யமுனா வீட்டை விட்டு வந்துவிட்டாலும் இன்னும் அந்த பதட்டமும் படபடப்பும் நீங்கவில்லை. அதனை உணர்ந்த சூர்யாவும் அவள் கையைப் பிடித்து அழுத்தினான்.
“அதான் வந்துட்டியே யமுனா? ஏன் டென்ஷன்?”
“என்னவோ பயமா இருக்கு சூர்யா, அண்ணா என்னை நம்பி அனுப்பினார், என்னை வெறுத்துடுவாரோன்னு பயமா இருக்கு. வீட்ல என்னை ஒதுக்கிடுவாங்களா?” என்று கேட்டாள் யமுனா.
“ஏமிரா இதி? நீதானே வீட்ல சொல்ல வேண்டாம் சொன்ன? இப்ப இப்படி பேசுற? வேணும்னா உன் அண்ணய்யாகிட்ட பேசவோமா?”
சூர்யா அப்படி கேட்கவும் யமுனா அவசரமாக, “வேண்டாம் வேண்டாம் சூர்யா அண்ணா காதல்னு சொன்னா எல்லாம் ஒத்துக்க மாட்டார். என்னை அழைச்சிட்டு போயிடுவார்” என்று சொல்ல சூர்யா பெருமூச்சு விட்டான்.
ஸ்டாலின் ஆட்டோ ஒன்றை பிடிக்க மூவருமாக அவனின் வீட்டிற்கு சென்றனர்.
யமுனாவின் மனநிலை அவளுக்கே விளங்கவில்லை. வீட்டிற்கு பிடிக்காது என்று தெரிந்தும் செய்த காதல்! அவளின் வீடு ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. கண்டிப்பு இருந்தாலும் பாசமுள்ள அப்பா, அம்மாதான். அந்த பாசத்தையும் நேசத்தையும் காட்ட தெரிந்த அண்ணன். என்ன யமுனா என்றவள் சற்குணம் மகளாக உதயமூர்த்தியின் தங்கையாக மட்டுமே பார்க்கப்பாட்டாள்.
அவளுக்கென ஒரு மனம், அதில் இருக்கும் ஆசைகள் எல்லாம் எப்போதும் கணக்கில் கொள்ளப்படாது. அவளுக்கு வேண்டியது, அவளுக்கு நல்லது எல்லாம் யோசித்து செய்வார்களே தவிர, அவள் வேண்டுவது என்ற ஒன்றே கிடையாது.
தன்னை முழுதாய் யமுனா உணர்ந்ததே சூர்யாவினால்தான். அவனை பார்க்கும்போதெல்லாம் ஏன் அப்பா இப்படி அன்பாய் பேசுவதில்லை. ஏன் எனக்கென்ன பிடிக்கிறது என்று கேட்பதில்லை என்ற ஏக்கம் தோன்றும்.
அவனில் அவள் ஒரு தந்தையை கண்டாள், தூக்கி விடும் தோழன் கண்டாள். நேசிக்கும் காதலன் கண்டாள்! அவளின் சர்வம் அவன்!
ஸ்டாலின் வீடு செல்லவுமே கோகிலா எதிர்ப்பட்டாள். கோகிலாவைப் பார்க்கவுமே வேகமாக அவளிடம் சென்றாள். கோகிலாவும் தோளில் ஆதரவாக அணைத்துக் கொண்டாள்.
“கோகி பயமா இருக்குடி, வீட்ல தெரிஞ்சா என்னாகுமோன்னு டென்சன் ஆகுது. அண்ணா வேற அப்பா கிட்ட சண்டை போட்டு என்னை அனுப்பினார்”
இதனை சொல்லும்போதே குற்ற உணர்வில் யமுனாவின் குரல் கமறியது. வீட்டினரின் விருப்பத்தை மீறி விட்டாலும் முழுதாய் அவர்களை ஒன்றும் அவள் உதறி விடவில்லையே? மனம் அலைபாய்ந்தது.
“ஏய் சாத்துக்குடி! நீ ஏன் டென்ஷன் ஆகுற? பத்திரமா வந்து சேர்ந்திட்ட. இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கும் உன் சூர்யாவுக்கும் டும் டும்!”
“ஒரு குழந்தை பொறந்துட்டா உங்க அப்பா அண்ணா எல்லாம் மாறிடுவாங்க டி” கோகிலா சொல்ல யமுனாவுக்கு அந்தப் பேச்சில் வெட்கம்.
