அதிலும் எங்கும், எதற்கும் தன்னை தேடும் ஸ்ருதி. ஒவ்வொன்றிற்கும் தன்னிடம் மல்லுக்கு நிற்பவள்.
தான் எங்கோ இருநாட்கள் செல்வதாக இருந்தால் கூட ஸ்ருதி அங்கே தனியாய் இருந்துவிடுவாள். ஆனால் அவளில்லாது சுபஷ்வினியால் தான் சமாளிக்க முடியாது.
அதுவும் ஸ்ருதி பார்த்திவ்விடம் சேர்ந்த பின்னர் தான் வெகுவாய் அதையுமே உணர்ந்தாள் சுபஷ்வினி.
அப்போது கூட இதோ இன்னும் இத்தனைமணி நேரத்தில் வந்துவிடுவாள் என வெறுமனே கண்ணை மூடியபடி அதற்காக காத்திருப்பதும் உண்டு.
வரும்வரை விழிமூடி இருந்தாலும் ஸ்ருதி வரும்வரை ஆழ்ந்த உறக்கம் என்பது இருந்ததில்லை.
அவளுக்கு திருமணமாகிற்று. அந்த சந்தோஷம் ஒருபுறம் என்றால் இனி அவளின்றி தான் இருக்க பழகவேண்டும்.
பெரிதாய் ஒரு மன அழுத்தத்தை தந்தது. எத்தனை தூரம் ஸ்ருதிக்கே தாயை போலிருந்தவள் இப்போது அவள் மடி தேடும் பிள்ளையாய் மாறி இருந்தாள்.
மீண்டும் அழைப்பு வர கண்ணீரை துடைத்துவிட்டு முகத்தை நன்றாக துப்பட்டாவில் துடைத்தவள் சிரித்த முகத்துடன் ஏற்றாள்.
“இன்னும் என்னவாம் உனக்கு? இன்னைக்கு நீயும் தூங்காம ஸாரையும் தூங்கவிடாம, என்னையும் வேலை பார்க்க விடாம…” என்ற சுபஷ்வினி,
“ஸார் இந்த பொண்ணு முதுகுல நாலு அடி வச்சு கூட்டிட்டு போங்க ஸார்…” என்றாள் சத்தமாக.
“கோவமா போனை வைக்கலை அஷ். ப்ச், விடு…” என்றவள்,
“கொஞ்ச நேரம் ஜாலியா பேசலாம்…” என்று சொல்ல,
“ஸ்ருதி…”
“உன் க்ரஷ் தான் பேச சொன்னாங்க…” என ரகசியம் போல ஸ்ருதி சொல்லவும் சிரித்துவிட்டாள் சுபஷ்வினி.
“உன்னை வச்சுக்கிட்டு…” எனும் பொழுதே,
“என்னை தேடுறியா நீ?…” என ஸ்ருதி கேட்க,
“கொஞ்சம் மிஸ் பன்றேன்டா. சரியாகிடும்…” என சொல்லியவள்,
“நான் சொன்னா கேட்கனும். போனை வை. நாளைக்கு மார்னிங் நானே ரூம்க்கு வந்து உனக்கு கால் பன்றேன் மோளே…”
“ஓகே, குட் நைட்…” என சொல்லியவள் போனை வைத்துவிட்டு பார்த்திவ்வை பார்க்க,
“வா…” என்றான் அருகில்.
“அஷ் என்னை ரொம்ப மிஸ் பன்றா…” என ஆரம்பிக்க பார்த்திவ் தடுக்கவில்லை.
“நான் கூட அவ நேட்டிவ் போனாலோ, அபிஷியலா வெளியூர் போனாலோ அந்த ரூம்ல நல்லா தூங்கிருவேன். ஆனா அஷ் நான் லேட்டா போனா அதுவரைக்கும் சரியா தூங்காம வெய்ட் பண்ணுவா…” என்றாள் ஸ்ருதி.
பார்த்திவ்விற்கு ஞாபகம் இருந்ததே, முதல்முறை ஸ்ருதி விருது வாங்கிய அன்று தாங்கள் வரும் பொழுது அங்கே தங்களுக்காக சுபஷ்வினி காத்திருந்தது.
உண்மைக்கும் அவனுக்கு அத்தனை பொறாமையாக இருந்தது தனக்கு இப்படி யாரும் தோழமை கிடைக்கவில்லை என்று.
இந்தளவிற்கு பழகியதும் இல்லை யாருடனும். ஆனால் ஸ்ருதி, சுபஷ்வினி இருவரின் நட்பும் அவனை மெய் சிலிர்க்க வைத்தது.
கணவன் என்று தான் ஒருவன் அருகில் இருந்தும் அவள் சுபஷ்வினியின் மனநிலை குறித்து யோசித்திருக்க புன்னகையுடன் பார்த்தான்.
