“நான் நான் பேசறேன் ஸார்…” என்ற நரேஷ் சுகந்தனிடம் உதவி கோர,
“நீயெல்லாம் மனுஷனாடா? உன்னை போய் நல்ல ப்ரெண்ட்ன்னு நினைச்சேனே? அவக்கிட்ட என்னலாம் பேசியிருக்க நீ?…” என்று சுகந்தன் விட்டால் அடித்துவிடுவதை போல பேசினான் நரேஷை.
“என்ன வேணா சொல்லிக்கோ சுகா. ஆனா இப்ப எனக்கு அதுக்கு நேரமில்லை. வீட்டுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிரும். இந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சிட கூடாதுடா. ஊருக்குள்ள குடும்ப மானமே போயிரும்…” என்று நரேஷ் கெஞ்ச,
“இப்பவும் நீ பண்ணினது தப்புன்னு தெரியலை. ஆனா குடும்ப மானம் போயிரும்ன்னு மட்டும் கவலை. இந்த பயம் ஸ்ருதிகிட்ட நீ அப்படி நடந்துக்கறதுக்கு முன்னாடி இருந்திருக்கனும்…” என்று கூறினான் சுகந்தன்.
சுபஷ்வினியும் அவனுக்கு அழைத்துவிட நடந்த விஷயங்களை எல்லாம் எடுத்துரைத்தான் சுகந்தன்.
“நான் திரும்ப கூப்பிடறேன் சுகந்…” என்று வைத்துவிட்டாள் சுபஷ்வினி.
“ப்ளீஸ்டா பேசு அவகிட்ட…” என நரேஷ் கெஞ்ச,
“போய் தொலையறேன்…” என சுகந்தன் ஸ்ருதியிடம் வந்தான்.
“ஸ்ருதி நானும் கேள்விப்பட்டேன். நரேஷ் இப்டி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லை…” என்று சொல்லவும் ஸ்ருதி திரும்பவில்லை.
அவன் பேசிக்கொண்டிருக்கிறான் என்ற ஸ்ரமனை இருந்ததே தவிர அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள்.
“ஓகே இதை நாம பேசிக்கலாம். நான் கண்டிக்கறேன். அவனை மன்னிப்பும் கேட்க சொல்றேன்…” என்ற சுகந்தனை திரும்பி பார்த்தாள் சுருதி.
“மன்னிப்பு கேட்டுட்டா?…” என அவள் கேட்ட கேள்வியில் சுகந்தன் மனம் வருந்தினான்.
“மன்னிப்பு மட்டும் போதாது தான். அத்தனை பெரிய தப்பு பண்ணியிருக்கான். ஆனாலும் ஸ்ருதி கொஞ்சம் யோசியேன்…”
“என்ன யோசிக்கனும் சுகந்?…” என்றவள் கேள்விக்கு,
“அவங்களோடது பெரிய ஃபேமிலி. அவங்களுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும் ஸ்ருதி. ப்ளீஸ், கன்ஸிடர் பண்ணு…” என்ற சுகந்தனை மௌனமாய் ஒரு பார்வை பார்த்தவள் இதழோரம் இகழ்ச்சியாய் சிறு புன்னகை.
“அப்போ எனக்கு ஃபேமிலி இல்லைன்னு சொல்றியா சுகந்? இல்லை ஃபேமிலி இல்லாததால இதை எல்லாம் நான் கண்டுக்காம போயிடனுமா?…” என தீயாய் அவள் எதிர்கேள்வி கேட்க தடுமாறி போனான் சுகந்தன்.
“எஸ், எனக்கு ஃபேமிலின்னு ஒன்னு இல்லை தான். எனக்காக யாரும் வரமாட்டாங்க தான். அப்போ எனக்கு நான் தானே பார்க்கனும்? என்னை நான் தானே கேர் பண்ணிக்கனும். இவனை சும்மா விட்டா என்னால நிம்மதியா இருக்க முடியாது சுகந்…” என்று சொல்லியவள் நிலையை கண்டவன் மனமும் வெதும்பியது.
