மிளகாய் நெடியில் லேசாய் இருமலுடன் பின்னே வந்தவள் சற்று அந்த புகை மட்டுப்பட்டதும் ரசத்தை கலக்கி கையில் ஊற்றி சுவை பார்த்தாள் ஸ்ருதி.
“ம்மா, ம்மா…” என்றவள் சத்தத்தில் மஞ்சுளா வேகமாய் ஓடி வந்தார்.
“கைல பட்டுடுச்சா ஸ்ருதி? என்னாச்சு?…” என்று பதறி கேட்க,
“அச்சோ டென்ஷன் பண்ணிட்டேனா?…” என கெஞ்சும் பாவனையுடன் ஒரு கையில் கரண்டியும், இன்னொரு கையை காதிலும் வைத்து பார்த்ததும் இடுப்பில் கை வைத்து முறைத்தார் மஞ்சுளா.
“சரி எதுக்கு கூப்பிட்ட? அதை சொல்லு. முடிச்சாச்சா?…” என்று எட்டி பார்க்க தாளித்துவிட்டதில் மேலே எண்ணெய் மிதக்க ரசம் பார்க்க அழகாய் இருந்தது.
“ஹ்ம்ம், பர்பெக்ட்…” என்று சொல்லிய மஞ்சுளா அந்த கரண்டியை வாங்கி ரசத்தை எடுத்து தான் சுவை பார்த்தார்.
“நல்லாயிருக்கே…” என முகம் மலர்ந்ததும் ஸ்ருதியும்,
“ஆமா தானே? நான் கூட நான் செஞ்சது, அதனால எனக்கு டேஸ்ட்டா தெரிஞ்சதோன்னு நினைச்சேன்…” என்று சொல்லி,
“சாப்பிட போறேன் நான்…” என தட்டை எடுத்து சாதத்தை போட,
“அடி வாங்குவ நீ. இது ஜூஸ் டைம்…” என மஞ்சுளா அதட்டினார்.
“ஆமா தான். ஆனாலும் ரசம்…” என்றவள்,
“சரி ஜூஸ் குடிக்கறேன்…” என சொல்லி மஞ்சுளா தந்ததை வாங்கிக்கொண்டு சென்றாள்.
“இரு ஸ்ருதி, கொஞ்சம் சாப்பிட்டு கூட குடி…” என்றதும்,
“இல்லம்மா…” என்று பழச்சாறை பருக ஆரம்பித்துவிட்டாள் ஸ்ருதி.
குழந்தை என்று வருகையில் அவளின் செயல்பாடுகள் இன்னும் கவனமாகவும், அக்கறையுடனும் இருந்தது.
எந்தவிதத்திலும் அவளை வற்புறுத்தும் அவசியம் வைத்துக்கொள்வதே இல்லை ஸ்ருதி.
“என் குழந்தைக்கு…” என தானாகவே ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டிருந்தாள்.
அவ்வப்போது ஸ்டூடியோ செல்வது, பார்த்திவ்விற்கு உதவுவது இது தான் அவளின் வேலைகள்.
சில நேரங்களின் பெற்றவர்களின் எண்ணங்களை கொண்டு தனக்குள் சுழலுப்பவள் பாவனைகளை கண்டுகொண்டிருந்தான் பார்த்திவ்.
“ம்மா முடிஞ்சளவு ஸ்ருதிக்கு கஷ்டமில்லாம அவளை பிஸியா வச்சுக்கனும்…” என்று பார்த்திவ் சொல்லியிருக்க மஞ்சுளாவும் கவனமாக இருந்தார்.
ஸ்ருதி ஒவ்வொன்றையும் தேடி, படித்து, பார்த்து, கேட்டு தெரிந்து என்று அவளின் உலகம் மொத்தமும் அவள் பிள்ளைக்கென செலவழிக்க பார்த்திவ் மனைவியை தாங்கிக்கொண்டான்.
“எந்த ஸ்கூல்ல படிச்சீங்க நீங்க?…” என கேட்டு பிள்ளைக்கு இப்போது அங்கே எப்படி? எங்கே சேர்க்கலாம் என்பது வரை அவள் கனவுகள் விரிந்துகொண்டே இருந்தது.
ஐந்து மாதங்களாகிற்று. இப்போது பாடுவதில்லை ஸ்ருதி. அவள் உடல் நலன் கருதி பார்த்திவ் ஒத்தி வைத்திருந்தான்.
ஆனால் அவளுக்கான பாட வகுப்புகள் மட்டும் முற்றுபெறவில்லை. கற்று கொடுக்கவும் பயிலவும் இன்னும் கொட்டிக்கிடக்க அதை நிறுத்தவில்லை.
