அன்றைய நாள், பிரபுவின் குடும்பத்திற்கு ஒரு மறக்க முடியாத, ரொம்ப சந்தோஷமான நாளாய் இருந்தது.
காரணம், விஷ்ணுவின் போன்!
அர்ச்சனா உண்டாகியிருக்கிறாள்! உடனே யாருக்கும் சொல்லாமல், தவிப்புடன் காத்திருந்து, “பேபிக்கு ஹார்ட் பீட் வந்து விட்டது, பேபி நல்லாயிருக்கு”, என்று ஸ்கேன் பண்ணி சொன்னதுக்கு அப்புறம் தான், அவன் தன் வீட்டிற்கே சொன்னான்.
நாம் உடனே சமயபுரம் போறோம், எல்லாம் அந்த ஆத்தா கருணை!” என்று சந்தோசக் கூச்சலிட்டார்!
மனைவியின் சந்தோசத்தை மன நிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தார் விஸ்வநாதன்!
ராணிக்கோ, அபியின் நினைவு வந்தது! அவள் தானே கருவளர்சேரி போய் பூஜை எல்லாம் செய்ய வைத்தாள்! அதுவும் இல்லாமல், அவரைப் பொறுத்தவரை அபியின் ராசி தான், இந்த வீட்டில், தொடர்ந்து நல்லது நடக்க காரணம்!
நினைத்ததை சொல்லவும் செய்தார்!
காஞ்சனாவும் அதை மறுக்கவில்லை!
விஷ்ணு விஜய்க்கும், பிரபுவுக்கும், ஸ்ரீக்கும் போன் பண்ணி சொன்னான்.
ப்ரனிதா, அபிக்கும் வீடியோ கால் பண்ணினான்.
ப்ரநிதாவுக்கும் தான் அத்தை ஆகப்போவதில் ரொம்ப சந்தோசம்!
அபிக்கும் தான்!
அபி கூடவே, “ஏபியண்ணா, நீங்க பாட்டுக்கு, இதை வெளியில் இப்போது சொல்லாதிங்க, கண்ணுப் பட்டுடும்! ஒரு மூணு மாசத்துக்கு அப்புறம் சொல்லுங்க, அப்படிதான் என் பாட்டி தனக்கு தெரிந்தவர்கள், பிரக்னன்ட் ஆனா சொல்லுவாங்க” என்றாள் அக்கறையாக!
அதைக் கேட்டவுடன் அர்ச்சனாவும் “நானும் அப்படி தான் சொல்லியிருக்கேன் அபி! என் அத்தைக் கூட அப்படி தான் சொல்வாங்க!
சொன்ன அர்ச்சனாவுக்கு, அவள் தாய்மை அடைந்திருக்கும் இந்த நேரத்தில், அவளின் அத்தையைத் தேடியது அவள் மனம்! அவள் மடியில் படுத்துக் கொள்ள, அவள் கைப்பக்குவத்தில் சாப்பிட என்று!
மசக்கையில் ஆசைப் படுவது நடக்குமா!
அர்ச்சனாவுக்கு, சிறு வயதிலிருந்தே, அவள் அத்தையிடம் தான் ரொம்ப ஒட்டுதல், அவள் அன்னையை விட!
அத்தை, சிறு வயதிலேயே கணவரை இழந்துவிட்ட நிலையில், அவளுக்கும் குழந்தைகள் யாரும் இல்லாததால், தன் அண்ணன் குழந்தைகளையே தன் குழந்தைகளாக எண்ணி வளர்த்தார்!.
அர்ச்சனாவின் அம்மாவும், அவள் டென்த் படிக்கும்போதே நோய்வாய்ப் பட்டு இறந்துவிட, அதன் பின் அர்ச்சனாவுக்கு எல்லாமே அத்தைதான்!
அர்ச்சனா காதல் திருமணம் செய்ததில் தான் அவர்க்கு வருத்தம். தன் வளர்ப்பு சரியில்லை என்று தன்னையே நொந்துகொண்டவர், அதன் பின் அவளிடம் பேசவும் இல்லை, திட்டவும் இல்லை, அமைதியாகிவிட்டார்.
அவள் தந்தை தான் ஒரு வழியாக திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்!
அவரும் இப்போது உயிருடன் இல்லை! கொரானாவின் போது இறந்துவிட்டார்! அப்போது லாக்டவுன் என்பதால், அர்ச்சனா, அவர் முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை!
