“ப்ச், நான் நைட் நல்லாவே சாப்பிட்டேன். நான் என்னைக்கு அரைகுறையா சாப்பிட்டிருக்கேன்?…” என்றாலும் இருக்கையில் அமர்ந்தவள் சம்மணமிட்டு ஒரு தட்டை கையில் எடுத்துக்கொண்டாள்.
“அஷ்க்கு பச்சைமிளகாய் நிறைய இருந்தா ஆம்லெட் ரொம்ப புடிக்கும் தெரியுமா?…” என சிரிப்புடன் சொல்லியபடி எடுத்து சாப்பிட தலையசைத்தவன் பாலை மட்டும் எடுத்துக்கொண்டான் தனக்கு.
“பால்ல ரொம்ப சர்க்கரை ரொம்ப சேர்த்துக்க மாட்டா. அதுவும் அவங்க ஊருக்கு போனா சர்க்கரையே பாலுக்கு போட்டுக்க மாட்டா. அப்பத்தான் பாலோட டேஸ்ட் சூப்பரா இருக்குமாம். எனக்கும் கூட கொஞ்சம் புடிக்கும்…” என்றாள்.
இத்தனை நாட்களில் சுபஷ்வினி பற்றிய பேச்சுக்கள் ஸ்ருதியிடம் இல்லாமல் இருந்ததே இல்லை.
அவளிடம் ஒவ்வொன்றிலும் சுபஷ்வினியின் எண்ணங்கள் நினைவுகள் தான் நிறைந்திருந்தது.
கோபம் என்றாலும் இந்த நொடி அதை அவள் எப்படி எதிர்கொள்வாள் என்பதில் இருந்து ஒவ்வொன்றையும் சொல்ல பார்த்திவ் அமைதியாக கவனித்துக்கொள்வான்.
முன்பும் இருந்தது தான். ஆனால் திருமணத்திற்கு பின் அது அதிகம் தான் ஆகியிருந்தது.
“நீங்க ஆம்லெட் எடுத்துக்கலை?…” ஸ்ருதி கேட்க,
“பால் குடிச்சிட்டு எடுத்துக்கறேன்…” என்று சொல்லி கைபேசியுடன் அவளருகில் அமர்ந்தான்.
ஸ்ருதி பேசிக்கொண்டே ஓரளவு உண்டு முடிக்கும் வரை காத்திருந்து தனது போனை நீட்டினான்.
“பேசு…” என ஸ்ருதியிடம் சொல்ல,
“யார்க்கிட்ட?…” என கேட்டுக்கொண்டே தண்ணீரை குடித்தாள்.
“உன் அஷ்க்கிட்ட தான். பேசிட்டு தூங்கு…” என்றதும் ஸ்ருதி மௌனமாக,
“ப்ச், என்ன இப்போ? பேசுன்னு சொன்னேன். நானே பேச சொல்றேன்ல…”
“ம்ஹூம், அஷ் திட்டுவா. நான் கால் பண்ணினாலே உங்களோட நேரத்தை செலவளிக்கனும்னு பேசறதே இல்லை. அப்பப்ப மெசேஜ் மட்டும் பண்ணிப்பா…” என்று சொல்ல பார்த்திவ்விற்கு அவளின் மனநிலை நன்றாகவே புரிந்தது.
கூடவே இருந்தவள், எல்லாவிதத்திலும் தாய்க்கும் மேலாக துணையிருந்தவள், ஸ்ருதி தேடலில் தவறிலையே.
கைபேசியை பார்த்தபடி இருந்தவளுக்கு சுபஷ்வினியிடம் இருந்து அந்த நேரம் அழைப்பு வர,
“இந்நேரம் உங்க நம்பருக்கு கூப்பிடறா? எதுவும் பிரச்சனையோ?…” என ஸ்ருதி பதற,
“ப்ச், நான் தான் மெசேஜ் பண்ணேன். இங்க ஒரு பொண்ணு அவளோட அஷ் ஏக்கத்துல தூங்காம கூட இருக்கான்னு…” என்று சொல்லவும் ஸ்ருதி கண்கள் கலங்கிவிட்டது.
