“மோளேக்கு குட்டி மோளே. தங்கக்கட்டிடா உன் பொண்ணு. அவ்வளோ தான். வலி எல்லாம் போயிருச்சு. போச்சு தானே?…” என்று கேட்டவள் அதுவரை அடக்கிய கண்ணீரை உகுக்க,
“அஷ் வா வா…” என அழைத்து அவளின் நெஞ்சில் சாய்ந்துகொள்ள,
“இனி உன் பொண்ணு உன்னை வளர்ப்பா பாரு. உன்னோட எல்லா சந்தோஷத்தையும் அவ அப்பாவுக்கு இணையா உனக்கு தருவா. உன்னோட ஹஸ்பன்ட் சொன்ன மாதிரி நீ ப்ரீஷியஸ்டா மோளே…” என சில்லாகித்தாள்.
“என்னடா? இன்னும் அமைதியா இருக்க?…” என கேட்க,
பேச முடியாத சந்தோஷத்தில் கையசைத்து தலையாட்டியவள் தன் மறுபக்கம் நின்றிருந்த பார்த்திவ்வை திரும்பி பார்த்தாள்.
“ஓகே, நாங்க வெளில வெய்ட் பன்றோம்…” என சொல்லி அனைவரும் கிளம்ப,
“கீர்த்தியை மடில வச்சுக்கனும்…” என்றாள் ஸ்ருதி.
“இப்ப நீ ரொம்ப ட்ரெய்ன் பண்ண கூடாதுடா. தூக்கிக்கலாம். உன் கைக்குள்ள தான குட்டி இருக்கா…” என்று சொல்ல கையை காலை ஆட்டியபடி கண்களை சிமிட்டி விழித்தாள் குழந்தை கீர்த்தி.
இருவரின் கையையும் சேர்த்து பிடிக்க முயன்றபடி குழந்தை இருவரின் நடுவில் அசைந்தாடிக்கொண்டிருந்தது.
—————————————–
இந்தியாவின் ஆஸ்கார் என்றழைக்கப்படும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அமர்ந்திருந்தனர் பார்த்திவ்வும், ஸ்ருதியும்.
ஒவ்வோர் ஆண்டும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழுவாணயம் தேர்ந்தெடுத்த அந்த வருடத்திற்கான சிறந்த இசைக்கும், பின்னணி இசைக்கும், சிறந்த பாடகிக்குமான விருதுக்குரியவர்களாக பார்த்திவ் கிருஷ்ணாவும், ஸ்ருதியும் தேர்வாகியிருந்தனர்.
பெருமைக்குரிய அந்த தருணத்தை காண இருவருமே இருவித மனநிலையில் இருந்தார்கள்.
மனங்கள் இணையுடன் உறவாடியபடி இருக்க இருவருக்கிடையில் உரையாடல்கள் இடையிடாமல் வேடிக்கை பார்ப்பதில் நின்றுவிட்டது.
அவர்களின் விழிகள் பூரிப்பையும், கர்வத்தையும், பெருமிதத்தையும் காட்ட பரஸ்பரம் புன்னகையாலே வெளிப்படுத்தி கொண்டிருந்தனர்.
அடுத்த விருதுக்காக ஸ்ருதி அழைக்கப்பட கை தட்டலுடன் எழுந்து நின்றான் பார்த்திவ்.
அவனின் கனவு இதோ கண் முன் நனவாகிக்கொண்டிருந்தது. எந்த ஒரு நாள் அவளின் மகள் ஜனனம் நிச்சயிக்கப்பட்டதோ அன்று ஸ்ருதி பாடிய பாடல் தேசிய விருதை பெற்றிருந்தது.
அவனின் உழைப்பு அங்கீகாரம் பெற்றுவிட்டதன் கர்வம். தன் மாணவியாய், மனைவியாய், வாழ்வின் அனைத்துமாய் அவனுள் நிறைந்து ஸ்வரம் மீட்பவளின் உயரிய ஒளிர்தலை கண்கொண்டு ரசித்தான் பார்த்திவ்.
இதோ அன்றொருநாள் முதல் முறை விருதுபெற்று அவனிடம் ஓடிவந்த அதே ஸ்ருதி. இப்போதும் அவனிடம் தான் வந்து விருதை நீட்டினாள்.
அன்று முதல் என்னும் ஆர்ப்பரிப்பு இருக்க, இன்றோ அமைதியான ஆழ்கடலை போன்ற புன்னகை மட்டுமே.
அதில் அவனுக்கான அவளின் ஆழமான ஆழ்மன நேசங்கள் குறுங்கடலாய் பொக்கிஷங்களை அடக்கி வைத்திருந்ததே.
