“தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவருக்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே!”
அபிராமி அந்தாதியை முணுமுணுத்த படியே சுவாமி படங்களுக்கு பூ வைத்துக் கொண்டிருந்தார் வேம்பு. அபியின் பாட்டி.
சுவாமி படங்களுக்கு பூ வைத்து முடித்தபின், தன் கணவர் நல்ல சிவம் படத்திற்கு அருகில் வந்தவர், அந்த போட்டோவையே உற்றுப் பார்த்து, “நம்ம அபிக்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்குங்க. அவளை ஒரு நல்ல குடும்பத்தில் கல்யாணம் முடித்து வைத்து விட்டால் போதும், அந்த திருப்தியோட நானும் உங்க கிட்ட வந்து சேர்ந்துடுவேன்!” என்று வாய் விட்டே சொல்லிக்கொண்டே பூ வைத்தவர், பின் அந்த சுவாமி அறையில் இருந்த ஒரு பழைய டிரங்க் பெட்டியைத் திறந்து அதில் இருந்த ஒரு படத்தை எடுத்தார்.
அதை தன் புடவையைக் கொண்டே துடைத்தவர், அந்த போட்டோவைப் பார்த்தும் பேசினார். அது பவித்ராவின் படம்! அபியின் அம்மா! அப்படியே அபியைப் போலவே இருந்தாள்!
அந்த போட்டோவையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவரின் நினைவுகள், அப்படியே 22 ஆண்டுகள் பின்னோக்கி சென்றன!
——————-
“உன் பெயர் என்ன? Bavithra ஆவா Pavithra ஆவா?” என்றுக் கேட்டான் கௌஷிக்! அது கோடை விடுமுறை.
அவன் அப்போது தான் PG முடித்திருந்தான். அவன் அம்மா வேம்புவும் அப்பா நல்லசிவம் இருவருமே ஆசிரியர்கள்!
அந்த ஊரில் இருந்த அரசு உதவி பெரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் பணி புரிந்தனர்! அந்த பள்ளியே, பவித்ராவின் பெரிய தாத்தாவிற்கு சொந்தமானது.
தற்போது அவள் பெரியப்பா தான் கரஸ்பாண்டன்ட் ஆக இருக்கிறார்.
அவர்களது குடும்பம் பெரிய பண்ணை என்று அழைக்கப்படும் குடும்பம். பவித்ராவின் குடும்பம் சின்னப் பண்ணை!
அந்த காலத்திலேயே சொத்துக்களைப் பிரித்துக் கொண்டுவிட்ட இரு குடும்பக்களுக்கிடையே நல்லஇணக்கம் என்றுமே இருந்ததில்லை! ஆனால் சண்டையும் போட்டுக் கொள்ள வில்லை.
பவித்ராவே அந்த பள்ளியில் தான் படித்துக் கொண்டிருக்கிறாள்! தற்போது பிளஸ் டூ எழுதி இருக்கிறாள்.
அவளுக்கு இந்த இங்கிலீஷ் தான் தகராறு! அவளுக்கு மட்டும் இல்லை, அந்த ஊரில் இருந்த பெரும்பாலான மாணவர்களுக்கு!
அதனால் தான் இந்த லீவில் கௌஷிக் ஒரு சம்மர் கேம்ப் மாதிரி நடத்தி ஆங்கிலம் எடுத்துக் கொண்டிருந்தான்!
அவனைத் தன் சக்திக்கும் மீறி ஊட்டி கான்வென்டில் படிக்க வைத்து இருந்தார் வேம்பு!
இங்கே இவர்கள் இருவருமே ஆசிரியர்கள் என்பதால், அவனை எந்த ஆசிரியரும் சரியாக கண்டிக்க வில்லை.
கொஞ்சம் சலுகை காட்டவே, அவனை ஹாஸ்டலில் சேர்த்தார்!
அவனும் நன்றாகவே படித்தான். என்ன.. நடை உடை பாவனை எல்லாம் கொஞ்சம் அதி நாகரிகமாக, கொஞ்சம் வெஸ்டெர்ன் ஸ்டைலில் மாறி விட்டது!
