பார்த்திவ் ஜெர்மனில் இருந்து வந்த மறுநாள் விருது விழா. விருது பட்டியல் ஏற்கனவே அவனுக்கு வந்துவிட்டது.
யார் யாரை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்ற மொத்த விபரமும் அவனுக்கு வந்திருக்க ஸ்ருதி பாடிய படத்தின் அத்தனை துறையும் விருது பெற்றிருந்தது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், இசை, ஒளிப்பதிவு, பாடல், பின்னணி இசை, பாடலாசிரியர் என அந்த வருடத்தின் சிறந்த அம்சங்களுக்கான விருதுகளை அந்த திரைப்படம் மொத்தமாக வாங்கியிருந்தது.
இது ஸ்ருதி வாங்கவிருக்கும் முதல் திரை விருது. ஸ்ருதியை விட பார்த்திவ் அதனை காண ஆவலாக இருந்தான்.
வந்ததில் இருந்து அவளை காண முடியவில்லை. ஸ்டூடியோவிற்கு கூட செல்லவில்லை பார்த்திவ்.
சுதந்திரத்திடம் சொல்லியிருந்தான் ஸ்ருதியை பார்த்துக்கொள்ளும்படி. விடுதிக்கு அவரே வந்துவிட்டார் அழைக்க.
“நீங்க ஏன் அங்கிள் வந்தீங்க? நாங்களே வந்திருப்போமே?…” என்ற ஸ்ருதி,
“நேத்து தான் பார்த்திவ் ஸார் வந்திருக்கார். நிறைய வேலை இருக்குமே?…” என்றாள்.
“இப்ப பேச இதுவா நேரம்? உன்னை கூட்டிட்டு வர சொல்லிட்டாங்க. கிளம்பும்மா ஸ்ருதி. இது எத்தனை முக்கியமான நாள். லேட்டாகாம போவோம். இல்லைன்னா தம்பிட்ட திட்டு வாங்கமுடியாது…” என்று சுதந்திரம் அவளை துரிதப்படுத்தினார்.
அவனின் வருகையை நேரில் காண ஆவலுடன் இருந்தாலும் எத்தனை வேலைகளோ என மனதை அதட்டி வைத்தாள்.
தினமும் பேசுகிறான் தான். ஆனாலும் நேரில் பார்த்து அருகில் நின்று வார்த்தையாடி, பேச்சுக்களுக்கு சிரித்து, முறைத்து, திட்டு வாங்கி என அவள் இழந்த அந்த நிமிடங்கள் ஏராளம்.
அத்தனை இலகுவில் தன்னை உரிமை எடுத்து யாரும் திட்டவோ, பேசவோ, அறிவுரை சொல்லவோ வைத்துக்கொண்டதில்லை. ஆனால் பார்த்திவ் விஷயத்தில் எல்லாம் தலைகீழ்.
நினைத்து பார்க்கையில் அப்படி ஒரு சிரிப்பு ஸ்ருதிக்கு. சுபஷ்வினிக்கு அடுத்து அவளை கோபமென்றால் விளாசி தள்ளுவதும் அவனே.
கலக்கமென்றால் முதலில் கைகோர்ப்பதும் அவனே என்றாகி போன விந்தையை எண்ணியபடி காரில் அமர்ந்துகொண்டாள் சுபஷ்வினியுடன்.
அன்றைய விழா எவ்வளவு நேரம் என்ன என சுதந்திரத்திடம் அதனை பற்றி விசாரித்தபடி இருவரும் வாய் ஓயாமல் கேட்டுக்கொண்டு வர அந்த அரங்கிற்குள் வாகனம் நுழைந்தது.
இன்னும் பார்த்திவ் வந்திருக்கவில்லை. சுதந்திரம் அவர்கள் இருவரையும் இருக்கையில் அமர வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
“பார்த்திவ் வந்திட்டிருக்கார். எதுவானாலும் கால் பண்ணும்மா…” என நகர்ந்துவிட்டார் அவர்.
“மோளே செம்ம பிளேஸ். இந்த இடத்துக்கு சுகந் எத்தனை முறை டிக்கெட்க்கு அலைஞ்சிருப்பான் தெரியுமா? அத்தனை சீக்கிரம் கிடைக்காது. கிடைச்சாலும் எங்காவது தூரத்துல ஒரு இடத்துல தான் இருக்கும் கூட்டத்துக்குள்ள…” என்றாள் சுபஷ்வினி.
ஸ்ருதிக்கு படபடப்பாய் இருந்தது. பார்த்திவ்வை மனமும், விழியும் தேட நிகழ்ச்சியும் ஆரம்பமாகிவிட்டது.