“நாங்க இல்லையா ஸ்ருதி. உன்னோட ப்ரெண்ட்…” என்ற நிமிடம்,
“அப்படி சொல்லாதடா…” என எழுந்து நின்றுவிட்டாள் ஸ்ருதி.
அந்த வார்த்தை அவள் கண்ணில் நீரை தேக்கிவிட்டது. சுகந்தன் அந்த தோற்றத்தில் விக்கித்து போனான்.
“ப்ரெண்ட்ன்னு சொல்லித்தான்டா என்னை கூப்பிட்டான். என்னை என்ன கேட்டான்னு தெரிஞ்சும். அப்போ நீயும் அவனை மாதிரி தான், இல்ல?…” என்றவள் கீழுதட்டை பற்களால் கடித்துக்கொண்டாள் ஸ்ருதி.
கடித்த வேகத்தில் பற்தடம் அவள் இதழை பதம் பார்த்தது. ரத்தம் லேசாய் கசிய அதை பார்த்த சுகந்தன் தலையில் அடித்துக்கொண்டான்.
“ஸ்ருதி டேய், என்னடா பன்ற? அவன் அப்படி இருந்தா நானும்? என்ன பேசற நீ?…” என்று சுகந்தனுக்கு அவளின் நிலையை கண்டு கண்கள் கலங்கிவிட்டது.
நரேஷும் இறுக்கத்துடன் இதனை பார்த்துக்கொண்டு தான் நின்றான் இரக்கமின்றி.
“என்னை வேற என்ன பண்ண சொல்ற சுகந்? அப்படி தான் தோணுது. இதுவரைக்கும் அப்படி நினைச்சதே இல்லை. ஆனா…” என்றவள் நரேஷை எரிக்கும் பார்வை பார்க்க பயந்து போனான் நரேஷ்.
உண்மை தானே? ஒரு பெண் தனியாக இருந்தால் தகாதமுறையில் நடப்பதா? நரேஷின் மேல் கொலைவெறிய வந்தது சுகந்தனுக்கு.
நரேஷை ஒரு டேலண்டட் பெர்சன் என்ற இடத்தில் தான் வைத்திருந்தான் இதுவரை. அவன் மேல் வைத்திருந்த பிம்பம் முற்றிலும் நொறுங்கி இருந்தது.
ஆனாலும் அவனின் குடும்பம். அதுதான் சுகந்தனை யோசிக்க வைத்தது. அத்தனை நல்ல குடும்பத்தில் இப்படி ஒரு பிள்ளை என முகத்தை சுளித்தான்.
வேறு வழியிருக்கவில்லை. ஸ்ருதியிடம் கெஞ்சி கேட்க அவள் மறுக்க சுபஷ்வினியிடம் தான் பேசினான் சுகந்தன்.
“ஸ்ருதி நான் பார்த்துக்கறேன். இதை விடு. கேஸ் குடுக்க வேண்டாம்…” என சொல்லவும் தான்,
“அஷ்…” என்றாள் ஸ்ருதி.
“நான் இருக்கேன்டா. மோளே இதுக்கெல்லாம் கவலைப்படலாமா? சாக்கடை எப்பவும் சாக்கடையா மட்டும் தான் இருக்கும். நீர் தெளிஞ்சு மேல நிக்குதேன்னு பார்த்தா கீழே கசடில்லைன்னு அர்த்தமாகிடுமா? அவனை நாம சரியா கணிக்காம விட்டுட்டோம்….” என்ற சுபஷ்வினி,
“நம்மை விடவா போலீஸ் அவனுக்கு பனிஷ் பண்ணிட போறாங்க. அதை எல்லாம் தூசியா தட்டிட்டு வந்திருவான். ஒருதடவை குடும்பத்துக்கிட்ட இவன் இப்படின்னு காமிச்சுட்டா அவனுக்கும் பயம் விட்டு போயிரும். நான் சொல்றேன்ல. நீ கிளம்பு. நானும் இன்னைக்கு நைட் கிளம்பிருவேன்…” என்றாள் அவளுக்கு தைரியம் சொல்லி.