இத்தனை நாள், பிறந்த வீட்டு நினைவு வராமல், விஷ்ணு அவளை பார்த்துக் கொண்டாலும், தாய்மை அடைந்திருக்கும் இந்த நேரம், அவள் மனம் பிறந்த வீட்டை, தன் அத்தையை எண்ணி ஏங்கியது.
விஷ்ணுவும் , “நாம் தான் பப்பி கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா போகப் போகிறோம், போனவுடன், நான் எப்படியாவது, உன்னை அங்கு அழைத்துப் போகிறேன்” என்றான்!
அபிக்கும் ப்ரநிதாவிற்கும் கடைசி செமஸ்டர் எக்ஸாம் முடிந்தவுடன் அடுத்தடுத்த முகூர்த்தத்தில் திருமணம் செய்ய இருந்தார்கள் வீட்டினர். அதற்கேற்ப அபியின் அப்பா கவுசிக் இந்தியா வர இருந்தான்.
ஆனி மாதத்தில் கடைசி ஒரு முஹூர்த்தம் மட்டுமே ஒத்து வந்தது, அவர்களின் எக்ஸாம் போஸ்ட்போன் ஆகி இழுத்துக் கொண்டே போனதால்.
அந்த நாள் ப்ரனிதா- ஸ்ரீ க்கு ஒத்து வரவே, முதலில் அவர்கள் திருமணம், பின் ஆடி முடிந்து, ஆவணியில் பிரபு அபியின் திருமணம் என்று முடிவு செய்திருந்தார்கள் வீட்டு பெரியவர்கள்!
அதனால், காஞ்சனா, கடைசி செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பிக்கும் போது, சென்னை சென்று ப்ரனிதா, அபியுடன் தங்கிக் கொண்டார்.
அதனால், பிரபுவோ ஸ்ரீ யோ முன்பு போல அபியுடன் ப்ரநிதாவுடன் ப்ரீ ஆக நினைத்த நேரத்தில் போன் பேச முடியவில்லை. காஞ்சனாவும் உடன் இருப்பதால்!
திருமண நாளுக்கு ஒரு வாரம் முன்பு தான் அவர்களே திருச்சி வந்தார்கள்.
அதற்குள், விஸ்வநாதனே பத்திரிக்கைகளை கொடுத்து முடித்து விட்டார். முக்கியமானவர்கள் வீட்டிற்கு தம்பதி சமேதராக கொடுப்பதற்கு மட்டும் இடையில் காஞ்சனா திருச்சி வந்து போனார். இடையில் ஒருநாள் சென்னையிலிருந்து அப்படியே காஞ்சி சென்று பட்டுபுடவை பர்ச்சேஸ் முடித்து விட்டார்கள்.
எழுபதாம் கல்யாணத்தின் போது எடுத்த மாதிரி, இப்பவும் முன்தினம் ரிசப்சனின் பொதுக் கட்டிக் கொள்ள ஒரே மாதிரி புடவை எடுத்தார்கள்.
டாக்டரின் அனுமதி மற்றும் ஆலோசனைகளுடன் அர்ச்சனாவும் விஷ்ணுவும் இந்தியா வந்து விட்டார்கள். விஜய் காவ்யாவும் கூட வந்து விட்டிருந்தனர்.
ஆனால், இவ்வளவும் செய்த அவர்கள், அபியிடம் பிரபு – அபி திருமண ஏற்பாட்டை
பற்றி மட்டும் சொல்ல மறந்து இருந்தார்கள். பிரபுவோ, ப்ரநிதாவோ கூட சொல்லியிருக்கவில்லை. அவளுக்கு தெரியும் என்பது போல அவர்களாகவே நினைத்துக் கொண்டார்கள்.
அபிக்கு எப்படி தெரியும்? அவர்கள் இது சம்பந்தமாக பேசும் போதெல்லாம் அபி அந்த இடத்தில் இருந்திருக்கவில்லை.
எழுபதாம் கல்யாணத்தின் மறுநாள் நடந்த களேபரம், மீனாட்சியின் அநியாய குற்றசாட்டு, அதன் பின் விஸ்வநாதன் வேம்புவை பார்த்து பேசி கல்யாணம் பேசியது, பின் விஷ்ணு உள்ளிட்டோர் அதோடு சேர்த்து ப்ரனிதா கல்யாணத்தை முடிக்க பிளான் பண்ணியது உட்பட எதுவும் அபிக்கு தெரியாது!
