“அதெல்லாம் காரணமா தான் பண்ணுறாங்க. அதான் நானும் வேண்டாம்ன்னு சொல்லலை. இதை கூட செய்யலைன்னா நான் ஒருத்தி இருக்கறதையே மறந்திருவாங்க. நான் என்ன தப்பு பண்ணேன்? இவங்க ஈகோவுக்கு எனக்கு எதுக்கு பனிஷ்மென்ட்?…” என்றவள் விழியோரம் சிறு நீர் தேங்கியது.
கண்ணை மூடிய ஸ்ருதி அதனை உள்ளே இழுத்துக்கொண்டாள். உணர்வுகளை அடக்கும் வல்லமையை இலகுவாய் கொண்டவள் போலும்.
சட்டென்று கண் சிமிட்டி அழகாய் ஒரு புன்னகை அவளிடம் தோன்ற சுபஷ்வினிக்கு தான் அவளின் மன போராட்டத்தின் கனம் தாங்க முடியவில்லை.
“லீவ் இட் அஷ். பெத்ததுக்கு இதையாவது செய்யட்டும் அவங்க. இந்த உலகத்துல அவங்க இல்லாமலும் என்னால வாழமுடியும். ஆனா நான் ஒருத்தி இருக்கேன்ற நினைப்போட தான் அவங்க வாழனும். நான் எதுக்கு தியாகம் செய்யனும் எங்கயும் எப்படியும் இருங்கன்னு. அவ்வளோ பெரிய அப்பாட்டக்கரா நான்?…” என்று சொல்லி ஹெல்மெட்டை எடுத்து அணிந்துகொண்டாள்.
“என்ன அஷ் ஃபீலாகிட்டியா? நரேஷ்க்கு கூப்பிட்டு பேசுறியா?…” என்று சிரிக்க,
“உதை ராஸ்கல்…” என்று அவளின் முதுகில் அடித்து பின்னால் அமர்ந்துகொண்டாள் சுபஷ்வினி.
“நான் ஓட்டட்டுமா?…” என ஸ்ருதியிடம் கேட்க,
“எதுக்கு பின்னாடி உக்கார்ந்து உனக்காக நான் பீல் பண்ணனுமா? இதையெல்லாம் யோசிக்காம மைண்டை டைவர்ட் பண்ணனும் மோளே…” என்று சிரிப்புடன் சொல்லியவள் ஸ்கூட்டியை கிளப்பி தொண்ணூறில் பறந்தாள்.
அந்த வேகத்தில் சுபஷ்வினி கத்தி கூப்பாடு போட ஸ்ருதியின் அட்டகாசமான புன்னகை காற்றின் வேகத்தில் கலந்து மிதமான வேகத்தை அடைந்தது.
இருவரும் மதிய உணவை சுபஷ்வினி சொல்லிய உணவகத்தில் முடித்துக்கொண்டு சென்னையை நோக்கி வந்தனர்.
மாலை ஒருமுறை நரேஷ் அழைக்க பிஸி என மெசேஜ் அனுப்பிவிட்டு ஸ்ருதி அதனை கண்டுகொள்ளவே இல்லை.
“அவன் பாவம், உன் மேல ரொம்ப இன்ட்ரெஸ்ட் காமிக்கிறான். அட்லீஸ்ட் அவன் பேசவாச்சும் ஒரு சான்ஸ் குடு ஸ்ருதி…” என சுபஷ்வினி அவனுக்காக பரிந்து பேச,
“பார்த்துட்டே இரு மோளே, என்னை கரெக்ட் பண்ண வந்து உன்னை பிக்கப் பண்ண போறான்…” ஸ்ருதி கிண்டலடித்தாள்.
“எங்கம்மா என்னை தொடப்பக்கட்டையாலையே சாத்துவாங்க. வேலைக்கு போயிட்டு என்ன வேலை பார்த்து வச்சிருக்கன்னு வண்ணங்களை வாரி இரைப்பாங்க. ஆளை விடு தாயி. நீயாச்சு, அந்த நச்சு நரேஷாச்சு…”
சுபஷ்வினி கையெடுத்து கும்பிட என ஸ்ருதியின் கலாட்டாக்கள் அன்று அவளை ஒருவழியாக்கியது.
