“ஏய்! இவ காயாதேல வர காய் எல்லாம் எண்ண மாட்டேங்கிறா டி” என்று புகார் சொன்னாள் மேகலா.
“ஏன் டி இதெல்லாம் ஒரு பிரச்சனையா? காய் எத்தனை இருக்குன்னுதானே கணக்கு? நீ ஏன் கலா காயாதே எல்லாம் கணக்குல எடுக்கிற?” என்று கேட்டாள் யமுனா.
“காயாதேல கூட காய் இருக்குதானே?” என்று மேகலா வாதாட சுமதி பதில் பேச என்று இருவருக்குமே மீண்டும் வாக்குவாதம்.
“கொஞ்சம் நிறுத்திட்டு, யார் என் கூட வரப்போறீங்க சொல்லுங்க, ஹிக்கின்பாதம்ஸ்ல ஒரு புக் வாங்கனும்” என்று யமுனா கேட்க
“அடி போடி, அங்க ஒரே புத்தகவாசமா இருக்கும், நான் வரல” என்று சுமதி மறுக்க
மேகலாவோ “நடந்தெல்லாம் என்னால வர முடியாதுடி, எனக்கு சாப்பாடு செரிச்சுப் போச்சு, நீ போய் வாங்கிட்டு வா. அதுக்கு முன்னாடி உன்னோட அசைமெண்ட் கொடு, நான் இன்னும் முடிக்கல” என்று கேட்கவும் யமுனாவும் நோட்டை எடுத்து நீட்டியவள்
“பத்திரம் டி, சண்டைப் போட்டு கிழிச்சிடாதீங்க, வரும்போது உங்களுக்கு எதாவது வாங்கிட்டு வரனுமா?” என்று யமுனா கேட்க
“புஹாரில சமோஸா வாங்கிட்டு வரியா? என்று சுமதி கேட்டாள்.
“சரிடி” என்றபடி தனது பாவாடை சட்டையை மாற்றிக்கொண்டு சுடிதார் அணிந்தவளுக்குத் தீடீரென சூர்யாவின் நினைவு தோன்றியது.
ஒருவேளை அவனும் அங்கே வந்தால் என்று நினைத்தவள் போன வாரம் ஊருக்குச் சென்றபோது வாங்கி வந்திருந்த பலகாரங்களை ஒரு டப்பாவில் போட்டுக்கொண்டாள். சில சமயம் அவனை அந்த பக்கம் பார்த்திருக்கிறாள். கோகிலா வந்திருந்தால் அவளிடம் கொடுத்திருப்பாள், அவளுக்கு டைபாய்ட் ஜூரம் என்பதால் கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருந்தாள். ஒருவேளை இன்று சூர்யாவைப் பார்த்தால் கொடுக்கலாம் இல்லையா அறைத்தோழிகளிடம் கொடுத்து விடலாம் என்ற எண்ணத்துடன் நடக்க ஆரம்பித்தாள்.
மூன்று மணி ஆகியிருக்க, வெயில் சுட்டெரித்தாலும் அங்காங்கே நிழலுக்கு இருந்த மரங்கள் வழியே சாலையோரமாகவே நடந்து மவுண்ட் ரோட் வந்து விட்டாள்.
புத்தகக் கடைக்குள் நுழைந்தவள் தனக்குத் தேவையான புத்தகத்தைத் தேடிக்கொண்டு இருந்தாள். வெயில் தாழ்ந்தவுடன் போகலாம் என்று நினைத்து மெல்ல சுற்றி மாடியேறி வர அவள் பார்வையில் விழுந்தான் சூர்யா. சட்டென ஒரு சந்தோஷம் அவளிடம். நிச்சயம் அவன் போல் எண்ணமில்லை!
ஆனால் தெரிந்தவர் ஒருவரைக் கண்ட களிப்பு அவள் முகத்தில் அப்படியே தெரிய, சூர்யா அந்த வெள்ளைக் கண்ணாடியின் வழியே வெளியே வேடிக்கைப் பார்த்தான். மவுண்ட் ரோட் சாலையில் மாட்டு வண்டி முதல் அம்பாசடர் வரை எல்லாம் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தன. எதிரே தெரிந்த எல்.ஐ.சியில் பார்வை வைத்திருந்தவனுக்குப் பாவை வந்தது தெரியவில்லை.
“சூர்யா” என்று மெல்ல அழைத்தாள் யமுனா. தரையில் பதிந்திருந்த வெள்ளையும் கறுப்பும் மாறி மாறி இருந்த டைல்ஸ் அந்த கால ஆங்கிலேயப்பாணியை நினைவூட்டின.
சிலர் நின்றபடியே அங்காங்கே புத்தகத்தைப் படிக்க, அடுத்தவருக்குத் தொந்தரவு செய்யக் கூடாதே என்று யமுனாவின் குரல் மெல்ல வர, அது சூர்யாவை எட்டவில்லை. அதனால் கிட்ட போனவள் தனது புத்தகத்தை அவன் முன் நீட்ட, புன்முறுவலுடன் நின்றிருந்த யமுனா சூர்யாவின் விழிகளில் விழ மனதுக்குள் ஒரு இதம்.
