விட்டால் அழுதுவிடுவதை போல பார்த்த அறிவழகனின் முகம் கண்டு அதற்குமேல் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்ட பார்த்திவ்,
“ப்பா அவன் சும்மா சொல்றான். நீங்க பதறாதீங்க…” என தந்தையிடம் சொல்ல,
“ஆமாப்பா, நீங்க பயப்பட வேண்டாம். உங்களுக்கு பதில் என் ஹஸ்பன்ட் குடிப்பார். இந்தா வாரேன் காபியோட…” என்று ஸ்ருதி சொல்ல,
“ஓகே போய் போட்டுட்டு வா. குடிக்கறேன்…” என்றான் அவனும் அலட்டிக்கொள்ளாமல்.
செய்யமாட்டாள் என்று தெரிந்தே பார்த்திவ் கேட்க இதற்கே கொண்டுவந்தால் என்ன என வில்லங்கமாக யோசித்து பின் அலட்சியமாக உதட்டை சுளித்த ஸ்ருதி,
“என் காபி அவ்வளோ ஈஸியா? கேட்டதும் எல்லாம் கிடைக்காது…” என்றாள் மிதப்புடன்.
மாற்றி மாற்றி கிண்டலும் கேலியுமாக மனம் விட்டு புன்னகையுடன் பேசிக்கொண்டிருக்க சுபஷ்வினியின் நெஞ்சமெல்லாம் நிறைந்து போனது.
அழகாய் அந்த குடும்பத்துடன் ஸ்ருதி பொருந்தி இருப்பதும், அவர்களும் அவளை வாரி அணைத்துக்கொண்டதை அன்பாய் அள்ளிக்கொள்ளவும் பார்க்கவே அத்தனை நிம்மதியாய் இருந்தது.
இப்படி ஒரு வாழ்க்கை அவள் வாழவேண்டும் என்று தானே மனதிற்குள் அவ்வளவு வேண்டுதல்கள்.
“என்னா தல இன்னும் தூக்கம் கலையலையா?…” என்ற பிரமோத்தின் குரலில் சட்டென நிகழ்வுக்கு வந்த சுபஷ்வினி,
“குட்மார்னிங் எவ்ரிபடி…” என்றவள்,
“மோளே காபி…” என கேட்டாள் ஸ்ருதியிடம்.
“ஓஹ் நோஹ், திரும்பவும் முதல்ல இருந்தா?…” பிரமோத் ஆரம்பிக்க,
“என்ன? காபின்னா ஸ்ருதி தான் போடனுமா என்ன? என் செல்லக்குட்டி அப்படியெல்லாம் என்னை சோதிக்கமாட்டா…” என்றவள்,
“என்னடா மோளே?…” என்று கேட்க,
“கரெக்ட் அஷ்…” என்றாள் ஸ்ருதியும்.
“நாங்க குடிக்கலை, வேண்டாம்ன்னா ஒரு பேச்சு, உங்க அஷ் சொன்னா மட்டும் கரெக்ட்டா? இது போங்கு. எல்லா கோட்டையும் அழிங்க. இதை நான் தான் முதல்ல சொல்லுவேன்…” என்றான் பிரமோத்.
“நீ பேசிட்டே இரு. இன்னைக்கு கிளம்பின மாதிரி தான்…” என்றான் பார்த்திவ்.
“இன்னைக்கு வேற ப்ரோக்ராம் எதுவும் இல்லையாண்ணா?…” பிரமோத் கேட்க,
“ஏன்? இருக்கே. சின்ன ஷாப்பிங் ஒன்னு இருக்கு. நீயும் தான் வர. போய்ட்டு ரெண்டுமணி நேரத்துல வந்திருவோம்…” என்று சொல்லி,
“இல்லை ஆஃப்டே சொல்லியிருக்கேன்…” என்றவள் ஸ்ருதியை பார்த்துவிட்டு பேசும் முன்,
“அப்போ எனக்கு பை சொல்லலையா நீங்க? என்ன தல?…” என்றான் பிரமோத்.
