இதை எப்படி ராகங்களுக்கிடையே கொண்டு வருவது? உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பாய் புல்லரிப்பு அவள் அடிவயிற்றை சுழற்றியது.
லேசாய் கூச்சம் கூட ஆரம்பிக்க என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தாள் ஸ்ருதி.
இதுவரை பாடிய பாடல் வரிகளில் காதல் ரசம் சொட்டும். தனிப்பட்ட பாடலில் கூட காதலை கொண்டிருக்கும்.
ஆனால் இந்த பாடல் வரிகளில் நிரம்பியிருந்ததோ காதலையும் தாண்டிய அடுத்த கட்டத்தின் தேடலும், தேவையுமான வார்த்தைகள். காலடியில் பெருவிரல்களை இழுத்து மடக்கினாள் ஸ்ருதி.
பாடகியாய் இதை எல்லாம் அவள் பார்க்கவே கூடாது தான். இசையும், ராகங்களும், அதன் உணர்வுகளும் மட்டுமே ஆட்சி செய்யவேண்டும்.
இருந்தாலும் ஒரு அவஸ்தை அவளை அலைகழிக்க ஒருபக்கம் பயம் வேறு பார்த்திவ்வை நினைத்து.
மாட்டேன் என்று சொன்னால் நிச்சயம் உண்டில்லை என்று பேசிவிடுவான் அவன் என தெரிந்து அவனை பார்க்கவும் போனில் பேசி முடித்தவன்,
“சரி விடு. அடுத்த ஸாங் உனக்கு என்னன்னு தெரியுமா?…” என கேட்க தலையை அசைத்தாள் ஸ்ருதி.
“அன்னைக்கு சொன்னீங்களே?..” என்றவள் அவன் சொல்லிய ராகம் என்னவென யோசித்து,
“மதுவந்தி ராகத்துல என்னவோ பாட்டு இருக்குன்னு…”
“ஹ்ம்ம், அது ஓகே. அது என்னன்னு ஞாபகம் இருக்கா ஸ்ருதி?…” என்ற கேள்வியில் அவள் யோசித்தாள்.
அத்தனை ராகத்தையும் ஓரளவுக்கு கற்றுகொண்டிருந்தாள். இன்னும் அதன் அடிநாதம் வரை அவளுக்குள் பதியவில்லை.
ஆனால் புரிந்துகொண்டு அதனை கண்டு கவனித்து சொல்லவும் தேறியிருந்தாள் ஸ்ருதகீர்த்தி.
“மதுவந்தி ராகம் தர்மாவதி ராகத்தோட ஜன்யராகம். ஜன்யராகம்ன்னா சேய் ராகம்ன்னும் சொல்லுவாங்க. அடுத்து நீ பாட போற பாடல் அந்த வகையை சேர்ந்தது…” என்றான் பார்த்திவ்.
சற்று முன் பார்த்த பாடல் வரிகளை விடுத்து அவன் சொல்லும் விஷயத்தில் கவனத்தை திசை திருப்பினாள் ஸ்ருதி.
“ஓகே ஸார்…” என அத்தனை தீவிரமாக ஸ்ருதி சொல்ல பார்த்திவ்வின் கண்களுக்குள் மறைந்திருக்கும் அந்த பொருளை அவளால் அப்போது அறிய முடியவில்லை.
“இந்த ராகத்தோட சிறப்பு ஒன்னு இருக்கு ஸ்ருதி. மதுவந்தி ராகத்தை தேனோட ஒப்பிட்டு சொல்லுவாங்க. அதாவது இந்த பாடல் தேன் உண்ணும் வண்டுகளின் வருகையும், அதை தொடர்ந்து எழுப்பும் ரீங்காரமும் ராகமேற்றி சங்கீதத்தோடு சமரசம் புரியுமாம்…” என ரசனையாய் அவன் விளக்க ஸ்ருதி லயித்து கேட்டுக்கொண்டிருந்தாள்.
“அந்த கூடலுக்கான அர்த்தம் கொண்ட பாடல் தான் அடுத்து நீ பாட போறது. நீ மட்டும் பாட போற பாடல். கர்நாடக சங்கீதத்துல அரங்கேற்றம் செய்ய போற பாடல்…” என மென்மையாய் எடுத்துரைக்க அவன் சொல்லவரும் அர்த்தம் உணர்ந்தவள் விழிகள் மெல்ல தன் பார்வையை அவனிடமிருந்து விலக்கியது.
