இரண்டு நாட்களாக பார்த்திவ்விடம் ஸ்ருதி படும்பாடு சொல்லில் அடங்காது.
விழிபிதுங்கி போய் தான் இருந்தாள் அவள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் வந்துவிடுவான்.
திருமணத்திற்கு முன்பைவிட இப்போது தான் இன்னுமே பயந்து போய் இருந்தாள் அவனிடம்.
“இங்க பார் ஸ்ருதி கல்யாணமாகிருச்சுன்னு பாட்டு சொல்லி தரதுலையும், ரெக்கார்டிங்லையும் நான் எந்த சலுகையும் தரமாட்டேன். சொல்ல போனா இனி தான் நீ இன்னும் கவனமா இருக்கனும்…” என பாட்டாய் பாடி இருந்தான் பார்த்திவ்.
“ரெக்கார்டிங் தியேட்டர் பொறுத்தவரை நீயும் மத்த சிங்கர்ஸ் மாதிரி தான். புரியுதா? எந்த அட்வாண்டேஜும் எடுத்துக்க நான் விடமாட்டேன். பொண்டாட்டி, அதான் அவங்க தப்பு பண்ணினா பார்த்திவ் கேட்கலைன்னு ஒரு வார்த்தை வந்தாலும் பார்த்துக்கோ…” என எத்தனை எச்சரிப்பு.
“நானும் அந்தளவுக்கு இடம் தரமாட்டேன். எனக்கு எல்லாமே பர்பெக்ட்டா இருக்கனும். அங்க நீ தப்பு பண்ணினா கூட என்னால பார்த்துட்டிருக்க முடியாது. அப்பறம் திட்டிட்டேன், முறைச்சுட்டேன், எல்லாரும் பார்த்தாங்கன்னு வந்து புலம்பின நல்லா வாங்குவ என்கிட்ட…” என்றிருந்தான் அவளிடம்.
“இதுக்கு எல்லாத்துக்கும் வீட்டுல வச்சு நான் பழிக்கு பழி வாங்கலை. பார்த்துக்கோங்க…” என்றவள் சொல்லத்தான் முடிந்தது.
“மறந்துட்டேன் அஷ். நீ எனக்கு ஞாபகப்படுத்தமாட்டியா?…” என அவனிடம் சண்டை போட மறந்த நாட்களில் சுபஷ்வினி தான் அவளிடம் கிடந்து பாடாய் படுவாள்.
“உங்க ரெண்டுபேருக்கு நடுவுல நான் மாட்டிக்கிட்டு படற பாடு இருக்கே?…” என அத்தனையையும் வாங்கிக்கொள்வாள் சுபஷ்வினி.
இப்படி நாளும் பொழுதும் ஸ்டூடியோவில் கறாராகவும், வீட்டில் காதலாகவும் நகரும் தருணங்களில் இந்த இரு நாட்களும் அத்தனை பரபரப்பு.
“ஸ்ருதி ரெடியா?…” என வந்தார் சுதந்திரம்.
“ப்பா படுத்தறார் இந்த மாஸ்டர். எனக்கு சுத்தமா முடியலை….” என மேஜையில் கை வைத்து தலையை சாய்த்துவிட்டாள் ஸ்ருதி.
“அதெல்லாம் சரியாகிடும் ஸ்ருதி. இன்னும் பார்த்திவ் வர ரெண்டுமணி நேரமிருக்கே?…” என சொல்லி சிரிக்க,
“ரெண்டுநாள் முடியாதது ரெண்டுமணி நேரத்துலையா? நானும் எத்தனை தடவை ரிகர்சல் பார்த்துட்டேன். என்னவோ பிசிறு தட்டிட்டே இருக்கு. அதுவும் ஒரே ஷாட்ல முடிக்கனுமாம்…”
சிறுபிள்ளை போல புலம்பிக்கொண்டிருந்தாள் ஸ்ருதி. இதுவும் தனிப்பாடல். அவள் மட்டுமே பாடக்கூடியது.
சிம்மேந்திரமத்யமம் ராகத்தை சேர்ந்த பாடல். அத்தனை எளிதில்லை. இசையமைப்பதிலும் சில சவால்கள் இருந்து.
அழகாய் அதனை அரங்கேற்றி இருந்தான் பார்த்திவ். ஸ்ருதி பாட வேண்டியது மட்டுமே தவணையில் இருந்தது.
