கேரளாவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து பெற்ற அந்த ஹோட்டலில் இரு தளம் முழுவதுமே அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
பார்த்திவ் குடும்பமும், அவனின் சொந்தங்கள் சிலரும் ஒரு தளத்தில் தங்கி இருந்தனர்.
இன்னொரு தளத்தில் ஸ்ருதி, சுபஷ்வினி குடும்பம், சுதந்திரம் குடும்பம், சுபாஷ் குடும்பம், இன்னும் சில நண்பர்களும் ஸ்டூடியோவில் பணிபுரிபவர்களும் என வந்திருந்தனர்.
அருகில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணமும் அந்த ஹோட்டலில் வைத்து மற்ற சடங்குகளும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
இன்னும் ஒருமணி நேரத்தில் முகூர்த்தம். அனைவருமே அந்த கோவிலில் இருக்க வேண்டும்.
சுபஷ்வினி ஸ்ருதிக்கு அலங்காரத்திற்கு உதவியாய் இருக்க அந்த ஊரின் முன்னணி அழகுநிலையத்தில் இருந்து வந்திருந்த பெண் ஸ்ருதியின் புடவையின் மடிப்பை ஒன்றுபோல தேய்த்துவிட்டாள்.
“ஸ்ட்ரெயிட்னேர் ரொம்ப ஹீட்டாகிருச்சுன்னு நினைக்கறேன்…” என சுபஷ்வினி சொல்ல,
“ஆல்மோஸ்ட் ஓவர் மேம். ப்ளீட்ஸ் முடிஞ்சது…” என சொல்லிய பெண்,
“இப்ப செக் பண்ணிக்கோங்க…” என்று ஸ்ருதியை தள்ளி நின்று பார்த்தாள்.
நீல நிற புடவை முழுவதும் இசைக்கருவிகளின் பிம்பங்கள் தங்க இழைகளால் நெய்யப்பட்டிருக்க ஸ்ருதியின் நிறத்திற்கு இன்னும் எடுப்பாய் தெரிந்தது.
“ஹ்ம்ம், நீ ஒரு ம்யூஸிக் ப்ரைட்டா மோளே. அடிபொலி…” என பார்த்து சொல்லவும் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள் ஸ்ருதி.
ஸ்ருதி முகத்தில் என்னவோ சிறு படபடப்பு. கூடவே ஒரு விரும்பத்தகாத பாவனை.
“ப்ச், விடு. அதையெல்லாம் யோசிக்கவே கூடாது….” என்ற சுபஷ்வினி தங்களை பார்த்தபடி நின்றுகொண்டிருந்த பெண்ணிடம்,
“ஓகே மேம், நீங்க உங்க ரூம்ல வெய்ட் பண்ணுங்க. நாங்க கூப்பிடறோம்…” என சொல்ல அந்த பெண்ணும் கிளம்பி வெளியேற ஸ்ருதி அமர்ந்துவிட்டாள்.
“என்ன ஸ்ருதி?…” என்று சுபஷ்வினி அவளின் முகம் நிமிர்த்த,
“ஒண்ணுமில்லை அஷ்…” என்றவள் மேலும் பேசும் முன் கதவு தட்டப்பட்டது.
சுபஷ்வினி சென்று கதவை திறக்க வெளியில் கோட் சூட்டுடன் பவ்யமாகவும், முகத்தில் அத்தனை இறுக்கமாகவும் நின்றிருந்தது ஸ்ருதியின் தந்தையான ஜெயரூபன்.
அவரை பார்த்ததுமே ஒரு இகழ்ச்சியான புன்னகையுடன் வழியை விட்ட சுபஷ்வினி,
“சொல்லுங்க மேனேஜர்…” என்றாள் அவரிடம்.
ஜெயரூபன் பார்வை எல்லாம் மகள் ஸ்ருதகீர்த்தியின் மீது தான். மணப்பெண்ணாய் தன்னுடைய மகள்.
பார்த்தவருக்குள் என்னவும் உருகவில்லை. ஆனால் ஒருவித கோபம். பல்லை கடித்தபடி நின்றவர் பேசும்முன்,
“வாட் ஹேப்பண்ட்?…” என உள்ளே நுழைந்தான் பார்த்திவ்.