அவள் இன்னுமும் பிரபுவும் தானும் காதலிக்கிறோம், இன்னும் வீட்டினர் சம்மதம் பெறவில்லை இன்னும் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறாள்! தனக்கும் தான் திருமண ஏற்பாடு நடந்துக் கொண்டிருக்கிறது என்பதே அவளுக்கு தெரியவில்லை!
ப்ரனிதா குளிக்க போய் இருந்த நேரம், அபி வெளியே வந்து, மெல்ல பிரபுவின் அறைப் பக்கம் வந்து பார்த்தாள்.
அவன் வர இருக்கிறான் என்று தெரியும், ஆனால் வந்து விட்டானா என்று தெரியவில்லை. எனவே அவன் அறைக் கதவருகே சென்றாள்.
சென்றவுடன், இரு வலிய கரங்களால் அறைக்கு உள்ளே இழுக்கப் பட்டாள்.
வேறு யார் பிரபு தான்!
“என்ன இப்பவே வந்துட்டீங்க, நீங்க வர லேட்டாகும்னு நினைச்சேன்” என்றாள் அபி
“அப்புறம் கல்யாண வேலை எல்லாம் யார் பார்ப்பா?”
“சார் என்னமா வேலை பார்க்குறீங்கன்னு தான் தெரியுதே!” என்றாள், தன்னைக் கட்டிக் கொண்டிருந்த அவன் கைகளைப் பார்த்து.
“வேலையோட கொஞ்சம் என்ட்டர்டயின்மென்ட்!”
“அப்ப , நான் உங்களுக்கு வெறும் என்ட்டர்டயின்மென்ட்டா? உங்களை… “என்று அவனை செல்லமாக அடிக்க முயன்ற போது, அபியின் போன் அடித்தது.
“அமேசான் டெலிவரி மேடம்” என்றது குரல்.
“இதோ வருகிறேன்”, என்று போனில் சொல்லிவிட்டு, பிரபுவிடம்” கீழே போய் வருகிறேன்” என்று சொல்லி விட்டு போனாள்.
அபி, பார்சலைப் பெற்றுக்கொண்டு வந்த போது, ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருந்த அர்ச்சனா, “என்ன பார்சல் அபி அது! “ என்று கேட்டாள்.
“இதுவா, லிப் க்ளோஸ் (உதடுகளை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள போட்டுக் கொள்ளும் லிப்ஸ்டிக் போன்ற ஒரு மேக்கப் பொருள்) அக்கா! நிறைய பிளேவர்களில் இருக்கு! மொத்தம் எட்டு பிளேவர்ஸ்” என்றாள்.
அதற்குள் அங்கு வந்து விட்டான் பிரபுவும்.
“என்னது இது?” என்று வாங்கிப் பார்த்தான்!
“மேங்கோ..ஸ்ட்ராபெர்ரி..கிவி, வாட்டர்மிலன், ஆரஞ்சு…காட்டன் கேண்டி கூட.. அட கேரமல் குக்கி கூட , இப்படியெல்லாம் கூட இருக்கா?” என்றான் ஆச்சரியமாக!
சொல்லிவிட்டு அர்ச்சனா இருப்பதை மறந்து, “ஒண்ணு ஒண்ணா போடச் சொல்லி டேஸ்ட் பண்ணி பார்க்க வேண்டியது தான்!” என்று சொல்லிவிட, அபி அவன் கையை நறுக்கென்று கிள்ளி விட்டாள்.
அர்ச்சனவோ சிரித்தபடி, “டேய் “ என்று பத்திரம் காட்டினாள்!
“அய்யோ அண்ணி, ஒண்ணு ஒண்ணா இப்படி தடவி டெஸ்ட்பண்ணி பார்க்குறேன்ன்னு சொல்ல வந்தேன், பெர்பியூம் எல்லாம் பார்ப்போமே இதோ இந்த மாதிரி” என்று தன் புறங்கையில் தடவிக் காட்டினான்.
ஒன்றை முகர்ந்து விட்டு, “அய்யோ புளிப்பு வாசனை! என்றான்.
“புளிப்பு” என்றவுடன், அர்ச்சனாவுக்கு ஏதாவது புளிப்பாக சாப்பிட தோன்றியது!
அதை சொல்லவும் செய்தாள். ”என் அத்தை, புளி உப்புமா, மோர் களி எல்லாம் சூப்பரா செய்வாங்க. யார் யாருக்கோ எல்லாம் ஆசையா செய்து கொடுத்திருக்காங்க, எனக்கு தான் முடியல. என்ன பண்றது சூழ்நிலை அந்த மாதிரி ஆகி விட்டது!”