கூடவே இந்த நுனி நாக்கு ஆங்கிலமும்! இதெல்லாம் இந்த ஊருக்கு கொஞ்சம் ஓவர் தான்!. ரொம்பவே தனியாக காட்டின அவனை!
வேம்புவும் அவரது கணவரும் வீட்டில் டியூஷன் வகுப்புகள் எடுத்தார்கள். மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும்!
அந்த வகையில் அவர்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களது பெற்றோர், “இந்த லீவில் கொஞ்சம் கௌஷிக் தம்பிய கொஞ்சம் இங்கிலீஷ் கிளாஸ் எடுக்க சொல்லுங்க டீச்சர்! நம்ம பசங்க, இன்ஜினியரிங் சேரப் போறாங்க. அங்க போய் கொஞ்சம் தடுமாறாம இருப்பாங்க!: என்று கேட்டார்கள்.
வேம்பு அவனிடம் கேட்டுவிட்டு, பின் சம்மதித்தார்! கூடவே கௌஷிக்குக்கும் அறிவுரை கூற மறக்க வில்லை!
“உன்னை ஒரு குருவாக நினைத்து உன்கிட்ட படிக்க வராங்க, அதை நீ எப்பவும் மறக்க கூடாது! வர்றது பாய்ஸ் இல்ல கேர்ள்ஸ் யாராக இருந்தாலும் உன் பார்வை, ஒரே மாதிரி தான் இருக்கணும்! பார்த்துப் பொறுப்பா நடந்துக்கோ!”
கௌஷிக்கும் அதன் படி தான் நடந்தான்!
முதலில் மாணவர்கள் மட்டுமே வந்தார்கள்! அதைத் தொடர்ந்து இப்போது மாணவிகளும் வர தொடங்கியிருந்தார்கள்!
அவர்களுக்கெல்லாம் முதலில் ஒரு ஆரம்ப நிலை டெஸ்ட் வைத்து, அவரவது ஆங்கில அறிவைச் சோதித்து, பின் அவர்களை பல்வேறு லெவல் பேட்ச்களாக பிரித்தான்.
அந்த வகையில், பவித்ரா ஆங்கிலத்தில் ரொம்பவே வீக்காக இருந்தாள்! அவள் குடும்ப சூழ்நிலை அந்த மாதிரி!
வெறும் SSLC போதும் என்ற நினைப்பு அவர்கள் வீட்டில் இருந்தது! அதுவும் ஆண்களுக்கு மட்டும் தான்.
பெண்களுக்கு அதுவும் தேவையில்லை! நாம் என்ன வேலைக்கா அனுப்பப் போகிறோம்! நம் சொத்தே, பல தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு இருக்கு! என்ற மைன்ட் செட் உள்ளவர்கள்!
ஆனால் பவித்ராவுக்கோ, தன் பெரிய தாத்தா குடும்பத்தினர் மாதிரி நிறைய படிக்க வேண்டும், நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும், தன் கணவன் குழந்தையுடன் வீட்டில் கூட ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றெல்லாம் மிகுந்த ஆசை இருந்தது!
பெரிய பண்ணை குடும்பத்தில் எல்லோரும் படித்தவர்கள். அவளின் பெரியம்மாவே எம்பில் படித்தவர். அவர் பள்ளி நிர்வாகத்தில் பெரிய உதவியாய் இருந்தார்!.
அவரது மகன்களோ, இன்ஜினியரிங் படித்துவிட்டு, அமெரிக்க்காவில் பணி புரிந்தனர். அவர்களது மனைவியரோ,அதி நாகரிக பெண்மணிகள்!
ரெண்டு குடும்பமும் ஒன்றாக சந்திக்கும், கோவில் திருவிழாக்களில், பவித்ரா அவர்களைக் கண்டு பிரமிப்பாள்!
அவர்கள் குடும்பம் போல் பகை பாராட்டாது, அவர்கள் வீட்டுப் பெண்கள், இவளைப் பார்த்தால், இணக்கமாகவே புன்னகை செய்வார்கள்!