“உன்னை பார்த்துக்கறேன்டா. இதை உன் ஃபேமிலிக்கு நான் கொண்டு போகாம போறதில்லை. உனக்கு சம்மதிக்கலைன்னு என்னை எங்க நிறுத்திட்டு போன நீ?…” என்றவள்,
“ஏன் சுகந் உன்னோட பேமிலி பொண்ணுங்கட்ட இப்படி நடந்துகிட்டா நீ அப்பவும் வாபஸ் வாங்குன்னு சொல்லுவியா?…” என்று கேட்க சுகந்தனுக்கு செருப்பால் அடித்ததை போலிருந்தது.
காவல் நிலையத்தை விட்டு ஸ்ருதி வெளியே வர சுகந்தனும் அவளின் பின்னால் ஓடி வந்தான்.
“ஸ்ருதி ப்ளீஸ் நான் சொல்றதை கோபப்படாம கேளு….” என சொல்ல,
“என்ன கேட்கனும்? அதுவும் இவனை கூட வச்சிட்டு…” என்ற ஸ்ருதிக்கு கோபமும், வேகமும் தணியவே இல்லை.
நரேஷிற்கு அத்தனை நிம்மதி. ஒருவழியாக வழக்காகாமல் இந்தளவிற்கு பேச்சுடன் போய்விட்டதே என எண்ணி வெளியே வந்து நிற்க ஸ்ருதிக்கு அவனின் எண்ணவோட்டம் தப்பாமல் தெரிந்து போனது.
“தப்பிச்சிட்டேன்னு நிம்மதியோ?…” என்றவள் யோசிக்காமல் காலில் கிடந்ததை கழற்றி அவன் மேல் விட்டெரிய முகத்தில் பட்டு நெஞ்சில் அடித்து கீழே விழுந்தது அவளின் காலணி.
“என்ன பண்ணிட்ட ஸ்ருதி?…” என சுகந்தன் பதற,
“என்னடா பண்ணேன்? அவன் பண்ணினதை விடவா?…” என்றவள்,
“போங்கடா நீங்களும் உங்க ப்ரெண்ட்ஷிப்பும். அவ்வளோ தான்…” என்று கிளம்பியிருந்தாள் ஸ்ருதி.
அவனை தண்டிருத்திருந்தால் கூட மனது ஆறி இருக்குமோ? இன்னுமே அதிகமாக கொதித்துக்கொண்டு தான் இருந்தது.
இந்த வழக்கில் அவனுக்கு பெரிதாய் எந்த தண்டனை கிடைத்துவிடும் என்று எல்லாம் யோசிக்கவே இல்லை ஸ்ருதி.
அவன் செய்ததற்கு கொஞ்சமும் மனம் குறுகாமல் நின்ற அந்த பார்வை தான் அவளை ஆட்டி வைத்துக்கொண்டு இருந்தது.
“தேங்க்ஸ் சுகா. ஆனா அவளுக்கு இருக்கு…” என கொஞ்சமும் அலட்டாமல் வந்து சுகந்தனிடம் நரேஷ் பேச அவனின் கையை தட்டி விட்ட சுகந்தன் பளார் என்று ஒரு அறைவிட்டான் நரேஷை.
“அவ உன்னை செருப்பால அடிச்சதுக்காக நான் ஃபீல் பண்ணலை. அது உனக்கு வேணும் தான். ஆனா பப்ளிக்கா அடிச்சிருக்க வேண்டாமேன்னு நினைச்சேன். அது தப்புன்னு நீ ப்ரூவ் பண்ணிட்ட. இனி என்னை ப்ரெண்ட்ன்னு பேசிட்டு வந்த தொலைச்சு கட்டிடுவேன் பார்த்துக்க…” என்று சொல்லிவிட்டு சென்றான் சுகந்தன்.