அவள் ஏக்கத்தைப் புரிந்து கொண்ட அபி, உடனே காஞ்சனாவிடம் சென்று சொன்னாள்.
ராணி, “எனக்கு தெரிந்த வரை நான் மோர் களி செஞ்சு தரேன் அபி!” என்றார்.
“ஏன் ஆண்ட்டி, அவங்க அத்தையை இங்க கூட்டிட்டு வர முடியாதா?”
“இல்லமா அவங்க கல்யாணத்தின் போதே அவங்களுக்கு ரொம்ப வருத்தம்! இப்ப ஒரு வேளை மனம் மாறியிருக்கலாம்!
அதுவும் இப்போ அவள் இத்தனை வருடம் கழித்து உண்டாகி இருக்கான்னு தெரிஞ்சா ஒரு வேளை வரலாம்.
ஆனா… நான் எப்படி போய் அவங்கள போய் கூப்பிடறது? அதான் யோசனையா இருக்கு” என்றார் காஞ்சனா!
“நான் போகட்டுமா” என்றாள் அபி ஆர்வத்துடன்.
“நீயா?” என்று கொஞ்சம் யோசித்தவர், “பின் போ.. ஆனால் பிரபுவை துணைக்கு அழைத்துப் போ. “ என்று அனுமதி தந்தார்!
அவள் கூட வேறு யார் போனாலும் சரி வராது என்பதாக நினைத்துக்கொண்டு.
திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் இருந்தது அர்ச்சனாவின் ஊர்! அவளிடம் முகவரி வாங்கிக் கொண்டு கிளம்பினர் பிரபுவும் அபியும்.
வழியில் ஒரு கடையில் நிறுத்தி ஸ்வீட் காரம் வாங்கினார்கள். பிரபு பழங்கள் வாங்க முயன்ற போது, அபி தடுத்து விட்டாள். “வேணாம் போதும்” என்று!
ஆனால் அந்த கடையில் நூறு ரூபாய் நோட்டுகளாக இரண்டாயிரம் ரூபாய்க்கு சில்லறை மட்டும் மாற்றிக் கொண்டாள்.
அவர்கள் வீட்டை தேடி கண்டுபிடித்து பெல் அடித்து இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான் பிரபு!
கொஞ்சம் யோசித்து விட்டு “உள்ளே வாங்கோ” என்று அழைத்து சென்றார் அத்தை! கையில் சுலோக புத்தகம்!
“நீங்க அர்ச்சனாவோட கொழுந்தன் தானே?:
ஆமாம். என்று சொன்ன பிரபு, என் தங்கச்சிக்கு கல்யாணம். அதுக்கு தான் அண்ணி இந்தியா வந்து இருக்காங்க, அவங்க இப்ப.. பிரபு கொஞ்சம் தயங்கி நிற்க, அபியே ஆரம்பித்து விட்டாள்,
“மாமி, அர்ச்சனா அக்கா, இப்போ இந்தியா வந்து இருக்காங்க. ரொம்ப வருஷம் கழித்து, இப்ப தான் கன்சீவ் ஆகி இருக்காங்க.
அந்த அம்மா கண்களில் ஒரு மகிழ்ச்சி வெளிச்சம் தெரிந்தது. அவர் அர்ச்சனாவிடம் பேச வில்லை என்றாலும் இன்னுமும் அவள் மேல், வளர்த்த பாசம் குறையவேயில்லை!
அவளுக்கு இன்னமும் குழந்தை இல்லை என்பதை, அவர் அறிவார், அவருக்கு தெரிந்த குடும்ப நண்பரின் மூலம்!
அவளுக்காக அவர் பாபா கோவிலில் வேண்டிகொண்டுதான் இருந்தார். எப்போதும்.
அர்ச்சனாவின் அண்ணன் தான் அவரை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனும் அவன் மனைவி இருவருமே வேலைக்கு சென்ற பின் அவர்கள் குழந்தைகளை இவர் தான் பார்த்துக் கொள்கிறார்.
அவர்க்கு அர்ச்சனாவின் குழந்தையை எப்போது பார்ப்போம் என்ற ஏக்கம் இருக்கவே செய்தது.
இப்போது அபி சொன்னதைக் கேட்டவுடன், அர்ச்சனாவின் அண்ணன் வந்தவுடன் சொல்லிவிட்டு அவளை பார்க்க வருவதாக ஒத்துக் கொண்டார்!