“அதான் தூங்கலையா நீ?…” என பார்த்திவ் கேட்க,
“தூங்க கூடாதுன்னு தூங்காம இல்லை. அஷ் என்ன பண்ணுவாளோன்னு தெரியலை. அவங்க வீட்டுக்கு போனா அம்மா இருப்பாங்க. அப்பவும் என்னோட தான் பேசிட்டிருப்பா. இப்ப தனியா இருக்காளா? அதான்…” என ஸ்ருதி.
“ஹ்ம்ம், இப்ப நீ ஓகே வா?…” என கேட்க,
“எனக்கென்ன ஓகே தான்…” என சொல்லியவள் முகத்தில் கொஞ்சம் தெளிவு.
“ஓகே போய் படுத்துக்கோ. வரேன்…” என சொல்லிவிட்டு பார்த்திவ் எழுந்து பால்கனி பக்கம் வந்தான்.
ஸ்ருதி, சுபஷ்வினி இருவரும் எந்தளவிற்கு மனதளவில் ஒருவரின் பிரிவில் வாடுகின்றனர் என்பது அவனுக்கு நன்றாகவே விளங்கியது.
‘சீக்கிரம் அந்த பொண்ணுக்கும் கல்யாணமாகட்டும்’ என தானாகவே ஒரு எண்ணமும் தோன்ற புன்னகைத்தான்.
அந்த நேரம் அந்த இரவின் குளுமையை மனதார அனுபவித்தான். என்தாஹ் சிறு சத்தமும் இல்லாத அந்த சூழல் இன்னும் பிடித்தது.
“ஜாதி மல்லி பூவே, தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல்நாள் இரவே…” என மெல்லிய குரலில் அவன் முனுமுனுக்க,
“வாவ் மாஸ்டர். ஆனா என்ன பேசினோம் நாம?…” என கேலி பேசி பின்னிருந்து அணைத்துக்கொண்ட மனைவியின் கையை இன்னும் முன்னிழுத்து பிடித்தவன்,
“உன்னை என்ன சொன்னேன்?…” என்றான் பக்கவாட்டில் திரும்பி பின்னிருந்தவளை பார்த்து.
“சும்மா, நானும் சைட் சீயிங்க்கு வர கூடாதா?…”
“தாராளமா, ஆனா பார்க்கற நேரமா இது?…”
“ஏன் நீங்க நிக்கலையா?…”
“உள்ள வந்தா கூட நிக்க மாட்டேன். உனக்கு ஓகே வா?…”
“நான் எப்போ வேண்டாம்ன்னு சொன்னேன்? தூக்கம் மட்டும் தான் வரலை. முடிஞ்சா தூங்க வைங்களேன். மாஸ்டர் தாலாட்டு எப்படி இருக்குன்னு பார்ப்போம்…” என ஸ்ருதி கிண்டல் பேச,
“அடிங்…” என அவளை முன்னிழுத்தவன் ஸ்ருதியின் கன்னத்தில் லேசாய் கிள்ளி வைத்து அள்ளிக்கொண்டான்.
“இன்னைக்கு நீ சேவ் மீ சொல்ல போற பாரு…” என சன்னமான சிரிப்புடன் கண் சிமிட்ட,
“சொல்ல வைங்களேன் பார்ப்போம்…” என்றவள் சவாலில் மீண்டும் பார்த்திவ் தான் தொலைந்தான் அவளின் பெரிய விழிகளில்.
“யட்சினி சேவ் மீ…” என ஸ்ருதி சொல்லியதை போல பார்த்திவ் மயங்கி தவித்து கூற,
“நீங்க அவுட்…” என சப்தமிட்டாள் ஸ்ருதி.
“என்ன?…” என ஒரு நொடி அவளில் இருந்து நிமிர்ந்து முகம் பார்த்தவன் விழிக்க,
“என்னை சொல்ல வைக்கிறேன்னு சொல்லிட்டு நீங்க சொல்லிட்டிருக்கீங்க மாஸ்டர்…” என்று சொல்லி அழகாய் புன்னகைத்தவள் குறும்பில் மீண்டும் கிறங்கியவன் அவளிடையில் குறுகுறுப்பு மூட்ட,
“பார்த்திவ் ப்ளீஸ்…” என்ற சிரிப்பு சத்தம் அந்த அறையை நிறைத்தது.
வயிறு வலிக்க அப்படி ஒரு சிரிப்பும், கூட தாலாட்டும் என ஸ்ருதி கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் வருடலிலும், அணைப்பிலும் மெல்ல கண்கள் மயங்கினாள்.
சுபஷ்வினி பற்றிய கவலைகள் எல்லாம் கரை ஒதுங்கி இருக்க அலைகளின் நடுவில் அவனின் அருகில் சதிராட்டங்கள் சத்தமின்றிய ஏகாந்தத்தில் சஞ்சரிக்க மெல்ல கண்ணயர்ந்தாள் ஸ்ருதி.