அன்று இரவு வரை சுற்றிவிட்டு விடுதி வந்து சேர்ந்திருந்தனர். மறுநாள் மதியத்திற்கு மேல் தான் ஸ்ருதியின் தந்தை ஜெயரூபன் மகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.
பிறந்தநாளை ஞாபகம் வைத்துக்கொள்ளமுடியாத அளவிற்கு வேலையும், குடும்பமும் அவரை நெருக்கியிருந்ததாம்.
மகளிடம் மன்னிப்பை கேட்டவர் அவளுக்கு தாமதமான வாழ்த்தையும் சொல்லிவிட்டு பணம் அனுப்பியதாகவும் அனுப்பி இருந்தார்.
அதனை பார்த்த ஸ்ருதி எந்த பதிலும் அனுப்பவில்லை. அதற்கும் ஒரு குறுஞ்செய்தி.
பார்த்துவிட்டாயா? பணம் வந்துவிட்டதா? என்று. வெறுத்துப்போனது ஸ்ருதிக்கு. அந்த பணத்தை அவர்கள் முகத்தில் விட்டெறியும் ஆவேசம்.
எதற்கும் பதிலில்லை. அடுத்த நாள் வரை அவர் அவ்வப்போது கோபமா என கேட்பதும், ஸாரி என அனுப்புவதுமாக இருக்க மீண்டும் மீண்டும் அவர் அனுப்பும் செய்தியில் அத்தனை கோபம்.
அவர் எதிர்பார்த்த பதிலை அனுப்பிவிட்ட பின்பு தான் அடுத்து எந்த செய்தியும் வரவில்லை.
சுபஷ்வினி கேட்டு அத்தனை கோபத்தில் அவளின் பெற்றோரை திட்டி தீர்த்துவிட்டு தான் ஓய்ந்தாள்.
“அவருக்கு அதையும் போன்ல கூப்பிட்டு சொல்ல முடியாதாமா? என்ன மனுஷன் இவர்?…” என்று ஆடிவிட்டாள்.
அன்று நரேஷ் சொல்லியிருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு அனைவரும் தயாராகி இருந்தனர்.
அந்த நிகழ்ச்சி ஹோட்டல் கார்டனில் வைத்து அழகாய் கவரும் வகையில் ஏற்பாடாகி இருந்தது.
மறுநாள் திருமணம். முதல்நாள் நிச்சயதார்த்தமும் கூடவே வரவேற்பு போலவும் ஏற்பாடு செய்திருக்க அந்த ஹோட்டலின் ஒரு பகுதியில் மேடை அமைப்பு அழகாய் இருந்தது.
“ஸ்ருதி ஸாங்ஸ் லிஸ்ட் இதுல இருக்கு. உன்னோட சோலோ ஸாங் ரெண்டு வரும். டூயட் என்னோட ஒன்னு, சுகந்தன் கூட ரெண்டு, தென்…” என ஒவ்வொருவருக்குமான பகுதியை விவரித்துக்கொண்டு இருந்தான் நரேஷ்.
“நான் பார்த்துக்கறேன் நரேஷ்…” என்று சொல்லிவிட்டாள் ஸ்ருதி.
ஆர்கன்ஸா அனார்கலியில் கழுத்தை ஒட்டிய ஜோக்கரும் அதற்கு பொருத்தமான காதணியும் என நரேஷை தடுமாற வைத்துக்கொண்டிருந்தாள் அவள்.
“நரேஷ் ப்ரோக்ராம்ல கான்சன்ரேட் பண்ணு மேன்…” என்று சுபஷ்வினி அவனை கிண்டலடிக்க,
“இன்னைக்குன்னு இல்லை எப்பவுமே அவனுக்கு ஸ்ருதிக்கு அப்பறம் தான் மத்ததெல்லாம்…” என சுகந்தனும் சேர்ந்து பேச,
“இதை பேசத்தான் ப்ரோக்ராம்ன்னா நரேஷ் வீட்டிலையே பேசியிருக்கவேண்டியது தானே?…” என்ற ஸ்ருதி,
“இதெல்லாம் உன் கண்ணுக்கு தண்டமா, யூஸ்லெஸா தெரியாதுல?…” என்று முறைக்க,
“அது ஏதோ கோபத்துல பேசிட்டேன் ஸ்ருதி. ப்ளீஸ், நான் அன்னைக்கே அஷ்கிட்ட ஸாரி கேட்டுட்டேன்…” என சமாதானம் செய்ய,
“ரொம்ப முக்கியம். பர்ஸ்ட் சாங் யார்?…” என்று கேட்க சுகந்தன் முன் வந்தான்.
