“அபிக்குட்டி, எப்படிடா இருக்கே? ப்ரனிதா வீட்டுக்குப் போனாலே, இந்த பாட்டிய மறந்துடுற! காலேஜ் முடிஞ்சு லீவு விட்டு நேத்தே வந்தாச்சு. இன்னும் நீ வீட்டுக்கு வரவே இல்லை!” போனில் அழைத்தார் வேம்பு!
“பாட்டி…” சினுங்கினாள் அபி!
“ஆன்ட்டி அங்கிள் ரெண்டு பேரும் என்னைய அவங்களே நம்ம வீட்டுல கொண்டுவந்து விட்டுட்டு, அப்படியே ப்ரநிக்காவோட கல்யாணப் பத்திரிக்கையும் வைக்க வராங்க இன்னிக்கு. ஈவனிங் தான் இங்க இருந்து கிளம்பப் போறோம் பாட்டி!”
அது வேம்புவுக்கும் தெரியும். விஸ்வநாதன் ஏற்கனவே போன் பண்ணி சொல்லிவிட்டிருந்தார்.
சும்மா பேத்தியை வம்பு செய்தார் அவர்.
“சும்மாடா. விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன்!”
“இந்த பாட்டியோட கன்சென்ட்(Consent) இல்லாம உனக்கு எதுவும் நடக்காது. இதை எப்போதும் நினைவில் வச்சுக்கோ!” என்றார்.
அதை நினைவில் வைக்காமல் போனதால் தான் அபிக்கு பின் நாளில் தேவையில்லாத மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதை அவள் அறியவில்லை.
பிற்பகல் மூணு மணிக்கு மேல் தஞ்சைக்கு காரில் கிளம்பினார்கள் விஸ்வநாதனும் காஞ்சனாவும் அபியையும் அழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்கு.
அபி காரை விட்டு இறங்கி “பாட்டி” என்றழைத்தவாறே உள்ளே ஓடினாள்.
வெளியே வந்த வேம்பு, விஸ்வநாதனையும் காஞ்சனாவையும் வரவேற்றார்.
உள்ளே சென்ற அபி அங்கே சுந்தரியையும்(அவள் அம்மா பவித்ராவின் தாயார்), கூட இரு ஆண்களையும் கண்டு, “ஹை! சுந்தரி பாட்டி, வாங்க பாட்டி” என்றழைத்துவிட்டு, கூட இருந்தவர்களையும் பார்த்து மரியாதையாக “வாங்க” என்றாள்.
உள்ளே நுழைந்த விஸ்வநாதனையும் காஞ்சனாவையும் அவர்களும் வரவேற்றனர்.
யாரு என்பது போல வேம்புவை நோக்கி, விஸ்வநாதன் பார்க்க, வேம்பு, அபியைப் பார்த்து, “அபிக்குட்டி, உள்ளே போய் அங்கிள் ஆன்ட்டிக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா” என்று அவளை உள்ளே அனுப்பினார்.
அபி சென்ற பின், “இவர்கள் தான் அபியின் அம்மாச்சி சுந்தரி, இது அவரின் மகன்கள், கணேஷ் , கார்த்தி. அபிக்கு தாய் மாமன்கள்”.
“இவர்கள் உங்களைப் பார்க்க வேண்டும் என்றார்கள், அது தான், நீங்கள் இன்று வரும் சேதி சொல்லி, அவர்களையும் இங்கே வர வைத்தேன்” என்றார்.
சுந்தரி மற்றும் மகன்களிடம், “இது தான் அபியோட மாமனார் விஸ்வநாதன், மாமியார் காஞ்சனா!”
அறிமுக படலத்திற்கு பிறகு, சுந்தரி தான் பேச்சை ஆரம்பித்தார்.
“அபியின் அம்மா பவித்ராவின் நகைகள் எல்லாம், எங்ககிட்ட தான் இன்னும் இருக்கு. வேம்புவிடம் அப்போதே கொடுத்த போது, வாங்க மறுத்துவிட்டார்.
அபியின் கல்யாணப் பேச்சு வரும் போது தரும்படி சொல்லிவிட்டார். அதுதான் உங்களையும் பார்த்து விட்டு, அவளுக்கு சேர வேண்டியதை உங்க கிட்ட கொடுத்து விடலாம்னு வந்தோம்” என்று,
அருகில் இருந்த இரண்டு பெரிய ட்ராவல் பாக்கில் இருந்து நிறைய நகை டப்பாக்களை எடுத்து டீப்பாயில் வைத்தனர்.
