“இதுக்கு தான் எமோஷனலாகாதன்னு சொன்னேன். கேட்டியா நீ?…” என தண்ணீரை பருக வைத்து அழைத்துக்கொண்டு கீழே வந்துவிட்டான்.
ஸ்ருதியின் முகமோ நிர்மலமாகி இருந்தது. நிம்மதியான பாவனை. பெரிய விடுதலை உணர்வை அவள் முகம் வெளிப்படுத்த,
“நல்லா தூங்கி எழுந்தியா ஸ்ருதி? முகமே இப்ப ப்ரெஷா இருக்கு பார்…” என்றார்.
“அப்படியா தெரியுது?…” என பார்த்திவ்விடம் கேட்க,
“ஹ்ம்ம் ரொம்பவே…” என கண் சிமிட்டினான் பார்த்திவ்.
“ம்மா, நாங்க கிளம்பறோம். ஈவ்னிங் நானே கூட்டிட்டு வரேன். இன்னைக்கு ஈவ்னிங் மாமல்லபுரம் போறோம். ஸ்ருதி’ஸ் ஸ்பெஷல். இந்த வாலு தான் நமக்கு டின்னர் ட்ரீட் தர போறா…” என சிரித்துக்கொண்டே பார்த்திவ் சொல்ல,
“ட்ரீட்டா? எதுக்கு?…” ஸ்ருதி கேட்க,
“அதானே? என்ன என்ன விசேஷம்?…” என்று மஞ்சுளாவும் கேட்க,
“எங்க சாப்பிடறோம்?…” என்று வந்தார் அறிவழகன்.
“பார்த்தியா இவங்களை? என்ன ட்ரீட்ன்னு கேட்டா சாப்பாட்டை பத்தி பேசறார்…” மஞ்சுளா சிரிக்க,
“சோறு அதானே எல்லாம்…” என ஸ்ருதியை போலவே சொல்லி பார்த்திவ் சிரிக்க,
“அப்கோர்ஸ்…” என்றாள் ஸ்ருதியும்.
“எதுக்கு ட்ரீட்ன்னு இன்னும் சொல்லவே இல்லையே?…” என மஞ்சுளா மீண்டும் கேட்க,
“இன்னைக்கு ட்ரீட் தான். ஆனா மாஸ்டர் மட்டும் விரதம்….” ஸ்ருதி பல்லை கடிக்க,
“எனக்கும் சேர்த்து மிஸஸ் பார்த்திவ் சாப்பிடுவாங்க. அது போதும்…” என அசராமல் சொல்லியவன் ஸ்ருதியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
“ஷார்ப்பா ஆறு மணிக்கு இங்கிருந்து கிளம்பிருவோம்….” என சொல்லியே சென்றான்.
ஸ்டூடியோ சென்று சேரும் வரை சுபாஷிடம் பேசிக்கொண்டிருந்தான் பார்த்திவ். ஸ்ருதி சுபாஷினியிடம் குருஞ்செய்தியில் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருக்க,
“அடிபொலி மோளே. நீ சண்டை போட்டிருந்தா கூட அந்தம்மாவுக்கு உரைச்சிருக்காது. அதே மாதிரி பார்த்திவ் ஸார் சொல்றது சரி. அவங்க நம்பரை ப்ளாக் பண்ணினது. இந்த உறவு உன்னோடவே முடிஞ்சிடட்டும். பிள்ளைங்களுக்கு அந்த நிழல் கூட வேண்டாம். அவங்களுக்குன்னு ஒரு வயசு வரும். சொல்லிக்கலாம்….” என்றாள் சுபஷ்வினி.
பேசி முடித்து ஸ்டூடியோ வந்து சேரவும் பார்த்திவ் ஸ்ருதியுடன் அறைக்கு வந்து சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பினான்.
கிளம்பும் முன் தயாரிப்பாளர் ஒருவரும், இயக்குனரும் பார்த்திவ்வை காண அங்கேயே வருவதாக அழைப்பு வரவும் பேசிவிட்டு வைத்தவன்,
“ஆல்பம் ஸாங் பன்றதை பத்தி பேச வராங்க ஸ்ருதி. ஆல்மோஸ்ட் கன்பார்ம் தான். அடுத்து அந்த ப்ராஜெக்ட்டை கம்ப்ளீட் பண்ணனும்…” என சொல்லிக்கொண்டிருக்க அதன் பற்றிய பேச்சுக்கள் தொடர பார்த்திவ் முகத்தில் சில யோசனை கோடுகள்.
“ஸ்ருதி நீ ஏன் இந்த ப்ராஜெக்ட்ல எனக்கு அஸிஸ்ட் பண்ண கூடாது?…” என சாதாரணமாக கேட்டுவிட,
“எண்ட அம்மே…” என நெஞ்சில் கை வைத்துவிட்டாள் ஸ்ருதி.