அதிலும் இந்த பாடலை இத்தனை மணிநேரத்திற்குள் பாடி முடிக்க வைக்கவேண்டும் என்றொரு முனைப்பு பார்த்திவ்விடம்.
அவளால் முடியும் என பார்த்திவ் நினைத்திருக்க ஸ்ருதி அவனின் முனைப்பில் தான் பின்வாங்கினாள்.
“கொஞ்சம் கொஞ்சமா மத்த பாட்டு மாதிரி பாடறேனே? ஏன் படுத்தறீங்க?…” என கேட்டும்விட,
“மத்த பாட்டெல்லாம் நீ ஒன் ஷாட்ல பாடறது பெரிய விஷயமே இல்லை ஸ்ருதி. இந்த மாதிரி பாட்டை பாடனும். அது தான் திறமை. அது உனக்கிருக்கு…” என்று உறுதியாய் சொல்லியிருந்தான் அவன்.
“சரியான பயர் இஞ்சின். ஹைய்யோ…” என புலம்பிக்கொண்டே அவள் இருக்க காலை இந்த பயத்தில் சரியாக சாப்பிடவும் இல்லை.
“உன்னால முடியும். எனக்கு தெரியாதா? ஸ்டேஜ்ல பாடும் போது மட்டும் முழு பாட்டா தான பாடற? இப்போ என்ன? அப்படி நினைச்சுக்கோ. ஆனாலும் கவனமா, தப்பில்லாம பாடனும். பார்த்துக்கோ…” என்றவன் எச்சரிக்கையில் தான் இன்னும் நிதானம் தவறியது.
“நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். நீங்க நல்லா பாடுன்னு ஒரு வரியோட முடிச்சாலே போதும். இவ்வளோ வார்னிங் குடுத்தா பயந்து வருதுன்னு…”
“அப்போ எவ்வளோ முக்கியமான பாட்டுன்னு தெரிஞ்சுக்கோ ஸ்ருதி. விளையாட்ட தள்ளி வச்சிட்டு பீ சீரியஸ்…” என சொல்லிவிட்டு சென்றிருந்தான் பார்த்திவ்.
இப்போது சுதந்திரத்திடம் அவள் புலம்ப அவருக்கு பாவம் போலிருந்தாலும் பார்த்திவ் எப்படியும் வேலை வாங்காமல் விடமாட்டானே என்றும் இருந்தது.
“காலையில ஒரு தோசை தான் சாப்ட்டேன் தெரியுமா? பசிக்குது….” என்று ஸ்ருதி சொல்லி,
“ஆமா கேண்டின்ல இன்னைக்கு என்ன மெனு?…” என கேட்க சுதந்திரம் சொல்லும் முன்,
“நான் சுபாஷ் அண்ணாட்டையே கேட்டுக்கறேன்…” என்றாள் உடனே போனை எடுத்து.
“ஹ்ம்ம், சரி நான் டப்பிங் செக்ஷன் வரை போய்ட்டு வரேன். அங்க சவுன்ட் ப்ரூப் ரூம்ல வேலை நடந்திட்டிருக்கு. பார்த்திட்டு வந்திடறேன்…” என்று கிளம்பி சென்றார் சுதந்திரம் சிரிப்புடன்.
“என்ன தங்கச்சி? பாட்டு பாடி முடிச்சாச்சா?…” போனில் சுபாஷ் உற்சாகமாக கேட்க,
“இன்னும் இல்லையே. மாஸ்டர் ரெக்கார்டிங் ரூம்ல ஹலோ மைக் டெஸ்டிங் அப்டின்னு பார்க்க போயிருக்காங்க….”
“நான் பாடி முடிச்சாச்சான்னு கேட்டது உன்னை இல்லம்மா. அண்ணனை தான். உன்கிட்ட வரப்ப வழில பாடிட்டே இருந்தாரே? அதான் முடிஞ்சதான்னு கேட்டேன்…” என சுபாஷ் அடக்கமாட்டாமல் சிரிக்க,
“முட்ட மந்திரிச்சு வச்சிருவேன். பி கேர்ஃபுல்…” என்றாள் ஸ்ருதி.
“இப்ப என்ன வேணும்? அண்ணனுக்கு கால் பண்ணிருக்க? அதுவும் இம்புட்டு டென்ஷன்லையும்?…” என சட்டென சரணடைந்தான் சுபாஷ்.
