அத்தனை சந்தோஷத்துடன் பார்த்திவ் உள்ளம் துள்ளியது. மஞ்சுளாவும், சுபஷ்வினியும் அவனுக்கு கை கொடுத்து வாழ்த்த,
“எல்லாமே ஓகே. ஆனா ஸ்ருதியோட பிபி ரொம்ப கூடவும் குறையவுமா இருக்கு. என்னவோ அவங்களுக்குள்ளையே போராட்டம் பன்ற மாதிரி….” என சொல்லவும் அத்தனைபேரின் முகமும் இருண்டுவிட்டது.
“மனசளவுல அவங்க ரொம்ப வீக். இதை தொடர விட கூடாது. நிஜமாவே தனக்கு குழந்தையான்னு அவங்க நம்பமுடியாம கேட்கறாங்க. அதுல அதீத சந்தோஷம். கூடவே என்னவோ அவங்களுக்குள்ள சொல்லமுடியாத ஒரு பயம்…” என்றதும்,
“சந்தோஷமா சொல்லிட்டு கூடவே இப்படி சொல்றீங்களே டாக்டர்? எங்க பொண்ணுக்கு வேற எதுவும் பிரச்சனையா?…” என மஞ்சுளா கண்ணீருடன் கேட்டுவிட,
“அப்படின்னு உறுதியா சொல்ல முடியாது மஞ்சுளா மேம். எனக்கு தெரியாதா ஸ்ருதி உங்களுக்கு எவ்வளோ முக்கியம்ன்னு. மயக்கம் தெளிஞ்சா தான் அதுக்கான கவுன்ஸிலிங் குடுக்க முடியும். சரி பண்ணிடலாம்…” என்றார் நம்பிக்கையுடன்.
“ஸ்ருதியை பார்க்கலாமா?…” என சுபஷ்வினி கேட்க,
“இப்ப தூங்கறாங்க. டிஸ்டர்ப் பண்ணாம போய் பார்த்துட்டு வாங்க. முழிச்சதும் டிஸ்சார்ஜ் பன்றேன்…” என சொல்லி அவர்களை அனுப்பினார் மருத்துவர்.
வெளியே வந்த சுபஷ்வினியின் முகத்தில் எல்லை கடந்த கோபம் தாண்டவமாடியது.
“பெத்தவங்க ரெண்டுபேரும் அவங்களுக்கான வாழ்க்கையை பார்த்துட்டு போயாச்சு. இன்னும் இவ என்னவெல்லாம் மனசுக்குள்ள வச்சு மருகிட்டு இருக்காளோ?…” என ஆக்ரோஷமாக சொல்ல,
“என்னம்மா? என்ன சொன்னாங்க டாக்டர்?…” என கேட்டார் சுதந்திரம்.
சுபாஷும் அங்கே தான் நின்றிருந்தான் என்ன ஆகிற்றோ என்று பதட்டத்தில். அவர்களுக்கும் மனதெல்லாம் பதட்டம்.
காலையில் சிரித்தபடி அத்தனை கலாட்டாவாக பேசி பெண் இப்போது கண் திறவாமல் இருப்பதில் மனம் நைந்து போயினர்.
“அங்கிள் நம்ம ஸ்ருதிக்கு குட்டி ஸ்ருதி வர போறா. ஆனா இந்த டாக்டர் கொஞ்சம் பயம் காட்டறாங்க…” என்றவளுக்கு கண்ணீர் நிற்காமல் பெருக விம்மிவிட்டாள்.
“என்னம்மா நீ சந்தோஷமா சொல்லிட்டு இப்படி சொல்றியே?…” என்ற சுதந்திரம் பார்த்திவ்வை பார்க்க,
“நான் ஸ்ருதியை பார்த்துட்டு வரேன்…” என எழுந்து உள்ளே சென்றான்.
“அஷ்வினி அதெல்லாம் எதுவும் ஆகாது. டாக்டர் கவுன்ஸிலிங் குடுத்தா சரியாகிடும்ன்னு சொல்றாங்களே?…” என மஞ்சுளா அவளை அணைத்துக்கொள்ள,
“அந்த நிலைமைக்கு தள்ளினவங்களை சும்மா விடறதா ஆன்ட்டி? வேண்டாம்ன்னு விலகி இருந்தும் இவ்வளோ கஷ்டமா?…” என அழுதுகொண்டே இருக்க சுதந்திரம் மனம் கனத்து போனது.
அறையில் ஸ்ருதியின் நிர்மலமான முகத்தை பார்த்தபடியே பார்த்திவ் உடைந்து போய் அமர்ந்திருந்தான்.