பட்டு வேஷ்டி சட்டையில் மணமகனின் சர்வ லட்சணத்துடன் அழகிய புன்னகை மின்ன, நெற்றியில் சந்தன கீற்று.
முன் நெற்றியை தொட்டுரசும் சிகை என கம்பீரமாய் நின்றவனை ஜெயரூபன் ஆற்றாமையுடன் பார்த்தார்.
எதையும் காண்பிக்க முடியவில்லை அவரால். இந்த புகழ்பெற்ற ஹோட்டலின் உரிமையாளரின் நேரடி கண்காணிப்பில் அவரின் உத்தரவின் பெயரில் நடக்கவிருக்கும் திருமணம் இது.
அதை ஜெயரூபனிடம் ஒப்படைத்திருந்தார். இந்த ஹோட்டலின் மொத்த பொறுப்பையும் ஏற்று நடத்திவருவது ஜெயரூபன் தான்.
இன்று இந்த திருமணமும் அதன் சார்ந்த பொறுப்புகளும் முழுவதும் ஜெயரூபன் தான் கவனிக்கவேண்டிய கட்டாயம்.
மகள் திருமணம் என தெரிந்தும் வேறு வழி இன்றி அதனை ஏற்று நடத்தி வருகிறார்.
முதல் நாளில் இருந்து வந்திருப்பவர்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் அவர் தான் வந்து பார்த்து கவனிக்க வேண்டும்.
இன்னும் சற்று நேரத்தில் ஹோட்டலின் உரிமையாளரும் வரவிருக்க இருப்பவர்களுக்கு வேறு என்ன வேண்டும் என ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை ஜெயரூபனே வந்து கேட்க வேண்டிய சூழ்நிலை.
அவரால் அவருக்கு கீழிருப்பவர்களை வேலை ஏவிவிட முடியும் என்றாலும் அவரே செல்லவேண்டும் என்ற கட்டளை இருக்கையில் அதனை தவிர்க்க முடியவில்லை.
இப்போது போட்டோ ஷூட் எடுக்க ஆட்கள் தயாராக இருக்க மணமக்கள் தயாரா என பார்க்க வந்திருந்தார் ஜெயரூபன்.
“இவர் இப்ப தான் வந்தார். அதான் கேட்டுட்டு இருக்கேன்…” என்று சுபஷ்வினி சொல்ல ஸ்ருதி இறுக்கமான பாவனையுடன் அமர்ந்திருந்தாள்.
“நீங்க ரெடியா இருந்தா ஒரு சின்ன ஷூட் இப்ப முடிச்சிடலாம்ன்னு சொன்னாங்க. அதான் கேட்டுட்டு போக வந்தேன்…” என்றார் அவர்.
“ஓஹ், ஓகே. ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வர சொல்லுங்க. இப்ப நீங்க போகலாம்…” என சொல்லியவனின் பேச்சில் முகம் சிறுக்க வெளியேறினார்.
இந்த திருமணம் முடிந்து இவர்கள் அனைவரும் இங்கிருந்து கிளம்பும் வரை தனக்கு இதுதான் என தெளிவாய் தெரிந்திருந்தது.
அவருக்கு பார்த்திவ் தன்னை தெரிந்து பேசுகிறானா? இல்லை தெரியாமல் பேசுகிறானா? என்றொரு சந்தேகம்.
ஸ்ருதி சொல்லியிருக்க கூடுமோ என யோசித்தவர் கடைசியில் குழம்பி போனது தான் மிச்சம்.
மகளுடன் அவ்விடம் வந்திறங்கியவனை சிரம் தாழ்ந்து கவனித்து பார்த்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருப்பதை வெறுத்தார்.
அன்று எத்தனை பேச்சுக்கள் ஸ்ருதி பேசியிருக்க இன்று தன் முன் அவளின் திருமணம். அதன் வேலைகள் யாவும் தன் தலையில்.
நினைக்க நினைக்க ஆறவில்லை அவருக்கு. மகள் என்ற பாசம் எல்லாம் எப்போதோ அவரை விட்டு சென்றிருந்தது.
