“உனக்கு என்னமோ ஆகிருச்சு. இதுவே பழைய அஷ்ஷா இருந்தா எத்தனை கவுண்டர்ஸ் எடுத்து குடுத்திருப்பா? இந்த லத்தியை சும்மா விட சொல்றியா நீ? நீ வேண்டாம்ன்னாலும் நான் மாட்டேன்…” என்றவள் யோசித்தாள்.
“ஐடியா…” என்று ஒரு வீடியோவை தரவிறக்கம் செய்து அதில் தேவையான வரிகளை மட்டும் எடிட் செய்ய சுபாஷின் முகத்தில் அவ்வளவு சிரிப்பு.
“இப்ப நீ இதை வை அஷ்…” என தயாராய் அவளிடம் தர,
“வீடியோ எடிட்டிங்ல இருந்து கீழ ஸ்மைலி பிக் வரைக்கும் எல்லாம் ஸ்டேட்டஸ்ல நீயே செலக்ட் பண்ணிட்டு லாஸ்ட்ல செண்டிங் மட்டும் நான் குடுக்கவா? அதுவும் நீயே போஸ்ட் பண்ண வேண்டியது தானே?…” என சுபஷ்வினி முறைத்தாள்.
“ஓகே, அப்பா நீயே வேற வை. யார் வேண்டாம்ன்னா? இருந்தாலும் இது நீ தான் வைக்கனும் அஷ்…” என சொல்ல, சுபஷ்வினியும் அதனை அழுத்திவிட்டாள்.
“ஹேய். இப்ப பார் லத்தி ஸார் உடனே பார்ப்பார். அதுவும் வேலைக்கும் போகாம ரெஸ்ட்ல தான இருக்கார்…”
“யார் சொல்லனும்? மனுஷன் இவ்வளோ ரணகளத்திலையும் இப்படி ஒரு ஸ்டேட்டஸ் வைக்கிறார்ன்னா ஆள் பெட்டர் தான் போல…” என்றாள் ஸ்ருதி.
“மோளே…” என்றவள் அந்த வீடியோவை பார்த்தாள்.
‘நீங்க தான் ரொம்ப ரோசக்காரராச்சே? எங்க இந்த பக்கம்?’ என்ற வடிவேலின் கேள்வியோடு போலீஸ் தொப்பியும், துப்பாக்கியுமான ஸ்மைலிகள்.
உடனே பார்த்தும்விட்டான் நெடுஞ்செழியன். அதில் சுபஷ்வினியின் விழிகள் விரிந்துவிட,
“நான் சொன்னேன்ல…” என்று கை தட்டி ஆர்ப்பரித்தாள் ஸ்ருதி.
“இதென்னமோ வம்பா இருக்கு. வேண்டாம் ஸ்ருதி…” என்று சொல்லி அவனின் எண்ணை தனது போனிலிருந்து நீக்க முற்பட,
“ப்ச், அவசரப்படாத அஷ். ஏதாவது அவசரம்ன்னா காவல்துறையை அழைக்கலாம். அதுவரை இருக்கட்டுமே?…” என அதை தடுத்துவிட்டவளுக்கு தெள்ளத்தெளிவாய் தெரிந்தது சுபஷ்வினிக்கு அவனை பிடித்திருக்கிறது என்று.
சுபஷ்வினியும் சிறிது நேரம் போனை பார்க்கவும் அவனிடம் பதில் வருகிறதா என பார்க்கவுமாக இருந்து பின் சலித்துப்போனாள்.
இனி நெடுஞ்செழியன் என்னும் பகுதி தன் வாழ்க்கையில் இல்லை என்னும் கசப்பான உண்மையுடன் அடுத்தது என்னும் பயணத்தை மேற்கொண்டாள் சுபஷ்வினி.
ஒருவழியாக சென்னை வந்து சேர்ந்தவள் சுபஷ்வினியை பேசி சரிக்கட்டி அன்று ஒருநாள் மட்டும் தன்னுடன் வரும்படி கேட்டு வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள்.
பார்த்திவ் ஒரு இசைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருக்க அவனை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை ஸ்ருதிக்கு.
தாங்களுமே மெதுவாகவே வந்திருக்க சென்னை வந்து சேரவே நேரமாகி இருந்தது. இரவு வந்ததும் குளித்துவிட்டு இரவு உணவை முடிக்க,
“நான் போய் தூங்கறேன் ஸ்ருதி…” என எழுந்து சென்றாள் சுபஷ்வினி.