அவனின் ஒரு கை ஸ்ருதியின் வயிற்றிலும், இன்னொன்று அவளின் தலையை வருடிக்கொண்டும் இருந்தது.
“என்ன பயம் ஸ்ருதி உனக்கு? நான் இருக்கும் போது? என்ன இருக்கு உன் மனசுக்குள்ள?…” என அவன் அவளிடம் பேசியபடியே தான் இருந்தான்.
அன்றொருநாள் தன்னறையில் வைத்து குழந்தைகள் பற்றிய கனவுகளை அவள் பகிர்ந்துகொண்டதெல்லாம் படமாய் கண் முன் விரிந்தது.
ஸ்ருதியை தான் முதன் முதலில் சந்தித்ததில் இருந்து இப்போது வரையான இவ்வளவு நிகழ்விலும் அவளின் தைரியம் அவன் பெரிதாய் வியக்கும் ஒன்று.
உடைந்துபோக கூடிய சூழ்நிலையிலும் நிமிர்ந்து நின்று தூசாய் கடந்து வந்த பெண்.
இடையில் சுபஷ்வினி, மஞ்சுளா இருவரும் வந்து பார்த்துவிட்டு, சுதந்திரத்தையும், சுபாஷையும் கூட அனுப்பி வைத்தனர்.
மேலும் சில மணித்துளிகள் கடக்க ஸ்ருதியின் மூச்சு மேலெழும்பி இழுத்து விடப்பட,
“ம்மா…” என இதழ் பிரித்தவள் புருவங்கள் சுருங்கி விழிகள் மலர்ந்தாள்.
அவளின் அசைவுகளை அசையாமல் இமை சிமிட்டாமல் பார்த்திவ் பார்த்தபடி இருக்க அந்த அதிர்வான முகம் கண்டு,
“மாஸ்டர்…” என மெல்ல சிரித்தவள் குரலை கேட்ட நிமிடம் பார்த்திவ்வின் மூச்சும் நிம்மதியானது.
கண்களை விட்டு இருதுளிகள் உருண்டோட எதற்கு அழுகிறான் என்று பார்த்தவள் தானிருப்பதையும் கவனித்துவிட்டு தன் அருகே அழைத்து,
“அழுமூஞ்சி மாஸ்டர். ரிகர்ஸல் போலாமா?…” என்று இன்னும் சிரித்தாள்.
“சாவடிச்சிட்ட என்னை…” என்றவன் முத்தங்கள் அவள் முகம் நிறைக்க,
“எழுந்துக்கறேன். நானும் தரனுமே. ஸ்வீட் எடு. கொண்டாடு. எனக்கு ஸ்வீட் சாப்பிடனும். ஸ்வீட்டோட ஸ்வீட் நியூஸ் சொல்லனும்…” என கலகலப்பாய் ஆரம்பித்துவிட்டாள் ஸ்ருதி.
“வாங்கலாம்டாம்மா. வா, வா. எங்க நீயா அணைச்சுக்கோ. வா…” என பார்த்திவ் தன் கைகளை விரிக்க,
“செலைன்…” என காண்பித்தவள் ஒரு கையால் அவனை அணைத்து நெஞ்சில் சாய்ந்து,
“இங்க, குட்டியா, இவ்வளோண்டு, இங்க இங்க…” என சந்தோஷத்தில் திணறி போனவள் அவனின் கையை எடுத்து வயிற்றில் வைத்து கீழ் அதரங்களை கடித்து பொங்கும் சிரிப்பை அடக்கினாள்.
“தெரியும் தானே? டாக்டர் சொன்னாங்களா? என்ன சொன்னாங்க? எல்லாம் ஓகே தானே? குட்டி அம்மே எப்படி இருக்காங்கலாம்?…” என்றவள் சிரிப்பில் தன்னை மீட்டவன்,
“எல்லாம் சொன்னாங்க. வாலு பொண்ணும், குட்டி வாலும் ரொம்ப நல்லா இருக்காங்களாம். பத்திரமா பார்த்துக்கனுமாம் அவங்களை. டென்ஷன் இல்லாம எப்பவும் ஹேப்பியா இருக்கனுமாம்…” என ஒவ்வொன்றாய் சொல்ல நர்ஸ் உள்ளே வந்தார்.
“முழிச்சிட்டாங்களா? நான் டாக்டரை வர சொல்றேன்…” என்று அவரை அழைத்து வர வந்து பார்த்துவிட்டு ஸ்ருதியிடமும் பேசிவிட்டு சென்றார்.