“சூர்யா வெயிட் பண்ணிட்டு இருக்காரு, உன் சூர்யா கூட சந்தோஷமா கல்யாணத்துக்கு ரெடி ஆகு. வீட்ட நம்ம அப்புறம் சமாளிக்கலாம். கல்யாண பொண்ணு டென்சன் ஆகக் கூடாது ” என்ற கோகிலாவின் பேச்சில் தெளிந்தாள் என்பதை விடவும் தற்காலிகமாக தன் குழப்பங்களை ஒதுக்கி வைத்தாள்.
யமுனா சூர்யா வாங்கி தந்த புடவை தயாராகி வெளியே வந்தாள். சூர்யாவும் வேஷ்டி சட்டையில் இருந்தான். இருவரின் பார்வைகளும் சங்கமித்தன. சூர்யா யமுனாவை பார்வையால் தழுவ, யமுனாவால் நேர்கொண்டு பார்க்க முடியவில்லை. அவளருகே வந்தவன்
“நீ இவ்வளவு அழகா யமுனா?!” என்றான் ரசனையாக. யமுனாவிற்குப் படப்படப்புக் கூடி போனது. கோகிலாவும் புடவையில் வர ஸ்டாலின் விசில் அடித்தான் மெல்லிய குரலில்.
“கோகி என்ன இவன் கூட சேர்ந்து நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் கண் அடித்து.
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல உங்க அப்பா வெளியிலிருந்து முறைச்சிட்டு இருக்காரு, போய் அவர்கிட்ட பர்மிசன் வாங்கிட்டு வா. இல்லனாலும் எனக்கு ஓகே” என்றாள் அவளும் அவனைப் போலவே கண்ணடித்து.
கோகிலாவும் ஸ்டாலினும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மிசா ஸ்ரீனிவாசன் சத்தம் போடவும் நால்வரின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது.
மகனைப் பார்த்த சீனிவாசன் “என்ன பேச்சு அங்க? சீக்கிரம் கிளம்புங்க” என்று மகனைப் பார்த்து சொல்லவும்
“கிளம்பிட்டோம் பா” ஸ்டாலின் அப்பாவிடம் சொன்னவன் “ரெடியா?” என்று மற்றவர்களிடம் கேட்க அவர்கள் தலையை அசைக்கவும், எல்லாரும் ரிஜிஸ்டர் ஆபீஸில் கிளம்பினார்கள்.
அங்கு சென்றதும் யமுனாவுக்குத் தான் செய்யும் செயலில் தீவிரம் புரிய பதற்றம் சூழ்ந்தது. இதுவரை வீட்டிற்கு தெரியாமல் எதுவும் செய்ததில்லை, பிடிக்காததும் செய்ததில்லை. அவர்கள் சொன்னதை செய்து பழகியவள் இப்போது தானாய் செய்யும் செயல் இந்த காதல் கல்யாணம்!
வியர்த்திருந்த முகமும் தவிப்புடன் இருந்த கண்களையும் பார்த்த சூர்யா “பயப்படாத யமுனா, நான் உன்ன நல்லா பாத்துப்பேன். நான் இருக்கேன் ரா” என்று கரத்தை அழுத்தி கொடுக்க யமுனாவிடம் பதில் இல்லை.
வாழ்க்கையில் முதல்முறையாக சுயமாக முடிவு எடுக்கிறாள். அது வாழ்க்கைத் துணையை, அவனுடனான வாழ்வை குறித்து பெரும் முடிவு. அத்தனை குழப்பம் இருந்தாலும் அவன் முகமும், அதிலிருந்த புன்னகையைப் பார்க்கையில் மொத்தமாய் அந்த காதலில் திளைத்து இருக்கவே ஆசை கொண்டது மனம்.
சூர்யா அவள் முகத்தை பார்த்தபடி நிற்க ஒன்றும் இல்லை என்பதாக தலையசைக்க சூர்யாவிடம் நிம்மதி. அவன் நிலையும் ஒன்றும் குறைவில்லை, அவனை நம்பி ஒருத்தி வரப்போகிறாள், அந்த காதலை தன் மீது கொண்ட நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு காதல் எல்லாம் சூர்யாவுக்கும் இருக்கிறதே!
