“அப்படி சொல்லுங்க. இது கரெக்ட். இப்ப நீங்க விசாரிச்சா பொண்ணு வீட்டுல என்ன சொல்ல போறீங்க?…” என மஞ்சு கேட்க,
“நான் எதுவும் விசாரிக்கவே இல்லை. பார்த்தி பல்ஸ் பார்க்க தான் விசாரிச்சு முடிவு பண்ணின மாதிரி பேசினேன். டோட்டல் ப்ளாப்…” என்று கட்டை விரலை கீழ் நோக்கி காண்பிக்க மஞ்சுளாவின் முகத்தில் சிரிப்பு.
“எனக்கு இன்னும் ஒரு த்ரீ டேய்ஸ் டைம் வேணும். இந்த ஒரு ஸாங் தான். இந்த மூவியோட மொத்த உயிர்ப்பும் இந்த ஸாங்ல தான் இருக்கு. அதுக்காக தான் சொல்றேன்…” என்றான் பார்த்திவ்.
“உங்க டெடிகேஷன் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும் பார்த்திவ். டேக் யூர் வோன் டைம். நான் மத்த வொர்க் எல்லாம் அதுக்குள்ளே பார்த்திடறேன்…” என்று சொல்ல,
“தேங்க் யூ ஸார்…” என்றான் பார்த்திவ்.
இப்போது சற்று டென்ஷன் குறைந்ததை போலிருக்க பார்த்திவ்வின் மூச்சும் சீரானது.
ஆனாலும் அடிமனதில் என்னவோ ஒரு குரல் ஒலிக்க எங்கே என தேட ஆரம்பித்திருந்தான்.
“குட்நைட் பார்த்திவ்…” என சாரங்கபாணி சொல்ல,
“குட்நைட் ஸார்…” என்று அழைப்பை துண்டித்திருந்தான்.
அவன் தேடும் அந்த குரல், எங்கேயோ கேட்ட ஞாபகம். எங்கே, என்னவென சட்டென ஞாபகத்திற்கு வரவே இல்லை.
இப்போது சமீபமாகவும் எங்கேயோ கேட்டோமே என மூளையை தட்டி யோசிக்க அதுவே அவனை அந்த ஞாபக அடுக்கிற்குள் செல்லவிடவில்லை.
தேட தேட அந்த நினைவு பின்னால் சென்றுகொண்டே இருந்தது. கொஞ்சம் அமைதியாகிவிட்டால் போதும் நிச்சயம் கண்டுகொள்ள முடியும் என நினைத்தவன் கார் சாவியுடன் வெளியே வந்தான்.
அனைவரையும் விரட்டியதில் சுதந்திரம், ட்ரைவர் சுபாஷ் உட்பட அனைவருமே தெறித்து ஓடியிருந்தனர்.
நள்ளிரவாகியிருந்தது. வெளியே மெல்லிய குளிர் காற்று வீச கார் சாவியை விரலில் சுழற்றியபடி காருக்கு சென்றான்.
ஈ.சி.ஆர் ரோட்டில் காரில் மிதமான வேகத்தில் விசிலடித்தபடி தனிமையாய் ஒரு பயணம்.
பௌர்ணமி வெளிச்சத்தில் பக்கவாட்டில் கடற்கரையில் அலைகள் ஆர்ப்பரிக்க காரில் ஏசியை நிறுத்தியவன் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு அந்த உப்புக்காற்றை சுவாசித்தபடி சென்றான்.
தூரத்தில் ஆள் அரவமற்ற அந்த சாலையில் சாலையோர விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்த நிகழ்வில் கண்கள் இடுங்கியது.
இன்னும் கூர்ந்து பார்த்தவன் காரின் வேகத்தை இன்னும் குறைத்து நகர்த்த தூரத்தே தெரிந்த இருவரில் அந்த பெண் அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.
அவன் ஆத்திரத்தில் அந்த ஸ்கூட்டியை கீழே தள்ளி உதைக்க அவனை தள்ளிவிட முயன்றாள் அந்த பெண்.
“ஒஹ் ஷிட்…” என்று வேகமாய் காரை அவர்களருகே செலுத்த அதற்குள் அந்த நெடியவன் தனது பைக்கை கிளப்பி சரிந்துகிடந்த வாகனத்தின் மேல் ஏற்றி அவளை விட்டு சென்றிருந்தான்.
பார்த்திவ்வின் கார் வருவது கூட கவனத்தில் கொள்ளாதவள் தனது ஸ்கூட்டியை தூக்கி நிறுத்த முயல முடியவில்லை.
ஸ்கூட்டியின் அருகிலேயே அவளின் மொபைல் உடைந்து சிதறி இருந்தது. அதனையும் வெறித்துகொண்டிருந்தவளை அவன் குரல் இழுத்தது.
“ஹேய் வாட் ஹேப்பண்ட்? ஆர் யூ ஓகே?…” என்ற பார்த்திவ்வின் குரலில் திரும்பி பார்த்தவள் விழிகள் கண்ணீரில் நனைந்திருந்தது.
“ஹாங்…” என்று மிரட்சியுடன் பார்த்தாள் ஸ்ருதகீர்த்தி.