“ஒழுங்கா சொல்றதை கேளு. எப்ப நீ ம்யூஸிக் பண்ண போற? சும்மா பாடிட்டே இருந்தா போதுமா? எப்போ ம்யூஸிக் டைரக்டர் மிஸஸ்.ஸ்ருதகீர்த்தி பார்த்திவ் கிருஷ்ணான்னு நான் டைட்டில் கார்ட்ல பார்க்க?…” என்றதும் தலை சாய்த்து அவள் புன்னகைத்தாள்.
“சீக்கிரமே தி பெஸ்ட் ஹஸ்பண்ட் ஆஃப் தி வேர்ல்ட் அப்படின்னு ஒரு டைட்டில் குடுத்து உங்களுக்கு சிலை வச்சிடறேன் நான். அதுவும் நான் பர்ஸ்ட் ம்யூஸிக் டைரக்ட் பண்ண போற மூவில வர அமௌன்ட் வச்சு…” என்று கண் சிமிட்ட,
“இது அப்படியே நடக்கட்டும். புருஷனுக்கு சிலை வச்ச பொண்டாட்டின்னு உன்னையும் ஊர் புகழட்டும்…” என்றவன் எழுந்துகொண்டான்.
“கொஞ்ச நேரம் வேலையை பாரு. டயர்டா இருந்தா போய் சோபால சாய்ஞ்சுக்கோ. என்னடா…” என்று சொல்லி அவளின் தலையில் கை வைத்து உச்சியில் முத்தமிட்டான் பார்த்திவ்.
சொல்லியபடியே அன்று குடும்பமாய் சுபஷ்வினியையும் அழைத்துக்கொண்டு மாமல்லபுரம் சென்றுவிட்டு வந்தனர்.
ஏழாம் மாதம் வளைகாப்பு வீட்டில் வைத்தே சொந்தங்களுடன் சிறப்பாய் நடந்தேற சுதந்திரத்தின் வீட்டிற்கு தான் சென்றாள் ஸ்ருதி.
“இன்னைக்கு ஒரு நாள் மட்டும். நாளைக்கு வந்து அழைச்சுப்பேன்…” என சொல்லி தான் அனுப்பினான் பார்த்திவ்.
சுதந்திரத்திற்கு அத்தனை சந்தோஷம், தன்னை எந்த ஸ்தானத்தில் வைத்திருக்கின்றனர் என்று.
குழந்தை பிறக்கும் வரை ஒவ்வொன்றையும் ஆழ்ந்து அனுபவித்து உயிரில் நிறைத்துக்கொண்டிருந்தாள் ஸ்ருதி.
அன்று ராகினியிடம் பேசியதோடு சரி. இப்போது வரை ஸ்ருதிக்கு மன அழுத்தங்கள் எதுவும் அவளை அண்டவில்லை.
“என் குழந்தைக்கு நிறைய ஸ்வீட் மெமொரீஸ் நான் சேர்த்து வச்சுக்க போறேன். ஒவ்வொரு மாசமும் அவளோட வளர்ச்சி எப்படி இருந்ததுன்னு என் பேபி பிறந்ததும் அவளுக்கு நான் சொல்லுவேன்…” என்றாள் ஸ்ருதி.
மருத்துவரிடம் அவளின் அதீத கவனிப்பும், சிரத்தையும் பற்றி பார்த்திவ் தனியே ஆலோசிக்க,
“அவங்களோட வார்த்தைகள் தான் இதுவரைக்கும் பூட்டி வச்சிருந்த இறுக்கங்களை குறைக்கும். அவங்களுக்கு இல்லாத ஒவ்வொன்னையும் குழந்தைக்கு தரனும்ன்னு பிரயத்தனப்படறாங்க. அது அவங்க வலிக்கான மருந்து மட்டுமில்ல, அது மூலமா இன்னும் அதிகப்படியான சந்தோஷம். பயப்பட வேண்டாம்…” என்றார் மருத்துவர்.
“குழந்தை பிறந்துட்டா இது இன்னும் நார்மலாகிரும். ஆனா நீங்க பேஷன்ட் மாதிரியோ, அவங்க பாதிக்கப்பட்டவங்க மாதிரியோ எப்பவும் பேசிட, பார்த்திட கூட வேண்டாம். காலம் தானாவே எல்லாத்தையும் மாத்தும். இப்பவும் ஸ்ருதி ஆல்ரைட் தான். ரொம்ப ஸ்ட்ராங்…” என்றவர்,
“இந்த மாதிரி சூழ்நிலையில வளர்ற குழந்தைங்க ஒன்னு ரொம்ப மனஅழுத்தம் பாதிக்கப்பட்டு வெளிப்படையாவே தெரியும்படி இருப்பாங்க. இல்லையா அவங்களுக்குள்ளையே சுருண்டுப்பாங்க. அதுவும் இல்லைன்னா ரொம்ப அரகன்ட்டா பிஹேவ் பண்ணுவாங்க. காட் இஸ் கிரேட்….” என்றார் மருத்துவர்.