பவித்ராவுக்கும் அவர்கள் போல் படிக்க வேண்டும், அட்லீஸ்ட் ஒரு டிகிரியாவது வாங்க வேண்டும். ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று ஆசை!
வீட்டில் அடம்பிடித்து, உண்ணாவிரதம் எல்லாம் இருந்து தான், இந்த கிளாசில் சேர அனுமதி பெற்றாள்!
அவளது வீட்டினரும், இப்போதெல்லாம் கல்யாணப் பத்திரிகையில் பெண் பெயருக்குப் பின்னால் ஒரு டிகிரி போடுகிறார்கள்! அதுக்காகவாது, படிக்கட்டும், என்று பெரிய மனது பண்ணி, கல்லூரி சேர அப்ளிகேசன் வாங்கியிருந்தார்கள்!
இப்போது வகுப்பில், கவுசிக் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தயங்கி நின்றாள்! இத்தனை பேர் முன்னிலையில்!
“உன்ன தான் கேட்கிறேன்” கவுசிக் மீண்டும் கேட்டான்!
“உன் பெயர் என்ன? Bavithra ஆவா Pavithra ஆவா?”
“Pavithra தான்!”
“அப்ப ஏன் உன் டெஸ்ட் பேப்பரில் Bavithra என்று எழுதியிருக்க?”
“அது.. வந்து.. ஸ்கூல் சேர்க்கும் போது, இந்த மாதிரி ஸ்பெல் பண்ணிட்டாங்க! அது தான் நான் அதையே எழுத வேண்டியிருக்கு!”
அவளுக்கு தன் வீட்டினரை நினைத்து கொஞ்சம் அவமானமாக இருந்தது! அப்பவே ஸ்கூலில் சொல்லியிருக்காங்க, ஆனால் அவள் தந்தையின் ஈகோ இது தான் கரெக்ட் என்று சொல்ல வைத்தது!
அந்த வகுப்பில் பவித்ரா தான் வீக்காக இருந்ததால், அவளை ஊக்கிவிக்கும் நோக்கில், அவளைக் கொண்டே தன் இங்கிலீஷ் கான்வர்சேசன்களை நடத்துவான் கவுசிக்!
அவளிடமும் விரைவில் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தது!
இது அந்த வகுப்பில் இருந்த ஒரு மாணவிக்கு கொஞ்சம் பொறாமை அளிக்கவும் செய்தது!
வகுப்பில் கொஞ்சம் கண்டிப்புடன் தான் இருப்பான் கவுசிக். கூட படிக்கும் பெண்பிள்ளைகளைத் தொடர்ந்து, வம்பு பண்ணிக் கொண்டிருந்த ஒரு பையனைக் கூட கண்டித்து வைத்திருந்தான்!
ஆனால் அந்த பையன் இங்கு வந்ததே, மாணவிகளை சைட் அடிக்கவும், பேரை தெரிந்துக் கொண்டு வம்பு இழுக்கவும் தான் என்பதை கவுசிக் அறிய வில்லை!
அன்று.. வேம்புவின் உறவினர் வீட்டுக்கல்யாணத்திற்கு முதல் நாள் மாலையே அவரும் அவரது கணவரும் தஞ்சை சென்றுவிட, கவுசிக் மட்டும் வீட்டில் தனியே இருந்தான்.
அன்று அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை விட்டு விட்டார்கள்!
இது முதல் நாள் லீவ் போட்டிருந்த பவித்ராவுக்கு தெரியாது! அவள் வகுப்புக்கு கிளம்பி போய்க் கொண்டிருந்தாள். வழியில் அந்த பொறாமைக்கார மாணவி எதிர்பட்டாள்.
“கீதா நீ கிளாசுக்கு வரல?” கேட்டாள் பவித்ரா.
அவளிடம் இன்று வகுப்பு லீவ் என்று சொல்லாமல், “இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவேன்!” என்று பொய் சொன்னாள் அவள்!
போய் அலைந்துவிட்டு திரும்பி வரட்டும் என்று “நல்ல” எண்ணம் அவளுக்கு!
