கண்களை உருட்டியபடி தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லாத ஒரு பாவனையில் இருந்தாள் ஸ்ருதகீர்த்தி.
கோபமான கோபத்துடன் பார்த்திவ் அவளை கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்க இருவருக்கும் இடையில் சுபஷ்வினி தான் தலையில் கைவைத்து அமர்ந்திருக்க வேண்டிய நிலை.
“அஷ் இங்க உன் க்ரஷோட சண்டை. கிளம்பி வா…” என்றொரு அழைப்பு ஸ்ருதியிடம் இருந்து.
அன்று விடுமுறை எடுத்திருந்தவள் அப்படியே கிளம்பி ஸ்டூடியோவிற்கு வந்திருந்தாள்.
வந்ததும் விஷயம் தெரிந்து அத்தனை கோபம் ஸ்ருதி மேல் தான் எழுந்தது சுபஷ்வினிக்கு.
“தேரை இழுத்து தெருவுல விட்டிருக்க நீ…” என அவளின் காதை கடித்தவள்,
“நான் பேசறேன் ஸார் அவக்கிட்ட. இனிமே இப்படி பேசமாட்டா….” என்னும் பொழுதே பார்த்திவ் ஆயாசமாய் பார்த்தான்.
“இப்ப எதுக்கு மேடம் உங்களை வர சொன்னாங்கன்னு கேளுங்க…” என்றான் அவன் மற்றதெல்லாம் விட்டுவிட்டு முதலில் இருந்து.
அப்போதும் ஸ்ருதி எதையும் பேசாமல் அங்கிருந்த வீணையை லேசாய் தட்டி தூசு துடைத்துக்கொண்டிருப்பதை போல திரும்பிக்கொள்ள,
“அம்புட்டும் கொலஸ்ட்ரால் மோளே உனக்கு…” என்று சுபஷ்வினி சொல்லியதில் சிரித்துவிட்ட ஸ்ருதி பார்த்திவ்வை பார்க்க அவன் அசைந்தான் இல்லை.
“இன்னும் கோவமா?…” என அவன் பார்க்கவும் மெல்லிய குரலில் ஸ்ருதி கேட்க,
“ப்ச்…” என்ற பார்த்திவ் தன்னுடைய போனை எடுத்து மஞ்சுளாவிற்கு அழைத்தான்.
“என்ன பார்த்தி பிஸியா? ப்ரீயா?…” என்றார் அவர் எடுத்ததும்.
“உங்க மருமகளை வச்சிட்டு நான் ரொம்ப ப்ரீ தான். ம்மா நீங்க வேற…” என்று அலுத்துக்கொள்ள,
“என்னாச்சு பார்த்திவ்? எதுவும் பிரச்சனையா?…” என்றவரிடம்,
“ஒரு நிமிஷம்…” என்றவன் ஸ்ருதியை கண்ணால் அழைக்க அருகே வந்தாள்.
“அம்மா…” என போனை நீட்டினான்.
“அதான் கோவமா இருக்கீங்க தானே? நான் என் போன்ல இருந்தே பேசிக்கறேன்…” என்று சொல்லவும் நறநறவென பற்கள் கடிபடும் சத்தம்.
“என்ன ஸ்ருதி நீ?…” என சுபஷ்வினி சங்கடத்துடன் பார்க்க,
“ம்மா, நான் கால் கட் பன்றேன். உங்க நம்பருக்கு இன்னொரு கால் வரும். பேசுங்க…”
“யாரு ஸ்ருதியா? சண்டையா பார்த்தி?…” என சிரித்துவிட்டார் மஞ்சுளா.
“சிரிக்காதீங்க. நான் ஏற்காவே டென்ஷன்ல இருக்கேன்…” பார்த்திவ் அவரிடமும் முகம் காண்பிக்க,
“ரொம்ப கோவம்ன்னா கிளம்பி வெளில எங்கயாச்சும் போய்ட்டு வா. ஸ்ருதியை பேசிடாத. நான் அவளுக்கு பேசறேன்…” எனும் பொழுதே ஸ்ருதி அழைப்பு அவரின் எண்ணிற்கு வர,
“ஓகே கால் பண்ணிட்டா…” என்று சொல்லி அவர் அழைப்பை துண்டித்துவிட்டார்.
