார்த்திவ்வின் தாய் மஞ்சுளா.
“மஞ்சு இங்க வா….” என தனியே அவரை அழைத்து வந்த அறிவழகன்,
“என்ன பேசற நீ? அவன் எவ்வளவு ஈடுபாட்டோட இருந்தான் இந்த கல்யாணத்துல. இன்னும் இருபத்தஞ்சே நாள். ஏதாவது மிஸ்அண்டர்ஸ்டேண்டிங்கா இருக்கும்…” என்றவர்,
“நம்ம பிள்ளையோட கோவம் நமக்கு தெரியாதா. பார்த்தி கொஞ்சம் முன்கோபி…” என்று கூறினார்.
“இதுதான் நீங்க உங்க மகனை தெரிஞ்சு வச்சிருக்கறது. நீங்க சொல்றது சரி தான். அதுவும் விரும்பி ஆசையா கல்யாணம் செஞ்சுக்க இருந்த பொண்ணை வேண்டாம்ன்னு சொல்றான்னா யோசிக்க வேண்டாமா நீங்க?…” என்று கேட்க அறிவழகன் புருவம் சுருக்கினார்.
“அவன் வேண்டாம்ன்னு சொல்லும் போது கோபம் வெளிப்படலை. ஒரு அருவருப்பும், முக சுளிப்பும் தான். இதுவே சொல்லலையா? காரணம் என்னன்னு நம்மக்கிட்ட சொல்லலை. சொல்ல வேண்டாம்ன்னு நினைக்கிற அளவுக்கு, சொல்ல முடியாத அளவுக்கு என்னவோ இருக்கு…” என்றார் மஞ்சுளா.
“அதைவிட நம்ம பிள்ளை வேண்டாம்ன்னு சொல்லியும் சாரங்கபாணி இவ்வளோ இறங்கி வந்து பேசறார். சமாதானம் செய்ய நினைக்கறார்ன்னா தவறு நம்ம பக்கம் இல்லை. இது அவன் வாழ்க்கை. அவனே முடிவெடுக்கட்டும்…” என முடிவாய் சொல்ல,
“அப்பா அம்மா சொல்றது தான் சரி. நீங்க ஏன் கட்டாயப்படுத்தறீங்க? இதை அண்ணன் முடிவுலையே விடுங்க….” என்றான் பார்த்திவ்வின் தம்பி பிரமோத்.
சாரங்கபாணி தன்னிடம் கேள்வி கேட்க தொடர்புகொள்ள முயலும் தொலைதொடர்பாளர்களிடம் பதில் சொல்லமுடியாமல் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார்.
ஏன் இந்த துறையில் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் முதற்கொண்டு கேட்டுவிட்டனர். பேச முடியவில்லையே.
எத்தனை வருடங்களாக கட்டி காத்த மானம், மரியாதை. இப்படி அனைத்தையும் தொலைத்துவிட்டு நிற்கும் நிலை.
தான் பார்த்து வாய்ப்பு கொடுத்து உச்சாணிக்கொம்பில் தான் ஏற்றி வைத்தவன் இன்று தன்னிடமே மிஞ்சி நிற்கிறான்.
“என் நிலைமைல நீங்க இருந்து யோசிங்க ஸார். இதை செய்வீங்களா? நான் கேட்டதுக்காக ஒரு பேச்சுக்கு ஆமான்னு சொன்னாலும் என்னோட பதில் நோ தான்…” என்று முகத்திலடித்தார் போன்று அவன் சொல்லி சென்றது இன்னும் சுருக்கென்று தைத்துக்கொண்டு இருந்தது.
அன்றிரவே சாரங்கபாணிக்கு மாரடைப்பு என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அந்த விஷயம் கேள்விப்பட்ட பார்த்திவ்வின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.
இந்த விஷயமும் தொலைகாட்சிகளில் பரபரப்பாக பேசப்பட மொத்த திரையுலகமும் பற்றி எரிந்தது.
“போச்சு போச்சு. யார் கண் பட்டுச்சோ? இப்படி கல்யாணமும் நின்னு இயக்குனருக்கு மாரடைப்பு வேற?…” என சுபஷ்வினி ஸ்ருதியிடம் புலம்பலோ புலம்பல்.
“இவ்வளவு தான். நிச்சயதார்த்தம்ன்னு ஆஹா ஓஹோன்னு சொல்லி கொஞ்ச நாள்ல ஒண்ணுமில்லாம புஸ்ஸுன்னு போயாச்சு. இதுக்கு இவ்வளோ அலம்பல்…” என்றாள் ஸ்ருதி.
“உனக்கேண்டி மோளே இம்புட்டு காண்டு?…” என கடுப்பாய் சுபஷ்வினி கேட்க,
“உனக்கு தான் தெரியுமே. ரெண்டுவருஷம் முன்னாடி நடந்த ம்யூஸிக் ஷோல நானும் கலந்துக்கிட்டேன்னு. ரிசல்ட் சொல்றதுக்குள்ள அவசரமா எழுந்து போய்ட்டார் உன் க்ரஷ். பார்த்தா நல்லா பாடினவங்களை விட்டுட்டு சுமாரா பாடினவங்க வின்னர்…” என்ற ஸ்ருதி,
“கேட்டா ஏகோபித்த மக்கள் வாக்கும், தி கிரேட் பார்த்திவ் கிருஷ்ணா ஓட்டும் அந்த வின்னருக்கு தான் இருந்துச்சாம். ஒரு ம்யூசிக் டைரக்ட்டரா இருந்துட்டு சரியான சிங்கரை சூஸ் பண்ண தெரியலை. அந்த லட்சணம் தான் இவர் மேரேஜ் லைஃப் டிசிஷனும்…”
ஸ்ருதியின் விளக்கத்தில் சுபஷ்வினி உர்ரென்று அமர்ந்திருக்க அதனை பார்த்து சிரித்துவிட்டாள் ஸ்ருதி.
“எந்தா மோளே, ப்யூஸ் போயிருச்சோ. பார்த்துக்கோ இந்த கமிட்மென்ட் எல்லாம் எங்கேஜ்மென்ட் வரை தான். மேரேஜ் வரை கூட தாக்கு பிடிக்கலை. அதுக்கு இது ஒரு சாம்பிள்…” என்று சொல்ல இனி ஸ்ருதி இதையே ஒரு மாதத்திற்கு பேசுவாள் என தெரிந்து போனது சுபஷ்வினிக்கு.