“புரிஞ்சுக்கறவங்க தான் சொந்தங்கள். அவங்க வந்து வாழ்த்தினா போதும். அதை நீ யோசிக்க வேண்டாம். வாழ போறவன் நீ. உன் விருப்பமும், ஸ்ருதி விருப்பமும் தான் முக்கியம்…” என சொல்லிக்கொண்டிருந்தார்.
ஸ்ருதியுடன் சுபஷ்வினி, சுதந்திரம் இருவரும் வந்து சேர அனைவரையும் புன்னகையுடன் வரவேற்றார் மஞ்சுளா.
“ம்மா என்கிட்ட பேசும் போது கூட சொல்லவே இல்லை நீங்க…” என ஸ்ருதி சொல்ல,
“இங்க வரதுக்கு தான் கிளம்பி வந்திட்டிருந்தேன். நீயும் கால் பண்ணின. அதான் பேசிட்டே வந்துட்டேன்…” என்ற மஞ்சுளா,
“அப்பறம் இன்னைக்கு வேற எதுவும் வேலை இருக்கா பார்த்திவ்…” என மகனிடம் கேட்க,
“அதெல்லாம் இல்லை. இன்னைக்கு ரெக்கார்டிங் கூட இல்லை…” என ஆளுக்கு முதலாய் ஸ்ருதி பதில் சொல்ல,
“அவங்க என்னை கேட்டாங்க…” என்றான் பார்த்திவ் அடக்கப்பட்ட சிரிப்பை அவளுக்கு காட்டிவிடாமல்.
“ஏன்? நான் சொல்ல கூடாதா?…” என்றவள் கேள்வியில் பார்த்திவ் மௌனமாக,
“சுபாஷுக்கு அடுத்து நீயாம்மா? நல்லா வருவீங்க…” என்றவர்,
“சரிங்க தம்பி, நான் வெளில இருக்கேன்…” என வெளியேற,
“அப்போ நானும்…” என சுபஷ்வினி கிளம்ப பார்க்க,
“இரு அஷ்…” என்ற ஸ்ருதி மஞ்சுளாவை பார்த்தாள்.
“இருங்கம்மா, இன்னைக்கு முக்கியமான நாள். அதுக்கு தான் உங்களை கூட்டிட்டு போகலாமேன்னு நான் வந்தேன்…” என்றவர்,
“கல்யாணத்துக்கு முகூர்த்த புடவை எடுத்திருவோமே? இன்னைக்கு நல்ல நாள். விட்டுடவேண்டாமேன்னு தோணுச்சு…” என சொல்லவும் சுபஷ்வினி சந்தோஷப்பட ஸ்ருதி திகைத்தாள்.
“என்னாச்சு மோளே? என்ன ப்ரீஸாகிட்ட?…” என அவளின் கையை தட்ட,
“என்ன ஸ்ருதி, என்னன்னு சொல்லு…” என்றார் மஞ்சுளா.
ஸ்ருதிக்கு பார்த்திவ்விடம் இதை முதலில் சொல்லலாம் என்றொரு எண்ணம். ஆனால் இத்தனை சீக்கிரம் இவை நடக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
இப்போது மஞ்சுளா வந்து அழைக்கவும் என்ன செய்வது என தெரியாமல் திணறலுடன் பார்த்தாள் ஸ்ருதி.
சட்டென்று சொல்ல முடியாமல் தொண்டையில் முள் சிக்கிக்கொண்ட உணர்வு தோன்ற சுபஷ்வினியை பார்த்தாள்.
“எதுவானாலும் தயங்காம சொல்லு ஸ்ருதி…” என அவளருகே வந்து பார்த்திவ் சொல்ல,
“ம்மா…” என்று மஞ்சுளாவை பார்த்தவள்,
“இன்னைக்கே ஏன்?…” என தயங்கி கேட்க,
“ஏன் ஸ்ருதி? உனக்கு முக்கியமான வேலை இருந்தா ஒன்னும் பிரச்சனை இல்லை. இன்னொருநாள் போகலாம்…” என்றார் அவர்.