உள்ளே வந்தவன் முகத்தில் ஏகத்திற்கும் டென்ஷன் ஏறியது. ஸ்ருதிக்கு வாயில் வைத்த கேசரி அப்படியே வழுக்கி செல்ல,
“மாஸ்டர் நான் சாப்பிட்டு முடிக்கவும் வந்திருக்கலாம்…” என சொல்லியும் விட்டாள்.
அந்த நேர கோபத்தை சத்தியமாக பார்த்திவ்வால் எப்படி கட்டுப்படுத்த என தெரியாமல் சுபாஷை பார்க்கவும்,
“ஆத்தீ…” என நெஞ்சில் கை வைத்தவன் வெளியே ஓடியே விட்டான்.
“பசில எனக்கு தலையெல்லாம் சுத்துது தெரியுமா? அதான்…” என்று சுருதி பாவம் போல சொல்ல பெருமூச்சுடன் தலையசைத்து கைகளை விரித்தவன்,
“சரி சாப்பிட்டு முடி…” என அவளருகே அமர்ந்துகொண்டான்.
“கேசரி…” என ஒரு கை எடுத்து அவனுக்கு நீட்ட,
“வாலு, இன்னைக்கு ஒழுங்கா பாடாம மட்டும் இரு. உன்னை தொலைச்சிட்டேன் பார்த்துக்கோ…” என்று எச்சரிக்கையுடன் பார்த்திவ் வாயை திறக்க,
“ஒன்னும் கிடையாது…” என சொல்லி தன் கையை ஸ்ருதி பின்னிழுக்கவும் அதனை பிடித்து தான் வாங்கிக்கொண்டான்.
“கேசரியை மட்டும் தான் சாப்பிட சொன்னேன்…” என விரல்களை உருவிக்கொண்டு முறைத்தவள்,
“இதுக்கு மட்டும் கோவம் வராதே…” என சொல்லி சாப்பிட,
“காபி…” என வந்த சுபாஷ் பார்த்திவ்வை பார்க்காமல் வைத்துவிட்டு வெளியேறினான்.
“உனக்கு இவன் பன்றது இருக்கு பார். பேசிக்கறேன் இன்னைக்கு…” என்றவன் அவள் உண்டு முடிக்கும் வரை அமைதி காத்து மீண்டும் பாடத்தை துவங்கினான்.
மீண்டும் பாட சொல்லி அவளின் தவறுகளை எங்கே என கண்டு திருத்தினான் மிக பொறுமையாக.
“ஸ்ருதி ப்ரீத்திங் கண்ட்ரோல் இன்னும் கொண்டு வரனும். சங்கதில அங்கங்க உன்னோட மூச்சு நான்ஸிங்…” என ஒவ்வொன்றாய் சொல்ல,
“ஹ்ம்ம், பன்றேன்…” என மீண்டும் பாடி காண்பிக்க நேரம் சென்றதே தெரியவில்லை.
கண்களை சொருகிக்கொண்டு வந்தது ஸ்ருதிக்கு. கொஞ்ச நேரம் உறங்கி எழுந்தால் போதும் என மனதில் ஏங்கியவள் பார்த்திவ் சொல்லியதை கேட்டுகொண்டே அவனின் தோளில் சாய்ந்துவிட,
“ஸ்ருதி…” என பிடித்து உலுக்கி எழுப்பிவிட்டான்.
“ஹாங், தூங்கல. தூங்கல…” என மலங்க மலங்க அவள் விழிக்க பறக்கவிருந்த பொறுமையை இழுத்து பிடித்தான் பார்த்திவ்.
“ஓகே, ஓகேடா. ரிலாக்ஸ்…” என தானாகவே தோளில் சாய்த்து ஸ்ருதியின் முதுகை வருடியவன்,
“ஸ்ருதிம்மா உனக்கு நான் இவ்வளோ எக்ஸ்ப்ளைன் பண்ண வேண்டியதில்லை தான். ஆனாலும்…” என்றவன்,
“ஓகே, ஒரு டென் மினிட்ஸ் ரெஸ்ட் எடுத்துக்கோ. இந்த மோட்ல இருந்து வெளில வா. முகத்தை கழுவிட்டு வரியா நீ?…” என்றதும் எழுந்து சென்று முகம் கழுவி வந்தாள் ஸ்ருதி.