எங்கே தான் பேசாமல், பணம் அனுப்பாமல் விட்டுவிட்டால் தன் இல்லம் தேடி குடும்பத்தின் முன் வந்து பிரச்சனை செய்வாளோ என்ற பயத்தில் தான் இத்தனையும்.
முதலில் முதல் மனைவியுடன் ஒரு போட்டி மனப்பான்மையில் ஆரம்பித்தது கடைசியில் இப்படி வந்து நின்றிருந்தது.
தற்போதைய சூழ்நிலையில் ஸ்ருதிக்கு தாங்கள் அனுப்பும் பணம் எல்லாம் ஒரு பணமே இல்லை என்பது அவரும் அறிந்த ஒன்று தான்.
ஆனாலும் அவள் விடாமல் தன்னை பிடித்து வைத்திருப்பதில் இன்னும் கோபம் தான் மிஞ்சியது.
எல்லாவற்றிகும் சிகரமாக இந்த திருமணம். தன் முன்னிலையில், தன் ஏற்பாட்டில்.
ஜெயரூபன் அறையிலிருந்து வெளியேறிய நொடி சுபஷ்வினியும் பார்த்திவ்விடம் ஸ்ருதியை கண்களால் காண்பித்துவிட்டு வெளியே செல்ல பெருமூச்சுடன் திரும்பினான் பார்த்திவ்.
“ஸ்ருதி…” என அவளின் தோளில் கை வைக்கவும் அவனின் இடையை கட்டிக்கொண்டவள்,
“இங்க நாம வந்திருக்கவே வேண்டாம்…” என்றாள் குரல் நடுங்க.
“ஹேய் என்னடா?…” என அவளின் அருகே கால்களை மடக்கி அமர்ந்தவன் பேசும் முன்,
“எப்படி அவரால இப்படிலாம் இருக்க முடியுது? என்னவோ மனசு பாரமா இருக்கு…” என்று கண்ணீர் பொங்கிவிட்ட கண்களோடு சொல்லவும் அவள் விழி நீர் வடிந்துவிடாமல் விரல்களால் அணையிட்டு,
“இரு டிஷ்யூ வைக்கறேன்…” என லேசாய் ஒற்றி எடுத்தான் கண்ணீரை.
“ச்சச்சோ, அவர் முன்னாடி கெத்தா இருக்கறதை விட்டுட்டு இப்படி அழறதா ஸ்ருதகீர்த்தி? என்ன இது? நீங்க பிரேவ் கேர்ள் இல்லையா?…” என மென்னகையுடன் கேட்க,
“தைரியம் எல்லாம் சில நேரங்கள்ல காணாம போயிருது. நான் என்ன பண்ணிட்டேன்னு இப்ப தோணிட்டே இருக்கு. இவர் முன்னாடி இல்லைன்னா கூட எனக்கு தோணிருக்காதோ என்னவோ. ஆனா என் முன்னாடி ஒன்னொண்ணுக்கும் கேட்டு வந்து நிக்கும் போது ஒரு நிமிஷம் கூட அவர் பொண்ணு நான் அப்படின்னு அவருக்கு ஏன் ஒரு எண்ணம் வரவே இல்லை?…”
கோபம் கொந்தளித்தாலும் அதற்கும் அமிழ்ந்திருக்கும் அந்த ஏக்கம் பார்த்திவ்வை சுட்டுவிட்டது.
“ஸ்ருதி காம் டவுன். இப்ப இதை யோசிக்கிற நேரமா? நீ என்னை நினை. நம்மோட வாழ்க்கை இன்னும் கொஞ்ச நேரத்துல ஒரே பாதைக்கு வர போகுது. அதை பத்தி யோசி…” என சொல்லியவன் அவள் கையில் தான் அணிவித்த மோதிரத்திற்கு முத்தம் பதித்தான்.
“இப்படி மனுஷ தன்மையோ, துளி பாசமோ இல்லாதவருக்காக எதுக்கு நீ ஃபீல் பன்ற? ஒரு அப்பாவா அவரால உன் கல்யாணத்துல கலந்துக்க முடியாத துரதிர்ஷ்டம் அவருக்குன்னு அவர் நினைக்கனும். லீவ் இட்…” என்று சொல்லி எழுந்து நின்றவன் ஸ்ருதியை பார்த்தபடியே இருந்தான்.