சிவசங்கரி சொல்ல சொல்ல சாரங்கபாணிக்கு ஓரளவு மனதுக்கு ஆறுதலானது. மகளுக்காக எத்தனை பேசியவர், இன்று கணவரின் நிலைக்காக புரிந்துணர்வோடு அவர் நடந்துகொண்டார்.
அவர் சொல்லியபடி சாரங்கபாணி யோசித்தாலும் அந்த வினோத் விஷயத்தை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
அவனுக்கு தன் மகளுடன் எத்தனை வருடங்கள் இருந்திருக்கும் இந்த பழக்கம்? எப்படி எதுவும் நடவாதவாறு தன்னுடன் பழகி, உறவாடி மகளுடனும் என நினைக்கையில் அருவருத்து போனார்.
ஓரளவு அந்த விஷயத்தை விட்டு வெளியே வர ஊடகங்கள் அவர்களுக்கு கிடைத்த தீனியை பெருக்கிக்கொண்டிருந்தனர்.
மீண்டும் தேவராஜ் அழைத்து பார்த்திவ்விடம் பேசி அனுப்பி வைக்க சாரங்கபாணி வந்து தான் அளித்த புகாரை வாபஸ் பெற்று சென்றுவிட்டார்.
————————————–
மாதம் ஒன்று கடந்திருந்தது. ஸ்ருதியின் குரல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தது.
அவளை பேட்டி எடுக்க அத்தனை தொலைகாட்சிகளும் முன்வர எதற்கும் அவள் சம்மதிக்கவில்லை.
“இப்ப வேண்டாம் அஷ். கொஞ்சம் அதிகமான சந்தோஷத்தோட இருக்கேன். நான் எதையாச்சும் பேசி வச்சிடக்கூடாது. அதோட இண்டர்வ்யூ குடுக்கற அளவுக்கு பெருசா ஒன்னும் சாதிக்கலை. போகட்டும்…” என்று இருந்துகொண்டாள்.
அந்த விடுதி முழுவதும் பாடகி ஸ்ருதகீர்த்தி தங்களுடன் இருக்கிறாள் என பெருமையடித்துக்கொண்டனர்.
அத்தனை சந்தோஷம் தங்களில் ஒருத்தி வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் அடியெடுத்து வைத்ததோடு நட்சத்திரங்களில் ஒருத்தியாக கலந்திருப்பது கண்டு.
எத்தனை பெரிய வேலைகள், பதவி உயர்வுகள் என்று இருந்தாலும் திரைத்துறை என்றாலே இன்னும் கவனிக்கப்படக்கூடியதாக இருக்கிறதே?
ஸ்ருதியும் அப்படித்தான் அதிகமாகவே கவனிக்கப்பட்டாள். கவனிப்புகள் சில நேரம் பெருந்தொல்லையாகவும் இருந்தது அவ்வப்போது.
இசையமைப்பும், பாடலும், பாடகியும் நிச்சயம் விருதுக்கு தகுதியானவர்கள் என்றும் அப்போதே அறுதியிட்டு கூறினார்.
இத்தனை சந்தோஷங்களையும் மனதில் மட்டுமே வைத்துக்கொண்டவள் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை.
தான் செல்லவேண்டிய தூரம் இன்னும் அதிகமாகவே உள்ளதே. அதை நோக்கிய அவளின் பயணத்தில் அவளுடன் எல்லாமுமாகவும் பார்த்திவ் கிருஷ்ணா.
அன்று அதிகாலையே எழுந்துவிட்டவள் வேக வேகமாய் கிளம்பிக்கொண்டிருந்தாள் ஸ்டூடியோவிற்கு.
முதல்நாள் ரிகர்சல் பார்த்த பாடல் பதிவு அன்றைக்கு தான் என்பதால் அத்தனை வேகம்.
அது ஒரு டூயட் ஸாங். உடன் யார் பாடுகிறார்கள் என்று எதுவும் தெரியவில்லை. பெண் குரலாய் பாடகி ஸ்ருதகீர்த்தி.
அதை மட்டுமே சொல்லியிருந்தான் பார்த்திவ். அதிலும் அதிகாலை வேளை பாடலை பதிவு செய்யவேண்டும்.
எல்லாம் எடுத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்த சுபஷ்வினியின் கன்னத்தை கிள்ளியவள்,
“பை அஷ்…” என்றாள்.