“ஓகே, இருக்கேன். அவ்வளோ தானே?…” என்று சொல்லவும் காலை உணவை முடித்துக்கொண்டு பார்த்திவ் பிரமோத்துடன் வெளியில் சென்றான்.
அறிவழகன் உள்ளே சென்றுவிட ஸ்ருதி சுபஷ்வினி மஞ்சுளா மூவரும் மட்டும் இருந்தனர்.
மஞ்சுளா பிரமோத்திற்கு தேவையானவற்றை அடுக்க ஆரம்பிக்க இருவரும் அவருக்கு உதவிக்கொண்டிருந்தனர்.
“ஸ்ருதி கிட்சன்ல புளிமிளகாய் தொக்கு வச்சிருக்கேன். ஆறிடுச்சுன்னா அதை எடுத்துட்டு வா. ஜார் பக்கத்துலையே வச்சிருக்கேன். அதுல போட்டு கொண்டுவா…” என்று சொல்லி அனுப்பினார் மஞ்சுளா.
உடைகளை எல்லாம் பிரமோத் ஏனோதானோவென எடுத்து அடுக்கி இருக்க அவற்றை பிரித்து தான் மடித்து அடுக்கினார்.
“அஷ்வினி நீ அந்த சார்க்கு எல்லாம் ட்ரான்ஸ்பர்ரென்ட் ரேப்பர் போட்டு வை. அப்ப தான் ஆயில் எல்லாம் சிந்தாது…” என்றார்.
“நீ வேற, அவன் முக்கால்வாசி நான் குடுத்தனுப்பறதுல தான் ஓட்டறதே. பார்க்கத்தான் ஆள் மார்டன். ஆனா சாப்பாடு எல்லாம் நம்ம ஊர், காரசாரமா இருக்கனும். எவ்வளோ சீக்கிரம் காலி பன்றான்னு அடுத்து அனுப்பும் போது பார்க்கத்தான போற?…” என்றார்.
“கண்ணு வைச்சிட போறேன் போங்க…” என்று சுபஷ்வினி சிரிக்க,
“ஏன் அஷ்வினி நீ இங்கயே இரேன். உனக்கும் ஸ்ருதி கூட இருந்த மாதிரி இருக்கும். எனக்கும் சந்தோஷமா இருக்கும். வீடும் கலகலப்பா இருக்கும்…” என்று சொல்ல,
“இதென்ன ஆன்ட்டி? இப்படி ஒரு யோசனை?…” என சிரித்துவிட்டாள் சுபஷ்வினி.
“ஏன்டா, உனக்கு இங்க தங்க சங்கடம்ன்னா கெஸ்ட்ஹவுஸ் இருக்கு பின்னாடி. அங்க இருந்துக்கோ. உன் ரூம் ரெண்டையே குடும்மா. எங்களோட இருக்கலாமே…” என்ற மஞ்சுளா,
“உன் வீட்டுல நான் பேசவா?…” என கேட்டார்.
“அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி. நான் ரூம்ல இருக்கறது தான் சரி. நானும் எவ்வளோ நாள் இருப்பேன் அங்க? எனக்கு வீட்டுல வரன் பார்த்திட்டிருக்கறதா அம்மா சொன்னாங்க. அதுவரை இருப்பேன்…” என மறுத்துவிட்டாள்.
“சரி அதுவரை இங்க இரேன். ஸ்ருதிக்கும் சந்தோஷமா இருக்குமே?…” என மஞ்சுளா மீண்டும் வலியுறுத்த,
“என் மோளே எங்க இருந்தாலும் என் ஞாபகம் அவளுக்கு இருந்துட்டே தான் இருக்கும். நான் கூடவே இருந்தா தான் அப்படியெல்லாம் இல்லை ஆன்ட்டி. ஒரு போன் பண்ணினா உடனே வந்திட போறேன். என்னை பார்க்கனும்ன்னா ஸ்ருதி வர போறா. அவ்வளோ தானே?…” என்றாள் சுபஷ்வினி.