“ஹாய் ம்மா…” என ஸ்ருதி எடுத்ததும் குதித்துக்கொண்டு பேச சிலபல விசாரிப்புகள் சென்றது அங்கே.
பார்த்திவ்வின் பார்வை அதில் இருந்தாலும் முகத்தில் கோபக்கனல். சுபஷ்வினிக்கு தான் கலவரமாக இருந்தது.
முதல்நாள் தான் நரேஷ் மேல் வழக்கு தந்திருந்தனர் காவல்துறையில். இன்று இப்படி ஒரு பிரச்சனை.
‘இந்த மோளே இப்படி சனியனை தூக்கி பனியனுக்குள்ள போட்டுட்டாளே’ என்று பார்த்தாள் அவள்.
“ஸார்…” என பார்த்திவ்வை அழைக்க,
“சொல்லுங்க…” என்றான் அவன் ஸ்ருதியின் பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டே.
“அவ அவங்கப்பாவை வெறுப்பேத்த அப்படி சொல்லியிருக்கா…” என்ற அடுத்த நொடி,
அடுத்து பேச அவனுக்கு வார்த்தைகள் இருந்தாலும் அதனை சுபஷ்வினியிடம் காண்பிப்பதில் விருப்பமில்லை.
அதிலும் சில விஷயங்கள் இருவருக்குமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தான் பார்த்திவ்.
தன்னுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ஸ்ருதி அழைத்து சுபஷ்வினிக்கு சொல்லிவிட அதில் இன்னுமே கோபம்.
“நான் உன்னை கேட்டா எனக்கு நீ பதில் சொல்லு. அங்க ஏன் கால் பன்ற?…” என ஸ்ருதியிடமும் கத்தியிருந்தான்.
“லவ்ல பர்ஸ்ட் ஃபைட். எப்படி ஹேண்டில் பண்ணன்னு தெரியலை. அதான் சொன்னேன்…” என்ற ஸ்ருதி மீண்டும் சுபஷ்வினிக்கு அழைக்க அதற்குள் தான் கிளம்பியிருந்தாளே அவள்.
சண்டை என்றதும் அடுத்த நொடி யோசிக்காமல் போனை பேக்கினுள் போட்டுவிட்டு விரட்டியிருந்தாள் தன் இருசக்கர வாகனத்தை.
இங்கே பேசிக்கொண்டிருக்கையிலேயே சுபஷ்வினியும் வந்துவிட்டிருந்தாள் அவ்விடத்திற்கு.
பார்த்திவ் ஸ்ருதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சுபஷ்வினியை உள்ளே வரும்படி தலையசைத்தவன் தான். வேறு எதுவும் பேசவில்லை.
“என்னாச்சு?…” என்றவள் பதட்டம் கண்டு ஸ்ருதிக்கே அப்போது தான் உரைத்தது.
“ஒண்ணுமில்ல அஷ். ஸாரி. ஸாரி…” என்றவள் அவளை அமர வைத்து தண்ணீரை தர பார்த்திவ்வை தான் கலவரத்துடன் பார்த்தாள் சுபஷ்வினி.
“உங்களுக்குள்ள ஒன்னும் பிரச்சனை இல்லையே?…” என அப்போதும் கேட்க,
“அங்க கேளுங்க அஷ்வினி…” என்று சொல்லிவிட்டான் பார்த்திவ்.
“என்ன பண்ண ஸ்ருதி?…” என்ற சுபஷ்வினி பார்த்திவ்வை பார்க்க அவன் எழுந்து அந்த அறையிலிருந்து வெளியேறினான்.
“அம்மாவும், அப்பாவும் மெசேஜ். அதுவும் அப்பா ரொம்ப பேசிட்டார்…” ஸ்ருதி கடுப்பாய் சொல்ல,
“அதுக்கேன் பார்த்திவ் கோவமா இருக்கார்? நீ என்ன பண்ண? அதை சொல்லு…” சுபஷ்வினி நேராக விஷயத்திற்கு வரவும்,
“அம்மா மெசேஜ் பண்ணியிருந்தாங்க. அவங்க அவார்ட் பங்க்ஷன் நேத்து தான் பார்த்தாங்களாம்….”