“போய் ஸ்டேஜ்ல நில்லு…” என்ற ஸ்ருதி சுபஷ்வினியுடன் கீழே இறங்கி நின்றாள்.
இன்னும் மூன்று பெண்கள் இருக்க கோரஸ் பாடுவதற்கு அவர்கள் மேடையேறினார்கள்.
விசேஷமும் ஆரம்பிக்க, இசை நிகழ்ச்சியும் ஆரம்பமாகியது. அவ்வப்போது கீபோர்டில் என்னவோ சரியில்லாததை போல இருந்தது ஸ்ருதிக்கு.
“இங்க வா நரேஷ்…” என்றவள்,
“கீபோர்டை பார்க்கலையா? சில நேரம் ம்யூஸிக்கோட சிங்க்காக மாட்டிக்கு பாரு…” என்றாள் ஸ்ருதி கண்டனத்துடன்.
“மத்ததை பார்த்துட்டேன். இதை மறந்துட்டேன் ஸ்ருதி. நெக்ஸ்ட் ப்ரோக்ராம்ல இதை சரி பண்ணிடலாம்…” என்று அவன் சொல்லவும்,
“என்னவோ போ…” என்று பேசிக்கொண்டிருக்க அங்கே சட்டென ஒரு பரபரப்பு சூழல்.
“என்னாச்சு?…” என்று பாடலை பாடிக்கொண்டிருந்த சுகந்தனும், சுபஷ்வினியும் நிறுத்திவிட்டு என்னெவென்று பதட்டமாய் பார்த்தனர்.
அந்த கார்டனுக்கும் வேக நடையிட்டு கேஸ்வல் உடையில் வந்துகொண்டிருந்தான் பார்த்திவ் கிருஷ்ணா.
திடீரென்ற அவனின் வருகையால் அத்தனை ஆர்ப்பரிப்பு. கூட்டமெல்லாம் அவனை பார்த்ததும் உற்சாகம் கொள்ள அனைவருக்குமே அழகிய புன்னகையை தந்தவன் நேராக மேடைக்கு சென்றான்.
அவனை பார்த்ததுமே சட்டென ஸ்ருதியின் கண்கள் சுபஷ்வினியை தான் கவனித்தது.
வாயெல்லாம் பல்லாக சுபஷ்வினியின் உடல்மொழியில் கூட ஒருவித சந்தோஷம்.
“பாட்டை மறந்துட்டு பார்க்கறதா பாரு?…” என ஸ்ருதிக்கு அத்தனை சிரிப்பு தோழியின் முகத்தில் டன் டன்னாய் வழிந்த பிரம்மிப்பை கண்டு.
“நரேஷ், வாட் ஹேப்பன்ட்?…” என ஸ்ருதி அழைக்க,
“இதை நானுமே எதிர்பார்க்கலை. அதுவும் பார்த்திவ் கிருஷ்ணாவை பார்க்கறது எல்லாம் நமக்கு அத்தனை ஈஸியா? என்னை கொஞ்சம் கிள்ளேன்…” என்று நரேஷ் ஸ்ருதிக்கு கையை நீட்ட,
“அடி தான் உனக்கு. காசு குடுக்கறது ஒன்னும் அந்த ம்யூஸிக் டைரக்டர் இல்லை. இந்த ஈவன்ட் நடத்தறவங்க. ஒழுங்கா போய் பாட சொல்லு…” என்று அவனை அதட்டியவள் சுபஷ்வினி அருகே மேடைக்கு வந்தாள்.
“ஒழுங்கா பாடுடி மோளே. அதுவும் உன்னோட க்ரஷ் முன்னாடி சொதப்பிடாம. யார் கண்டா உன்னோட இந்த ஸாங் கூட க்ரஷை க்ராஷ் பண்ணும். நல்ல சான்ஸ், மிஸ் பண்ணிடாத. அப்பறம் வருத்தப்படுவ…” என சொல்லிவிட்டு இறங்கிவிட்டாள் ஸ்ருதி.
