மிதக்கும் வீட்டின் வெளியில் நின்றிருந்தவள் கண்ணுக்கெட்டும் தூரம் வரை நீர்ப்பரப்பு தான்.
ஆங்காங்கே படகு வீடுகள் நகர்ந்தவண்ணம் இருந்தது தூரத்தில். மெல்ல இங்குமங்குமாய் மிதக்கும் அந்த மரப்பாலத்தில் கால்கள் சில்லிட நடந்துகொண்டிருந்தாள் ஸ்ருதி.
முதல்நாள் லேசாய் இருள் கவிழ்ந்ததும் வந்தவளுக்கு இத்தனை அழகு கண்ணுக்கு புலப்படவில்லை.
அதுவும் தாங்கள் தங்கியிருக்கும் இந்த பகுதி மட்டும் தீவின் ஓரத்தில் யாரின் இடைஞ்சலுமின்றி இருப்பதற்காக கட்டப்பட்டதை போலிருந்தது.
உறக்கம் என்பதை அவள் விழிகள் அண்டவே இல்லை. இப்போதும் மனதெல்லாம் புத்துணர்ச்சியுடன் இருக்க சோர்வு என்பதே தெரியவில்லை.
பார்த்திவ் உறங்கிக்கொண்டிருக்க சத்தமின்றி வெளியே வந்துவிட்டவள் பார்வையில் விழுந்தாள் அவள் இப்போது.
அங்கே காவலுக்கு நின்றவரிடம் என்னவோ சொல்லிவிட்டு வேகமாய் உள்ளே வர அவரும் பின்னே ஓடி வந்தார்.
“ஸாரி மேம். உங்களை தெரியும்ன்னு சொல்லி உள்ள வந்துட்டாங்க. இவங்களும் செலிபிரிட்டின்னு…” என அவர் சொல்ல ஸ்ருதி அவளை பார்த்துவிட்டு,
“நான் பேசிக்கறேன். நீங்க போங்க…” என அவரை அனுப்ப,
“ஹாய் ஐம் ஆராதனா…” என்றாள் அவள் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் விதமாக.
“ஹாய், சொல்லுங்க…” என்ற ஸ்ருதி முகத்தில் நிச்சயத்திற்கும் நட்பு இல்லை.
“வெல், என்னை தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு. நான் பார்த்திவ்வோட…” என்றதுமே,
“என்ன சொல்ல வந்தீங்களோ அதை மட்டும் சொல்லலாம்…” என தேவையற்ற பேச்சை தடுத்தாள் ஸ்ருதி.
“ஓஹ், செம்ம ஹாட் போல? அதுவும் நேத்து உங்களுக்கு கல்யாணம்ன்னு கேள்விப்பட்டேன். சரி ஒரே ரெசார்ட்ல இருக்கும் போது விஷ் பண்ணலைனா எப்படி?…” என கேட்டவள் பார்வை அந்த மிதக்கும் வீட்டை ரசனையாய் பார்த்தது.
“இந்த ஹவுஸ்ஸை ஒருநாள் புக் பண்ணலாம்ன்னு பார்த்தா முடியாதுன்னு சொல்றாங்க. நானும் ரெண்டுதடவை வந்துட்டேன். ஆனா இதை மட்டும் பார்க்கவும் அலோவ் பன்றதில்லை. டபுள் பேமண்ட் கூட ஓகேன்னு சொல்லிட்டேன்…” என்றாள் ஆராதனா.
அவளையும், அவள் உடையையும் பார்த்த ஸ்ருதிக்கு சாரங்கபாணி பெண்ணிற்கு இருக்கும் இன்னொரு முகம் முழுதாய் விளங்கியது.
லேசாய் சொருகும் விழிகளுடன் பேசினாலும் ஓரளவு தெளிவாய் தான் நின்றாள் ஆராதனா.
“இன்னும் நீங்க இங்க வந்த விஷயத்தை பத்தி சொல்லலையே…” என ஸ்ருதி கேட்க,
“உங்க ப்ரைவேசியை கெடுக்கறேன் போல?…” என சிரித்தவள்,
“ஓகே, உங்க மேரேஜ்க்கு கங்க்ராட்ஸ்…” என சொல்லி மீண்டும் அந்த வீட்டை பார்த்தாள் ஆராதனா.
தன் ஆண் நண்பனுடன் அங்கே இருமுறை வந்திருக்கிறாள் அவள். முதல்முறை வரும் பொழுதே இதற்குள் நுழைய கூட அனுமதிக்கவில்லை.