பவித்ரா தனியே நடந்து செல்வதை அந்த விஷமக்கார மாணவனும் பார்த்தான்!
அவளிடம் பேச்சுக் கொடுத்தான். அவளோ அவனைக் கண்டுகொள்ளவே இல்லை, தன் பாட்டிற்கு நடந்து சென்றாள்!
இது அவனுக்கு மிகுந்த ஆத்திரத்தை கொடுத்தது! அவளைப் பின் தொடர்ந்தான்!
வேம்பு வீடு வந்து விட்டது. உள்ளே சென்றாள் பவித்ரா. வாசலில் எப்போதும் குவிந்துக் கிடக்கும் மாணவர்களது செருப்புகளைக் காணவில்லை, சைக்கிள்களையும் காணவில்லை!
கொஞ்சம் குழப்பத்தோடே தான் உள்ளே சென்றாள்!
அங்கே அப்போதுதான் குளித்துவிட்டு, வெறும் த்ரீபோர்த் மட்டும் அணிந்து, வெற்று மார்புடன் தலைத் துவட்டிக் கொண்டிருந்தான் கவுசிக்!
உள்ளே நுழைந்த பவித்ரா, அவனை இப்படிக் கண்டதும், கொஞ்சம் பதறி, தயங்கி திரும்பி நின்றுக் கொண்டாள்!
“இன்னைக்கு கிளாஸ் லீவ் பவித்ரா, உனக்கு தெரியாதா?” என்றான் கவுசிக்.
“சாரி சார், நான் நேற்று லீவ். அதான் எனக்கு தெரியவில்லை. சரி சார், நான் கிளம்புகிறேன்”, என்று திரும்பியவள் “வீல்” என்றுக் கத்திக்கொண்டு அவன் அருகே சென்றாள்!
அவள் தோள் மீது ஒரு பெரிய மரப் பல்லி விழுந்து இருந்தது! அதைப் பார்க்க, அவனுக்கே கொஞ்சம் பயமாக அருவருப்பாக இருந்தது! அவள் தோளில் இருந்து, தன் டவல் கொண்டு தட்டி விட்டான்.
அவள் பயத்தில் அவனைக் கட்டிக் கொண்டாள். அவள் உடல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது!
சரியாக அந்த நேரத்தில், அந்த விஷமக்கார மாணவனும் வந்து விட்டான்! வந்தவன், சும்மா இல்லாது, தான் அப்போதுதான் புதிதாக வாங்கியிருந்த, கேமரா போன் மூலம், கவுசிக்கும் பவித்ராவும் இருக்கும் நிலையை போட்டோ எடுத்துவிட்டான்!
இதைக் கண்டுவிட்ட, கவுசிக், விரைந்து அவனிடம் வந்து, “ஏய்.. நில்லு” என்று அவனைப் பிடித்துக் கொண்டான்!
“பவித்ரா நீ சீக்கிரம் வீட்டுக்குப் போ” என்று அவளைப் போக சொன்னான்.
பின் அந்த மாணவனிடமிருந்து, அந்த போனை வாங்க முயன்றான்!. அவன் திமிறி மறுக்கவே, ஓங்கி ஒரு அறை விட்டான்! அப்பவும் அவன் தர மறுத்தான்!
“சும்மா இந்த பொண்ணுங்க கிட்ட பேசுனதுக்கு என்னை எப்படி திட்டின? நீ இப்ப என்ன பண்ணியிருக்க?”
“ஏய் தப்பா பேசாத..நீ பார்த்தது ஒரு ஆக்சிடன்ட் மாதிரி நடந்தது! நீ ஏதாவது கதைக் கட்டி விடாதே! மொதல்ல அந்த போனை கொடு என்கிட்ட!”
“மாட்டேன்!”
மீண்டும் ஒரு அறை! இப்போது சற்று பலமாகவே! அந்த பையனின் உதடு கிழிந்து இரத்தம் வந்தது!
அதைக் கண்டு கவுசிக் கொஞ்சம் தயங்கிய வேளை, அவன் கொஞ்சம் பலமாக திமிறிக் கொண்டு கவுசிக் கையில் இருந்து விடுபட்டு ஓடி விட்டான்!