“என்ன யமுனா? எப்படி இருக்க?” என்றவனின் குரலில் ஒரு பேதம்.
“நல்லாயிருக்கேன், நீங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? புக் வாங்க வந்துட்டு வேடிக்கைப் பார்க்குறீங்க?” என்றாள் யமுனா.
“ஒன்னுமில்ல, நான் நல்லாயிருக்கேன். உனக்கு என்ன? எதாவது டவுட்டா?” என்றதும் யமுனா
“இல்லை, புக் வாங்க வந்தேன். உங்களைப் பார்த்ததும் பேசலாம்னு வந்தேன்” என்றவள்
“ஓகே நான் டிஸ்டர்ப் பண்ணல, எனக்குப் புக் பார்க்கப் போறேன்” என்று ஒவ்வொரு ஷெல்ஃபிலும் புத்தகத்தைத் தேடிக்கொண்டு இருந்தாள். சூர்யாவும் இருந்த மனநிலையில் மையல் கொள்ளும் நிலையெல்லாம் இல்லை. என்னவோ ஒரு இறுக்கம், அதனால் அப்படியே அங்கேயே அசையாமல் நின்றான்.
யமுனாவின் பார்வை அடிக்கடி சூர்யாவைத் தொட்டு மீண்டது. என்னவோ அவன் எப்போதும் போல் இல்லை என்ற எண்ணம் எழுந்தது.
சிறிது நேரம் செல்ல, சூர்யா கீழே இறங்கிப் போக, யமுனா வாங்கிய புத்தகத்திற்குப் பில் போட்டுக் கொண்டிருந்தாள். வெளியே சென்றவனைக் கண்ட யமுனாவிற்கு அவனுக்குப் பலகாரம் தர வேண்டுமே என்ற நினைப்பு வர புத்தகத்தை வாங்கிக் கொண்டு வேகமாய் அவன் பின்னே போனாள்.
“சூர்யா, நில்லுங்க” என்று கடையின் வாசலில் அவனை நிறுத்தினாள்.
“ஏன்ட்டீமா?” என்று அவன் பார்க்க
“அது ஊருக்குப் போன வாரம் போனேன்ல, அதான் உங்களுக்கும் அண்ணாவுக்கும் முறுக்கு, சீடை கொண்டு வந்தேன், கோகிக்கு டைபாய்ட் இல்லைன்னா முன்னாடியே கொடுத்துவிட்டிருப்பேன்” என்றவளின் பேச்சில் இவள் என்னை நினைத்திருக்கிறாளே என்ற எண்ணம் தோன்றியது.
“ஊருக்குப் போன அப்புறமும் என்னையெல்லாம் நினைச்சிப்பியா யமுனா?” என்றான் ஆவல் மிகுந்த குரலில்.
“என் ப்ரண்ட்ஸ்க்கு எல்லாம் பலகாரம் எடுத்து வைக்கும்போது உங்க ஞாபகமும் வந்துச்சு, அதான் எடுத்துட்டு வந்தேன்” என்றாள் மிக மிக இயல்பாக.
“ஓஹ், ஓகே! நான் கிளம்புறேன். நீயும் வரியா?” என்று அவள் நீட்டிய டிபன் பாக்ஸை வாங்கிக்கொண்டு கேட்க
“இல்லை, புஹாரில சமோஸா வாங்கிட்டு வர சொன்னாளுங்க என் ப்ரண்ட்ஸ்” என்றவள் கொஞ்சம் தயக்கம் கொண்டு
“நீங்களும் கூட வரீங்களா சூர்யா? அங்க தனியா போய் கேட்க ஒரு மாதிரி இருக்கும்” என்று அழைத்தாள்.
“இதுக்கெல்லாம் என்ன பயம் யமுனா உனக்கு? நம்ம காசு கொடுத்தா அவங்க தர போறாங்க” என்றவனின் குரலில் கொஞ்சம் காரம் கூடியிருக்க, யமுனாவிற்கு ஒரு மாதிரி ஆனது.
“உங்களுக்கு வேலை இருந்தா நீங்க போங்க” என்றாள் ரோஷமாக.
“எனக்கு வேலை இருக்குன்னு சொல்லல நான். நீ வா” என்று சூர்யா முன்னே நடக்க, யமுனாவும் மறுப்பின்றி பின்னே நடந்தாள்.
“எங்க வீட்ல எதுவானாலும் எங்க அப்பா இல்லை அண்ணன் வாங்கிட்டு வந்திருவாங்க. நான் இப்படியெல்லாம் வெளியே போய் எதுவும் வாங்கினதில்லை. அது மட்டுமில்லாம அங்க நிறைய ஆம்பிளைங்க இருப்பாங்க, எனக்கு ஒரு மாதிரி இருக்கும். இப்போ பொண்ணுங்களா இருந்தா அந்த இடத்துல நீங்க மட்டும் இருக்கறது தனியா ஒரு மாதிரி இருக்காதா?” என்று மெல்ல கேட்க
“அவுனா? ஆனாலும் எப்பவும் உன் அப்பாவும் அண்ணாவும் உன் கூடவே வர முடியுமா?”
