“எனக்கும் இந்த இடத்துக்குமான கனெக்ட்டிங் இப்பவரை என்னன்னே தெரியலை அஷ். ஆனா இங்க வந்தா அப்படியே மைன்ட் எவ்வளோ அமைதியாகிருது தெரியுமா?…” என்பவள் முகத்தில் தென்படும் உணர்வை பிரித்தறிய முடியாது.
மாமல்லபுரம், அதனை ஒட்டிய கடற்கரை அங்கே ஸ்ருதியின் சந்தோஷம், நிம்மதி இவை எல்லாம் சுபஷ்வினிக்கு உள்ளுக்குள் ஒருவித கவலையை உண்டாக்கும்.
எங்கே ஸ்ருதி இப்படியே தனித்து, தனியாகவே இருந்துவிடுவாளோ என்ற பயம் அவளுக்கு எப்போதும் உண்டு.
இன்றுமே அந்த அச்சம் தான். அந்த அச்சம் எழும் நேரமெல்லாம் ஸ்ருதியின் பெற்றோரை எண்ணி அத்தனை கோபமும் எழும்.
ஸ்ருதியின் தாய் இரவே பேசிவிட்டது தெரியும் தான். ஆனால் இன்னும் அவளின் தந்தை அழைக்கவே இல்லை.
கோபமான கோபம். இவர்கள் இப்படி இருந்தால் ஸ்ருதிக்கு வாழும் பிடிப்பு எங்கிருந்து வரும்?
அதனை நினைக்கையில் நரேஷின் நினைவு வர தன்னுடைய மொபைலை எடுத்து பார்த்தாள்.
இருபதுக்கும் மேற்பட்ட அழைப்புகள், குறுஞ்செய்திகள் அவனிடமிருந்து வந்திருந்தது.
“ஸ்ருதி நரேஷ் கால் பண்ணியிருந்தானா?…” என்று கேட்க,
“ஹ்ம்ம், நாம உள்ள இருக்கும் போது வந்தது…” என்றாள் அலையில் இங்குமங்கும் நடந்தபடி.
வாரநாள் என்பதால், அதிலும் முற்பகல் நேரம் என்பதனால் அவ்வளவாக கூட்டமே இன்றி அத்தனை அமைதியாக இருந்தது கடற்கரை.
கோவிலாகட்டும், இப்படி சுற்றுலா இடங்கள் எதுவுமாகட்டும். அத்தனை கூட்டத்தில் செல்ல என்றுமே ஸ்ருதி விரும்பியதில்லை.
“இன்னைக்கு விசேஷமான நாள். கோவிலுக்கு போவோம் வா…” என்று சுபஷ்வினி அழைத்தால் கூட நகரவே மாட்டாள்.
“சாமியை பார்க்கனுமா, மனசுல ஒரு நிம்மதியோட, மத்தவங்க தொந்தரவு இல்லாம, நெரிசல் படாம, ஆற அமர இருந்து பார்க்கனும். அப்பத்தான் நமக்கும் ஒரு திருப்தி. என்னால அவசரமா ஒரு செகென்ட்ல சாமியை பார்த்துட்டு கன்னத்துல போட்டுக்க ஆகாதுப்பா. நீ போ…” என்றுவிடுவாள்.
வெளியிடங்களுக்கு செல்வதானாலும் அதுவே தான். இன்றும் அப்படியே புறப்பட்டு வந்திருந்தனர்.
ஸ்ருதிக்காக சுபஷ்வினியும் அன்று அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லியிருந்தாள்.
நரேஷிடமும் எந்த காரணமும் சொல்லவில்லை என்பதால் அழைத்துவிட்டான் அவனும்.
இப்போதாவது நரேஷ் பற்றி ஸ்ருதியிடம் தெளிவாய் பேசிவிடவேண்டும் என்ற முனைப்புடன்,
“அட்டன் பண்ணுனியா?…” என்றதும் இல்லை என தோளை குலுக்கினாள் ஸ்ருதி.
“இது தப்புடா. முதல்ல கால் பண்ணி பேசு…” என்று சுபஷ்வினி கண்டிப்புடன் சொல்ல,
“ப்ச் அஷ், என் மூடை ஸ்பாயில் பண்ணாத…”
“ஆமாமா, அப்படியே டெய்லி நீ நல்ல மூட் தான்…” என்று முறைக்கவும் ஸ்ருதி அலைகளில் இருந்து நகர்ந்து வந்து சுபஷ்வினி அருகில் அமர்ந்தாள்.