அபி உடனே, கையில் இருந்த ஸ்வீட்களை கொடுத்து விட்டு, “மாமி தப்பா எடுத்துக்காதீங்க.! வழியில் பழக்கடை ஒன்றும் இல்லை, நீங்களே உங்களுக்கு பிடித்த பழங்களை வாங்கிக்கங்க” என்று அந்த ரெண்டாயிரம் ரூபாய்களை கொடுத்தாள்!
“நீ யாரும்மா குழந்தே?” என்று அவர் கேட்க, “நான் அர்ச்சனா அக்காவின் நாத்தனார் ப்ரநிதாவின் பிரன்ட்” என்றாள் அபி!
“கொஞ்சம் இரு”, உள்ளே சுவாமி அறைக்குச் சென்றவர், ஒரு மஞ்சள் சரடு மஞ்சள் குங்குமம் அடங்கிய கவருடன், வெற்றிலைப்பாக்கோடு, ஒரு நூற்றியொரு ரூபாய் வைத்து அவளிடம் கொடுத்தார்.
அபி அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து பெற்றுக் கொண்டாள்.
“மனசுக்கு பிடிச்சவன் ஆம்படையான கிடைச்சு தீர்க்க சுமங்கலியாக ஷேமமா இருடிம்மா” என்று வாழ்த்தினார்!
“அந்த மனசுக்குப் பிடித்தவன் நான் தான், என்னையும் ஆசிர்வாதம் பண்ணுங்கோ” என்று பிரபுவும் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தான்!
“தீர்க்காயுசா இருப்பா” என்று அவனையும் வாழ்த்தினார்.
பின் அர்ச்சனாவுக்கு போன் போட்டு, அவளை அத்தையிடம் பேச வைத்தனர்.
அத்தையின் குரலைக் கேட்டவுடன் அழத் தொடங்கி விட்டாள் அர்ச்சனா!
இருவரும் கொஞ்ச நேரம் பேசினார்கள்.
பேசும்போது அத்தை சொன்னார். “இது எத்தனையாவது மாசம், நீ பாட்டுக்கு, மைக் போட்டு ஊரெல்லாம் சொல்லிண்டு இருக்காதே! ஒரு மூணு மாசம் ஆவது ஆகட்டும்! அப்புறம் சொல்லிக்கோ என்றார்.
“அதெல்லாம் முன்பே, உங்கள பார்க்க வந்திருக்கிற பெரிய மனுஷி அப்பவே சொல்லிட்டா! இது நாலாவது மாசம்” என்றாள் அர்ச்சனா!
பின் கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு காபி குடித்து விட்டு அவரிடம் விடைப் பெற்று கிளம்பினார்கள் பிரபுவும் அபியும்.
வரும் வழியில் பிரபு கேட்டான். “ஏன் அபி வேண்டுமென்றே பழங்கள் வாங்காம போயிட்டு, அங்கே போய் காசா கொடுத்தே!”
“அதுவா, இந்த மாதிரி வயசான தாத்தா பாட்டிங்க எல்லாம் தன் காலில் விழுபவர்களுக்கு காசு தருவதை வழக்கமாக வச்சு இருப்பாங்க!”
“ஆனா எல்லா தாத்தா பாட்டிங்க கிட்டயும் காசு இருக்காது. முக்கியமா பாட்டிங்க கிட்ட.
பெரும்பாலும் வீட்டுலயும் அவர்களுக்கு யாருமே கைசெலவுக்கு பணம் தர மாட்டாங்க!”
அவர்களுக்குத் தேவையானதை தான், நாம் ஒன்று விடாமல் வாங்கிக் கொடுத்து விடுகிறோம், பின் எதற்கு அவர்களுக்கு தனியே காசு என்று தான் பெரும்பாலான மிடில் கிளாஸ் வீட்டில் நினைப்பார்கள்!
“நாம் இப்ப காசா அவங்க கையில் கொடுத்தால், அவங்க ரொம்ப சந்தோஷப் படுவாங்க. அதான் அப்படி செய்தேன். இப்ப கூட எனக்கு கொடுத்து இருக்காங்க பாருங்க!” என்று அந்த நூறு ரூபாய் நோட்டைக் காட்டினாள்.
பிரபு ஒன்றும் சொல்லவில்லை. காரை வேகமாக ஒட்டி சென்று ஹைவேஸ்ஸில் ஒரு மரத்தின் அருகே நிறுத்தினான்.
ஏன் என்பது போல அபி பார்க்க, அவளைத் தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான்! நெற்றியில் முத்தமிட்டு, “ ஐ ஆம் வெரி ப்ரௌட் ஆப் யூ அபி!” என்றான் காதலுடன்!