“ஏன் அவங்க எப்பவும் வருவாங்கதானே?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள் யமுனா.
“அது என்ன என் புருஷன் வாங்கிக்கொடுப்பான் சொல்றீங்க நீங்க? அப்படி மரியாதை இல்லாம எல்லாம் பேசாதீங்க சூர்யா” என்றாள் பட்டென்று.
“ஏன்? உனக்கு உன் ஹஸ்பண்ட் யார்னே தெரியாதுதானே? அப்புறம் என்ன? இல்லை யாராவது பார்த்துட்டாங்களா?” என்றான் கொஞ்சம் கடுப்பாக.
“இல்லை இல்லை. ஆனாலும் என்னைக் கட்டிக்கப்போறவரை இப்படி அவன் இவன்னு சொன்னா ஒரு மாதிரி இருக்குல” என்று முணுமுணுத்தாள்.
பேசியபடி புஹாரி வர, சூர்யாவிடம் பணம் கொடுத்து சமோசா வாங்க சொன்னவள் வாசலில் நின்று கொள்ள,
“நீயும் வா, நான் எப்படி பேசுறேன் பாரு. தைரியமெல்லாம் வெளியே இருந்து வராது, நமக்குள்ள இருந்துதான் வரனும்” என்று பேசி அவளையும் உள்ளே அழைத்துச் சென்றான்.
அவன் வாங்கி அவளிடம் சமோஸாவை நீட்ட, அதனைத் தன் பையில் வைத்த யமுனா,
“நீங்க உங்களுக்கும் சமோஸா வாங்கிக்கோங்க சூர்யா, எனக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க” என்றதும் முறைத்தான் அவன்.
“ஆமா, ரொம்ப தூரம்தான்” என்று நக்கல் செய்தவன்
“எனக்கு வேண்டாம், உனக்கு எதாவது வேணுமா?” என்று கேட்கவும்
“டீ வேணும், தலைவலிக்குது” என்று முகம் சுருக்க
இரானி சாய் இரண்டு வாங்கியவன் அவளிடம் ஒன்றை நீட்ட, சூர்யா அவனின் டீயைக் குடித்து முடித்துவிட்டான். யமுனா இன்னமும் சூடு தாங்காது அதனை ஊதிக்கொண்டே இருக்க, அவளைப்பார்க்கவும் மங்கை செயல் மழலை செயலாய்த் தெரிய சின்ன புன்னகையுடன்
“டீ சூடா இருக்காம்மா?” என்று கேட்டான்.
“ம்ம், நீங்க குடிச்சிட்டா கிளம்புங்க. எனக்கு இந்த சூடு தாங்காது” என்றதும் சூர்யாவுக்கு சட்டென கோபம் பொங்கியது.
“என்ன நீ? என்னை விரட்டிட்டே இருக்க?” என்றான் கோபத்துடன்.
“இல்லை..இல்லை” என்று யமுனா திணற
“உன் டீயைக் கொடு” என்றவன் அவளைப் பார்த்தவாறே
“என் க்ளாஸ் யூஸ் பண்ணலாமா? இல்லை வேற வாங்கவா?” என்று கேட்டான்.
“இல்லை, உங்களுதே பரவாயில்லை” என்றாள்.
அவளின் டிபன் பாக்ஸை ஒற்றைக் கையால் அவளிடம் நீட்டியவன் தனது டீ க்ளாஸில் அவள் டீயை ஊற்றி ஆற்றிக் கொடுத்தான்.
அக்கறையான செயலைக் கூட இவன் ஏன் கோபமாகச் செய்கிறான் என்று யமுனாவிற்கு ஒரு மாதிரி இருந்தது. அவள் வீட்டில் எல்லாம் இவளுக்கென இப்படியான செய்கை யாருமே செய்ததில்லை. அம்மா கூட அப்பாவிற்கும் அண்ணனுக்கும் டீ ஆற்றிக்கொடுப்பார், இவள் கேட்டால்
“பொம்பளைப் புள்ள ஆற அமர டீ குடிச்சா குடும்பம் எங்க விளங்கும். சூடா ஊத்திட்டு வேலையைப் பார்க்கனும்” என்று அதட்டுவார்.
அதற்காகவே ஊரில் இருந்த போது வெளியிடம் சென்றால் யமுனா டீயெல்லாம் குடிக்கவே மாட்டாள் . இங்கு வந்த பின் தோழிகளுடன் பேசியபடி மெதுவே குடித்துப் பழகியிருக்க, இப்போது சூர்யாவின் இந்த செயல் என்னவோ அவளை அசைத்தது. எப்போதும் ஒரு சிரிப்புடன் இருப்பவனின் இன்றையை முகத்தில் ஒரு வருத்தம் இருப்பது வஞ்சிக்குத் தெரிய, அதனால்தானோ இந்த கோபம் என்ற எண்ணம்.