ஒருநாள் இப்போது நிற்கும் இடம் வரை வந்துவிட்டவளுக்கு அதற்கு அடுத்தான அனுமதி கடுமையாக மறுக்கப்பட்டது.
எப்படியாவது அந்த வீட்டிற்குள் சென்று பார்த்துவிடும் ஆசை. தான் முன்னணி இயக்குநரின் மகள். தன்னால் முடியாதா என அந்த தீவின் நிர்வாகத்திடம் அதிகாரமாக கேட்க,
“ஸாரி மேம். அது எங்க பாஸோட ப்ரைவேட் வில்லா. அதை பார்க்க கூட அனுமதி இல்லை. நீங்க ஸ்டே பண்ண கேட்கறீங்க. நோ வே…” என சொல்லிவிட்டார்கள்.
இப்போது அதன் உரிமையாளராய் ஸ்ருதகீர்த்தி. ஆராதனாவிற்கு கொஞ்சம் பொறாமையும் இருந்ததென்னவோ உண்மை.
“இது நான் இருந்திருக்க வேண்டிய இடம்…” என ஆராதனா சொல்லிவிட ஸ்ருதி முகம் மாறாமல் இருக்க கொஞ்சம் பிரயத்தனப்படவேண்டியதானது.
வேண்டுமென்று சொல்லவில்லை ஆராதனா. ஆனால் அந்த எண்ணம் எழாமல் இல்லை அவளுக்கு.
பார்த்திவ் மட்டும் தங்கள் திருமணத்தை நிறுத்தியிருக்காவிட்டால் இதன் முழு கட்டுப்பாடும் தன் காலுக்குள் கீழ் தானே?
இதனை நினைக்கும் பொழுதே இதே போல ஒரு தீவை வாங்க ஆசை மேம்பட்டது ஆராதனாவிற்கு.
ஆனாலும் இதற்குள் அப்படி என்ன இருக்கிறது என பார்க்கும் எண்ணம் குறையவே இல்லை.
வெளி அழகே அவ்வளவு கவர்வதாக இருக்க உள்ளே இன்னும் எப்படி இருக்கும்?
பார்த்திவ் ரசனை மிகுந்தவன் என எண்ணிக்கொண்ட பொழுது, சரியான பிற்போக்குவாதி என்றும் நினைத்துக்கொண்டாள்.
“நீங்க கிளம்பலாம் ஆராதனா. இது எங்களோட ப்ரைவேட் பிளேஸ். நீங்க டூரிஸ்ட் கெஸ்ட். உங்களுக்கான ரெசார்ட் எங்க இருக்குன்னு நான் சொல்ல வேண்டியதில்லை…” என ஸ்ருதி சொல்லவும்,
“ஐ க்னோ. ஓகே, பை…” என்று சொல்லிவிட்டு திரும்ப பார்க்க,
“ஸ்ருதி…” என்ற அழைப்புடன் வெளியே வந்தான் பார்த்திவ்.
கலைந்திருந்த தலையை கைகளால் கோதியபடி இலகுவாய் வந்து நின்றவனின் தோற்றத்தில் மனம் மயங்கத்தான் செய்தது ஆராதனாவிற்கு.
அவனின் புகழும், அழகும் தானே அவனை மணக்க சம்மதம் சொல்லவே வைத்தது. இப்போதும் வெளிப்படையாகவே அவனை ரசித்து,
“பார்த்திவ் வெரி ஹாட்…” என்றாள் ஆராதனா.
அவளை பார்த்ததுமே பார்த்திவ்விற்கு சுர்ரென்று ஏற தீயாய் விழித்தவன் அவளுக்கெதிரில் நின்ற ஸ்ருதியை தனக்கருகில் இழுத்து தள்ளி நின்றான்.
அவனறியாமலே அந்த உணர்வு எழுந்துவிட, ஆராதனாவை தான் அன்று பார்த்தவிதம் அதனை செய்ய வைத்தது.
ஆராதனாவின் முகத்தில் பெரிதாய் அவமானம் எதுவும் இல்லை. உதட்டை சுளித்தபடி தான் நின்றாள்.
“கீப் இன் டச் மேன். நாம ஜஸ்ட் ப்ரெண்ட்ஸா கண்டினியூ பண்ணலாம்…” என அசால்ட்டாய் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு செல்ல ஸ்ருதியின் விழிகள் அவளை கூர்மையாய் அளவிட்டது.
“ஷிட்…” என பல்லை கடித்த பார்த்திவ்,
“உன்னை யார் நான் இல்லாம வர சொன்னது?…” என ஸ்ருதியை உள்ளே கூட்டி சென்றவன் உடனே மேனேஜருக்கு அழைப்பு விடுத்தான்.
