ஸ்ருதி அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்க்க சுபஷ்வினியின் தாய் ராதிகா மகளின் முகம் பார்த்தபடியே மெல்லிய விசும்பலுடன் நின்றார் கதவருகில்.
“அதான் எல்லாம் முடிஞ்சதே. அப்பறம் என்ன சும்மா அழுதுட்டே இருக்க ராதி?…” என்றார் சிங்கமுத்து.
அவரின் சத்தத்தில் ராதிகா இன்னும் கண்ணீரை அதிகமாய் விட இதை எல்லாம் காதில் வாங்காதவள் போல் சுபஷ்வினி கிளம்பிவிட்டாள்.
“இப்பவே புறப்பட்டுட்டியா சுபா?…” என அவளின் தாய்மாமா வீரவேந்தர் வந்துவிட்டார்.
“ஆமா மாமா, ரெடியாகிட்டோம்…” என சுபஷ்வினி முகத்தில் எதையும் காண்பித்துக்கொள்ளவில்லை.
“இல்ல மதியம் இருந்து சாப்பிட்டு புறப்படலாம்ல. சாப்பாட்டு நேரமாச்சே…” என்றவர் தன் தங்கை ராதிகாவை பார்த்தார்.
“இப்ப சாப்பிட்டதே வயிறு ஃபுல்லா இருக்கு மாமா. மதியம் பசிக்காது…” என்ற சுபஷ்வினி,
“போலாம் ஸ்ருதி…” என்று வெளியே வர அங்கே சிங்கமுத்து அமர்ந்திருந்தார்.
“பத்திரமா போய்ட்டு வாடா சுபா…” என அவர் சொல்லவும்,
“அண்ணே நீங்க கூட போங்களேன். போய் விட்டுட்டு வரீங்களா?…” என்றார் ராதிகா.
“ப்ச், இப்ப எதுக்கு இவ்வளோ அழறம்மா நீ? இது என்ன நான் முதல் தடைவையா போறேன்? அதுவும் ஸ்ருதி வரா. அப்பறம் என்ன?…” என கடுப்பில் சத்தம் போட்டுவிட்டாள் சுபஷ்வினி.
“என்னாகிருச்சு? அந்த சம்பந்தம் வேண்டாம்ன்னு சொல்ல சொல்லியாச்சு. எனக்கு இதுல என்ன வருத்தம் இருக்க போது? சொல்லுங்க…” என்றும் மகள் கத்திவிட,
“சுபாம்மா, அப்பா…” என சிங்கமுத்து பேசும் முன்,
“எனக்கு இதுல ஒரு வருத்தமும் இல்லைப்பா. நான் எப்பவும் போல தான் இருக்கேன். நானே வரும் போது புலம்பிட்டே தான் வந்தேன் இப்படி இவ்வளோ சீக்கிரம் கல்யாணம் பன்றாங்களேன்னு…” என சிரித்த முகமாய் சொல்ல ராதிகாவிற்கு அது இன்னும் வேதனையாய் இருந்தது.
“ஏன் உங்கப்பா போலீஸ் மாப்பிள்ளைன்னு தெரியாம தான் இந்த சம்பந்தத்தை கொண்டு வந்தாங்களா? தெரியும் தானே? எல்லாம் விசாரிச்சு தானே உன்னை பார்க்க வர சொன்னாங்க…” என ராதிகா கொந்தளிக்க,
“ராதி வர சொன்னப்ப இருந்த சூழ்நிலை வேற. நேத்து நான் பயந்த மாதிரி தானே அந்த வரனுக்கு ஆக்ஸிடன்ட்ன்னு போன் வரவும் நீயும் பயந்த? கொஞ்சம் பொறுமையா பண்ணுவோம்…” என்றார் சிங்கமுத்து.
“ராதிகா விடும்மா, அவர் தான் சொல்றாருல்ல? நான் தான் நல்ல இடமாச்சேன்னு கொண்டுவந்தேன். இந்தமட்டும் போச்சேன்னு சந்தோஷப்படனும்…” என நிலைமையை சமாளித்தார் வீரவேந்தர்.