அவன் ஆற்றிக்கொடுக்கவும் வாங்கிக் குடிக்க
“சூடு போதுமா?” என்றான். அந்த கேள்வியே இதமாய் இதயம் தொட்டது, அவளயறியாமல் அகத்துக்குள் அவனின் இயல்பான செயலால் அடிகள் வைத்துக்கொண்டு நுழைந்தான் சூர்யா.
“ம்ம்” என்றவள் வேகமாய் டீயைக் குடித்தாள். பின் நடந்து வரும்போது இருவருக்கிடையே அமைதி நிலவியது. சாலையின் இரைச்சலுடன் சத்தமற்ற இவர்களின் அமைதியும் சங்கமம் ஆனது. ரோட்டில் ஒருவன் தள்ளு வண்டியில் கண்ணாடி ஜார்களில் பர்ஃபி, பால்கோவா, சோன் பப்படி விற்றுக்கொண்டு செல்ல, அவன் இவர்களை விட்டு கொஞ்சம் தூரம் இருந்தான்.
“தம்பீ!” என்று உரக்க சத்தமிட்டு அவனை அழைத்த சூர்யா அவனருகே வேகமாய் நடந்து போய் ஒரு சுருள் வாங்கி காசு கொடுத்தவன் யமுனா அந்த இடம் வரும்வரை நின்றான்.
“உனக்காகத்தான் வாங்கினேன்” என்று அவளிடம் நீட்ட, யமுனா மறுக்க
“நான் பார்த்தேன் யமுனா, நீ அந்த பையன் தள்ளிட்டுப் போறதையே பார்த்த ஆனாலும் கேட்க உனக்குப் பயம். அதான் நானே வாங்கிட்டேன், எங்களுக்காக முறுக்கெல்லாம் கொண்டு வந்ததானே? இதை வாங்கிக்கோ” என்று நீட்ட யமுனாவும் வாங்கிக் கொண்டு,
“தேங்க்ஸ்” என்றாள்.
வெண்புறாவின் சிறகாய் இருந்த சோன் பப்ஃடியை ருசித்தபடி மெல்ல வாயில் போட்டுக் கொண்ட யமுனா, “உங்களுக்கு?” என்று அவனிடம் நீட்ட அவன் வேண்டாம் என்று தலையசைத்தான்.
“நான் வேணும்னு எல்லாம் கேட்காம இல்ல, நீங்க சத்தம் போட்ட உடனே அந்த பையன் நின்னுட்டான். என் குரல் அவ்வளவு தூரம் கேட்குமா தெரியல, அது மாதிரி எனக்கு இப்படி ரோட்ல நின்னு கத்தி எல்லாம் பழக்கமில்லை. கொஞ்சம் குரல் ஒசத்தி பேசினாலே எங்கம்மா என்னைத் திட்டும். அதனாலதான் நான் கேட்கல”
“இல்லைனாலும் பழக்கம் எப்படி உடனே போகும்? எனக்கு வேணும்னு கேட்டா வாங்கித் தர எங்க அண்ணன் இருக்கு, இப்போ கூட நீங்க வாங்கிக் கொடுத்துட்டீங்களே” என்றதும் சூர்யாவிடம் சின்னதாய் ஒரு தலையசைப்பு.
“நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே?” என்று யமுனா கேட்க
“ம்ம், செப்பும்மா” என்றான். அவன் குரலின் சோர்வே என்னவோ சொல்ல
“இன்னிக்கு நீங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? எதாவது பிரச்சனையா சூர்யா?” என்று கேட்டுவிட்டாள்.
“எங்கம்மாவோட இறந்த நாள் இன்னிக்கு” என்று சொல்லும்போதே குரலில் சோகம் கூடியது.
“சாரி சூர்யா, உங்களைத் கஷ்டப்படுத்தற மாதிரி கேட்டுட்டேன்”
“அதெல்லாம் இல்ல”
“அம்மாவுக்கு என்னாச்சு சூர்யா? எப்போ இப்படி ஆச்சு?”
“நான் காலேஜ் ப்ர்ஸ்ட் இயர் படிக்கும்போது இறந்துட்டாங்க. அடிக்கடி நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குன்னு சொல்லியிருக்காங்க, நானாவும் பெருசா கவனிக்கல. ஒரு நாள் தூக்கத்துலயே போய்ட்டாங்க. எங்கம்மாவுக்கு நான்னா ரொம்ப இஷ்டம்” இதை சொல்லும்போது அவன் கண்கள் கலங்கி இருக்க கன்னம் தொட்ட கண்ணீரை கரத்தால் தள்ளிவிட்டான்.
“அழாதீங்க சூர்யா” என்றதை தவிர யமுனாவிடம் சொல்ல வேறொன்றுமில்லை. அவன் கலங்கிய கண்கள் கண்டு இவளுக்கும் கண்கள் கலங்கியது.