“ஸ்ருதி சொன்னா?…”
“அவ சொல்லமாட்டா. நான் செய்யமாட்டேன்ற ஒரு விஷயத்தை என் மோளே செய்ய சொல்லமாட்டாளே…” என சுபஷ்வினி கண் சிமிட்ட,
“புளிமிளகாய் ரெடி…” என வந்த ஸ்ருதியின் ஒரு கையில் ஜாரும், இன்னொரு கையில் ஒரு கிண்ணமும் அதற்குள் சூடான சாதமும்.
“அஷ் யம்மி…” என்றவள் சாதத்தை உருட்டி சுபஷ்வினி கையில் வைத்துவிட்டு,
“ம்மா, சாப்பிட்டுட்டே வேலையை பார்ப்போம். இல்லைன்னா டயர்டாகிடும்….” என அவருக்கும் ஒரு கவளத்தை உருட்டி கையில் வைத்தாள்.
நல்லெண்ணெய் வாசனையுடன் சூடான சாதத்தில் புளிப்பும், பச்சை மிளகாய் உரைப்பும் சேர்ந்து பசியையே கிளப்பிவிட்டது.
“ஜார்ல வச்சது போக பாத்திரத்துல இருந்துச்சா. அப்போ தான் சூடா சாதம் வடிச்சாங்க. எடுத்து போட்டு கொண்டு வந்துட்டேன்…” என்றவள் சாப்பிட சுபஷ்வினியும் மஞ்சுளாவும் அதனை ரசித்து பார்த்தனர்.
பார்த்திவ் வரும் முன்னரே எல்லாம் தயாராகிற்று. மதிய உணவு முடிந்ததுமே அனைவரும் விமான நிலையம் புறப்பட்டுவிட்டனர்.
பிரமோத்தை வழியனுப்பிவிட்டு வழியில் சுபஷ்வினியை விடுதியில் இறக்கி விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தனர் பார்த்திவ், ஸ்ருதி குடும்பத்துடன்.
வழமையான நாட்கள் மாற்றங்களின்றி காதலும், புரிதல்களுமே அன்பு சூழ் உலகாய் அழகாய் நகர்ந்துகொண்டிருந்தது.
பார்த்திவ்வின் ஸ்டூடியோ மட்டுமல்லாது அவனின் வேலைகள் பெரும்பாலானவற்றை ஸ்ருதி தான் பார்த்துக்கொள்ளும்படி இருந்தது.
முதலில் தடுமாறியதை போலில்லாது ஓரளவு நிர்வாகத்தில் கற்று தேர்ந்திருந்தாள் ஸ்ருதி.
நான்கு மாதங்கள் கண்ணை மூடி திறக்கும் முன்னரே பூஞ்சோலையின் வாசமாய் நாசி நிறைத்து சென்றுவிட்டிருந்தது.
அன்று ஸ்டூடியோவிலிருந்து வந்ததும் மேலே செல்ல ஸ்ருதி தனக்கான உடைமைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.
அதற்கும் ஸ்ருதி அசைந்தாள் இல்லை. அத்தனை பரபரப்புடன் எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“சுபாஷ் கூடவே தான் இருப்பான். என்ன வேணுமோ அவன்கிட்ட சொல்லு. அஷ்வினி அப்பா கால் பண்ணினார். நீங்க ரெண்டுபேரும் கிளம்பவும் சொல்றேன்னு சொல்லிட்டேன்…” என அவன் சொல்லிக்கொண்டே இருக்க,
“என் பிங்க் கலர் ஷால் எங்க?…” என தேடினாள் அவள்.
“ஸ்ருதி நிக்க போறியா இல்லையா? நான் ஒருத்தன் பேசிட்டே இருக்கேன்…” என்றதும்,
“அஷ் விஷயத்தை சொன்னதுல இருந்தே எத்தனை தடவை சொல்லிட்டீங்க? கேட்டு கேட்டு காதுல ரத்தம் தான் வரலை…” என ஸ்ருதி சலித்துக்கொள்ள அவளை வேலை செய்யவிடாமல் பிடித்து நிறுத்திவிட்டான் பார்த்திவ்.