“லைட் கலர் ட்ரெஸ். இப்படி உட்காருவியா நீ?…” என அதற்கும் சுபஷ்வினி அதட்ட,
“உன்னை யார் பேஸ்டல் பிஸ்தா கலர்ல ட்ரெஸ் எடுக்க சொன்னா? வித் ஹாஃப் வைட்ல கான்ட்ராஸ்ட்…” என்றவள்,
“என்னால பீச்ல உட்காராம இருக்க முடியாது. அதோட உன்னோட கிப்ட்டை போடாம இருக்கவும் முடியாது. அட்ஜஸ்ட் பண்ணு. பார்த்துக்கலாம்…” என கண்ணடித்தாள்.
“உன்கிட்ட பேசுவேனா?…” என்று முறைத்த சுபஷ்வினி,
“இப்படியே என்னை ஏமாத்திருவ, முதல்ல நரேஷ்க்கு கால் பண்ணு…” என்று அதிலேயே நின்றாள்.
“அவனே கூப்பிடட்டுமே? இப்ப என்ன அவசரம்? கூப்பிட்டா அட்டன் பன்றேன்…”
“நீ இருக்கியே?…” என்ற பொழுதே நரேஷ் மீண்டும் அழைத்துவிட்டான் ஸ்ருதிக்கு.
“இப்ப எடுத்துத்தானே ஆகனும்… என்று சுபஷ்வினி புன்னகைக்க ஸ்ருதியும் அழைப்பை ஏற்றாள்.
“ஹ…” என்ற பொழுதே நரேஷ் படபடக்க ஆரம்பித்தான்.
“எங்க இருக்க ஸ்ருதி? கால் பண்ணா அட்டன் பண்ண மாட்டியா? எத்தனைதடவை கால் பன்றேன். பதில் சொல்ல கூட முடியாதா?…” என்று பொரிந்தான்.
“அதான் அட்டன் பண்ணிட்டேனே? இப்போ என்ன?…” என ஸ்ருதி அவனின் இந்த அதிகார பேச்சில் பல்லை கடித்தாள்.
“எங்க உன் ப்ரென்ட்? அவ ஒரு யூஸ்லெஸ். தண்டத்துக்கு உன் கூட சுத்தறா. பொறுப்பு கிடையாது ரெண்டுபேருக்கும்…” என சுபஷ்வினியையும் சேர்த்து பேச அதற்கு அவள் பதில் தரும் முன்,
“மைண்ட் யூர் வேர்ட்ஸ் நரேஷ். அவளை இன்னொருதடவை பேசின பார்த்துக்கோ. கால் பண்ணின விஷயத்தை சொல்லிட்டு கட் பண்ணின்னா நல்லா இருக்கும். எங்களுக்கு நிறைய வேலை இருக்கு…” என கத்திரிப்பதை போல சொல்ல சுபஷ்வினி சத்தமின்றி சிரித்தாள்.
“ஓஹ், நீ அட்டன் பண்ணாததுல கொஞ்சம் டென்ஷன் ஆகிடுச்சு. எனிவே ஹேப்பி பர்த்டே ஸ்ருதி…” என்றான் ஸ்ருதியின் குரல் உயர்ந்ததும் அடங்கியவனாக.
“என்கிட்ட சொல்லவே இல்லையே நரேஷ். அன்ட் இன்னைக்கு ஃபுல்லா நான் பிஸி. வேற எந்த ப்ரோக்ராமும் இல்லை. நாளைக்கு ஈவ்னிங் உன் ப்ளாட்க்கு தானே எல்லாரும் வருவோம். அப்போ பார்த்துப்போம்…” என்று சொல்லி துண்டித்துவிட்டாள் ஸ்ருதி.
சுபஷ்வினியும் தன் காதில் இருந்த ப்ளூடூத்தை கழற்றி ஸ்ருதியிடம் நீட்ட முறைப்புடன் வாங்கினாள் ஸ்ருதி.