“டைம் என்ன மோளே. சொல்லிட்டு போ…” என சுபஷ்வினி கேட்க,
“மூணாகுது. நாளைக்கு தான் விடியும். நான் ரெக்கார்டிங் முடிச்சிட்டு வரேன். நாம இன்னைக்கு மாமல்லபுரம் போறோம்…” என சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.
சுபாஷ் காருடன் தயாராக வெளியே அவளுக்காக காத்துக்கொண்டிருக்க உள்ளே ஏறிக்கொண்டவள்,
“டன் அண்ணா…” என்று சொல்லி காதில் ப்ளூடூத்தை சொருகிக்கொண்டாள்.
“ஷ்யப்பா இந்த பாட்டுக்காறங்க தொல்லை தாங்கலை. ஒரு பாட்டு போட்டு கேட்க முடியுதா?…” என்று புலம்பிக்கொண்டே அவன் வர,
“நான் பாடவா? கேட்கறீங்களா ண்ணா?…” என ஸ்ருதி சொல்ல,
“எதுக்கு? போடா போடா புண்ணாக்குன்னு பாடுவ. என் பொண்டாட்டி கூட சேராதன்னா கேட்கறியா நீ?…” என்று சொல்ல ஸ்ருதி அடக்கமாட்டாமல் சிரித்தாள்.
“என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கு…” என பேசிக்கொண்டே ஸ்டூடியோ வந்து சேர்ந்தனர்.
“பை அண்ணா…” என சொல்லிவிட்டு மேலே வர மேலிருந்தே பார்த்திவ் பார்த்துவிட்டான் ஸ்ருதியை.
நான்கு மணிக்குள் இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்க நேரமோ நாளை தொட்டு ஐந்துநிமிடம் என்றிருந்தது.
ஆண் பகுதிக்கான வரிகள் பாட வைத்து பதிவும் செய்தாகிற்று. இனி ஸ்ருதியின் பகுதி மட்டுமே.
அவள் அந்த பாவனைகளுக்கு இணையான உணர்வுகளை வார்த்தைகளில் வெளியிட்டு பாடலை நிறைவு செய்துவிட்டால் இரண்டையும் சேர்த்து முடித்துவிடலாம் என காத்திருந்தான்.
“குட் மார்னிங் அன்ட் ஸாரி…” என அந்த அறை கதவை திறந்துகொண்டே பார்த்திவ் தான் என நினைத்து அமர்ந்திருந்தவனிடம் சொல்லி உள்ளே வந்தவள் வேகத்தில் அத்தனைபேரும் நிமிர்ந்து பார்க்க அங்கிருந்தவனும் புன்னகையுடன் கூறினான்.
“குட்மார்னிங் ஸ்ருதகீர்த்தி…” என அழகிய புன்னகை அவளுக்கான வரவேற்பாய் கூறினான் அதிரன் தேவராஜ்.
ஒரு நொடி அவனை பேச்சற்று பார்த்தவள் பார்த்திவ் எங்கே என விழிகளால் தேட அவன் வா என கண்ணை அமர்த்தினான். அதன் பின் மீண்டும் அதிரனை பார்த்த ஸ்ருதி,
“குட்மார்னிங்…” என அவனுக்கு பதிலுக்கு சொல்ல புன்னகைத்து தலையசைத்தான் அதிரன்.
“இவ்வளோ நேரமா?…” என அதட்டலாக கேட்டான் பார்த்திவ் மெல்லிய குரலில்.
“என்கிட்ட இவங்க வராங்கன்னு சொல்லவே இல்ல. நான் வந்ததும் அதட்டறீங்க…” என்றாள் ஸ்ருதியும் கண்டனமும், சற்று படபடப்புமாய்.
“அதட்டாம, எப்போ சொன்னேன்? உனக்காக எவ்வளோ நேரம் வெய்ட் பண்ண?…” என்று சொல்லியவன்,
“ரெடியா…” என கேட்க,
“ஹ்ம்ம்…” என்றாள்.
ஐந்து நிமிடம் அமர்ந்து அவளுக்கு அந்த வரிகளை பாடி காண்பித்து கண்ணாடி அறைக்குள் அனுப்ப அதிரன் புன்னகையுடன் இதனை பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒற்றை விரல் தாடையில் பதிந்திருக்க லேசாய் தலை சாய்த்து அந்நிகழ்வுகளை கவனித்தபடி இருந்தான் அதிரன்.
உள்ளே சென்ற ஸ்ருதி ஹெட்போனை தலைக்கு மாட்டியதும் கண்ணை மூடி ஒரு நிமிடம் தன்னை சமன் செய்து ஆழ பெருமூச்சுக்களை இழுத்துவிட்டு கண்ணை திறக்க இடுப்பில் கை வைத்தபடி பார்த்திவ்.