“எப்பவும் அம்மா எல்லாம் பெரிய பசங்க இல்லை சின்னப்பசங்க மேல பாசமா இருப்பாங்க சொல்வாங்க யமுனா, ஆனா எங்கம்மாவுக்கு நான்னா ரொம்ப இஷ்டம். அண்ணய்யாவுக்கும் சரி வெங்கடேஷுக்கும் சரி ரொம்ப படிப்பு வரல. நான் நல்லா படிக்கவும் ரொம்ப ப்ரியம் என் மேல. நான் போலீஸாகி கவர்மெண்ட் ஜாப் வாங்கனும் ஆசைப்பட்டதே அவங்கதான்” என்றவனுக்கு அன்னையின் நினைவில் விழிகளில் ஈரம் பெருக்கெடுத்தது.
“இப்பவும் என்ன சூர்யா? நீங்க ரொம்ப அறிவா இருக்கீங்க. கண்டிப்பா உங்கம்மா ஆசைப்பட்ட படி போலீஸா ஆகிடுவீங்க. அழாதீங்க சூர்யா எனக்குக் கஷ்டமா இருக்கு” என்று யமுனா சொல்ல விழிகளில் ஈரத்துடன் ஒரு இதழ் புன்னகை அவனிடம்.
“ரிக்ஷா இருக்கே அதுல போவோமா?” என்று யமுனா கேட்க
“கால் வலிக்குதா உனக்கு?” என்று கேட்டவன்
“பஸ்ல போகலாம் இல்லையா ஆட்டோவில போகலாம் யமுனா. எனக்கு ரிக்ஷால போக இஷ்டமில்லை, பாவம் இரண்டு பேரை வைச்சு ஒருத்தர் மிதிக்கனும்” என்று சொல்ல அவனின் கருணை உள்ளத்தில் கவர்ந்திழுக்கப்பட்டாள் பெண்.
அவளின் அப்பா சற்குணப்பாண்டியன் எல்லாம் அடுத்தவரை பற்றியோ அவரின் கஷ்டம் பற்றியோ சிந்திக்கவே மாட்டார். வேலையாட்களை அவர் நடத்தும் விதம் கண்டு அவளுக்கு வருத்தமாய் இருந்தாலும் ஒன்றும் பேசிவிட முடியாது.
“என் கூட நடக்க கஷ்டமா இருக்கா யமுனா?” என்று சூர்யா கேட்க
“இல்லை சூர்யா, நீங்க டயர்டா இருக்க மாதிரி இருந்துச்சு. அதான்”
“எனக்கு ஒன்னுமில்ல, இப்படி பேசிட்டே நடக்கிறது நல்லாதான் இருக்கு”
“யமுனா! இன்னும் டூ மந்த்ஸ்ல எனக்கு இந்த இயர் முடிஞ்சிடும். அப்புறம் இப்படியெல்லாம் நம்ம பார்க்க முடியாது” என்று சொல்லி அவளின் முகத்தைப் பார்க்க
“ஓஹ், ஆமால”
“என்னையெல்லாம் மிஸ் பண்ணுவியா? உனக்குக் கஷ்டமா இல்லையா நாங்க எல்லாம் போய்டுவோம்னு”
“வருத்தமாத்தான் இருக்கும். எத்தனை நாள் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கீங்க? ஆனாலும் படிச்சிட்டா இங்கவா இருக்க முடியும்? நானும் கூட இரண்டு வருஷம் கழிச்சு போய்டுவேன் தானே?” என்று அவள் பேசிய பேச்சில் உள்ளே அவ்வளவு கோபம். இவள் என்னை என்னவாகத்தான் நினைக்கிறாள் என்ற கேள்வி பெரிதாய் எழுந்து பெருந்தவிப்பைத் தந்தது.
“எப்படியும் ஸ்டாலின் அண்ணாவுக்கும் கோகிக்கும் கல்யாணம் நடக்கும்போது நான் வருவேன், நீங்களும் உங்க ஊர்ல இருந்து வாங்க சூர்யா. நம்ம பார்க்கலாம், அதுக்குள்ள எங்கப்பாரு எனக்குக் கல்யாணம் பண்ணி வைச்சிடுவார்” என்றதும் தவிப்பு தகிப்பாய் மாறி அலைகள் அவன் அகத்தில் வேகமாய் வீசியது.
எவ்வளவு எளிதாய் இவள் பேசுகிறாள். இவள் எண்ணத்தில் கலந்து காதலாகி என்று இதெல்லாம் நடக்கும் என்று ஏக்கம் கொண்டது அவன் மனம்.
“உனக்கு வேணும்னா ஆட்டோ கூப்பிடவா?”
“இல்லை, பேசிட்டே நடந்தா தெரியாது”
“அப்போ பேசு”
“எங்கிட்ட என்ன இருக்கு பேச? நீங்கதான் நிறைய படிக்கிறீங்க, நிறைய தெரிஞ்சு வைச்சுக்கிறீங்க, படம் பாட்டுன்னு எல்லாம் தெரியுது. அதே நேரம் படிப்புல கெட்டி. நீங்க பேசுங்க நான் கேட்கிறேன்” என்றாள்.
மௌனத்தில் தூரத்தை இருவரும் கடக்க, அவள் சொல்லவும் மெல்ல பேச்சுக்கொடுத்தான் சூர்யா.