“தண்டம், யூஸ்லெஸ்…” என முறைக்க,
“அவன் ஒரு ஆளுன்னு அவன் பேசறதை பெருசு பன்றியா நீ? விடு விடு. நாளைக்கு பார்த்துக்கறேன்…” என்ற சுபஷ்வினி,
“பசிக்குதுடா…” என்றாள்.
“கிளம்புவோமே? இனி உன்னோட ப்ளான். எங்க போகலாம் சொல்லு…” என கேட்டுகொண்டே எழுந்தவள் அங்கிருந்த சிற்பங்கள் விற்பனை இடத்திற்கு சென்றாள்.
சின்ன சின்னதாய் கைக்கு அடக்கமான கலைப்பொருட்களில் ஒன்றை வாங்கிக்கொண்டாள் ஸ்ருதி.
“நான் தான் பே பண்ணுவேன்…” என்று அதற்கான பணத்தை சுபஷ்வினி தந்துவிட்டு,
“ரூம்ல இருக்கற இந்த குட்டி குட்டி திங்ஸ கவுன்ட் பண்ணினாலே போதும், நீ இங்க எத்தனைதடவை வந்திருக்கன்னு சொல்லிடலாம். அவ்வளோ வாங்கி குமிச்சிருக்க…” என்று சொல்லி அங்கிருந்து வெளியேறினாள்.
“இதெல்லாம் சொந்தமா ஒரு வீடு இருந்தா அழகா ஷோகேஸ்ல வைக்கலாம். நீ வணகி வாங்கி ட்ராலிக்குள்ள வைக்கிற…” என்றும் சுபஷ்வினி சொல்லி பெருமூச்சு விட,
“சொந்த வீடு இருந்தா நான் ஏன் இத்தனை குட்டியா வாங்க போறேன்? பெருசா வாங்கிக்கமாட்டேனா? இது என்னோட ஆசைக்கு….” என்றாள் ஸ்ருதி.
“உங்கம்மாப்பா அனுப்பற பணத்துல வீடு வாங்கி இருந்தா இந்நேரம் முக்கால்வாசி லோன் முடிஞ்சிருக்கும் உனக்கு. அதையும் செய்யமாட்டேன்ற…” சலிப்பு தான் சுபஷ்வினியிடம்.
“வீடு வாங்கி? நான் மட்டும் இருக்கறது குடும்பமா?…” என்று சுருதி சிரிக்க,
“அதான் நான் இருக்கேனே? ரெண்டுபேரும் இருப்போம்…” சுபஷ்வினி கண்ணடித்து சிரிக்க,
“எவ்வளோ நாள்? உனக்கு கல்யாணமாகிட்டா நான் தனியா தானே இருக்கனும்?…” என்றவள்,
“ஆனா வாங்குவேன். என்னோட சுயசம்பாத்தியத்துல…” என்ற உறுதி ஸ்ருதியின் குரலில் அபரிமிதமாக இருந்தது.
“இப்பவும் உன்னோட இன்கம் குறைச்சல் இல்லையே ஸ்ருதி. ட்ரூப்ல உனக்கான இன்கம் கணிசமாவே வருது. பேரன்ட்ஸ் அனுப்பற அமௌன்ட் எதுக்கு உனக்கு? அவங்களை மொத்தமா விட்டுடு. எரிச்சலா இருக்கு எனக்கே. இன்னும் உங்கப்பா ஒரு விஷ் கூட அனுப்பலை…” என்று கோபம் பொங்க சுபஷ்வினி கூற,
“விட்டுட்டு? அப்பறம் எதுக்கு என்னை பெத்துக்கிட்டாங்களா? இப்ப நான் வேண்டாம்ன்னு சொன்னா ரொம்ப ஈஸியா என்னை தூக்கி போட்டுட்டு போயிருவாங்க…” என்றவள் கசப்புடன்,
“சொல்ல போனா எங்க நான் அவங்க வாழ்க்கைக்குள்ள வந்திருவேனோன்னு தான் பயத்துல எனக்கான பணத்தை அனுப்பி தூரமா கொண்டுவந்து விட்டிருக்காங்க. இல்லைன்னா கேரளால இல்லாத இடமா? ஏன் என்னை ஊட்டி போர்டிங்ல சேர்க்கனும்?…” என்று கேட்க சுபஷ்வினிக்கு அத்தனை வருத்தங்கள்.