“என்னமும் செய்ங்க, சொல்ல போனா இது அப்படியே உல்டாவா நடந்திருக்கனும். மாப்பிள்ளை வீட்டுல தான் சகுனம் சரியில்லன்னு சொல்லி பொண்ணை வேண்டாம்ன்னு சொல்ல கண்டிருக்கு. இப்படி பொண்ணு வீட்டுல வேண்டாம்ன்னு சொல்லிருப்பாங்களா?…” என்று இன்னுமே ஆற்றமாட்டாமல் பேசினார் ராதிகா.
“எனக்கு டென்ஷன் ஏறுது. இங்க இருந்தா இன்னும் கத்திருவேன். ஆளை விடுங்க. நான் கிளம்பறேன்…” என்றாள் சுபஷ்வினி.
சொல்லியதோடு நிற்காமல் சுபஷ்வினி தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு வெளியேற,
“வரேன்…” என்றாள் ஸ்ருதி.
“நில்லும்மா, நீ தான் கொஞ்சம் சுபாவை…” என சிங்கமுத்து சொல்லவும்,
“அப்பா ப்ளீஸ், நான் என் மனசுல பட்டதை சொல்லிடறேன். நீங்க பண்ணினதுல எனக்கு சுத்தமா உடன்பாடில்லை. கல்யாணத்துக்கு சம்மதமா, மாப்பிள்ளையை பிடிச்சிருக்கான்னு கேட்டு அவர் போன் நம்பர் வரை நீங்க தானே அஷ்க்கு குடுத்தீங்க….” என்றாள் ஸ்ருதி.
“ஆமா ஸ்ருதி, ஆனா…”
“அப்போ ஏன் கல்யாணம் வேண்டாம்ன்னு முடிவு பண்ணும் போது மட்டும் அஷ்கிட்ட கேட்காம எப்படி முடிவு பண்ணுனீங்க? தப்பு ப்பா. இதை நான் உங்ககிட்ட எதிர்பார்க்கலை. ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்று சொல்ல,
“இவர்கிட்ட எல்லாம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல ஸ்ருதி. நீ சுபாவை பார்த்துக்கோ…” என ராதிகா ஸ்ருதியின் கையை பிடிக்க,
“அதை நீங்க சொல்லன்னுமா ம்மா? நான் பார்த்துக்கறேன்…” என்றவள்,
“வரேன் மாமா…” என வீராவிடமும் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
வெளியில் சுபாஷ் சுபஷ்வினியிடம் பேசிக்கொண்டிருந்தான். அவனுக்குமே கஷ்டம் தான்.
“சரி விடும்மா. அந்த போலீஸ்க்காரன் நேரம் நல்லாருக்குன்னு நினைப்பியா நீயி…” என சொல்லி சிரிக்க,
“வாஸ்தவம் ண்ணே…” என்றாள் சுபஷ்வினியும்.
ஸ்ருதி வரவும் அவளின் பின்னே தன் குடும்பமும் வருவதை பார்த்தவளுக்கு அய்யோடா என்றிருந்தது.
தெருவில் உள்ளவர்களும் வருத்தமாய் அவளை பார்ப்பதை போல இருக்க நொந்துபோனாள் சுபஷ்வினி.
“இப்ப என்னாகிருச்சுன்னு இவ்வளோ சோகம்? இவங்க பீலிங் இருக்கே…” என சொல்லியபடி நகர்ந்து அமர ஸ்ருதி உள்ளே அமர்ந்தாள்.
“ம்மா, கண்ணை துடை. என்னவோ எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கமாட்டீங்களான்னு நான் உங்க கூட சண்டை போட்டு கிளம்பற மாதிரி அசிங்கம்மா இருக்குது….” என்று சுபஷ்வினி பல்லை கடிக்கவும்,
“சரிம்மா, சரிம்மா…” என்றார் ராதிகா.
“பார்த்துக்கோங்க மாமா…” என்ற சுபஷ்வினி,
“ப்பா அம்மாவை திட்ட கூடாது. ஆமா…” என தந்தையையும் எச்சரித்துவிட்டே கிளம்பினாள் சுபஷ்வினி.
கார் நகர்ந்து வீதியை கடக்கும் வரை பார்த்துக்கொண்டு நின்றார் அவர். மனது கனத்துக்கிடந்தது.