சில நொடி மௌனம் அங்கே ஸ்ருங்காரம் கொண்டு காத்திருக்க ஸ்ருதியின் முகத்தின் நாண தூறலில் பார்த்திவ் இமைகள் குடைசாயாமல் அச்செம்மழையை விழியால் வாரிக்கொண்டது.
பேசாத இந்த சில நொடி மௌனம் இங்கே இவர்களுக்கிடையே புதிது. இப்படி ஒரு உணர்வில் பேசாதிருந்ததில்லை.
ஆனால் இப்படியான தருணம். தன்னையே வாயடைக்க செய்துவிட்டானே என உள்ளுக்குள் வெட்கம் அவளை பந்தாடியது.
“லிரிக்ஸ்…” என அவளிடம் காகிதம் ஒன்றை நீட்ட வாங்கிக்கொண்டவள் கையில் வைத்திருக்க,
“வாசிச்சு பார் ஸ்ருதி…” என்ற பார்த்திவ்வின் குரலில் தடுமாற்றத்துடன் வாசிக்க ஆரம்பித்தாள்.
அவள் முகபாவனைகள் சிந்தும் உணர்வுகள் ஒவ்வொன்றும் அவன் ரசனைக்கு விருந்தாக மிச்சமின்றி தனக்குள் இட்டு நிரப்பிக்கொண்டான்.
இதுபோன்ற பகிர்தல்கள், பரிமாறல்கள், பாடலுக்கான உவமைகள் இவையெல்லாம் பார்த்திவ்வுக்குமே புதிதாய் இருந்தது.
பாட வருபவர்களிடம் அதனை கற்று தருபவன் நோக்கம் அது மட்டுமேயாக இருக்கும். எந்த விதத்திலும் அது மனதிற்குள் பாதிப்பை தந்ததில்லை.
ஆனால் ஸ்ருதி அவனுக்கு தனித்து தெரிந்தாள். தன் நிதானங்களை தகர்ப்பவளாக இருந்தாள்.
இப்போதும் அவள் விழிகள் நகரும் இடமெல்லாம் அவன் மனமும் நகர்ந்தது. எல்லாவற்றையும் வாசித்து முடித்தவள் நிமிர சட்டென மாற்றம் பெற்றவன்,
“இந்த ராகத்துக்கான பயிற்சியை நாளையில இருந்து ஆரம்பிப்போம் ஸ்ருதி. பாடல் அடுத்த வாரம் தான். லிரிக்ஸ் மனப்பாடம் பண்ணிக்கோ. ரிகர்சல் நாளையில இருந்து இடையிடையே…” என்றதும்,
“ஓகே ஸார்…” என்றவள் அதனை மடக்கி தன் கைப்பையில் வைத்துக்கொண்டாள்.
“கொஞ்சம் நார்மலாவே சொல்லியிருக்கலாம். இதென்ன இப்படி ஒரு ஃபீல்? காதெல்லாம் கூசுது…” என மெல்லிய முணுமுணுப்பு.
“என்ன? ஸ்பீக் அவுட்…” என்றான் பார்த்திவ் அவள் கூறியது லேசாய் கேட்டுமே.
அடக்கப்பட்ட புன்முறுவல் அவன் ரகசியத்தை காட்டிக்கொடுத்தது. எட்டப்ப விழிகளின் சம்பாஷனையை ஸ்ருதி கண்டுகொள்ள,
“நத்திங் ஸார். பசிக்குது. கிளம்பனும்னு சொன்னேன்…”
“குட். நான் போய் ப்ரஷப் பண்ணிட்டு வரேன். நீ வெய்ட் பண்ணு. சாப்பிடலாம்…” என்று எழுந்துகொள்ள,
“அஷ் வெய்ட் பண்ணுவா. நான் போகனும்…” என வேகமாய் கூறினாள் ஸ்ருதி.
முகம் கழுவ சென்றவன் அப்படியே நின்று ஸ்ருதியை பார்க்க கை பையை மாட்டியபடி எழுந்து நின்றுவிட்டாள் அவளும்.
“ஓகே, கோ…” என்று சொல்லிவிட்டு பார்த்திவ் செல்ல போக,
“ஹலோ மாஸ்டர்…” என்ற ஸ்ருதியின் அழைப்பில் திரும்பி பார்த்தான்.