அதன் பின்னரே பார்த்திவ் நிம்மதியானான். வீட்டிலும் இதனை பகிர்ந்திருந்தான்.
பிரசவ வலி எடுத்து மருத்துவமனையில் அனுமதித்திருக்க வலி ஒவ்வொன்றிலும் அலறி துடித்தாள் ஸ்ருதி.
“இவ்வளோ வலிக்குமா?…” என மருத்துவரிடமும் அவள் கேட்க,
“இந்த ஒரு பாப்பா போதும். என்னடாம்மா?…” என பார்த்திவ் கலங்கிய விழிகளுடன் கேட்டு புன்னகைத்தான்.
“வலின்னா இன்னைக்கு மட்டும் தானே? பெத்துக்கலாம். உங்களுக்கு என்ன?…” என்று சொல்லி வலியை தாங்கினாள் அவள்.
சுபஷ்வினி தான் துடிதுடித்து போய்விட்டாள். தன் அக்காவின் பிரசவத்தில் கூட உடன் இருக்கவில்லை. செல்ல முடியவில்லை.
இங்கே ஸ்ருதி அலற அலற அவளின் உயிர் போய் உயிர் வந்தது. ‘மோளே’ என கையை பிடித்தபடி அவள் அழ,
“ம்மா…” என்ற ஸ்ருதி கத்தல் பார்த்திவ்வின் உயிர் வரை குத்தியது.
“கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…” என்றே அவனின் பொறுமையை சோதித்தனர்.
சுதந்திரம் வீட்டில் இருந்தும், சுபாஷ் வீட்டில் இருந்து வந்திருக்க சுபஷ்வினியின் தாயும் அங்கு தான் வந்திருந்தார் முதல் நாளே.
பிரசவ நேரம். தாயில்லை என்ற ஏக்கம் பிடித்துவிட கூடாது என தானே கிளம்பி வந்திருக்க குறிக்கப்பட்ட நாளுக்கு முன்னரே வலி கண்டுவிட்டது.
மேலும் ஒருமணி நேரம் அத்தனைபேரையும் வாட்டி எடுத்துவிட்டு ஸ்ருதியின் உயிரையும், பார்த்திவ்வின் உணர்வையும் உருவிக்கொண்டு அவ்வுலகில் ஜனித்தாள் மீண்டும் ஒரு ஸ்ருதகீர்த்தி.
“கீர்த்திடா…” என்றான் பார்த்திவ் மகளை கையில் வாங்கிய நொடி உணர்வுக்கடலாய்.
“பேரே வச்சாச்சா அதுக்குள்ள?…” என சுபஷ்வினியின் தாய் ராதிகா சிரிப்போடு கேட்க,
“ஹ்ம்ம், எப்பவோ. ஸ்ருதகீர்த்தி. இவள் எங்கள் மகள்….” என பெருமிதமாய் மகளை உச்சி முகர்ந்தான் அவளின் தாய்க்கும் துணையிருக்கும் தகப்பன்சாமி.
யாரும் பார்த்திவ்வின் முடிவில் குறுக்கிடவில்லை. தாயின் பெயரே மகளுக்கா என்ற எந்த கேள்வியும் எழவில்லை.
இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அதிலும் ஸ்ருதியை பற்றி தெரிந்தவர்களுக்கு இந்த ஸ்ருதகீர்த்தி தாய்க்கான மொத்த சந்தோஷத்தையும் தருவிக்க வந்தவளாகவே தோன்றினாள்.
மயக்கம் தெளிந்த ஸ்ருதியின் விழிகள் மலரும் முன்னரே அத்தனைபேரும் அவளை காண வந்துவிட்டனர்.
“கீர்த்தி…” என்றவள் மகளை பார்க்க கை கால்கள் முளைத்த குட்டி ஸ்ருதி தான்.
அவ்வளவு கேசம் அப்போதே. அவளை போலவே பெரிய கண்கள். இப்படி ஒவ்வொன்றும் தாயை உரித்து வைத்திருக்க தொட்டு தொட்டு பார்த்தவளுக்கு பேச்சே எழவில்லை.
“அஷ்…” என்றவள் தொண்டை அடைக்க புன்னகைத்தாள் கண்ணீருடன்.