“அடி தான் உனக்கு. இதை நினைச்சிட்டே தூங்குனியா நீ?…” என முறைக்க,
“ப்ச்…” என சலித்துக்கொண்டாள்.
“எதுவுமே பாதிக்கலை, அவங்களை நினைச்சு கவலைப்படலைன்னு சொல்றது. அப்பறம் அவங்க எதுவும் ஸ்டேட்டஸ் போட்டோஸ் வச்சா வெறிச்சு பார்த்துட்டு யோசனையிலையே சுத்தி நைட்ல நான் யாருமில்லையா அவங்களுக்குன்னு கேட்க வேண்டியது?…” என கடுமையாகவே சொல்ல,
“அப்படியெல்லாம் இல்லை…” என முணங்கினாள்.
“வர வர ரொம்ப பயங்காட்டுற ஸ்ருதி. உனக்கு புரியலை நான் எவ்வளோ பயந்திருக்கேன்னு. உன்னோட உடல்நிலையை இந்த மாதிரியான மனநிலை பாதிக்கும்….”
“நான் ப்ளாக் பண்ணிட்டா அவங்களுக்கு போய் தொலைஞ்சான்னு ஆகிடும். பரவாயில்லையா?…” என கோபமாய் ஸ்ருதி கேட்க,
“பரவாயில்லை. எனக்கு நீயும், நம்ம குழந்தையும் தான் முக்கியம். அவங்க எப்பவோ அவங்க வாழ்க்கை இதுதான்னு வாழ ஆரம்பிச்சு ரொம்ப தூரம் வாழ்க்கையை கடந்துட்டாங்க. நாம இப்ப தான் ஆரம்பிச்சிருக்கோம்டா….” என்றான் பொறுமையாக.
ஸ்ருதியின் முகத்தில் உணர்வுகள் எல்லாம் அலைமோதிக்கொண்டிருந்தது அவன் பேச பேச.
“நம்மை கஷ்டபடுத்தற ஒன்னை பக்கத்துல வச்சுக்கிட்டு அதை பார்த்து நம்மளை பாழாக்கிக்க கூடாது. ஸ்ருதி பிரிலியன்ட் கேர்ள். புரிஞ்சுக்கோ. என்னால என் லைப்ல ரிஸ்க் எடுக்க முடியாது. என் லைஃப்னா நீ, நம்ம குழந்தை…” என்றவன்,
“உன்னோட மனக்கஷ்டம் நம்ம குழந்தையையும் பாதிக்கும் ஸ்ருதி. உன்னையுமே பாதிக்கும். நமக்கு இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு. உன்னோட நான் சந்தோஷமா வாழனும். என் வாழ்க்கைல நீ எவ்வளவு முக்கியம்ன்னு நான் சொல்லவேண்டியதில்லை. நீ இல்லைன்னா நான். ப்ச்….” என்று சொல்லி முடித்தவன் பின்னால் சாய்ந்து கண்களை கை கொண்டு மறைத்தான்.
பார்த்திவ் சொல்வதெல்லாமே ஸ்ருதிக்கு புரியத்தான் செய்தது. ஆனாலும் அவளின் பிடிவாதம் அசைக்கவிடவில்லை.
மெல்ல தன் வயிற்றை தடவியவள் பார்த்திவ்வை பார்த்து நகர்ந்து அவனின் தோளில் சாய்ந்துகொள்ள,
“இந்த ஜென்மத்துல என் ஞாபகம் அவங்களுக்கு இருந்துட்டே இருக்கனும். அது இன்னைக்கு நேத்துக்கான பிடிவாதம் இல்லை. நான் இந்த உலகத்துக்கு வந்ததுக்கான ஆதாரம் அவங்க. அப்படி ஒன்னு நடக்கவே இல்லைன்ற மாதிரி இருந்திட கூடாதுல. அதுக்கு என்னை பெத்துக்காமலே இருந்திருக்கனும்…”
“நான் திருப்பி கேட்டுட்டிருக்கேன். எத்தனைபேர் இதுவும் முடியாம இருப்பாங்க? அவங்க வாழ்க்கைல நான் இடைஞ்சலா போக நினைக்கவே இல்லை. ஆனா இப்படி குழந்தையை விட்டுட்டோமேன்னு அவங்க கொஞ்சமும் வருத்தப்படலையே?…”
“நான் என்ன பண்ணேன்? எதுவுமே பண்ணாம எனக்கு எதுக்கு காலத்துக்கும் இந்த தண்டனை? ஸ்கூல்ல, காலேஜ்ல, ஏன் நம்ம கல்யாணம் வரைக்கும் கூட இவளுக்கு யார் இருக்கா? யார் கேட்பா இப்படித்தான் வரும்….”