“அஷ்…” என சுபஷ்வினியை பார்த்ததும் ஸ்ருதி கையை விரிக்க அவளுக்கும் அவ்வளவு சந்தோஷம்.
ஸ்ருதியின் முகம் தெளிவாய் இருக்க தான் அலுத்து கலங்கி அவளையும் கவலைபடுத்த வேண்டாம் என புன்னாகியுடன் அணைத்துக்கொண்டவள்,
“இனிமே உன் சேட்டை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு பேபியை என் மோளே நல்லா பார்த்துக்கனும். ஓகே…”
“சேர்ந்தே பார்த்துப்போம். ஓகே…” என இருவரும் ஹைபை அடித்துக்கொள்ள மஞ்சுளாவிற்கு மனதில் நிம்மதி.
“ம்மா…” என்று கண்கள் கலங்க ஸ்ருதி சிரிக்க மனதிற்கு அவளுக்காய் பிராத்தித்துக்கொண்டார் மஞ்சுளா.
உறவை இழந்த பெண்ணிற்கு தன்னிலிருந்து உருவாகும் ரத்தபந்தம் எத்தனை மகிழ்ச்சியை அளிக்கிறது? இதோ கண்கூடாக பார்த்தார் மஞ்சுளா.
அவர்கள் அங்கே இருக்க பார்த்திவ் மருத்துவரை பார்த்துவிட்டு வர செல்ல சுபஷ்வினியும் உடன் சென்றாள்.
“நத்திங் வொர்ரி பார்த்திவ். ஸ்ருதி பேச்சுல ரொம்பவே தெளிவு. இப்ப இந்த கவுன்ஸிலிங் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம். ரெண்டுமூணு மாசம் போகட்டும். அதுக்கப்பறம் எதுவும் ப்ராப்ளம்ன்னா பார்த்துக்கலாம். இப்ப அவங்களுக்கு தேவை உங்களோட கேர் தான்…” என்று சொல்லி அவளுக்கான மருந்துகளை எல்லாம் எழுதி தந்தார்.
பார்த்திவ்விற்கும் சுபஷ்வினிக்கும் அப்போது தான் நிம்மதி சூழ்ந்தது. இன்முகமாகவே வெளியில் வந்தவர்கள் மீண்டும் ஸ்ருதி இருந்த அறைக்குள் சென்றனர்.
இருவரும் வரவுமே சுதந்திரத்தின் மனைவி மகளுடன் வந்துவிட்டார் ஸ்ருதியை காண.
“அம்மா…” என சந்தோஷமாய் ஸ்ருதி வரவேற்க அடுத்ததாக சுபாஷின் மனைவி ராதாவும் வந்துவிட்டாள்.
“வாங்க அண்ணி…” என்றவள் சுபாஷின் குழந்தைகளை கட்டிலில் அமர வைத்துக்கொண்டாள்.
“ஹேய் குட்டீஸ் உங்க கூட விளையாட நானும் பேபி தர போறேன் தெரியுமா?…” என்றவள் சுதந்திரம் மனைவியிடம், ராதாவிடம் எப்போது என்னவெல்லாம் செய்தது என கேட்டு என்ன சாப்பிட வேண்டும் பிள்ளை பிறந்து என்ன செய்வது என்பது வரை தெரிந்துகொண்டாள்.
“அதான் ஆன்ட்டி இருக்காங்களே ஸ்ருதி….” என சுபஷ்வினி அவளை அடக்கி வைத்தாள்.
“கேட்கட்டுமே? இப்ப என்ன? ஸ்ருதியும் தெரிஞ்சுக்கட்டும்…” என்று அவளை தடுக்க நினைக்கவில்லை மஞ்சுளா.
“அவ மனசுக்கு பிடிச்ச மாதிரி இருக்கட்டும் அஷ்வினி…” என்றவரின் கையை பிடித்துக்கொண்டாள் சுபஷ்வினி.
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை ஆன்ட்டி. ஆனா மனசு நிறைவா இருக்கு. இப்படி ஒரு சுற்றமும், உறவும், வாழ்க்கையும் கிடைக்கத்தான் இவ்வளவுமான்னு கூட தோணுது எனக்கு. என் மோளே எப்பவும் இப்படியே இருக்கனும்…” என்று சொல்ல,
“அஷ்வினி நான் பார்த்திவ் வேற ஸ்ருதி வேறன்னு பிரிச்சு பார்த்ததில்லை. ஆனா இன்னைக்கு என் பிள்ளையோட தவிப்பு. நான் இன்னுமே தவிச்சு போய்ட்டேன். அந்த சூழ்நிலை திரும்ப வரக்கூடாதுன்னு நினைக்கறேன்….” என்றார்.