ஊர் பஞ்சாயத்தை கூட்டி விட்டார்கள்!
பஞ்சாயத்து தலைவருக்கும் சின்ன பண்ணை சிவனேசனுக்கும் எப்போதுமே ஆகாது! தன்னை ஒரு பஞ்சாயத்து தலைவராக மதிக்காத சிவநேசனின் மீது எப்போதும் ஒரு காழ்ப்புணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும் அவர்க்கு!
இப்போது அந்த சின்ன பண்ணையின் பெண் சம்பந்தபட்டிருக்கிறாள் என்று தெரிந்தவுடன், மிகுந்த ஆவலுடன் இந்த பஞ்சாயத்தைக் கூட்டி விட்டார்.
“என்ன சொல்றீங்க டீச்சர்? நல்லசிவம் சார் நீங்க சொல்லுங்க, உங்க பையன் இவர் பையனை இரத்தக் காயம் வரும்வரை அடித்து இருக்கான்! இதுக்கு என்ன சொல்றீங்க? “கேட்டார் அவர்.
“தம்பி நீ சொல்லுப்பா, நீ ஏன் அவனை இப்படி அடிச்சுருக்க?”
“அது.. வந்து.. அவன் கிளாஸ்ல கொஞ்சம் மிஸ் பீகேவ் பண்ணினான்! அதுக்கு தான் அடித்தேன்!” என்றான் பவித்ராவை இதில் இழுக்கக் கூடாது என்று!
“பொய்! பொய் சொல்றார் இவர்! இவர் அந்த பவித்ரா பொண்ணுகிட்ட நெருக்கமா இருந்தத பார்த்து, நான் தட்டிக் கேட்டேன், அதுக்குதான் அடித்தார்” என்றான் கூசாமல்! அவனுக்கு அப்படி சொல்லித் தந்திருந்தார்கள்!
“ஏய், அபாண்டமா ஒரு பொண்ணு மேல் பழி சொல்லாதே!” கத்தினான் கவுசிக்!
“எது பொய், என்கிட்ட ஆதாரம் இருக்கு!” என்று அவன் மொபைலில் இருந்த போட்டோவைக் காட்டினான்!
“அடப்பாவி!” என்று கத்திக்கொண்டு அவனை அடிக்க ஓடினான் கவுசிக்!
“ஏப்பா நில்லு, எங்க முன்னாடியே அவன அடிக்கப் போற?” தடுத்து நிறுத்தி, அந்த மொபைலை வாங்கிப் பார்த்தார்கள் பஞ்சாயத்தார்!
“இதுக்கென்ன சொல்றீங்க டீச்சர்?” வேம்புவிடம் அதைக் காட்டினார்கள்!
“என்ன நடந்ததுன்னு மொதல்ல விசாரிங்க, அப்புறம் மேற்கொண்டு பேசலாம்” என்றார் அவரும்.
கவுசிக் நடந்ததைக் கூறினான்.
உடனே அவர்கள் அவன் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சிலரை விசாரித்தார்கள்.
அவர்களும் கவுசிக் பவித்ராவிடம் பேசிக் காட்டிதான் சார் தங்களுக்கு கிளாஸ் எடுப்பார் என்பதை கொஞ்சம் யதார்த்தமாக சொல்ல போக, அதுவே இங்கு வினையாகிற்று!
மேலும் அந்த கீதா வேறு, “அன்று டியூஷன் லீவ், ஆனா பவித்ரா டியூஷனுக்கு போய்கிட்டிருந்தா. நான் இன்னிக்கு டியூஷன் லீவ், அப்புறம் ஏன் போறன்னு கூட கேட்டேன். பரவாயில்ல.. சும்மா போய் பார்த்திட்டு வரேன்னு சொல்லிட்டு போனா!” என்று அடுத்த பொய் சாட்சி சொல்ல, பவித்ராவுக்கு ஓவென்று கதறி அழத் தோன்றியது!