“இனிமே லிரிக்ஸ் சொல்றது, பாட்டோட ஸீன் சொல்றதெல்லாம் சாதாரண டோன்ல சாதாரணமாவே இருக்கட்டும். கொஞ்சம் ஜெர்க்காகுது. பார்த்து, பத்திரம்…” என்று மூக்கை விடைத்துக்கொண்டு சொல்லியவள் இதழ்களை இங்குமங்கும் திருப்பிவிட்டு செல்ல இடுப்பில் கைவைத்து நின்றுவிட்டான் பார்த்திவ்.
“ஆவூனா கோவம். இன்னைக்கு புதுசா ரொம்ப பன்றார் இந்த மாஸ்டர்…” என புலம்பிக்கொண்டே கீழே செல்ல சுபாஷ் காருடன் தயாராக இருந்தான்.
“நான் ஆட்டோல போய்ப்பேன் ண்ணா. இங்க உங்க பாஸ்க்கு தேவைப்பட போகுது. இப்பலாம் அதிகமா அவர் காரை யூஸ் பன்றேன்….” என முணங்கலுடன் சொல்ல,
“ம்க்கும், இங்கினவே இருந்து நான் ஈ ஓட்டனும். அதானே? போம்மா போ. என்னிய தாண்டி நீ போ…” என சுபாஷ் சொல்லியதில் அவள் சிரித்துவிட்டாள்.
“ஓகே வாங்க…” என ஏறிக்கொள்ள,
“பாட்டு போட்டுக்கவா?…”என்றான் சுபாஷ்.
“எனக்குமே மைண்ட் ப்ரெஷா இருக்கனும். போடுவோமே…” என வேறு பாடலை ஒலிக்கவிட இருவரும் கலகலத்தபடி விடுதியை நோக்கி சென்றனர்.
ஸ்ருதி கிளம்பி சென்றதும் பார்த்திவ் தன்னிருக்கைக்கு வந்தமர்ந்து சற்று முன் பதிவு செய்த பாடலை கேட்க ஆரம்பித்தான்.
பெரும் திருப்தி பார்த்திவ் முகத்தில். அத்தனை அழகாய் வந்திருந்தது அந்த பாடல்.
சுழல்நாற்காலியில் அமர்ந்திருந்தவன் மனதில் அத்தனை சந்தோஷம். கூடவே ஸ்ருதி செய்த கலாட்டாக்கள்.
இப்போதும் தன்னை முட்டிக்கொண்டு அவள் நிற்பதை போன்ற பிரம்மை எழ எழுந்த நொடி மீண்டும் மூச்சை அடக்கிவிட்டான் அவள் வாசம் உணர்ந்து.
“ஊஃப்…” என அவளில்லா நிதர்சனத்தில் தலையை கோதியவன் மனது இன்னும் சில காத்திருப்புக்கு தயாரானது.
அவனின் எண்ணங்கள் ஈடேற கூடிய சாத்திய நாள் அன்று தான் விருப்பத்தையும் பகிர்வது என காத்திருந்தான்.
மனதை அடக்கி ஆளக்கூடிய திறன் வாய்க்க பெற்றவன் இழுத்து கட்டி இறுக்கிக்கொண்டான்.
“யட்சினி ரொம்ப சோதிக்காதயேன்…” என்ற மானசீக உருகல் அவன் வாய்மொழியாய் பொழிந்தது.
அடுத்தடுத்த நாட்களின் வேகம் கைக்குள் அடக்கமுடியாத விதத்தில் தான் ஓட்டம் பெற்றது.
ஸ்ருதியின் பாடல் வகுப்பும் இனிதே நடைபெற்றுக்கொண்டிருக்க பார்த்திவ் ஜெர்மன் வரை கிளம்பியிருந்தான் தம்பி பிரமோத்தின் மேற்படிப்பு விஷயமாக.
வர இரண்டு வாரங்கள் ஆகும் என்ற நிலையில் அன்று மஞ்சுளாவின் அழைப்பின் பெயரில் பார்த்திவ்விடம் கேட்டு அவனின் வீட்டிற்கு வந்திருந்தாள் ஸ்ருதி சுபஷ்வினியுடன்.
“வாங்கம்மா ரெண்டுபேரும்…” என முகமெல்லாம் சந்தோஷத்துடன் அழைத்தார் மஞ்சுளா.