வீட்டில் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கவலை இருந்தாலும், அவனின் பிரியத்திற்குரியவள் அவன் உரிமையாக போகிறாள் என்ற உணர்வு அவனை உற்சாகம் அடைய வைத்தது.
நண்பர்கள் சூழ ஸ்டாலின் அப்பா தலைமையில் சூர்யா யமுனாவின் திருமணம் இனிதே நடைபெற்றது.
திருமணம் முடிந்து கோவிலுக்கு யமுனாவும் சூர்யாவும் செல்ல அதற்குமுன் சீனிவாசன்
“உன்னை நம்பி வந்த பொண்ணு சூர்யா பத்திரமா பார்த்துக்கோ” என்றார்.
“நீயும் நல்லபடியா குடும்பம் நடத்தும்மா”என்றார் யமுனாவிடம். கோவிலுக்கு ஸ்டாலினும் கோகியும் அவர்களுடன் செல்ல மகனிடம் சீனிவாசன்
“சும்மா அந்த பொண்ணு கூட ஊர் சுத்திட்டு இருக்காம வீடு வந்து சேர பாரு” என்றார் அதட்டலாக.
“சரிங்க அப்பா” என்றான் பவ்யமாக.
“இவங்களோட ஊருக்கு போற தானே? அங்க நம்ம ஆளுங்க கிட்ட டெலிஃபோன் போட்டு சொல்லி இருக்கேன். பார்த்து பிரச்சனை ஏதும் வராம சுமூகமாக முடிச்சு விடு. பெத்தவங்க சூர்யா தெலுங்கு பையனன்னு ஒத்துக்காம போனாலும் சண்டை வேண்டாம். கொஞ்சநாள் போச்சுனா சரியா போகும்” என்று சொல்லிவிட்டு சீனிவாசன் சென்றார்.
கிடைப்பாளா மாட்டாளா என்று ஏங்கிய பொழுதுகள் போய் அவன் மனைவியாய் அவள் நிற்க, நெருக்கத்தில் நின்றவளின் கரத்தை இறுக்கமாய் பற்றிக்கொண்டான். யமுனா கடவுளின் முன் கண்மூடி நின்றவள் சூர்யாவின் செயலில் கண் திறந்து பார்த்தாள். கண்களில் கண்ணீர்.
“டேய் இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும் சாப்பிட்டு போய்டுவோம்” என்று ஸ்டாலின் சொல்ல சூர்யாவும் தலையசைத்தான்.
“டேய் தங்கச்சியை சந்தோஷமா வச்சுக்கோடா, உன் ப்ரியத்தமாவை உன்கிட்ட சேர்த்தாச்சு, மை பெஸ்ட் விஷஸ்!” என்று வாழ்த்தினான் ராமச்சந்திரன்.
“பத்திரமா போயிட்டு வாங்க டா ஏதாவது பிரச்சனைனா டெலிபோன் போடு” என்றான் ராமு. அவனுக்கு அடுத்த நாள் ஒரு முக்கியமான நேர்காணல் இருந்தது. அதனால் நண்பர்களுடன் செல்லவில்லை. ராமுவும் கோகிலாவும் கோவிலில் இருந்து விடைபெற்றுக் கொண்டனர். உண்டு முடித்து விட்டு ஸ்டாலின் மற்றும் மனைவியுடன் காரில் கும்பகோணம் புறப்பட்டான் சூர்யா.
மணி எட்டாகி விட மகளை இன்னும் காணவில்லையே என்று புலம்பிக் கொண்டிருந்தார் தையல்நாயகி. மகனிடம் கேட்க உதயமூர்த்தி
“அம்மா அங்க காலேஜில் நேரமாயிருக்கும். வந்துடுவா, பத்து மணிக்குள்ள வரலைன்னா பஸ் ஸ்டாண்ட் போய் பாக்குறேன்” என்றான்.
“இதுக்குத்தான் பொம்பள புள்ளையைத் தனியா அனுப்ப வேண்டாம் சொன்னேன், கேட்டியா? இப்ப பயந்துட்டே இருக்க வேண்டியதா இருக்கு” என்றார் சற்குண பாண்டியன்.
“அப்பா! எப்பவும் லீவுல வரதால வெள்ளனே கிளம்பி வருவா, இன்னைக்கு காலேஜ்ல சர்டிபிகேட் வாங்கிட்டு வரனும். லேட்டா தான் ஆகும், எப்படியும் வரத்துக்கு பத்து மணி ஆகிடும். யமுனா பத்திரமா வந்துடும் ” என்றான் நம்பிக்கையாக.