“நீ மரோ சரித்ரா படம் பார்த்திருக்கியா யமுனா?” என்று கேட்க
“இல்லையே, என்ன படம் அது?” என்றாள்.
“கமல் ஹாசன் படம் மெட்ராஸ்ல கூட நல்லா ஓடிச்சுன்னு சொன்னானே ஸ்டாலின்”
“அய்யோ கமல் படமா? எங்க வீட்ல கமல் படம் எல்லாம் பார்க்க விடமாட்டாங்க. நான் இதுவரைக்கும் ஒரு படம் பார்த்ததில்லை.” என்றாள் அவசரஅவசரமாய்.
பாவையின் பாவனையை ரசித்தவன்
“அந்த படத்துல ஒரு தெலுங்குப் பொண்ணு தமிழ் பையனை லவ் பண்ணுவா” என்று சொல்லி அவள் முகம் பார்க்க, அவளோ அதுக்கென்ன என்ற பாவனையில் அவனைப் பார்த்தாள்.
“எதுக்கு இப்படி ஊர்விட்டு மொழி தெரியாம லவ் பண்ணனும், அவங்க வீட்ல ஒத்துப்பாங்களா?” என்று யமுனா கவலையாகக் கேட்க
“அது எப்படி அவங்க வேற ஜாதியா இல்ல இருப்பாங்க. எங்க ஊர்ல எல்லாம் இப்படி செய்யவே மாட்டாங்க. இந்த மாதிரி எல்லாம் நடிக்கிறது பார்த்துக் கெட்டுப்போய்டுவோம்னு தான் எங்கப்பா அவர் பார்த்து அவருக்குப் பிடிச்சாதான் எங்களைப் படமே பார்க்க அழைச்சிட்டுப் போவார்” என்றாள்.
“உங்கப்பாவை விடு, உன்னோட தாட் என்ன? நீ லவ் பத்தி என்ன நினைக்கிற?” என்று கேட்க
“அதைப்பத்தி எல்லாம் நான் ஏன் நினைக்கப் போறேன், படத்துல பார்த்தோமா விட்டோமான்னு இருக்கனும். எங்கப்பா முன்னாடி காதல்ன்ற வார்த்தையைக் கூட சொல்ல முடியாது தெரியுமா? ஆனாலும் எதுக்கு அப்படி பயந்து பயந்து வீட்டுக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சு லவ் பண்ணனும்? சினிமாவுலதான் காதலர்கள் சேருவாங்க, நிஜத்துல எல்லாம் கஷ்டம்” என்று சொல்லி சூர்யாவின் நிலைமையைக் கஷ்டமாக்கினாள் பெண்.
“வீட்டுல இருக்கவங்களுக்குப் பிடிச்சதெல்லாம் நமக்குப் பிடிக்கனும் இல்லை யமுனா, சினிமான்னு இல்ல நிஜத்துல கூட லவ் பண்ணினவங்க சேருவாங்க. நமக்கு ரொம்ப பிடிச்சவங்களைப் பார்க்கும்போது இந்த பிரின்ஸீபல்ஸ் எல்லாம் செட் ஆகாது” என்றான்.
“படம் பார்த்து ரொம்ப கெட்டுப்போயிருக்கீங்க நீங்க” என்று சொல்லி சிரித்தாள் யமுனா. யமுனாவைப் பொறுத்தவரையில் காதல் எல்லாம் திரையில் நடக்கும் சம்பவங்களே.
“ஏன் யமுனா இவ்வளவு பேசுறியே உங்க வீட்ல பசங்க கூட பேசக் கூடாதுன்னு சொல்வாங்கனு, எங்கிட்ட மட்டும் பேசுற?” என்று கொஞ்சம் கிண்டலாய்க் கேட்டாலும் அவளின் மனதை அறிய நினைக்கும் கேள்வி அது.
“நீங்க நல்ல பையனா இருக்கீங்க. அதைவிட ஸ்டாலின் அண்ணா ப்ரண்ட், கோகிக்கு பசங்களைப் பத்தி நல்லா தெரியும். அவ நீங்க நல்லமாதிரியா இல்லைன்னா என்னைப் பேசவே விட்டிருக்க மாட்டா” என்றாள்.
“ஓஹ், அப்போ கோகிலாவுக்காகவும் ஸ்டாலினுக்காகவும்தான் எங்கிட்ட பேசுற? என் மேல நம்பிக்கையில்லை” என்றான் ஒரு மாதிரி குரலில்.
“அப்படி எல்லாம் இல்லை. அவங்க சொன்னதால உங்க கூட பேச ஆரம்பிச்சாலும் நீங்களும் நல்லமாதிரி இருக்கீங்களே, அதனாலதான் தைரியமா பேச முடியுது. எங்க வீட்ல நீங்க சொன்ன மாதிரி பயலுங்க கூட பேசக்கூடாதுன்னுதான் எங்கம்மா சொல்லும், ஆனா நீங்க ஒன்னும் எங்கிட்ட தப்பா பேசலையே” என்றவளின் பேச்சை ஆமோதித்து தலையசைத்தான்.