“ஸ்கூல்ல பேரன்ட்ஸ் மீட்டிங் ஒன்னு இருக்கும். வந்ததே இல்லை அவங்க. மேம் கூட இன்னொருத்தர்ட்ட சொல்லி கேட்டிருக்கேன். ஸ்ருதி தப்பு பண்ணினா கூட கூப்பிட்டு சொல்லி அவளை கண்டிக்க யார் இருக்கான்னு. ஏன் அவங்க இருக்காங்க தானே? தனி தனியா போனாலும் அவங்களோட பொண்ணில்லைன்னு ஆகிடுமா?…”
“அதான், அந்த கோவம் தான். அது ஆறாம இப்பவும் ஒரு வடுவா…” என்றவள் கண்ணீரை வேகமாய் துடைத்தாள்.
“இப்ப பேபி அசையும் போதெல்லாம் எனக்கு எங்கம்மா ஞாபகம் வருது. அழுகையும் கூட வருது….” என்றவள்,
“நிஜமா, ப்ராமிஸ். நான் கேட்டுட்டு நானே ப்ளாக் பண்ணிடறேன். நிம்மதியா இருப்பேன். எந்த தவிப்பும், ஏக்கமும் இல்லாம இருப்பேன்…” என்று சொல்ல தலையசைத்தவன் அவளின் தாய் எண்ணை எடுத்து தந்தான்.
“அம்மாவுக்கு பேச நான் அலர்ட் மெசேஜ் போடனும் தெரியுமா?…” என வலியுடன் சிரித்தவள் ‘அழைக்க போகிறேன்’ என்னும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு ராகினி பார்த்துவிட்டதை கண்டதும் அழைப்பு விடுத்தாள்.
ஸ்ருதியின் தோளை சுற்றி கையிட்டவன் இன்னும் அணைவாய் அரவணைத்து அமர்ந்தான் பார்த்திவ்.
“என்ன ஸ்ருதி இந்த நேரத்துல கூப்பிட்டிருக்க?…” என்றார் அவர் வேகமாக மலையாளத்தில்.
‘இவங்கலாம் என்ன மனித ஜென்மங்கள்?’ என்று தான் தோன்றியது பார்த்திவ்விற்கு அதனை கேட்டதுமே.
இத்தனை நாட்கள் கழித்து அழைக்கும் பெண்ணிடம் தாய் கேட்கும் கேள்வியா இது என வெறுத்து பார்த்தான்.
“உங்களை மாதிரி மிட்நைட்ல கூப்பிடலையே? கொஞ்சம் பேசனும். பேசிட்டு வச்சிடறேன்…” என்றவள் தொண்டையின் கரகரப்பை கூட அவர் உணர்ந்தாரா என தெரியவில்லை.
“என்ன ஸ்ருதி, எதுவும் ப்ராப்ளமா?உன் லைப் சேஃப் தானே?…” என கேட்க,
“ம்மா…” என்றாள் ஸ்ருதி அவரை.
நா தழுதழுத்து கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது மகளின் கண்ணில். அங்கே ராகினியுமே ஸ்தம்பித்து போனார் அந்த அழைப்பில்.
எப்போது தன்னை மகள் இப்படி அழைத்தாள் என்ற நினைவு கூட இல்லை அவருக்கு.
அவள் அழைப்பதையே நிறுத்தியிருக்க சிறுவயதில் அதனை பெரிதாய் கவனிக்கும் சூழ்நிலை இல்லை. தன் புது குடும்பம் என்று கவனம் சென்றுவிட்டது.