“என்னம்மா, ரொம்ப சோர்வா இருக்காளே? இந்த காலத்துல போய் இதை எல்லாம் பார்க்கலாமா? எந்த பீல்ட்ல தான் கஷ்டமில்லை?…” என்றார் மஞ்சுளா.
“நானும் ஒரு லிமிட்ல தான் அவங்க வீட்டுல பேச முடியும் ம்மா. கேட்டுட்டும் வந்துட்டேன். அவங்க பாயிண்ட்ல அவங்க இருக்காங்க…” என்றாள் ஸ்ருதி.
அங்கிருந்து கிளம்பும் வரையான விஷயங்களை மட்டுமே பகிர்ந்தவளுக்கு சுபஷ்வினியின் விருப்பம் பற்றி அவரிடம் சொல்ல தோன்றவில்லை.
“சரி நீயும் போய் தூங்கு ஸ்ருதி. பார்த்திவ் வர லேட்டாகும்…” என்றார் மஞ்சுளா.
“ஓகே ம்மா, நீங்களும் போங்க…” என சொல்லிவிட்டு அறைக்கு வந்து படுத்தவள் அலுப்பில் சிறிது நேரத்திலேயே உறங்கியும்விட கன்னத்தில் ஈரமாய் அவனின் அழுத்தமான அதரங்கள்.
“விடிஞ்சிருச்சா? அதுக்குள்ளையா?…” என பட்டென்று கண்ணை திறந்தவள் நேரத்தை பார்த்துவிட்டு,
“உங்களை…” என அவனை கீழே தள்ளி மொத்திவிட்டாள்.
“சீக்கிரம் வா வான்னு சொல்லிட்டு இன்னைக்கு ப்ரோக்ராம் போய்ட்டு லேட்டா வந்ததும் இல்லாம நல்லா தூங்கிட்டிருந்தேன். எழுப்பி விட்டுட்டீங்க…” என்று போட்டு இன்னும் அடிக்க,
“நான் வர லேட்டாகுதுன்னா எனக்காக முழிச்சிருக்கமாட்டியா நீ?…”
“அதுக்கு இப்படி எழுப்புவீங்களா? நான் அவ்வளோ டயர்ட்…” என்றவள் மீண்டும் வாகாய் படுத்துக்கொள்ள,
“என்கிட்ட புலம்பி தள்ள பெரிய கதை வச்சு காத்துக்கிட்டிருப்பன்னு நினைச்சேன். நீ என்னடான்னா தூங்கற?…” என்றவன்,
“அவ்வளோ புரியுது என்னை உங்களுக்கு. ஹ்ம்ம்…” என அவன் தாடையை பிடித்து இட, வலமாக ஆட்டியவள்,
“சோ ஸ்வீட் மாஸ்டர்…” என்று சொல்லி தலையில் நங்கென்று ஒரு கொட்டையும் வாங்கிக்கொண்டாள்.
“அதானே பார்த்தேன்? கை நிக்காதே…” என்று சொல்லி,
“அஷ்க்கு அந்த லத்தியை பிடிச்சிருக்கு…” என.
“வாட்? லத்தி?…” என புரியாமல் பார்த்தவன்,
“ஒஹ், போலீஸா?…” என்றான்.
“ஆமா, அவரே தான். சரியான சேட்டை அவருக்கு…” என்றவள் முழு விஷயமும் சொல்ல பார்த்திவ் முகத்தில் அடக்கமாட்டாத புன்னகை.
“இன்ட்ரெஸ்ட்டிங்…” என்றவன்,
“நீ என்ன பண்ண போற? என்ன செய்ய முடியும்?…” என கேட்க,
“பார்க்கலாம். உடனேவா எல்லாம் யோசிக்க முடியும்? அங்க என்ன நிலவரம்ன்னு தெரிஞ்சுக்கிட்டு மூவ் பண்ணனும். அவருக்கும் ஓகேனா அஷ்ஷை நேரா லாக்கப்க்கு அனுப்பிருவோம்…” என சிரிக்க,
“முடிவே பண்ணிட்ட போல?…” என்றான்.