அப்படியே நடந்து கல்லூரி அருகே வந்துவிட்டனர். யமுனா அவனிடம் விடைப்பெற்று செல்ல, அவள் ஒத்துக்கொண்டாலும் சரி இல்லையென்றாலும் காதலை சொல்லிவிட முடிவெடுத்தான். மனதுக்குள் வைத்து மறுக முடியாது என்று முடிவு செய்தான். ஆனால் முடிவை செயல்படுத்துவதில் மிகுந்த சிரமமும் சிக்கலும் அவனுக்கு இருந்தது.
அப்படி எதேச்சையாக ஒரு நாள் கன்னிமரா லைப்ரரியில் அவளைப் பார்க்க, அவன் பேச நினைக்கும் முன்னே இவனைக் கண்டு மலர்ந்த முகத்துடன் வந்தாள் மங்கை. அது என்னவோ சூர்யா அவள் பார்த்த ஆண்களில் வேறாகத் தெரிய அவனிடம் பேசும்போது இருக்கும் நட்புணர்வு இதுவரை யாரிடமும் தோன்றியது இல்லை.
அதிலும் அவனின் தெலுங்கு வாசமுள்ள தமிழ்ப்பேச்சு எல்லாம் தயலுக்கு தளிர்மழை பொழியவைக்கும். இப்படியும் ஆண்கள் இருக்கிறாள், தன்மையாய்ப்ப் பேசுவார்கள் என்று எல்லாம் உணர்த்தியவன் சூர்யாதான்.
அவனைக் கண்டது சந்தோஷமாய் இருந்தாலும் என்ன பேசுவதென தெரியவில்லை பெண்ணுக்கு. அர்த்தமற்ற அவசியமற்ற பேச்சுகள் இதுவரை அவள் பேசியதில்லை. அதனால் ” நல்லா இருக்கீங்களா சூர்யா? எக்ஸாம்ஸ் வரப்போகுதுல. படிச்சிட்டீங்களா?” என்று பொதுவாய்க் கேட்க
“ம்ம், படிச்சிட்டு இருக்கேன்” என்றான்.
“ஸ்டாலின் அண்ணா உங்க கூட வரலையா?”
“அவன் மாடியில ராமு கூட உட்கார்ந்து படிக்கிறான்” என்றான்.
“சரி நீங்க படிங்க, நான் கிளம்புறேன்” என்று சொல்லி யமுனா அவன் காதல் சொல்ல நினைப்பதற்குள் காற்றாய்க் கிளம்பிவிட்டாள்.
இப்படி அவளுக்காக காத்திருந்தால் காலமெல்லாம் காத்திருக்க வேண்டும் என்று நினைத்த சூர்யா ஸ்டாலினிடம் இது பற்றி சொல்ல, ஒரு நாள் ஸ்டாலின் கோகிலாவிடம் யமுனாவை அழைத்து வர சொல்லி ராணி அக்கா வீட்டில் இருந்து போன் செய்தான்.
“எனக்கு உடம்பு சரியில்லை ஸ்டாலின், எப்படியும் சனிக்கிழமையான காலையில அவ மேகலா கூட பார்த்தசாரதி கோவிலுக்கு வருவா. அப்போ வேணும்னா போய் பேசுங்க, நீ கூட போ, சூர்யாண்ணா பேசி யமுனா பயந்துட்டா அவளைப் பத்திரமா அழைச்சிட்டு வந்து விட வேண்டியது உன் பொறுப்பு” என்று மிரட்டியே போனை வைத்தாள்.
அந்த வார சனிக்கிழமை மேகலாவிற்கு வர முடியாது போய்விட, யமுனா மட்டும் பெருமாளிடம் செமெஸ்டரில் எல்லாவற்றிலும் பாஸானால் வாரம் தவறாமல் வருகிறேன் என்று சொன்னதிற்கேற்ப தனியாகவே பார்த்தசாரதி கோவிலுக்குப் பேருந்து பிடித்துப் போனாள்.
தனியே போகிறோமே என்று ஒரு பயம் இருந்தாலும் அடிக்கடி வந்த பழக்கம் இருக்க, கோவில் உள்ளே நுழைய, அங்கே பார்த்தசாரதிக்கு முன் சூர்ய நாராயணனைப் பார்த்து விட “சூர்யா!” என்று சந்தோஷ மிகுதியில் அழைத்துவிட்டாள்.
அவளையும் அறியா ஒரு ஈர்ப்பு அவன் மீது இருக்க, தீடீரென காணும்போது தித்தித்த கணமாகிப் போனது யமுனாவிற்கு. சூர்யாவிற்கு அவள் குரல் கேட்கவும் திக் திக் கணங்கள்.