கவனித்து கேட்கும் வயதை ஸ்ருதி தாண்டியிருக்க இத்தனை வருடங்கள் கேட்காமல் இனி என்ன கேட்டு என்று விட்டுவிட்டார்.
இப்போது சுருக்கென்றது மகளின் இந்த அழைப்பு. பேச்சற்று போனவரை மீண்டும் அழைத்தாள் ஸ்ருதி.
“ம்மா, என்னை நீங்க சுமந்தப்போ உங்களுக்கு எப்படி இருந்தது? சந்தோஷமா இருந்தீங்களா? நான் இருக்கேன்னு தெரிஞ்சப்போ என்ன நினைச்சீங்க?…” என கேட்டாள் அவள்.
“ஸ்ருதி…” என்றவருக்கு பதில் சொல்ல முடியாமல் குரல் நடுங்கியது.
“என் கூட பேசுவீங்களா நீங்க அப்போ? எனக்கு கதை சொல்லுவீங்களா? என்கிட்ட நான் எப்படி இருக்கனும்ன்னு சொல்லியிருக்கீங்களா?…” என வரிசையாக கேட்க,
“ஸ்ருதி…” என்று அவர் குரலே அடங்கிவிட்டது.
“என்னை என்ன படிக்க வைக்கனும்னு ஏதாவது யோசனை செஞ்சீங்களா? உங்களுக்கு என்னை இப்படி வளர்க்கனும்ன்னு ஆசை ஏதாவது இருந்ததா? ம்மா…” என அழைக்க அங்கே ராகினியின் மனது மகளின் கேள்வியில் எரிந்தது.
இந்த கேள்விகள் எதற்கும் அவரிடம் பதில் இல்லையே? ஸ்ருதியை சுமந்ததில் இருந்தே கணவன் மனைவி இருவருக்கிடையில் ஈகோ.
தான் என்னும் எண்ணம் பிடித்து ஆட்ட அங்கே ஆரம்பித்ததில் பிள்ளையை எங்கே பார்த்தானர் இருவருமே? அதன் வளர்ச்சியை எங்கே ரசிக்க, உணர முடிந்தது?
இப்போது ஏன் எதற்கு கேட்கிறாள் என்று எந்த யோசனையும் இல்லாமல் அவள் தொடர்ந்து கேட்பதிலேயே மரித்துக்கொண்டிருந்தார்.
“இல்லையா? எதுவுமே யோசிக்கலையா?…” என்ற ஏக்கமாக கேள்வியில் பார்த்திவ் கண்களை மூடிக்கொண்டான் தாளமுடியாமல்.
“நான் உங்களை மாதிரி ஒரு அம்மாவா இருக்கமாட்டேன் என் குழந்தைக்கு. கண்டிப்பா இருக்கமாட்டேன்…” என்று அவள் சொல்லியதில் ராகினிக்கு விளங்கிவிட,
“ஸ்ருதி…” என்றவர் வாழ்த்தும் முன்,
“எதுவும் பேச வேண்டாம். நான் கேட்க நினைச்ச கேள்விக்கு உங்ககிட்ட எந்த பதிலும் இல்லை. அப்போ எனக்கும் வேற எதுவும் தேவை இல்லை. உங்க நம்பரை நான் ப்ளாக் பண்ண போறேன்…” என்று சொல்லி,
“நான் உங்க வயித்துல இருந்த மாதிரி தானே உங்களோட இப்ப இருக்கற அந்த ரெண்டு பொண்ணுங்களும் இருந்திருப்பாங்க? அதே ரத்தம், அதே சதை, அதே உயிரோட, உணர்வோட. அம்மான்னா அவங்க குழந்தைங்க எல்லாருக்கும் ஒரே மாதிரி பாசம் தானே காமிக்கனும்? ஆனா நான் மட்டும் எப்படி உங்களுக்கு? ம்ஹூம். நான் இனிமே உங்களுக்கு கால் பண்ண மாட்டேன். நிம்மதியா இருங்க…”
பேசவேண்டிய மொத்தத்தையும் பேசி முடித்தவள் அவரின் எண்ணை தன் கைபேசியில் இருந்து தூக்கி வீசினாள்.