கொஞ்சம் கூட மகள் ஒருவனின் மனைவி ஆக வந்து நிற்பாள் என்று எதிர்பார்க்கவில்லை அவர்கள். ஆனால் அப்படித்தான் வந்து நின்று அவர்களை அதிர்ச்சி ஆக்கினாள் யமுனா.
வீடு நெருங்க நெருங்க யமுனாவின் இதயத்துடிப்பு அதிகமாகி அவளுக்கு வியர்த்து போனது.
“யமுனா யமுனா!” சூர்யாவின் குரலில்தான் விழித்தாள்.
“என்னங்க?” என்று யமுனா நடுக்கத்துடன் கேட்க பயத்தில் தொண்டை அடைத்தது. வீட்டினரை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற அச்சம் நெஞ்சை கவ்வியது.
“எந்த ஸ்ட்ரீட்டில் போகணும்? டிரைவர் கேக்குறாரு செப்புரா” என்றான் சூர்யா மனைவியிடம். இயல்பாகப் பேசினாலும் அவளின் முகம் பார்த்தவன் தன் கைக்குட்டையால் வியர்த்ததைத் துடைத்து விட்டான். சட்டென அவள் கண்களில் கண்ணீர். அதையும் அவன் இதமாய் துடைத்துவிட அவன்மீது நெஞ்சத்தில் இன்னும் நேசம் பெருகியது .
“அந்தக் கோயிலுக்கு பக்கத்து தெரு அண்ணா, காம்பவுண்ட் சுவர் இருக்கிற வீடு” என்ற யமுனா அங்கு இருந்த பிள்ளையார் கோவிலை கடக்கும் போது கண்களை மூடி வேண்டினாள்.
தயக்கமாய் சூர்யாவின் முகம் பார்த்தவள் “பயமா இருக்கு சூர்யா தப்பு பண்ணிட்டேனா?” என்று கேட்க அவளின் முகம் பார்த்தவனுக்கு முடிந்து போனதை பற்றி பேச விருப்பமில்லை.
“ஐ ப்ராமிஸ் ரா. நா எப்பவும் இன்னைக்கு நீ எடுத்த முடிவை தப்புன்னு நினைக்கிற மாதிரி நான் நடக்க மாட்டேன் டா” என்றான் உறுதியாக.
அதற்குள் வீடு வந்துவிட தையல்நாயகி அந்த அம்பாஸடர் பார்த்துவிட்டு “யாரது நம்ம ஊர்ல புது அம்பாசிடர்ல வரது?”என்றார் மகனிடம்.
“நம்ம வீட்டு பக்கம் வராங்க மா” என்றபடி திண்ணையிலிருந்து உதயமூர்த்தி எழுந்து கொண்டான்.
கார் வீட்டின் முன் நிற்க முதலில் முன்னிருக்கையில் இருந்து ஒருவன் இறங்கினான். அவன் முகத்தில் தாடி இருக்க பின்பக்கம் இருந்து இறங்கியவன் முகத்தில் தாடி இல்லை. உற்றுப் பார்த்தும் கூட உதயமூர்த்தி அவர்களைப் பார்த்த ஞாபகமே இல்லை. (exitonetaproom.com) யோசித்தபடி வாசலை பார்க்க பின் பின்பக்கம் இருந்த கதவை திறந்து பிடித்துக் கொண்டு நின்றிருந்தான் அந்த தாடி இல்லாதவன். அவன் குனிந்து என்னவோ பேச உள்ளே இருந்தவரின் கையை பிடித்து இழுக்க, பார்த்தால் யமுனா.
மஞ்சள் தாலி கழுத்தில் தொங்க கண்கள் கலக்கத்துடன் இருக்க கணவனின் கையைப் பிடித்தபடி இறங்கினாள் யமுனா.
“அய்யோ அய்யோ இங்க வாங்களேன்” என்று கத்தினார் தையல் நாயகி.
மகள் தாலியுடன் ஒருவன் கைப்பற்றி நிற்கத் தாங்கமுடியவில்லை அவரால்.
“டேய் மூர்த்தி! இங்க பாருடா! இந்த பாவி மக என்ன காரியம் பன்னிட்டு வந்திருக்கான்னு?” என்று பெருங்குரலெடுத்து கத்தினார்.