சிங்கமுத்துவுக்கு ஸ்ருதி சொல்லவும் தவறு செய்துவிட்டோமோ என இப்போது மனதில் சுருக்கென்றது.
வீரா மூலம் வந்த வரன் தான் அது. அம்மா, அண்ணன், தம்பி, தம்பி மனைவி என அளவான குடும்பம்.
தம்பியினது காதல் திருமணம் என்பதால் முதலில் அதனை முடித்திருக்க அண்ணனான நெடுஞ்செழியனுக்கு சுபஷ்வினியை கேட்டிருந்தனர்.
ஜாதக பொருத்தம் எல்லாம் பார்த்து சொந்தங்களிடையே கலந்து பேசி முடிவு செய்த பின்னர் தான் சுபஷ்வினிக்கும் நெடுஞ்செழியனின் புகைப்படம் அனுப்பப்பட்டது.
மகளின் சம்மதமும் கேட்டு அவளின் விருப்பம் அறிந்து பெண் பார்க்கும் படலத்தை அவர்கள் முடிவு செய்ய விசேஷம் அன்று அதிகாலையே வீராவிற்கு போன்.
மாப்பிள்ளைக்கு விபத்து என்று. சொல்லியதில் இருந்தே மனது ஒரு நிலையில் இல்லை.
நெடுஞ்செழியனின் தாய் காஞ்சனா இன்னொருநாள் பெண் பார்க்க வருவதாய் தகவல் சொல்ல உடனே சிங்கமுத்து வேண்டாம் என்றுவிட்டார்.
“மன்னிக்கனும், எங்களுக்கு யோசிக்க அவகாசம் வேணும்…” என அவரிடமே பேச அதிலேயே புரிந்தது காஞ்சனாவிற்கு.
“பரவாயில்லை, என்ன முடிவுன்னு உடைச்சே சொல்லுங்க….” என்றார் காஞ்சனா.
சிங்கமுத்து சட்டென வார்த்தைகளை விடாமல் எப்படி முகத்தில் அடித்தாற்போன்று சொல்வது என்று மௌனமாகிவிட,
“புரிஞ்சதுங்க, நன்றி…” என வைத்துவிட்டார் காஞ்சனா.
“தப்பா நினைக்காதீங்கம்மா. அவர் கொஞ்சம் பயந்துட்டார்…” என வீரா மீண்டும் காஞ்சனாவிற்கு அழைத்து சமாதானம் பேச,
“பொண்ணை பெத்தவர் யோசிக்கிறதுல என்ன தப்பு? நான் சண்டையா போட முடியும்? நான் எதுவும் நினைக்கலை. அதுக்கான சூழ்நிலையும் இல்லை. என் பையனுக்கான பொண்ணை நாங்க இன்னும் பார்க்கலைன்னு நினைச்சுக்கறோமே…” என தன்மையாய் பேசி வைத்துவிட்டார் காஞ்சனா.
அதை வீரா சொல்லவும் இன்னுமே சங்கடம் தான் சிங்கமுத்துவிற்கு. ஆனாலும் மகள் என்று வரும் பொழுது அவரால் மாற்றி யோசிக்க முடியவில்லை.
“வேற வரன் பார்ப்போம் வீரா. சுபா வேலை மாதிரியே இருக்கற இடமா பார்ப்போம். ரொம்ப வசதின்னு இருக்க கூட வேண்டாம். நல்ல இடமா இருந்தா போதும்…” என சொல்லிவிட்டார்.
ஆனால் இப்போது ஸ்ருதி சொல்லியதை கேட்டதில் இருந்து மனதை உறுத்திக்கொண்டே இருந்தது அவருக்கு.
மகளுக்கு நிரம்ப பிடித்திருக்குமோ என்ற வகையில் யோசித்துக்கொண்டிருந்தார் சிங்கமுத்து.
——————————————–
அவர்கள் செல்லும் கார் காரைக்காலை விட்டு சென்னை செல்லும் பாதையில் திரும்பியிருந்தது.
“என்ன அஷ், நீ ஓகே தானே?…” நூறாவது முறையாக கேட்டுவிட்டாள் ஸ்ருதி.
