காலையில் பார்த்திவ்வின் கைபேசி அழைப்பில் தான் ஸ்ருதி கண் விழித்தாள்.
இரவு அங்கேயே சோபாவில் அமர்ந்திருந்தவள் அவனுடன் பேசிக்கொண்டிருக்கையில் உறங்கி இருக்க இப்போது நன்றாக விடிந்திருந்தது.
கண்ணை கசக்கியபடி விழித்து பார்க்க சுழல் நாற்காலியில் போனில் பேசியபடி ஸ்ருதியை பார்த்தான் பார்த்திவ்.
இருவருக்குமே அது ஒரு அழகான விடியல் தான். மனது லேசாயிருந்தது. அவளுக்கு மட்டுமா? அவனுக்குமே.
மௌனமாய் அமர்ந்திருந்தவள் இரு கைகளையும் இருக்கையில் ஊன்றியபடி அமர்ந்திருக்க தலைசாய்த்து பார்த்துக்கொண்டே போனில் பேசினான் பார்த்திவ்.
“வரேன் ம்மா. ஸ்ருதியை பிஜில ட்ராப் பண்ணிட்டு வரேன். அப்பாவை இருக்க சொல்லுங்க. பேசனும்…” என மெல்லிய குரலில் ஸ்ருதிக்கு கேட்காமல் பேசினான்.
அதை கூட உணராமல் அப்படி ஒரு உறக்கம். தன் மேலிருந்த மெல்லிய போர்வையை எடுத்து கையில் வைத்தவளுக்கு இன்னொருமுறை உறங்கி எழுந்தால் என்னவெனும் அளவிற்கு உறக்கத்தை இன்னுமே தேடியது அவளுள்ளம்.
இன்னும் முழுதாய் விடிந்திருக்கவில்லை. ஐந்தரை மணிக்கே வானம் மேகத்தில் இன்னும் வெளிச்சத்தை பரவ செய்திருக்கவில்லை.
“என்ன ஸ்ருதி, இன்னும் தெளியலையா?…” என பார்த்திவ் கிண்டலுடன்.
“வாங்கி குடுத்து ஓஞ்சு போய்ட்டாரு. தெளிய…” என்று முணங்கியவள் வார்த்தைகள் பார்த்திவ்விற்கு கேட்க,
“முதல்ல எழுந்து போய் ப்ரஷப் ஆகிட்டு வா நீ…” என்று விரட்டினான்.
“ப்ச், எதுக்கு ஸார் கூட்டிட்டு வந்து தூங்க வச்சீங்க? இதுவே என் ரூமா இருந்தா இந்நேரம் எந்திச்சிருக்கவே மாட்டேன். இப்ப உங்களால தூக்கமே போச்சு…” என்று சொல்லவும் முறைத்தவன் டிஷ்யூ பேப்பரை சுருட்டி அவள் மீது வீசினான்.
“ரொம்ப கவலைப்படாத. பருத்தியோட பஞ்செல்லாம் பறந்து போய்டுச்சு. மூட்டையில ஒண்ணுமே இல்ல. வா வா…” என முன்னே நடக்க அவனை முந்திக்கொண்டு ஸ்ருதி முன்னே சென்றாள்.
இப்போது விடுதிக்கு செல்லும் வரை ஸ்ருதி எதுவுமே பேசவில்லை. ஆனால் பார்த்திவ் பேசிக்கொண்டே தான் வந்தான்.
இதற்கடுத்து உள்ள ஒரு பெரிய புராஜெக்ட் பற்றி சொல்லிக்கொண்டு வந்தவன் அந்த படத்திற்கான இசையமைப்பை துவங்குவது பற்றியும் பகிர்ந்தான்.
அதில் இரு பாடல்கள் அவளுக்கு என இருப்பதாக சொல்ல தலையசைத்தாள் ஸ்ருதி.
“முக்கியமான ப்ராஜெக்ட். முக்கியமானவங்க நடிக்கிறாங்க….” என்று சொல்லும் பொழுதே,
“யார் நடிச்சாலும் நான் பாட போறேன்…” என சாதாரணமாக ஸ்ருதி சொல்லவும்,
“அதுக்குள்ளயுமா?…” என முகத்தை நன்றாக தேய்த்துவிட்டு கீழே இறங்க போக,
“இந்த வீக் ஃபுல்லா எந்த ரெக்கார்டிங்கும் இல்லை ஸ்ருதி. உனக்கு லீவ்…” என பார்த்திவ் சொல்லவும்,
“நிஜமாவா?…” என பளிச்சென்ற புன்னகை ஸ்ருதி முகத்தில்.
“ஆனா உனக்கு கிளாஸ் இருக்கு. இன்னைக்கு ஒருநாள் வேண்டாம். நாளைக்கு வந்திடனும்…” என்று கண்டிஷனாக பார்த்திவ் சொல்ல புஸ் என்று போனது.
“இதுக்கு லீவ் இல்லைன்னே சொல்லியிருக்கலாம்…”
“அடுத்த மூவி ஸாங் மோஸ்ட்லி கர்னாட்டிக் ம்யூஸிக் பேஸ்டு தான். சாருகேசி ராகம். உன்னோட வாய்ஸை இன்னும் அதுல டெவலப் பண்ணனும். பர்பெக்ஷன் அக்யூரட்டா எதிர்பார்க்கிற டீம் இது…” என்று சொல்ல,
“இல்லைன்னாலும் அந்த பர்பெக்ஷனை நீங்க லூஸ்ல விடற ஆள் தான்…” என அவள் சொல்லியவிதத்தில் சிரித்துவிட்டவன்,
“அதுக்கு தான் சொல்றேன். உன்னை அலார்ட் பன்றேன்…” என்ற குரலில் அத்தனை எச்சரிக்கை.
“இந்த படத்தோட பாடல்கள் எல்லாமே க்ளாசிக் டச் இருக்கும். எவர்க்ரீன் ஸாங்ஸ் லிஸ்ட்ல சேர கூடியதா இருக்கனும். புரியுதா?…”
“நீங்க என்னை எல்லார் முன்னாடியும் திட்டலைன்னா பரவாயில்லை…”
“அப்போ தனியா திட்டினா ஓகேவா ஸ்ருதி?…” என்று குறும்பாய் சிறு புன்னகையுடன் அவன் கேட்க,
“எல்லார் முன்னாடியும்ன்னா நான் திரும்ப திட்டினா உங்களுக்கு ஷேமாகிரும். தனியான்னா உங்க பேச்சுக்கு, என் பேச்சு சரியாகிடும்ல. மனசை ஆத்திப்பேன்…” என்று சொல்லி கதவை திறக்கவும்,
“அடிங்…” என கையை நீட்டி இருந்தான் பார்த்திவ்.
ஸ்ருதியை இறங்கவிடாமல் அவளின் தலை முடியை பிடித்துவிட்டவன் அவளின் சத்தத்தில்,
“ஹேய் வலிச்சிருச்சா?…” என சட்டென கையை விட்டு தலையை தொட்டு பார்க்க,
“ஒருநாள் இல்ல ஒருநாள் இதையும் பதிலுக்கு செய்யறேன்…” என சொல்லிவிட்டு இறங்கி விட்டாள் ஸ்ருதி.