“இதுக்கெல்லாம் நேரம் இருக்கா அவங்களுக்கு? என்னவாம்?…” என நக்கலாக சுபஷ்வினி கேட்க,
“நான் எதுவும் பேசலை. அவங்க வாய்ஸ் சரியில்லை. அதான் அமைதியா இருந்துட்டேன்…”
“ஏன் மோளே?…” சுபஷ்வினி கேட்கவும்,
“என்ன பேசறது? அழற மாதிரி பேசறாங்க. முன்னாடி ஒரு ஆர்டிபிஷியல் டயலாக் தான் தெரியும். அதுவும் பயந்து, என் மேல ரொம்ப பாசம் இருக்குன்னு ப்ரூவ் பண்ண பார்க்கற மாதிரி. ஆனா இன்னைக்கு அப்படி இல்லை…” என்ற ஸ்ருதி,
“கல்யாணம் எப்போன்னு கேட்டாங்க. முழுமையான நம்பிக்கை இருந்தா மட்டும் அடுத்த முடிவுக்கு வான்னு சொன்னாங்க. மேரேஜ்க்கு கண்டிப்பா வர முடியாதாம். அவங்களால விஷ் பண்ண முடியுமாம். ஆனா அம்மான்ற இடத்துக்கு வந்து நிக்க முடியாதாம். அதை அவங்க குடும்பமும் விரும்ப மாட்டாங்களாம்…”
சொல்லும் பொழுதே ஸ்ருதியின் கண்கள் நிறைந்துவிட்டது. உதட்டை கடித்து உணர்வுகளை அடக்கிக்கொண்டாள் ஸ்ருதி.
ஓரிரு மாதங்களுக்கு முன் தாயின் வீட்டில் அவரின் பெண்ணிற்கு விசேஷம் என்று அத்தனை புகைப்படங்கள்.
அத்தனையிலும் அவ்வளவு சந்தோஷமும், மகிழ்ச்சியுமாக அவர்கள் குடும்பமாய் நின்றிருந்தனர்.
தன்னை பெற்றவர் கூட அவ்வளவு பெருமிதமும், புன்னகையுமாய் இருந்ததை கண்டிருந்தவளுக்கு இப்போது அந்நினைவு என்னவோ அழுத்தத்தை தந்திருந்தது.
“ப்ச், மோளே…” என்று சொல்லிய சுபஷ்வினியின் அதட்டலில் கண்ணை துடைத்துக்கொண்டவள்,
“பெருசா வருத்தம் எல்லாம் இல்லை. ஆனாலும் கொஞ்சம் என்னவோ ஒரு ஏக்கம். இதுவரைக்கும் இல்லாத ஒன்னு. அஷ் நான் பாவப்படற மாதிரி கூட இல்லையோ?…” என கேட்கவும்,
“அடி உனக்கு. உன்னை பார்த்து ஏன் பாவப்படனும்? அவசியமே இல்லை…” என அதட்டினாள் சுபஷ்வினி.
“ஆமா தான். பாவமெல்லாம் வேண்டாம். ஸ்ருதி இது தான்…” என பளிச்சென்று புன்னகைத்தாள்.
“குட் மோளே…” என கன்னத்தில் முத்தமிட்ட சுபஷ்வினி,
“வேற என்ன பண்ணின? இது விஷயமே இல்லையே?…” என கேட்டு,
“ஆமா இதை பார்த்திவ்க்கிட்ட சொன்னியா?…” என்றாள்.
“ம்ஹூம். இதை சொல்லலை. நான் அம்மாட்ட பேசிட்டு வைச்சிட்டு அப்பாவுக்கு கூப்பிடவும் தான் பார்த்திவ் உள்ள வந்தாங்க…”
“என்ன பேசின அவர் முன்னாடி?…” சுபஷ்வினி கேட்க,
“பேசும் போதே அவ்வளோ கோவமா பேசறார். நீயா மாப்பிள்ளை தேடிக்கிட்டியா? ஊரே பார்க்க உலகமே பார்க்க என்ன காரியம் பண்ணியிருக்க? என் வொய்ப் இங்க உங்க பொண்ணோட லட்சணம் பாருன்னு என் முகத்துக்கு நேரா சொல்லி சிரிக்கிறான்னு…” என ஸ்ருதி சொல்லி முடிக்கும் முன்,