நரேஷிற்கு அவமானமும், ஆத்திரமும் அளவில்லாமல் கூட ஸ்ருதியை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டான்.
——————————————–
இன்னும் பார்த்திவ் வெளியே புறப்படவில்லை. மனதில் ஒரு ஓரத்தில் முதல் நாள் இரவு பார்த்த பெண்ணின் பிம்பம் தான்.
இந்த நேரம் அவள் காவல்நிலையம் சென்றிருப்பாளா என்று எதுவும் தெரியவில்லை. ஆனால் சென்றிருக்க வேண்டும் என்று தோன்றியது.
எப்படி தெரிந்துகொள்வது என யோசனையுடன் இருக்க சுதந்திரத்திடமிருந்து அழைப்பு வந்தது.
“பார்த்திவ் இன்னைக்கு புது கதைக்கு டிஸ்கஷன் இருக்கு….” என ஞாபகப்படுத்தினார் சுதந்திரம்.
“எஸ் அங்கிள், எனக்கு ஞாபகம் இருக்கு…” என்றவன்,
“அங்கிள் உங்களுக்கு **** ஸ்டேஷன்ல யாரையாவது தெரியுமா?…” என்று கேட்க,
“என்ன விஷயம் பார்த்திவ்? எதுவும் பிரச்சனையா?…” என பதறிவிட்டார் சுதந்திரம்.
முதல்நாள் இரவு அத்தனை கோபத்தில் தங்களை எல்லாம் அனுப்பியிருந்தவன் எங்கும் யாரையும் காரில் இடித்துவிட்டானோ என நினைத்த அடுத்த நொடியே அதையும் விரட்டினார்.
அந்தளவிற்கு கோபம் கைமீறும் ஆள் அல்லவே பார்த்திவ் என எண்ணியவர் பொறுமையாக கேட்க,
“எனக்கு ஒரு தகவல் வேணும். யாரையாச்சும் தெரிஞ்சா சொல்லுங்க. இல்லை வேற யார்கிட்டையாச்சும் கேட்கறேன்…” என்றதுமே,
“ஓகே, அப்போ அந்த ஸ்டேஷன்ல ஸ்ருதின்னு யாராவது யார் மேலையாவது கம்ப்ளைண்ட் குடுத்திருக்காங்களான்னு விசாரிச்சு சொல்லுங்க…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
‘இவன் என்ன மொட்டை தாத்தா குட்டையில் விழுந்த கதையாக தலையும் இல்லாமல் வாலுமில்லாமல் பேசுகிறான்?’ என குழம்பி போனார்.
வெறும் பெயரை வைத்து என்னவென விசாரிக்க முடியும் என யோசனையுடன் அங்கே தனக்கு தெரிந்த ஏட்டு ஒருவருக்கு அழைத்து கேட்க சற்று முன் தான் ஸ்ருதியும் கிளம்பி இருந்ததால் அவரும் வெளியே வந்து விஷயத்தை சொல்லிவிட்டு,
“உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா ஸார்?…” என கேட்டார்.
“ஆமா…” என சுதந்திரம் பொதுவாக மட்டுமே சொல்லி வைத்துவிட மீண்டும் பார்த்திவ்விருக்கு அழைத்தார்.
அவனிடம் தனக்கு வந்த தகவலையும் அங்கே நடந்ததையும் அப்படியே சொல்ல முகம் இறுக கேட்டுக்கொண்டான் பார்த்திவ்.
“அப்பறம் பார்த்திவ், அந்த பொண்ணு பேர் வெறும் ஸ்ருதி இல்லை. ஸ்ருதகீர்த்தி…” என்று சொல்லவுமே அந்த பெயர் அவனின் மூளைக்குள் மின்னலாய் வெளிச்சத்தை மீட்டியது.