“ப்ச், இதை பார்த்தா நான் என்னமோ சொல்லிட்டேன்னு அந்த பொண்ணு நினைப்பாங்க. பேசி முடி முதல்ல…” என சொல்லியவன் அவளை விட்டு நகர்ந்து அமர்ந்தான் அந்த அழைப்பை ஏற்று ஸ்ருதியிடம் தந்துவிட்டு.
“என்னடா மோளே, தூங்கலையா?…” என சுபஷ்வினி கேட்க,
“நீயும் தூங்கல. கண்ணெல்லாம் உள்ள போயிருக்கு?…” என ஸ்ருதி பார்த்ததும் கண்டுகொள்ள,
“பாரு நான் ஆபீஸ்ல இருக்கேன். நைட் வொர்க். இங்க நான் தூங்கின என் வேலை ஹோகையா தான்…” என்றாள் சுபஷ்வினி.
“உனக்கு இந்த வீக் நைட் ஷிப்ட் இல்லையே?…” ஸ்ருதி கேட்க,
“ப்ச், ரொம்ப முக்கியம்? ஆபீஸ்ன்னா திடீர் வேலைகள் இருக்காதா என்ன? இவ யாருடா இவ?…” என்ற சுபஷ்வினி,
“என்ன மோளே இன்னைக்கு என் நினைப்பு? போய் தூங்கி எழுந்து மார்னிங் ப்ரெஷா பேசுவியாம். ஓகே…” என சொல்ல,
“அஷ்…” என்ற ஸ்ருதி,
“நீ ரூம்ல தனியா இருக்கியா? வேற யாரும் வந்திருக்காங்களா?…” என கேட்டாள்.
“ஏன் அந்த ரூம்ல தனியா இருந்தா என்னவாம்? நான் என்ன இன்னைக்கு நேத்தா அங்க இருக்கேன்? உனக்கு என்னமோ ஆகிடுச்சு மோளே…” என சுபஷ்வினி சிரிக்க,
“சொன்னாங்க. நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அந்த ரூம் எனக்கு மட்டும் இருக்கட்டும்ன்னு. இன்னொரு ஆளோட எப்படி செட்டாகுமோ?…” என சுபஷ்வினி.
ஸ்ருதியின் முகம் பாராமல் கணினியை பார்த்தபடி சொல்ல அவளின் குரல் மாற்றத்தை ஸ்ருதி மட்டுமல்லாது, பார்த்திவ்வுமே கவனித்தான்.
“அஷ்…”
“ஹேய் இப்ப என்ன உனக்கு? எனக்கு வேலை இல்லையா? உனக்கு தூக்கம் வரலைன்னா நான் தான் கிடைச்சேனா என்ன?…” என்று அதட்டல் போல சுபஷ்வினி சொல்ல,
“ஏன் இதுவரைக்கும் உன்னோட நைட் வொர்க்ல நான் பேசினதே இல்லையா உன்னோட?…”
“ஸ்ருதி மோளே…” என்ற சுபஷ்வினி அமைதியாக,
“ஓகே, நான் வைக்கறேன். நீயும் கட் பண்ணு…” என்று ஸ்ருதி சொல்ல,
“என்ன பன்ற நீ? அதுவும் பார்த்திவ் ஸார் கூட இருக்கும் போது. நாளைக்கு பேசறேன் ஸ்ருதி…” என்றாள் சுபஷ்வினி.
“அஷ் நீ தூங்கினியா?…” என்றதும்,
“ஏன் தூங்காம? நைட் வேலை முடிஞ்சு போனா பகல்ல சாப்பிட்டு தூங்கறவ தான். திரும்ப ஈவ்னிங் எழுந்து ஆபீஸ் கிளம்பி வந்திருவேன்…” என இலகுவாக சொன்னாலும் அது உண்மை இல்லை என்று தோன்றியது.
“என்கிட்ட பொய் எல்லாம் சொல்றா அஷ். ஓகே பை…” என்று சொல்லியவள் துண்டித்துவிட அங்கே சுபஷ்வினி டேபிளில் தலையை சாய்த்து படுத்துவிட்டாள்.
ஸ்ருதி இல்லாத அறையில் அவளின் வெறுமையை உணர்ந்தவளுக்கு சட்டென அந்த தனிமையை ஏற்க மனம் வரவில்லை.