“அதெல்லாம் இல்லை ஆன்ட்டி. ப்ரீ தான் இன்னைக்கு…” என்ற சுபஷ்வினி,
“என்ன பன்ற ஸ்ருதி? போய்ட்டு வா…” என அதட்டினாள் தோழியை.
“போய்ட்டு வாவா? அஷ்வினி நீயும் தான் வர போற. ஸ்ருதி கல்யாணத்துல ஒன்னொன்னுலையும் நீ தான் இருக்கனும்…” என்று மஞ்சுளா சொல்ல,
“இதை நீங்க சொல்லனுமா ஆன்ட்டி. என் மோளே கூட தான் நான் என்னைக்கும்…” என்று ஸ்ருதியின் கையை பிடித்துக்கொண்டு சொல்ல,
“நீ சொல்லு ஸ்ருதி. என்ன விஷயம்?…” என்றான் பார்த்திவ்.
“எனக்கு என் கல்யாணப்புடவை அஷ் எடுத்து குடுக்கனும்…” என சட்டென்று அவனிடம் சொல்லிவிட்டாள் ஸ்ருதி.
“ஸ்ருதி…” என சுபஷ்வினி ஒரு நொடி திகைத்து பின் கண்கள் கலங்கிபோய்,
“விளையாடாத. கல்யாணப்புடவை எல்லாம் மாப்பிள்ளை வீடு தான் எடுக்கனும்…” என ஸ்ருதியிடம் மஞ்சுளாவை காண்பித்து கண்களால் அவளை அடக்க பார்த்தாள் சுபஷ்வினி.
“ம்ஹூம், அஷ் எனக்கு நீ எடுத்து குடேன்…” ஸ்ருதி சொல்லியதையே மீண்டும் சொல்ல சுபஷ்வினிக்கு நெஞ்சை அடைத்தது.
இது தானும், ஸ்ருதியும் மட்டும் எடுத்துவிடும் முடிவல்லவே. பார்த்திவ்வும், அவன் குடும்பமும் கூட சம்பந்தப்பட்டது.
ஸ்ருதி ஒன்று கேட்டு உடனே சரி என்று சொல்லிவிட முடியாத சூழ்நிலையில் சுபஷ்வினிக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.
இறைஞ்சுதலாய் வேண்டி ஒரு பார்வை தன்னிடம் ஸ்ருதி பார்த்ததே இல்லை இதுவரை.
ஆனால் இன்று பார்த்து, கேட்டு நிற்க தொண்டையை கவ்வும் உணர்வில் இருந்து விடுபட முடியாமல் தவித்து போனாள் சுபஷ்வினி.
ஸ்ருதியின் ஏக்கம் என்னவென்று தெரிந்தவளுக்கு அதை நிறைவேற்றிவிட முடியாத துடிப்பு.
“அதனால என்ன அஷ்வினி? கல்யாண பொண்ணு அம்மாவோட கையால புடவை வாங்கிக்கனும்ன்னு ஆசைப்படறா. ஏன் மறுக்கற நீ? நீ தான் எடுத்து குடுக்கற. ஆமா…” என மஞ்சுளா சொல்லிவிட சுபஷ்வினி என்னவிதமாய் அந்த நொடி உணர்ந்தால் என்றே சொல்லில் அடக்கிவிடமுடியாத ஒரு பிரவாகம்.
“ம்மா…” என்றவளின் இதழ்கள் துடிக்க,
“சில முறைகளை இந்தமாதிரி தாய்மை உணர்வுகளுக்காக விலக்கி வைக்கலாம். தப்பில்லை…” என்றவரின் புன்னகை வாடா சொல்லில் இரு பெண்களின் உணர்வுகள் மட்டுமல்ல கண்ணீரும் உடைப்பெடுத்தது.
“அஷ்…” என்று கட்டிக்கொண்ட ஸ்ருதியை அழுகையுடன் அணைத்துக்கொண்டாள் சுபஷ்வினி.
“தேங்க்ஸ் ஆன்ட்டி…” என்றவளின் கண்ணீருடனான நன்றியை முறைப்பாய் பார்த்த மஞ்சுளா,
“இப்ப என்கிட்ட அடி வாங்குவ நீ…” என மிரட்டி சிரிக்க,
“அடிச்சுக்கோங்க. என் மோளேக்காக…” என சுபஷ்வினி சிரிக்க புன்னகையின் வெளிச்சத்தில் கண்ணீரும் தித்தித்தது.