பார்த்திவ்வும் தன்னுடைய விருதை பெற்றுக்கொண்டு வெளியே வந்திருக்க இந்த நிகழ்வை எல்லாம் நேரலையில் பார்த்தபடி வீட்டில் அரை பாதியாய் சரிந்திருந்தார் சாரங்கபாணி.
பார்த்திவ்வின் விலகலுக்கு பின் இரண்டு படங்கள் இயக்கி இரண்டுமே படு தோல்வி. அடுத்ததை சிறப்பாக செய்ய காத்திருந்தார்.
அன்று பார்த்திவ் சொல்லிய வார்த்தைகள். சிவசங்கரி சொல்லிய சொல் எல்லாம் பலித்திருந்தது.
மனைவியின் கவனிப்பும், ஆறுதலும் மட்டுமே அவரை பிடித்து வைத்திருக்கிறது. இபொழுதே மகளை பற்றி நிறைய தகாத விஷயங்கள் காதில் நேரடியாகவே விழ அவமானத்தில் குறுகி போனார்.
இப்போது கூட மகள் எங்கே என தெரியவில்லை. இத்தனைவருடங்கள் நல்லவிதமாய் இருந்து என்ன பயன்?
இன்னொரு பெண்ணிற்கு களங்கம் கற்பிக்க நினைத்ததோடு அதனை உணராமல் தான் செய்த விஷயங்கள் எல்லாம் அவரை திருப்பி தீயாய் சுட்டது.
ஸ்ருதியின் முகத்தையே அவர் அந்த நேரலையில் பார்த்தபடி இருந்தார். என்ன இருக்கிறது இந்த பெண்ணிடம்?
ஆனால் எல்லாம் அவள் கேளாமலே அவளிடம் குடிகொண்டிருக்கிறதே என்பதை மறுக்க முடியவில்லை அவரால்.
டெல்லியிலிருந்து குழந்தையுடன் விமானத்தில் சென்னை வந்திறங்கியவர்கள் வீட்டிற்கு சென்று விருதை பெற்றோருடன் பகிர்ந்து, சுபஷ்வினிக்கு காண்பித்து என்று முடித்து அடுத்து நேராக சென்றது மகளுக்கான தடுப்பூசி போடுவதற்கு மருத்துவமனைக்கு.
ஸ்ருதி சொல்லியதை போல மகளின் எந்த ஒரு நிகழ்விலும் பார்த்திவ் இல்லை என்பதே இல்லை.
எல்லாம் அவனை கொண்டே, அவனை வைத்தே ஸ்ருதி சேர்ந்து வளர்த்தாள் மகளை.
மருத்துவர் கூட சிரித்துவிட்டார் இதற்கும் நீங்களே வரவேண்டுமா என்று? அவர் பார்த்தவரை அந்த வட்டத்தில் வீட்டிற்கே சென்று போட்டுவிட்டு வருவது தான் வழக்கம்.
ஆனால் ஸ்ருதி எல்லாவற்றிலும் வேறாக இருந்தாள். அதுவே அவரை ஆச்சர்யப்பட வைத்ததன்றால், பார்த்திவ்வின் அனுசரணையும், அவன் மனைவி, மகளை தாங்கும் பாங்கும் அதிசயிக்கவும், ரசிக்கவும் வைத்தது.
ஊசி போட்டுவிட்டு குடும்பமாய் அங்கிருந்தே மாமல்லபுரத்தில் உள்ள தங்களுடைய வீட்டிற்கு புறப்பட்டுவிட்டான் பார்த்திவ்.
கடற்கரையை ஒட்டிய அந்த அழகிய கூட்டிற்குள் மூவரின் வாழ்க்கையும் பூஞ்சோலை.
நள்ளிரவு வரை சிணுங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு லேசாக காய்ச்சல் கண்டதோடு, ஊசி போட்ட இடத்தில் வீக்கமும் இருந்தது.
சிறிய டவலில் ஐஸ் வைத்து சுற்றி ஒத்தடம் கொடுத்தான் பார்த்திவ். ஸ்ருதி மகளுக்கு கதை சொல்லிக்கொண்டிருக்க மகள் லேசாய் சிணுங்கவும், பின் கதை கேட்கவுமென இருவரின் நேரத்தையும் வாரிக்கொண்டாள்.
“இன்னும் கொஞ்சம் வைங்க. வீக்கம் குறையுது பாருங்க. பீவர் கூட குறைஞ்சிருச்சு…” என்று சொல்லியவள்,
“என்னடாம்மா, தூங்கலையா?…” என்ற கேள்வியில் ‘ம்மா’ என ஒரு விரலை வாய்க்குள் வைத்தபடி பிள்ளை கொட்ட கொட்ட விழித்திருந்தாள்.