பிள்ளை உண்டானதும் சுபஷ்வினியின் பெற்றோர் வந்துவிட்டனர் ஸ்ருதியை பார்க்க என்று.
மஞ்சுளா, அறிவழகனிடம் சிங்கமுத்துவும், ராதிகாவும் வாழ்த்துக்களை சொல்லியதோடு பலகாரங்களையும் கொண்டு வந்திருந்தனர்.
“டெய்லி அங்க கொஞ்ச நேரம் வரலைன்னாலும் மாஸ்டர் முகமே மாறிடுது…” என்று சிரிக்க மஞ்சுளாவும் தலையசைத்தார்.
“தனியா இருக்க அவனுக்கும் அங்க போரடிக்கும்ல?…” என மகனுக்கு ஆதரவு கொடுக்க,
“தனியா? அவங்க? அதுவும் அங்க? போங்கம்மா. அவர் அடிச்சா பத்தாதாமா? போர் வந்து அடிக்குதாம்…” என கிண்டலாக சிரித்தாள்.
“நேத்து செக்கப் போயிட்டு வந்தப்போ டாக்டர் உன்னை சின்ன சின்ன உடற்பயிற்சி செய்ய சொன்னாங்களே? இன்னைக்கு பண்ணினியா நீ?…” என்றார்.
“ஹ்ம்ம், அதெல்லாம் எழுந்ததும் பண்ணிட்டேன்…” என்றவள் தனது போனிலும் பார்வையை பதித்திருக்க,
“வாட்…” என்று முகம் சுருக்கினாள்.
“என்னாச்சு? என்னம்மா?…” மஞ்சுளாவும் கேட்க,
“ம்மா இவங்க பண்ணின வேலையை பாருங்க…” என கேட்டுகொண்டிருக்கும் பொழுதே பார்த்திவ் அழைத்துவிட்டான்.
“ஜூஸ் குடிச்சாச்சா கீர்த்தி மம்மி…” என்று எடுத்ததும் சிரிப்புடன் கேட்க,
“என்ன பண்ணி வச்சிருக்கீங்க என் மொபைல்ல நீங்க?…” என்று அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் எதிர் கேள்வி கேட்டாள்.
“ஓஹ் இப்ப தான் பார்த்தியா நீ?…” என சிரிக்கும் சப்தம் ஸ்ருதியை எட்டியது.
“மாஸ்டர்…” என பல்லை கடிக்க,
“பார்த்திவ்…” என்றான் அவன்.
“அதெல்லாம் தெரியும்…” ஸ்ருதி பார்த்திவ்விடம் பேச ஆரம்பிக்கவும் மஞ்சுளா எழுந்து சென்றுவிட்டார்.
“ஆனா நேத்து நைட் பண்ணினதை பார்க்க மட்டும் இப்ப தான் தெரியுமா?…”
“சிரிக்காதீங்க. ஏன் ப்ளாக் பண்ணுனீங்க?…” என்றாள் ஸ்ருதி.
“நான் இப்ப வீட்டுக்கு தான் வரேன். ரசம் பண்ண போறேன்னு சொன்னியே? அதை டெஸ்ட் பண்ணலாமேன்னு. வரவும் பேசலாம். சரியா?…” என சொல்லி துண்டிக்க போக,
“டேஸ்ட் பண்ணன்னு சொல்லனும். டெஸ்ட் இல்லை…” ஸ்ருதி அடுத்ததாக உர்ரென்று முகத்தை வைத்துக்கொள்ள,
“டெஸ்ட் பண்ணி டேஸ்ட் பத்தி சொல்றேன்…” என்றவன் அவள் பொரியும் முன் வைத்துவிட்டான்.
“ம்மா…” என்ற ஸ்ருதி சத்தத்தில்,
“கொஞ்ச நேரம் அங்கயே நடந்திட்டிரு. பார்த்திவ் வரவும் வரேன்…” என சிரிப்புடன் சொல்லிவிட்டார் மஞ்சுளா.
மீண்டும் தன் போனை பார்த்தவளுக்கு கோபம் குறையவில்லை. அவளுக்கே தெரியாமல் அவளை பெற்றவர்களின் அலைபேசி எண்களை கருப்பியிருந்தான் பார்த்திவ்.
“ஏன் என்னால ப்ளாக் ரிமூவ் பண்ண முடியாதா?…” என்றவள் அதனை செய்ய போக, அவள் விரல்கள் கூட ஒத்துழைக்கவில்லை.