“திட்டாம, அதட்டாம. கொஞ்சம் ஸ்மைல் பண்ணிட்டே பாருங்க ப்ளீஸ். இப்படி டென்ஷன் ஏத்தினா சொதப்பிருவேன். திரும்ப அக்ரிமென்ட் கூட செல்லாம போயிரும். ஆமா…” என்று சொல்லிய விதமும், அவள் நெருக்கமும் பார்த்திவ்வை ஸ்தம்பிக்க செய்தது.
யாரும் எதிர்பார்க்கவில்லை. ஸ்ருதியே அதனை உணரவில்லை. அவனின் கோப முகமும், பரபரப்புமே அவளை பதட்டத்திற்குள்ளாக்க முதலிலேயே எச்சரிக்க வந்துவிட்டாள்.
வந்தவள் வந்த வேகத்தில் நின்றவன் எதிரே அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்கிறேன் பேர்வழி என நெருங்கி நின்றுவிட,
“ஸ்ருதி என்ன பன்ற?…” என கேட்டவன் குரல் காற்றாய் கரைந்தது.
“புரிஞ்சதா? நோ கோபம். ஒன்லி ஸ்மைல். நான் தப்பு பண்ணினா பார்த்து பக்குவமா சொல்லனும். குணமா வாய்ல சொல்லனும்…” என சொல்ல அவளின் மூச்சுக்காற்றை சூடாய் உணர்ந்தவன் தன்னிரு கைகளை அழுத்தமாய் மடக்கிக்கொண்டான்.
“இப்ப நான் போறேன்….” என சொல்லிவிட்டு திரும்பவும் தான் அத்தனைபேரும் பேயறைந்ததை போல தங்களை பார்க்க கண்டு ஸ்தம்பித்தாள் ஸ்ருதி.
“போச்சு…” என திரும்பி பார்த்திவ்வை அவன் அதற்கு மேல் அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என தெரியாமல் திகைத்து நின்றிருந்தான்.
“நான் போய் பாடறேன்…” என்று சொல்லி திரும்பியவள் அதிரனை பார்க்க இதழ்களுக்குள் வீற்றிருந்தது அவன் புன்னகை.
கண்ணாடி அறைக்குள் ஓடிவிட்ட ஸ்ருதி தன்னையே தலையில் தட்டிக்கொள்ள அதுவரை திகைத்து நின்ற பார்த்திவ் முகத்திலும் செம்மை படர்ந்துவிட்டது.
அங்கே சென்று தன் இரு காதை பிடித்து, கெஞ்சுதலாய் கண்ணை சுருக்கி சிரி என்பதை போல கை காண்பித்து ஸ்ருதி கேட்கவும் தானாகவே புன்னகை வந்தமர அவனும் அமர்ந்துவிட்டான் அதிரன் அருகே.
“சில் பார்த்திவ்…” என்ற அதிரனின் புன்னகையில்,
“ஓஹ் நோ. நத்திங் அதிரன்…” என்றான் உடனே பார்த்திவ்.
“ஹ்ம்ம், ஸ்வீட் நத்திங்க்ஸ். நான் எதுவும் பார்க்கலை. நிஜமாவே கேட்கவும் இல்லை. பட் வாவ் சீனரி பார்த்திவ்…” என ரசனை பூக்க அதிரன் சொல்லிய விதத்தில் பார்த்திவ்வும் புருவம் சுருக்கி கெஞ்சலாய் அவனை பார்த்துவிட்டு ஸ்ருதியை பார்த்தான்.
“பாடவா?…” என ஸ்ருதி சைகையில் கேட்க,
“அடி வாங்க போற…” என்றான் பார்த்திவ்வும் மீசையை நீவிக்கொண்டே அடிக்கண்ணால் அவளை மிரட்டி.
“ரெடி மூவ்…” என்றவன் சத்தத்தில் இசை ராகம் மீட்டவும், அவளின் பாடல் ஆரம்பிக்க கை காண்பித்து புன்னகைத்தவள் இதழ் மலர பார்த்ததும் இன்னுமே சூடாய் உணர்ந்தான் பார்த்திவ்.
பாடல் அழகாய் இசையில் கலக்க பார்த்திவ் மனம் அதில் லயிக்க அங்கே ஸ்ருதியோடு அவன் உலகம் உறைந்துகொண்டிருந்தது.