அடுத்த இரண்டு நாட்களும் அவர்கள் பொழுதுகள் இனிமையாகவே கழிந்தது. பார்த்திவ் சொல்லியது போலவே கிளம்பி வந்துவிட்டான்.
ஊர் வந்ததுமே வந்ததுமே அவனை வழக்கமான அவன் வேலைகள் இழுத்துக்கொண்டது.
அந்த வீட்டில் ஸ்ருதியும் பாந்தமாய் சேர்ந்துகொண்டாள். எந்தவித சிறு நெருடலும், தயக்கமும் இன்றி அவளின் இயல்பு குறையாமல் அவள் வளைய வர பார்த்திவ்வை சேர்ந்தவர்கள் காரணமென்றால் மிகையில்லை.
வீட்டில் இருக்கும் பொழுதுகள் மஞ்சுளாவை, பிரமோத்தை வைத்து பாட்டு சொல்லித்தருகிறேன் என அவனை ஒருவழி செய்துவிடுவாள்.
“ண்ணா காப்பாத்துங்க…” என்பவனிடம் பார்த்திவ் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும்,
“நீயே இன்னும் முழுசா கத்துக்கலை….” என்பவன் தன்னோடு ஸ்டூடியோவிற்கு அழைத்து சென்றுவிடுவான்.
“ஒரு மருமகளா இந்த வீட்டை எப்படி பார்க்கனும் அப்படின்ற சம்பிரதாயம், கடமை இதெல்லாம் இங்க இல்லையாம்மா?…” என மஞ்சுளாவை பாவமாய் பார்ப்பதும் உண்டு.
“ரிசப்ஷன் முடியற வரைக்குமாவது வீட்டுல இருக்கட்டுமே பார்த்தி?…” என்னும் தாயிடமும் அவன் மசிந்தான் இல்லை.
“மரியாதையா கிளம்பி வா. எவ்வளோ சாங்ஸ் பெண்டிங்ல இருக்கு. கிளாஸ்ல கேப் விட்டா கஷ்டம்..” என ஸ்ருதியை மிரட்டி வந்த இரு நாட்களில் தன்னுடன் கூட்டிக்கொண்டு ஸ்டுடியோ வந்து சேர்ந்தான்.
“அராஜகம். இங்க பாருங்க மாஸ்டர், இப்ப அந்த அக்ரிமென்ட் கூட செல்லாது…”
“அதான் வாழ்க்கை முழுசும் வந்துட்டியே. அந்த அக்ரிமென்ட் தேவையே இல்லை…” என பார்த்திவும் சிரிக்க,
“கிரிமினல் மைண்ட் மாஸ்டர்…”
“மாஸ்டர் மைண்ட்…” என்றவன்,
“இந்த நோட்ஸை வாசிச்சு வை. வந்து பார்ப்பேன்…” என சொல்லியே செல்ல ஸ்ருதி அந்த பேப்பரை பார்த்தபடி நின்றாள்.
“ஸ்ருதி…” என அழைத்தவன்,
“இங்க பார், இனி இந்த ஸ்டூடியோ பொறுப்பையும் நீ பார்க்கனும். இதுவரைக்கும் தனியா மேனேஜ் பண்ணிட்டிருந்தேன். இனி நானில்லாதப்போ உன்னோட பார்வையில நடக்கனும்…” என அவளின் தலையில் பெரும் பொறுப்பை சுமத்தினான்.
“நானா?…” என்றவள் மலைக்க,
“நீ தான். நம்ம ரிசப்ஷனுக்கு இன்னும் எட்டு நாள் கூட இல்லை. அதுக்குள்ள இன்விடேஷன் எல்லாம் குடுக்கனும். முக்கியமானவங்களை நேர்ல இன்வைட் பண்ணனும். நிறைய வேலை இருக்கு ஸ்ருதி…” என்றான் அவளிடம்.
“ஹ்ம்ம்…” என தலையசைக்க,
“ரொம்ப முக்கியமானவங்க எல்லாம் நானும் அப்பாவும் போய் நேர்ல கூப்பிடனும். மத்தவங்களுக்கு சுதந்திரம் அங்கிள் மூலமா அனுப்பிடலாம்….”
“முக்கியமானவங்கன்னா?…”
“ப்ரடியூசர் பி.எஸ் ஸார், தேவராஜ் ஸார், அதிரன் தேவராஜ் இப்படி இன்னும் சிலர் முக்கியமான லிஸ்ட்ல இருக்காங்க. நேர்ல போய் இன்வைட் பன்றது தான் மரியாதை. அதான் சொல்றேன் நீ இதை எல்லாம் பார்த்துக்கனும்…”
குருவி தலையில் பனங்காயை வைத்ததை போலிருந்தது ஸ்ருதகீர்த்திக்கு. அதுவும் இத்தனை பெரிய பொறுப்பு.