“கிட்டத்தட்ட…” என சொல்லிய ஸ்ருதி விளையாட்டுத்தனமான குரலை விடுத்து,
“அஷ் முகமே பார்க்க முடியலை. எப்படி அவகிட்ட கேட்காம செய்யறாங்க அவ வீட்டுல? அவங்க பார்த்த வரன் தானே? அப்போ தெரியலையா அந்த வேலையில இருக்கும் ரிஸ்க்?…” என பொடுபொடுக்க,
“நிஜம் தான். எந்த வேலையில தான் ரிஸ்க் இல்ல?…” என்றவன் கேள்வியில்,
“நான் அங்கயே இன்னும் பேசியிருப்பேன். அஷ் அம்மா வேற அழுதுட்டே இருந்தாங்க. ஏற்கனவே அங்க மனஸ்தாபம். எதுக்கு கூட கொஞ்சம் நாம பண்ணனுமேன்னு அமைதியா வந்துட்டேன்…” என்றாள்.
“ஆனா பாருங்க, லத்தியும் அஷ்ஷும் தான் ஜோடின்னா கண்டிப்பா எப்படியும் ஒன்னு சேருவாங்க…”
“நம்மளை போலவா?…”
“ஹலோ இங்க நான் தான் ஸ்டெப் எடுத்தேன். நீங்க இல்லை. ஊரே பார்க்க மோதிரம் குடுத்தா மட்டும் சரியா போச்சா?…” என கலாய்க்க ஆரம்பித்தவள்,
“அப்பவும் நான் அவார்டை உங்ககிட்ட குடுக்க வந்ததனால நீங்க பதிலுக்கு மோதிரம் குடுத்தீங்க. இல்லைன்னா வா சுருதின்னு ஸ்டூடியோவுக்கு கூட்டிட்டு போய் நாலு செவத்துக்கு நடுவுல குடுத்திருப்பீங்க. எனக்கா தெரியாது உங்களை…” என வைத்து அவனை சொல்லி சொல்லி ஓட்ட,
“அநியாயம் பன்றடா நீ….” என பார்த்திவ்வின் சிரிப்பு சத்தம் அந்த அறையை பலமாய் உலுக்கியது.
“உங்களை விரும்பறேன்னு சொல்ல பயந்துட்டு தான நீயும் விரும்பிருவேனோன்னு தோணுதுன்னு சுத்தி வளைச்சு சொன்ன? நீ இதெல்லாம் பேச கூடாது…” என்று அவனும் பதிலுக்கு பேச இப்படியான பதிலடிகள் அடுத்த கட்டத்திற்கு இழுத்து சென்றது.
அதிகாலை நேரம் அவர்களின் ஆர்ப்பரிப்புகள் குறைந்து உறக்கத்திற்கு செல்ல தன் மார்பின் மீது மனைவியை சாய்த்து அணைத்திருந்தவன் முகம் நிறைவில் நிம்மதி பெற்றிருந்தது.
ஸ்ருதி இல்லாத தன் வாழ்க்கை என அவன் நினைக்கவும் முடியாதளவில் அவனுள் அவள் நீக்கமற நிறைந்திருக்கிறாள் என இந்த இருநாள் தனிமையில் வலிக்க உணர்ந்துகொண்டான் பார்த்திவ்.
“தூங்கலையா இன்னும்?…” என அவனின் அசைவில் ஸ்ருதியும் விழித்து கேட்க,
“அதை நீ முழிச்சு பார்த்திட்டிருக்கியா என்ன?…” என்றான் பார்த்திவ்.
“என்னவோ டீப் ஸ்லீப் போக முடியலை. அதான் பார்த்தா இன்னும் மாஸ்டர் தூங்கலை. இப்ப தூங்காம கிளாஸ் நேரம் தூங்கி விழாதீங்க மாஸ்டர்ர்ர்ர்ர்…” என்று அழுத்தி ஸ்ருதி சொல்ல,
“வாலு உன்னை வச்சுக்கிட்டு…”
“ம்ஹூம், கட்டிக்கிட்டு…” பதிலுக்கு பதில் அரை உறக்கத்திலும் அவனுடன் வம்பு வளர்த்தாள் ஸ்ருதகீர்த்தி.
“சேவ் மீ ஸ்ருதி…” என ரகசிய குரலில் பார்த்திவ் சன்னமான புன்னகையுடன் கேட்க,
“வெரி குட்நைட். நான் தூங்கிட்டேன் அப்பவே…” என உஷாராகியவள் அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு பாவனை செய்யவும் உடல் குலுங்க ஆர்ப்பாட்டமாய் புன்னகைத்தான் பார்த்திவ்.
“என்ன பண்ணாலும் அழகுடா ஸ்ருதிம்மா…”என்றவனின் மென்மையான அணைப்பும் இனித்தது ஸ்ருதகீர்த்திக்கு.