அவள் கண் முன்னே அவள் எதிர்காலம் சோக மயமாக, அவள் கனவுகள் தரைமட்டம் ஆகப்போவது தெரிந்தது! கண்டிப்பாக, தன்னை, தன் சொந்தத்தில் ஏதாவது ஒரு உருபடாத பையனுக்கு அவசர அவசரமாக, கல்யாணம் முடித்து, வைக்கப் போகிறார்கள் அவள் வீட்டில்!
காலத்திற்கும் அவன் காலடியில் அடிமையாய் கிடக்க வேண்டியதுதான்! மேலும் இப்படி பஞ்சாயத்து எல்லாம் ஆன பிறகு, கண்டிப்பாக அந்த உருபடாத மாப்பிள்ளை தன்னை குத்திக் காண்பித்து கொடுமையும் படுத்தலாம். அவளுக்கு மயக்கமே வரும் போலிருந்தது!
மேலும் ஏதோஏதோ பேசி பஞ்சாயத்து தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது!
கொஞ்ச நேரம் கழித்து அவளை உலுக்கி கேட்டார்கள்.
“ஏம்மா நீயும் இந்த கவுசிக் தம்பியும் காதலிக்கிறீங்களா?” அவளை கேட்டார்கள்
“சும்மா பயப்படாம சொல்லும்மா, நாங்க இருக்கோம்!” பஞ்சாயத்து தலைவர் மேலும் அவளை ஊக்கினார். அவருக்கு எப்படியாவது இந்த சின்ன பண்ணையை அசிங்க படுத்திப் பார்க்க வேண்டும்!
,
“சொல்லும்மா”
கொஞ்சம் தயங்கி, எச்சில் விழுங்கிய படி “ஆமாம்” என்றே சொல்லி விட்டாள் பவித்ரா!
கவுசிக் கடும் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்!
அவளோ கண்களால் அவனைக் கெஞ்சினாள்! அந்த கெஞ்சல் பார்வை சட்டென அவனை மவுனம் ஆக்கியது!
“அப்புறம் என்னப்பா, இந்த பிள்ளைகளுக்கு ஒரு நல்ல நாளா பார்த்து, இந்த பஞ்சாயத்தே கல்யாண ஏற்பாடு செய்து விடும்.”
“பண்ணை, நீங்க என்ன சொல்றீங்க? அதெல்லாம் ஒண்ணும் யோசிக்காதீங்க, வேம்பு டீச்சர் குடும்பமும் உங்க அளவுக்கு இல்லன்னா கூட நிலம் நீச்சு, தோப்பு துரவுன்னு உள்ளவங்க தான்.
ரெண்டு பேரும் படிச்சவங்க, இந்த பையன் ஊட்டி கான்வென்டில் படித்தவன்! இப்படி படிச்சக் குடும்பத்தில் சம்பந்தம் வச்சுகிட்டா, நீங்களும் பெரிய பண்ணை குடும்பம் மாதிரி ஆகிடுவீங்க! எல்லாம் நல்லதுக்கு தான்!” என்று சிவநேசனை சீண்டினார் பஞ்சாயத்து தலைவர்!
சிவநேசனோ விருட்டென்று அங்கிருந்து கிளம்பி விட்டார்.
“என்ன நல்லசிவம் சார், நீங்க என்ன சொல்றீங்க? எப்ப கல்யாணம் வச்சுக்கலாம்?”
“என்னங்க பேசுறீங்க. என் பையனுக்கு இப்ப தான் இருபத்து மூணு வயசாவுது. இப்பவே கல்யாணம்னு சொல்றீங்க!. பவித்ராவும் ரொம்ப சின்ன பொண்ணுங்க. அது ஒரு டிகிரி யாவது படிக்கட்டும், அப்புறம் நாங்களே எங்க பையனுக்கு முடித்துக் கொள்கிறோம்” என்றார் வேம்பு!
“என்ன டீச்சர், பிரச்சினையைத் தள்ளிப் போட்டு, முடிக்க பார்க்குறீங்களா?”