நடனங்களுடன் நிகழ்ச்சி தொகுத்து வழங்குபவர்கள் வரும் விவிஐபிகளை பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தனர்.
அத்தனைபேருக்கும் கையசைத்தவன் கூட்டத்தினரை பார்வையிட்டதோடு ஸ்ருதியையும் தேட இரவு விளக்கொளியில் லேசாய் முகத்தை மறைத்து கண்ணாம்பூச்சி ஆடினாள் அவன் யட்சினி.
அதற்கு மேல் அவளுக்காக காத்திருக்காமல் முன் வரிசையில் அமர்ந்துகொண்ட பார்த்திவ் நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தான்.
ஒவ்வொரு பகுதிக்கும் விருது வழங்கப்பட நேரம் கடந்தது. பார்த்திவ்வும் தலைமை தாங்கி விருதை வழங்கி இருந்தான்.
அவை ஒவ்வொன்றையும் ஸ்ருதி தனது கைபேசியில் சேமித்துக்கொண்டே வந்தாள்.
இதோ அவர்கள் படத்திற்கான தேர்வு பட்டியல். எல்லோரும் எதிர்பார்த்த அந்த தருணம்.
ஐந்து பாடகர்கள் மத்தியில் ஒருத்தியாய் ஸ்ருதகீர்த்தியும், அவளின் புகைப்படமும்.
அழைப்பின் பெயரில் மேடைக்கு செல்ல எழுந்தவள் பார்வை எல்லாம் பார்த்திவ்வின் மேல் தான்.
அவனை பார்த்துக்கொண்டே செல்ல முன்னே செல்லும் படி தலையசைத்தான் அவன் கைதட்டியபடி.
மஞ்சுளா அன்று தந்த புடவையை தான் அணிந்திருந்தாள் ஸ்ருதி. அடர் ரோஜா வர்ண க்ரஷ்ட் மெட்டீரியல் வகை புடவை அது. ஓரங்களில் தங்க நிற கற்கள் பாதிக்கப்பட்டு ஒளிர அதற்கிணையாய் தகதகத்தது ஸ்ருதியின் முகம்.
விருதை வழங்க இசைமையைப்பாளரும், சங்க தலைவருமான தேவராஜ் அழைக்கப்பட அவரின் கையால் முதல் விருதை பெற்றுக்கொண்டாள் ஸ்ருதி.
அவருக்கும், திரைப்பட குழுவிற்கும், வாய்ப்பளித்த பார்த்திவ்விற்கும் நன்றியை சொல்லியவள் வேறு என்ன பேச என தெரியாமல் பார்த்திவ்விடம் புன்னகையுடன் லேசாய் புருவம் உயர்த்தி தோளை குலுக்கிய பாவனையில் கண்கள் மின்ன புன்னகைத்தவன்,
“வா…” என்று இதழசைத்து அழைத்தான்.
கீழே வரும்படி அவன் சொல்லவுமே கையிலிருந்த மைக்கை தந்துவிட்டு தான் வாங்கிய விருதுடன் சந்தோஷ நடையிட்டு துள்ளலாய் வந்தவள் நேராக வந்து நின்றதோ பார்த்திவ்வின் முன்னால் தான்.
சிரிப்பும், பூரிப்பும், நெஞ்சை முட்டும் சந்தோஷமுமாக அவனிடம் நின்றவள் அந்த விருதை பார்த்திவ்விடம் நீட்ட அத்தனை கேமராவும் அவர்கள் பக்கம் திரும்பிவிட்டது.
அங்கிருந்த பெரிய பெரிய தொலைகாட்சிகள் முழுவதும் அவர்கள் தான் நிறைந்து நின்றார்கள்.
மொத்த திரையுலகமுமே இதனை பார்க்க சாரங்கபாணி திகைப்பும், அதிர்ச்சியுமாக என்ன நடக்கிறதென பார்த்து நின்றார்.
பார்த்திவ்வின் அருகிருந்தவர்களும் இதில் சுவாரஸியம் பொங்க பார்த்துக்கொண்டிருக்க பார்த்திவ் இதனை எதிர்பார்க்கவில்லை.
“ஹேய் ஸ்ருதி…” என எழுந்துவிட்ட பார்த்திவ்வும் அவ்விருதை தன் கையில் ஏந்தினான்.
ஆனாலும் எத்தனை பெருமிதம் அவன் முகத்தில். அவன் காத்திருந்ததன் பலன் இதோ அவன் கையில், அவன் முன்னில்.