மூர்த்திக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. “யமுனா?” என்று தங்கையைப் பார்க்க, அவளோ தலைக்குனிந்து நின்றாள்.
“என்ன காரியம்டி பண்ணிட்டு வந்திருக்க? யார்டி இவன்? அய்யோ மானத்தையே வாங்கிட்டாளே, என்னங்க! இந்த சிறுக்கி படிக்கிறேன்னு சொல்லிட்டு என்ன பண்ணியிருக்கா பாருங்க” என்று சத்தம் போட யமுனாவிற்கு அழுகைக் கொட்டியது. கூடவே அந்த தெரு மக்கள் வந்து நின்றுவிட்டனர். சற்குணம் வெளியே மனைவி போட்ட சத்தம் கேட்டு வந்தவர் மகள் ஜோடியாக நின்றதில் ஸ்தம்பித்துப் போனார்.
“இதுக்குத்தான் அந்த அடம்பண்ணி கிளம்பிப் போனியா? பாருடா மூர்த்தி உன் தங்கச்சி என்ன செஞ்சுட்டு வந்து நிக்கிறா? இவளை சும்மா விட மாட்டேன்” என்று கத்தியவர் கொட்டகையில் சொருகி இருந்து அரிவாளுடன் வந்து நிற்க, ஸ்டாலின் அவரை மறைத்து நின்றான்.
“சார்! கொஞ்சம் சொல்றதைக் கேளுங்க, பொறுமையா பேசலாம்” என்றான். அவனை உக்கிரமாக முறைத்தவர் ஒரே தள்ளாகத் தள்ளி மகளை இழுக்க பார்த்தார். யமுனாவுக்கு அந்த சூழலில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“அப்பா மன்னிச்சிடுங்கப்பா” என்றதை தவிர வேறு பேசவரவில்லை.
“மன்னிப்பா? ஓடுகாலி கழுத! என் குடும்பத்து மானத்தையே வாங்கிட்டியே டி! உன்னைய?” என்று அடிக்க போக சூர்யா மனைவியை மறைத்து நின்றான்.
“உங்க கோவம் புரியுது, ப்ளீஸ் நா மாட்ட வினண்டி( நான் சொல்றத கேளுங்க)” என்று டென்ஷனில் தெலுங்குப் பேச, இன்னும் அவர்களின் ஆத்திரம் அதிகமானது. யமுனாவின் உறவினர்கள் எல்லாம் கூடிவிட அவர்களும் இஷ்டப்படி பேசினார்கள்.
“இதுக்குத்தான் இந்த பொண்ணு படிக்கிறேன்னு பட்டணம் போச்சா?”
“பய நம்ம ஊர் இல்லை போலயே”
“யமுனாவா இப்படி பண்ணிச்சு?” என்று ஏகப்பட்ட பேச்சுகள்.
இந்த ரணகளத்தில் ஸ்டாலினின் அப்பாவின் கட்சி ஆட்கள் சற்குணத்திடம் சமரசம் பேச வந்தனர்.
“உன் வீட்டுப்பொண்ணு இப்படி கண்டவனைக் கட்டிட்டு வந்து நின்னா நீ இப்படித்தான் பேசுவியா யா? இவளைக் கொன்னாதான் என் ஆத்திரம் தீரும். கௌரவத்தையே கெடுத்த சிறுக்கி இவ” என்று மகளைப் பேச, யமுனா இதையெல்லாம் எதிர்ப்பார்த்தாள் தானே? அதனால் பேசவே இல்லை. தவறு என்று தெரிந்து செய்த செயல்தானே? அம்மாவின் அழுகையில் இன்னும் அழுகைக் கூடியது, அவர் கைப்பிடிக்க போக அவரோ மகளை அறைந்து விட்டார்.
சூர்யாவால் கூட தடுக்க முடியவில்லை.
“மானத்த வாங்கிட்டியே டி! எப்படி நாங்க இனி தலை காட்டுவோம்? நீ நல்லாவே இருக்க மாட்ட டி” என்று கத்தி கதறினார். ஸ்டாலினின் அப்பா அனுப்பிய ஆட்கள் எல்லாரும் சமாதானம் பேசினார்கள். அந்த குடும்பத்தின் கௌரவமாய் இருந்த யமுனா ஒரே நாளில் அவர்களுக்கு களங்கமாகிப்போனாள்.