“அதானே. படிச்சவர்ல்ல, அதான் அந்த சாமர்த்தியத்த காட்டுறீங்க! ஆனா நாங்க அதுக்கு ஒத்துக்க மாட்டோம்! அடுத்த முகூர்த்தத்தில் உடனே கல்யாணம் இது தான் இந்த பஞ்சாயத்தார் முடிவு! என்னய்யா சொல்றீங்க?” என்று, கூட்டத்தைப் பார்த்துக் கேட்க, அவர்களும் ஒத்துக் கொண்டார்கள்!
அடுத்த முகூர்த்தத்தில் அந்த ஊர் சிவன் கோவிலில் வைத்து சிம்பிளாக கவுசிக்-பவித்ரா திருமணம் நடந்தது.
ஊரில் பாதி சொத்து தன்னுடையதாய் இருக்க, தன் மகள் திருமணம் இப்படி நடக்கிறதே என்று சிவநேசன் மனக்குமுறலுடன், கூடவே அவரது கவுரவம் அடிப்பட்டு போன கோபத்திலும், அதே மனநிலையில் அவரது மகன்களும்!
ஆனால் பவித்ராவின் அம்மா சுந்தரிக்கோ உள்ளுக்குள் ஒரே ஆனந்தம்! எப்படியோ தன் மகள் இந்த குண்டான்சட்டியிலிருந்து வெளியே போய் நல்ல படித்த குடும்பத்தில் வாழப் போகிறாள் என்று! ஆனால் அதை வெளிக் காட்டாது, அவளும் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டாள்!
வேம்புவிற்கும் நல்லசிவத்திற்கும் கூட ரொம்ப வருத்தம் தான்! தாங்கள் கோவில் கோவிலாக சென்று கும்பிட்டு பத்தாண்டு தவமிருந்து பெற்ற தங்கள் மகன் திருமணத்தை எப்படி எப்படியோ நடத்த ஆசைப்பட்டிருக்க, இப்படி பஞ்சாயத்தார் கூடி செய்யும் திருமணம் ஆகி விட்டதே என்று!
கவுசிக் என்ன நினைக்கிறான் என்றே தெரியாத ஒரு முக பாவத்தோடு, சற்று இறுக்கமாக இருக்க, பவித்ராவோ, கடும் குற்ற உணர்ச்சியில்! அவ்வபோது, தன் கண்களால் கவுசிக்கிடம் மன்னிப்புக் கேட்ட படி!
திருமணம் முடிந்து, பஞ்சாயத்தார் அனைவரும் வேம்புவின் வீட்டிற்கு சென்று மணமக்களை விட்டுவிட்டு சென்றனர்.
கூட வந்த சுந்தரி, வேம்புவை தனியே அழைத்துப் போய், “உன்னை நம்பி தான் என் பெண்ணை விட்டுட்டு போறேன் வேம்பு, நானும் உன்ன மாதிரி படிக்கணும்னு ஆசைப்பட்டேன், ஆனா எங்க வீட்டுல விடல, என் பொண்ணாவது படிக்கட்டும்னு ஆசப் பட்டு தான் படிக்க வைக்கப் பார்த்தேன்! விதி இந்த மாதிரி ஆகிடுச்சு!
என் மக பொய் சொல்லிட்டான்னு அவளை வெறுத்திடாத! அவ அப்படி சொல்லலன்னா,என் புருஷன் கவுரவம் அது இதுன்னு அவளை ஏதாவது பாழுங்கிணத்துல தள்ளி விட்டுருப்பார்!
என் பொண்ணு வாழ்க்கைகாக உன் பையன் வாழ்க்கைய கெடுக்கிறீயான்னு கேட்டுடாதே! என் பொண்ணுங்கிறத்துக்காக சொல்லல! நிஜமாவே பவி நல்ல பொண்ணு!
எல்லார் மேலயும் பாசமா பழகிற பொண்ணு. ப்ளீஸ் அவளை கை விட்டுடாதே!” என்று வேம்புவின் கையை பிடித்து அழுதார்!
“ச்ச்.. அழாதே சுந்தரி! நான் பார்த்துக்கிறேன் நீ கவலைப் படாம போ! எல்லாம் விதிப் படி தான் நடக்கும்!”
அவரை வழியனுப்பி வைத்தார் வேம்பு!
!