வீம்பு அதிகரிக்க இடும்புடன் அதனை செய்ய துடித்தாலும் மனமும் வரவில்லை ஸ்ருதிக்கு.
உடனே வாட்ஸ் ஆப்பில் கணவனின் எண்ணிற்கு குரல்வழி செய்தியை காட்டமாக அனுப்பி வைத்தாள்.
“பார்த்திவ் என்னை எப்படி மாத்தி வச்சிருக்க நீ? இரு உன் பொண்ணு வரட்டும். மொத்தவிடறேன்…” என்று அனுப்பியிருக்க,
“வெல்கம் யட்சினி…” என காதலுடன் சன்னமான சீட்டிகையும் சிரிப்பொலியும் கலந்து பதிலுக்கு அனுப்பியிருந்தான் பார்த்திவ்.
“இதுக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன்…” என்றவள் குரலோ இப்பொழுது குழைந்து அவனை சேர்ந்தது.
“ஸ்ருதிம்மா, வீட்டுக்கு தான் வரேன். ஸ்டாப் இட் டா…” பார்த்திவ் கிசுகிசுப்பாய் பதில் அனுப்ப அதற்கென்றே அவனுக்கு பேசி அடுத்தடுத்து அனுப்பிக்கொண்டே இருந்தாள் வாசலில் அவன் கார் வந்து நிற்கும் வரை.
“வாலு அடங்கவே மாட்ட நீ…” என்றபடி வேகமாய் உள்ளே வர ஸ்ருதி அங்கே இல்லை.
“இப்பதான் ஸ்ருதி தூங்க போனா பார்த்திவ். வா. இவ்வளோ நேரமா? நீ அப்பவே கிளம்பிட்டன்னு ஸ்ருதி சொன்னா?…” என அறிவழகன் கேட்க,
“ஹ்ம்ம், ப்ளைட் கிடைக்கலை…” என்று நக்கலாக சொல்லிவிட்டு வந்து அவர் எதிர் அமர்ந்தான்.
பார்த்திவ் சாப்பிட ஆரம்பிக்கவும் ரசத்தை தேட அங்கே அதனை காணவில்லை டேபிளில்.
“என்ன பார்த்திவ்? வேற எதுவும் வேணுமா?…” என்று மஞ்சுளா தெரிந்துகொண்டே கேட்க,
“எங்க அந்த வாலு பண்ணின ரசம்? ரொம்ப நல்லா இருந்ததா என்ன? டேபிள்ல இல்ல? காலி பண்ணிட்டீங்களா?…” என பார்த்திவ் கேட்கவும்,
“இருக்கே. ஸ்ருதி தான் நீ கேட்டா தான் தரனும்ன்னு சொன்னா. அதான் எடுத்து வச்சிருக்கேன்…” என மஞ்சுளா சிரித்துக்கொண்டே உள்ளே செல்ல அறிவழகனிடம்,
“சேட்டையை பார்த்தீங்களா?…” என்றான் பார்த்திவ்.
அவர் கொண்டுவந்து மகனுக்கு தரவும் முகமெல்லாம் சிரிப்புடன் அதனை உண்ண,
“எப்படி இருக்கு பார்த்திவ்?…” என மஞ்சுளா கேட்கவும்,
“ஹ்ம்ம், கொஞ்சம் கொஞ்சமா நல்லா பண்ணிட்டிருக்கா. ரசம் சூப்பர்…” என்று ரசித்து சுவைத்து உண்டான் அவன்.
“பின்ன ஸ்ருதிக்கு அவ குழந்தை இந்த உலகத்தை பார்க்கும் போது அவங்களுக்கான எல்லாமே செய்ய தெரிஞ்சிருக்கனும்ன்னு பழகறா. இந்த பொண்ணை நிம்மதியில்லாம பண்ணுது அவ சந்திச்ச சூழல். என்னவோ இப்போதைக்கு அவ ஓகே…” என்று நிம்மதியாக கூறினார் மஞ்சுளா.
பார்த்திவ் உண்டு முடித்ததும் எழுந்து மாடிக்கு செல்ல ஸ்ருதி உறக்கத்தில் இருந்தாள்.
வயிற்றிற்கு ஒரு தலையணையை கொடுத்து ஒரு கையை வயிற்றில் வைத்து சயனித்திருக்க,
“அசையமாட்டாளே? அப்பறம் கை பிடிக்குது, கால் பிடிக்குதுன்னு…” என்றபடி அவள் வயிற்றில் இருந்த கையை எடுத்துவிட்டு தான் சாய்ந்து அமர்ந்து தன் கரம் படும்படி படுத்துக்கொண்டான்.