“எதுனாலும் இன்னிக்கு ஒரு முடிவு தெரிஞ்சிடும் டா, சொல்லிடு” என்று ஸ்டாலின் நண்பனிடம் சொல்லிவிட்டு தனியே போய் நின்று கொள்ள நினைத்தவன்
“டேய் டென்ஷனாகி தெலுங்குல பேசிடாத, அந்த பொண்ணுக்குப் புரியாம போயிடப்போவுது. இல்லைன்னா நான் கூடவே நிக்கவா?” என்று கேட்க
“ஏன்ட்ரா ஸ்டாலின்? நான் பார்த்துக்கிறேன்” என்றான் கொஞ்சம் டென்ஷனாக. ஸ்டாலினைக் கண்டும் யமுனாவிற்கு சந்தோஷமாக இருந்தது. தனியாக வந்திருக்கிறோம் என்று நினைத்தவளுக்குத் தெரிந்தவர்கள் துணையாக இருக்கிறார்கள் என்பதில் ஒரு துணிவு பிறக்க
“அண்ணா எப்படி இருக்கீங்க? கோகி வருவாளா என்ன?” என்று கேட்டாள்.
“சாமி கும்பிட்டு வரேன் ண்ணா” என்று யமுனா போக, கூடவே சூர்யாவும் ஸ்டாலினும் சென்றனர். பார்த்தசாரதியை வணங்கி விட்டு ஆண்டாள் சன்னதியில் தரிசனம் முடிந்து மூவரும் நடக்க, ஸ்டாலின் அங்கேயே ஒரு ஓரமாய் தூண் அருகே உட்கார்ந்து கொண்டான்.
“யமுனா!” என்று அழைத்து நிறுத்திய சூர்யா
“உங்கிட்ட நான் பேசனும்” என்றான்.
“சொல்லுங்க சூர்யா” என்ற யமுனா துளசியை வாயில் போட்டுக்கொண்டு அவனைப் பார்த்தாள்.
“இதை சொல்லாம என்னால இருக்க முடியல யமுனா, ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றவன் மெல்ல மூச்செடுத்து பேச்சைத் துவங்கினான்.
“ஐ ப்ராமிஸ் யமுனா உன்னை ப்ரஸ்ட் டைம் பார்க்கும்போது எனக்கு ஒன்னுமே தெரியல. உன்னை நான் காலேஜ் சேர்ந்த அப்பவே பார்த்துட்டேன். அப்புறம் என்.எஸ்.எஸ் கேம்ப்ல கலங்கின கண்ணோட உன்னைப் பார்த்தப்போ உன்னை அழ விடக் கூடாதுன்னு எனக்குள்ள ஒரு உணர்வு. தென் உன்னைப் பார்த்துட்டே இருக்கனும்னு தோணிட்டே இருந்துச்சு, பார்க்கவும் செஞ்சேன்”
பாவைக்கு பதட்டம் தொற்றியது அவன் பேச்சில். ஆனாலும் தடுக்க முடியா வண்ணம் காதல் நிறைந்த வார்த்தையால் வஞ்சியைக் கட்டிப்போட்டான்.
“ஒவ்வொரு தடவையும் ஸ்டாலினுக்காக நான் வரல, உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். உன்னோட இருக்கும்போது பேசும்போது என்னோட ஃபீலிங்க்ஸை என்னால எக்ஸ்ப்ளேன் செய்ய முடியல யமுனா. நுவ்வு நா ப்ரியத்தம்மா டா” என்றவனின் வார்த்தைகள் அத்தனையிலும் காதல், காதல் தான்!!
“நுவண்ட்டே நா ப்ராணம், ப்ரேமம். நுவ்வு நா சர்வம் யமுனாம்மா. நீன்னா எனக்கு ரொம்ப ரொம்ப இஷ்டம் யமுனா. மீரு நா லைஃப். எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கனும் யமுனா. உன்னைத் தவிர யாரையும் என்னால அப்படி யோசிக்கவே முடியல. நுவண்ட்டே நா லோகம்” என்று சூர்யா தன் உள்ளத்தில் தழும்பிய காதலை உணர்ச்சிவசத்துடன் சொல்லி முடித்து கண்களில் காதலும் கூடவே இத்தனை நாள் உணர்வினை வெளிக்காட்டிய மகிழ்விலும் தளர்விலும் விழிகளில் ஈரமாய் தன் முன் நின்றவளைப் பார்க்க யமுனாவோ அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.
“சூர்யா! நான் உங்களை அப்படி எல்லாம் நினைக்கல. நீங்க சொல்றது முழுசா தெரியலன்னாலும் எனக்குப் புரியுது. வேண்டாம் சூர்யா” என்று சொன்ன யமுனாவிற்கு கண்களில் கலக்கம்.
“யோசிச்சு சொல்லு யமுனா, இன்னும் ஒரே மாசம். நான் காலேஜ் முடிச்சிடுவேன், உனக்காக காலேஜ் லாஸ்ட் டே அன்னிக்கு லைப்ரரியில வெயிட் பண்றேன். உன்னோட பதிலை அன்னிக்கு சொல்லு” என்றான் சூர்யா.
தனது தடுமாற்றம் தீர்த்து தன் மனம் சொன்னவன் பெண் மனதில் புது வகை தடுமாற்றம் தந்தான்.!
‘உன்னோடு தான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீ தானம்மா என் தாரம்
மாறாதம்மா என் நாளும்’