“எனக்கென்ன நான் நல்லா தானே இருக்கேன்? அப்பறம் என்ன? இன்னும் கொஞ்ச நாள் பேச்சிலர் லைஃபை என்ஜாய் பண்ணலாம்…” என்றாள் இலகுவாக.
“அஷ் நீ அவங்கட்ட பேசினியே. இப்ப எப்படி இருக்காங்கன்னு கேட்டியா?…” என்றதும் சுபஷ்வினி இல்லை என தலையசைத்தாள்.
“முடிஞ்சு போச்சுன்னா அப்படியே விட்டுடனும். வேண்டாம் மோளே…” என்றவள் முகத்தில் ஒருநொடியேனும் அந்த கவலை தென்படத்தான் செய்தது.
“சரி, நான் கேட்கறேன்…” என ஸ்ருதி அவளின் போனை பறிக்க,
“ப்ச் ஸ்ருதி…” என்றவள் அதனை திரும்பவும் வாங்காமல் அமைதியாய் வந்தாள்.
மனதிற்குள் அவனிடம் தான் பேசிய சில வார்த்தைகள் வலம் வர அடித்து விரட்டினாள் அந்நினைவை.
அவளாக அழைக்கும் முன் அவளின் கைபேசி எண்ணும் அவனுக்கு கிடைத்திருக்க முதலில் ஒரு குறுஞ்செய்தி. அடுத்ததாய் அவன் அழைப்பு.
ஓரிரு வார்த்தைகள் தான். எத்தனை கலகலப்பாக பேசினான். நினைத்தவளுக்கு இது சரிவராது என முதலில் அவனின் எண்ணை நீக்கவேண்டும் என்று போனை வாங்கினாள்.
“என்ன பண்ண போற அஷ்?…” என ஸ்ருதி கேட்க,
“நம்பரை டெலிட் பண்ண போறேன்…” என போனை வாங்கியவள் ஏதோ யோசனையில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பக்கம் சென்றாள்.
நெடுஞ்செழியன் வைத்திருந்த காணொளியையும் அதன் கீழ் அவன் குறிப்பிட்டிருந்ததையும் பார்த்தவள் முகம் ஜிவுஜிவுத்தது.
“கொழுப்பை பாரேன்…” என ஸ்ருதியிடம் காண்பிக்க பார்த்தவள் குபீரென வெடித்து சிரித்துவிட்டாள்.
“அஷ் செம்ம போ. போலீஸ்க்காரர் சரியான சேட்டைக்காரர்….” என ஸ்ருதி கிண்டல் பேச சுபஷ்வினி இதழோரமும் புன்னகை நெளிந்தது.
“என்னம்மா, எனக்கு சொல்லாம?…” என சுபாஷ் கேட்க,
“காரை ஓரமா நிப்பாட்டுங்கண்ணா. தரேன்…” என்று ஸ்ருதி சொல்லி சுபாஷ் காரை ஓரம்கட்டிவிட்டு போனை வாங்கி பார்த்தான்.
‘உயிரே தப்பிச்சு எப்டியாது ஓடிவிடு’ என்ற வடிவேலின் ரீமிக்ஸ் பாட்டுடன் கீழே குறிப்பாக வாயை மூடும் பொம்மையும் அருகில் தட் சம் ஒன் என்னும் குறிப்பும் அதில் இருக்க,
“பாட்டு சரி, அது என்னம்மா கீழே பொம்மை வாயமூடுன்னு…”
“சுப் அண்ணா. அதாவது சுபஷ்வினி ஷார்ட் பார்ம் சுப் போல. புரியலையா. அந்த சம் ஒன் நம்ம அஷ் தான். அவளுக்கு தான்…” என சொல்லிய ஸ்ருதி,
“இருக்கு அந்த போலீஸ்க்கு….” என்றவள்,
“நீயும் பதிலுக்கு ஸ்டேட்டஸ் வை அஷ்…” என்றாள் அவளிடம்.
“என்ன விளையாடுறியா?…” சுபஷ்வினி மறுக்க,
“நான் சொல்றேன் வை. அதுவும் போலீஸ்க்கு மட்டும் வை….” என்று சொல்ல,
“என்ன வைக்க? வை வைன்னா?…” சுபஷ்வினிக்கு ஒன்றும் ஓடவில்லை.