இருவரும் ஸ்ருதியை பார்க்க மற்றவர்களுடன் கலகலத்துக்கொண்டிருந்தவள் முகத்தில் மருந்துக்கும் சோர்வில்லை.
அவ்வளவு உற்சாகம், அத்தனை சந்தோஷம், பூரிப்பு. இந்த உலகத்தின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அள்ளிக்கொண்டவளாக அமர்ந்திருந்தாள் ஸ்ருதகீர்த்தி.
அத்தனையும் அவளுக்கென என்று நின்றிருந்தவனின் விழிகள் அவளின் மேல் பரிவும், காதலுமாக வட்டமிட,
“ஓகே நீ பேசிட்டே தான் இருப்ப. டாக்டர் வந்தா சத்தம் போடுவாங்க. இந்த செலேன் முடியவும் தான் டிஸ்சார்ஜ். அதுவரை வாயை மூடி தூங்கவும்…” என்றாள் சுபஷ்வினி சிரிப்புடன்.
மற்றவர்கள் சொல்லிக்கொண்டு வெளியேற பார்த்திவ்வின் கையை பிடித்துக்கொண்டாள் ஸ்ருதி.
“என்னடா?…” என அவளருகே அமர்ந்தவன் கேட்க,
“கூட இருங்க. கொஞ்ச நேரம்….”
“இங்க தான் இருப்பேன். எங்கயும் போகலை. தூங்கு…” என்று சொல்ல அவனை பிடித்திருந்த கையை இன்னும் வலுவாக்கினாள்.
“ஏன் பார்த்திவ், என் அம்மாவும் இப்படி நான் அவங்ககிட்ட வந்தப்போ இவ்வளோ சந்தோஷமா இருந்திருப்பாங்க தானே?…” என்ற கேள்வியில் பார்த்திவ் திடுக்கிட,
“என்னடாம்மா? எதுக்கு இப்போ?…”
“ஹ்ம்ம், என்னை எப்படி வளர்க்கனும்ன்றது வரை அவங்க சுமக்கும் போது இது மாதிரி எவ்வளோ கனவு இருந்திருக்கும்? எப்படி என்னை தள்ளி வைக்க முடிஞ்சது அவங்களால?…” என்றதும் அவள் முன் அமர்ந்திருந்தவன் எழுந்து சென்று அருகில் அமர்ந்து தன் மார்பில் சாய்த்துக்கொண்டான்.
“அதை பேசி கஷ்டப்படுத்திக்காத ஸ்ருதி…” என சொல்ல,
“கஷ்டம் எல்லாம் இல்லை. ஆனா சட்டுன்னு தோணுச்சு. அப்பா மேல உள்ள வெறுப்பு பிள்ளை மேல வருமா? பாசத்தை வெறுப்பு துரத்துதுன்னா வெறுப்பை பாசம் மறக்கடிக்காதா? ஏன் இப்படி?…” என அவனை பார்த்தவள் வைத்தாள் ஏனென்றே தெரியாமல் ஒரு சத்தியம்.
“நான் அப்படி இருக்கமாட்டேன். ப்ராமிஸ்…” என்று சொல்லியவள் விழி நீர் அவள் விரித்த கரத்தில் பட்டு தெறிக்க,
“நானும். ப்ராமிஸ்…” என்றான் பார்த்திவ் அவள் கேளாமலே.
“இதுக்கு மேல பேசாதடா. தாங்க முடியலை. உனக்கு எல்லாமா நான் இருப்பேன். எனக்கு நீ எப்பவும் என் கூடவே இருக்கனும். சந்தோஷமா நம்ம குழந்தைங்களோட…” என்று சொல்ல,
“மதர் ப்ராமிஸ் ம்ஹூம். பார்த்திவ் ப்ராமிஸ்…” என கண் சிமிட்டியவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு,
“மடில படுத்துக்கவா?…” என்றாள் ஸ்ருதி தொண்டை அடைக்க.
“ஹ்ம்ம் வா….” என்றவன் அவளை மடி தாங்கிக்கொள்ள அவனின் வயிற்றை கட்டிக்கொண்டு மீண்டும் கதை பேச ஆரம்பித்தாள் அவனிடம் அவர்கள் எதிர்காலத்தினை வார்த்தைகளால் ஓவியமென தீட்டி.