இப்படி இருப்பவர்கள் எப்படி திருமணத்தின் பின் பிரிந்து இருப்பார்கள் என்று மஞ்சுளாவிற்கு கவலை ஒருபுறம் என்றால், ஸ்ருதியின் எதிர்பார்ப்பில் ஒரு தாயாய் உடைந்து சிதறி இருந்தார்.
சுபஷ்வினியின் மன போராட்டமும், விழிகளில் பரிதவிப்பும் எத்தனை தூரம் அவள் உள்ளுக்குள் கலங்கி போயிருந்தால் ஸ்ருதிக்காக அவள் தன்னை கட்டுப்படுத்தி இருப்பாள் என்று பிரமிப்பாக இருந்தது.
“ஓகே நல்ல நேரம் போறதுக்குள்ள கிளம்புவோமா? நான் அங்க சொல்லி வச்சுட்டேன்…” என மஞ்சுளா சொல்ல,
“போலாம் ஆன்ட்டி…” என்றவள் தன் வீட்டிற்கு அழைத்து விஷயத்தை சொல்ல,
“இதெல்லாமா கேட்டுக்கிட்டு? நம்ம பிள்ளைக்கு நீ எவ்வளவுக்கு வேணுமோ எடுத்து குடுப்பா. அக்கவுண்ட்ல பணமிருக்கா? இல்ல இங்க அப்பா யாருக்கிட்டையாச்சும் வாங்கி போட்டு விடட்டுமா?…” என்று கேட்ட தந்தையின் அன்பில் நெக்குருகினாள்.
அத்தனை சந்தோஷம். புடவை கடையில் அவர்களுக்கென காத்திருக்க சுபஷ்வினியும் ஸ்ருதியுமாக மஞ்சுளாவிடம் காண்பித்து, பார்த்திவ்விடம் காண்பித்து என ஒவ்வொன்றாய் தேர்வு செய்தனர்.
அறிவழகனும் அங்கே வந்துவிட்டார். மஞ்சுளா சொல்லவும் அவருக்கும் அத்தனை மகிழ்ச்சி.
“ஸ்ருதிக்கு அம்மா பக்கம்ன்னு ஒண்ணு வேணும்ன்னு இருக்கும் தானே மஞ்சு. செய்யட்டும். ஆனாலும் என்ன பொண்ணுங்க இவங்க. எனக்கு பொண்ணுங்க இல்லைன்னு இப்ப வருத்தமா இருக்கு…” என அவரும் சொல்ல பார்த்திவ் மனதில் ஸ்ருதி சுபஷ்வினி இருவரும் இன்னும் உயர்ந்தனர்.
“ஓகே, மெல்ல சொல்லுவியாம்….” என அவளின் தலையில் லேசாய் கலைத்துவிட்டு,
“கல்யாணம் எங்கன்னு கூட இடம் பிக்ஸ் பண்ணிட்டோம்….” என சொல்ல அவனே சொல்லட்டும் என பார்த்திருந்தாள்.
“கேரளாவில். யட்சினி பிறந்த ஊரில்…” என்று சொல்லவும் ஸ்ருதியின் முகத்தில் அதிர்வும், திகைப்பும்.
“என்னம்மா? ஓகே வா?…” என்றவன் கனிவில் லேசாய் அவள் உதடுகள் வளைய,
“எனக்கு அங்க யாருமில்லை. ஏன் அங்க?…” என்று கேட்டு முடிக்கும் முன் அவனின் தோளில் சாய்ந்திருக்க,
“யார் சொன்னா? அங்க உன் கூட நான் இருப்பேன். அம்மா, அப்பா, அஷ்வினி, சுதந்திரம் அங்கிள், சுபாஷ். இவங்கலாம் இருப்பாங்களே? இது போதுமேடா…” என்றவன் ஆதுரமான தலை வருடலில் ஸ்ருதியின் பலமும் பலவீனமுமாய் பார்த்திவ் ஆத்மம் பெற்றிருந்தான்.