அந்த பக்கம் எடுக்கவும் பற்றி எரியாத குறை தான் அவன். கத்தி தீர்த்துவிட்டான் அவர்களை.
“நான் இருக்கும் போதே கேட் தாண்டி இங்க வரை பப்ளிக் வராங்கன்னா நான் இல்லைன்னா இங்க என்ன நடக்கும்?…” என்று அத்தனை பேச்சுக்கள்.
“நான் தான் செக்யூரிட்டிட்ட உள்ள விட சொன்னேன். கொஞ்சம் அமைதியா இருங்க…” என்ற ஸ்ருதியின் பேச்சு எதுவும் காதில் விழுந்தால் தானே?
பேசி முடித்து திரும்பியவன் முகத்தின் கோபத்தை கண்டவள் தானும் முறைத்துக்கொண்டு நிற்க,
“உன்னை யார் எழுந்து வெளில போக சொன்னா?…” என்றான் சுள்ளென்று.
“மாஸ்டர் இஸ் பேக்…” ஸ்ருதி முனங்க,
“என்ன?…” என்றவன் காதுகளிலும் அது விழத்தான் செய்தது.
“நான் வாயசைச்சா கூட கரெக்ட்டா கண்டுபிடிப்பீங்களே? இது உங்களுக்கு கேட்கலை. அதை நான் நம்பனும்…” என்றவள் பேச்சில் பார்த்திவ் இதழோரத்தில் சிரிப்பு பூத்தது.
“இங்க வா…” என்றவன் ஸ்ருதியுடன் பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.
அமர்ந்ததும் ஊஞ்சல் லேசாய் ஆட ஆரம்பிக்க அந்த வீடும் அசைந்தது நீரின் சலசலப்பிற்கு ஏற்றவாறு.
“உங்களுக்கு எப்படித்தான் தோணுச்சோ இந்த இடத்துல இப்படி கட்டனும்ன்னு. கொஞ்சம் நல்லா இருந்தாலும் லைட்டா பயமாவும் இருக்கு. ஊஞ்சலை ஆட்டாம இருங்க…” என்றாள் ஸ்ருதி அவன் கால் மேல் தன் கால்களை இட்டு.
“ஹ்ம்ம், அப்போ இன்னும் அசைக்கலாம் போல…” என சிரித்தவன்,
“ப்ச், முதல்ல இந்த பிரச்சனையை முடிங்க. நேத்து தான் நமக்கு கல்யாணமாகியிருக்கு. இன்னைக்கு எர்லி மார்னிங் வரை என்னை கொஞ்சிட்டு இப்ப கோவப்படறீங்க…” என்ற பாவனையில் அவளின் கன்னத்தை கிள்ளியபடியே பார்த்தான் பார்த்திவ்.
“நீங்க தூங்கறீங்களே, தொந்தரவு செய்யவேண்டாமேன்னு எழுந்து வெளில போனா அவ அங்கருந்து கையை காமிச்சு வேகமா வரா. செக்யூரிட்டி பாவம். பின்னாடியே ஓடி வரார். நான் தான் போக சொன்னேன். நீங்க என்னன்னா அவரை பயர் பண்ண சொல்றீங்க? என்ன நடந்ததுன்னு என்கிட்ட கேட்க வேண்டாமா?…”
“ப்ச் ஸ்ருதி, உனக்கு புரியாது. துஷ்டரை கண்டா தூர விலகனும். நீ அந்த பொண்ணுட்ட பேசினா பேசும் போதே உன்னை ஹர்ட் பண்ணிடும். அதோட செக்யூரிட்டிக்கு என்ன வேலையோ அதை அவர் சரியா செய்யனும். இது என்னோட ஆடரை மீறினது மாதிரி தானே?…”
“ஆனா நான் தான் விட்டு போக சொன்னேன்…” ஸ்ருதி சொல்ல,
“அதுவரை அவர் அந்த பொண்ணை அலோவ் பண்ணியிருக்க கூடாது ஸ்ருதி. அதுதான் அவர் வேலை. கேட் தாண்டி உள்ள வரவும் தானே நீ விட சொன்ன? அந்தளவு வரவிட்டது யார்? ஒருத்தரை பனிஷ் பண்ணினா தான் அடுத்து இந்த தப்பை யாரும் செய்யமாட்டாங்க…” என்றான் அவன் தீர்மானமாக.
“ஆனா அவர் வேலை போகுமே? பாவமில்ல அவங்க ஃபேமிலி?…” ஸ்ருதியின் எண்ணம் இதுவாக தான் இருந்தது.