அங்கே சுபஷ்வினிக்கு நிலைகொள்ளவில்லை. மணமக்கள் அருகிருக்கும் பார்த்திவ்வின் மீதே விழிகள் நின்றுகொண்டது.
“நரேஷ், நல்ல சான்ஸ் ஏன்டா இப்படி இருக்கீங்க? ஒழுங்கா பாட சொல்லுடா…” என்று அவனையும் முன்னே தள்ளினாள்.
மற்றவர்கள் பார்த்திவ்வை அருகில் பார்க்க இதனை ஒரு வாய்ப்பு என்று நினைக்க ஸ்ருதிக்கோ இதிலிருந்து எப்படி தங்கள் ட்ரூப் முன்னே செல்லவேண்டும் என்ற முனைப்பு.
வாய்ப்பை தேடி அலைந்துகொண்டிருப்பவளுக்கு இதனை தவறவிட மனதில்லை.
ஒருவேளை இதிலிருக்கும் எதோ ஒன்று அவனை கவர்ந்துவிட்டால் கூட பார்த்திவ்வின் இசை குழுவில் அவர்களும் ஒரு அங்கம்.
இதனை நிறைய கேள்விப்பட்டிருந்தவளுக்கு உள்ளுக்குள் அத்தனை படபடப்பு. யாராவது முன்னேறி சென்றுவிடமாட்டார்களா என்று.
பார்த்திவ் இறங்கி வந்து முன் வரிசையில் அமர்ந்துகொள்ள மீண்டும் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.
அவ்வப்போது பார்த்திவ் பாடுபவர்களையும் கவனிக்க, உடன் இருப்பவர்களிடம் பேச என்று தான் இருந்தான்.
“மாப்பிள்ளை அப்பா தான் பார்த்திவ் ஸாரோட காலேஜ் பிரபசராம். தற்செயலா இந்த ஹோட்டலுக்கு வந்தவங்க இதை பார்த்துட்டு உள்ள வந்திருக்கார். க்ரேட்ல…” என்றான் நரேஷ் பெருமையாக.
“இதுவும் ஒரு அட்டன்ஷன்க்கா கூட இருக்கலாம். யாருக்கு தெரியும். எதுவோ, நமக்கு இதுல இருந்து ஒரு சான்ஸ் கிடைச்சா போதும்…” என்றாள் ஸ்ருதி.
“உன்னோட ஸாங் இதுக்கடுத்து தானே?…” என நரேஷ் கேட்க,
“ஹ்ம்ம், ஆமா…” என்றவள் ஐபேடில் இருந்த பாடல் வரிகளை முணுமுணுக்க ஆரம்பித்தாள்.
சுபஷ்வினி பாடி முடித்ததும் கைதட்டல்கள் கிடைக்க பர்த்திவ்வும் கை தட்டியபடி எழுந்துகொண்டான்.
“சூப்பர் அஷ்…” என்ற ஸ்ருதி அடுத்து தான் மேடையேற அதற்குள் நரேஷ் கேட்டுக்கொள்ள அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டான் பார்த்திவ்.
பேச நேரமில்லை. வந்த வேகத்தில் அவன் கிளம்ப ஸ்ருதியின் பாடலும் துவங்கியது.
அந்த கார்டனின் கடைசி பகுதிக்கு சென்றவன் அந்த குரலில் ஒரு நொடி திரும்பி ஸ்ருதியை பார்த்துவிட்டு கிளம்பியிருந்தான் பார்த்திவ் கிருஷ்ணா.
இதில் எல்லாம் கவனம் இல்லாத ஸ்ருதி தன் பாடலை முடித்துக்கொண்டு கீழே இறங்கினாள்.
அன்றைய நிகழ்ச்சி நல்லவிதமாகவே நிறைவுபெற்றது. சுபஷ்வினியுடன் கிளம்பியிருந்தாள் ஸ்ருதி.
அதற்கடுத்த வாரம் இன்னொரு பெரிய இடத்தில் இருந்து நிகழ்ச்சிக்கு அவர்களை முன்பதிவு செய்திருக்க அதனை கொண்டாடும் விதமாக நரேஷின் ப்ளாட்டில் அனைவருக்கும் விருந்து தயாரானது.
ஸ்ருதியும் அங்கே செல்ல விளைவு எதிர்பாராத தருணத்தில் பார்த்திவ்வின் அறிமுகம்.