“மனுஷன் எவ்வளோ டென்ஷன்ல சொல்லிட்டிருக்கேன்? அதெல்லாம் இருக்கமாட்டேன், சரி வந்திடுவேன்னு ஒரு வார்த்தை உன் வாய்ல இருந்து வருதா? வாலு, என்ன ப்ளான்?…” என்று அதட்டி கேட்கவும் ஸ்ருதி திருட்டுமுழி முழித்தாள்.
“தொலைச்சிருவேன் ராஸ்கல். நாளைக்கு பங்க்ஷன், நாளை மறுநாள் ஈவ்னிங் கிளம்பி மிட்நைட்ல இங்க வந்திருக்கனும் நீ…” என்று உத்தரவாய் அவன் அதட்டி சொல்ல சட்டென எம்பியவள் அவனின் இதழ்களுக்கு மூடுவிழா நடத்தி விலகினாள்.
முத்தமிட்டு விலகியவள் முகத்தின் கள்ளப்புன்னகையில் மீண்டும் இழுத்து தன் கைவளைவில் நிறுத்தியவன்,
“இதுக்கெல்லாம் நான் மசியவோ மயங்கவோ மாட்டேன். நான் சொன்ன மாதிரி நீ கிளம்பி வர. டாட்…” என்று சொல்லி அவளை விட,
“பிடிவாதம் பிடிவாதம்…” என அவனின் முதுகில் அத்தனை அடி வைத்தவள் சுடிதாருக்கு மாறி வந்து ட்ராலியை எடுத்துக்கொள்ள முகத்தில் ஏகத்திற்கும் முறைப்பு.
“சிரிச்ச முகமா கிளம்பறதா இருந்தா கிளம்பு. இல்லைன்னா நீ போகவே வேண்டாம்…” என பார்த்திவ் சொல்லவும் மொத்த பற்களையும் காட்டி சிரித்தவள்,
“ஓகே ம்மா. அங்க போய்ட்டு கால் பன்றேன். அதுவரைக்கும்…”
“உன் புருஷனை பத்தரமா பார்த்துக்கனுமா?…” என கிண்டலாய் மஞ்சுளா கேட்க,
“அவர்கிட்ட இருந்து நீங்க தப்பிச்சுக்கோங்க. இல்லைன்னா காலி பண்ணிருவார்…” என்றாள் ஸ்ருதி.
“உன்னை மட்டும் தான் யட்சினி காலி பண்ண முடியும். ஆனா நீ தான் தீரவே மாட்டேன்றியே…” என பார்த்திவ் கண் சிமிட்ட ஸ்ருதி அவனை முறைத்தாலும் நாணம் வந்து அவளை சூழ்ந்துகொண்டது.
“வாய் வாய்…” என்றவள் அவன் இடையை கிள்ள சுபாஷ் வந்து பெட்டியை எடுத்து சென்றான்.
“ஓகே ம்மா பத்திரமா போய்ட்டு வா…” என்ற மஞ்சுளா ஸ்ருதி காரில் ஏறி அமர்ந்ததும்,
“அஷ்வினிக்கு பார்த்திருக்கற அந்த போலீஸ்க்கார மாப்பிள்ளை பேர் என்ன சொன்ன?…” என்றார் மருமகளிடம்.
“ஏசிபி நெடுஞ்செழியன்…” என்றாள் ஸ்ருதகீர்த்தி.
“ஓகே ம்மா…” என்றதும் பார்த்திவ் வந்து அவள் முகம் பார்த்து குனிந்து நின்றான்.
“பத்திரம்டா ஸ்ருதிம்மா. சீக்கிரம் வந்திரு. ரெண்டு நாளே அதிகம். என்னால முடியாது…” என்று பார்த்திவ் சொல்ல மெல்லிய தலையசைப்புடன் காதல் சொட்டும் புன்னகை மட்டுமே ஸ்ருதகீர்த்தி முகத்தில்.