“இது மட்டுமல்ல, இன்னும் வயல்களும் தோப்புகளும் இன்னும் பிரிக்க வில்லை. பிரிக்கும்போது அபிக்கு மூன்றில் ஒரு பங்கு உண்டு.
அது இல்லாமல், அபியின் பெரிய தாத்தா வீட்டில், அவர்களுக்கு இவள் அம்மா பவித்ராவை ரொம்ப பிடிக்கும், அதனால், அவ பொண்ணுக்கு நாங்க ஒரு கார் வாங்கித் தருவோம் என்று சொல்லியிருக்காங்க”.
“அது மட்டுமில்லாமல் இங்க அவ தாத்தா வேறு அபிக்கு நிறைய வைத்து விட்டுப் போய் இருக்கார். மாப்பிள்ளை கவுசிக் வேறு அவள் கல்யாணத்திற்கு தேவையானதை சேர்த்து வைத்து தான் இருக்கார்.
அவருக்கு நாங்கள் அபியிடம் உரிமைக் கொண்டாடுவது, இப்படி சீர் செய்வது பிடிக்காது என்பதால் தான், இப்போதே நாங்கள் உங்களிடம் கொடுத்து விடலாம் என்று லாக்கரில் இருந்து எடுத்து வந்துட்டோம்” என்றார் சுந்தரி!
“எங்க பேத்திக்கு நாங்க நிறைவாகவே எல்லாம் செய்து விடுவோம் அவள் தீர்க்காயுசா, தீர்க்க சுமங்கலியாய் ரொம்ப வருஷம் வாழனும். எங்க பவி, வாழாத அவள் வாழ்க்கையையும் சேர்த்து இவள் சீரும் சிறப்புமா வாழனும்”.
“சொல்லுடா” என்று தன் பெரிய மகனை கணேஷைப் பார்த்து கேட்க, அவனோ ஒண்ணுமே சொல்லாமல், தலையைக் குனிந்துகொண்டு உட்கார்ந்திருக்க, அவன் முகத்தைத் திருப்பிக் கேட்டார், சுந்தரி!
தலையை நிமிர்த்தினால், அவன் கண்கள் கலங்கியிருந்தன!
“என்னடா என்ன ஆச்சு? என்று மெல்ல கத்தினார் அவர்.
மற்றவர்களும் கேட்க, “அபி.. அபி.. அப்படியே நம்ம பவிக்குட்டி மாதிரியே இருக்கா! எனக்கு அவளை பார்த்தவுடனே, நம்ம பவி நினைவு வந்துட்டுது!” என்றான்.
“எனக்கும் அதே தான் அண்ணா” என்றான் கார்த்தியும் கொஞ்சம் உடைந்த குரலில்.
அபி அன்று, வரும்போது, ராணி தான் அவள் அம்மா பவித்ராவுக்கு பின்னி விடுவது போல ஜடைப் பின்னி விட்டிருந்தார். கூடவே மல்லி சரம் வேறு பவித்ரா வைக்கும் ஸ்டைலில் வைத்து விட்டார்!. அன்று சுடிதார் வேறு போட்டு இருந்தாள் அபி.
அது அப்படியே பவித்ராவின் அண்ணன்களுக்கு அப்படியே பவித்ராவை நினைவில் கொண்டு வந்தது.
பவியின் அண்ணன் கணேஷ் திருமணமே செய்து கொள்ளவில்லை.
அவனும் ஒரு பெண்ணை ஒருதலையாகக் காதலித்தான், பவியின் மரணத்தைப் பார்த்தப் பின், தான் காதலித்த பெண் இங்கு வந்து கஷ்டப் பட வேண்டாம் என்று, அவளிடம் சொல்லாமலே இருந்து விட்டான்.
அவள் வேறு ஒரு திருமணம் முடித்து ஒரு பெண் குழந்தை பிறந்து,அவள் பெண்ணே பெரியவளாகி விட்டாள் தற்போது!
“சார், அபிக்கு மூன்றில் ஒரு பங்கு இல்லை, எனக்கு பிறகு என் பங்கில் சரி பாதி சொத்தும் கூட வரும் என்றான்.
இன்னொரு பாதி என் தம்பிக் பையனுக்கு” என்றான் கணேஷ்.
“அய்யோ! கொஞ்சம் இருங்க இருங்க..! நாங்க இந்த சொத்தை எல்லாம் எதிர்பார்த்து, இந்த சம்பந்தம் பேச வரவில்லை! எங்களுக்கு அபியை ரொம்ப பிடித்து இருக்கு.
அபிக்கும் எங்க குடும்பத்தை ரொம்ப பிடிச்சுருக்கு. என் பையனையும் தான்.
மற்றபடி, இதையெல்லாம் அவள் பிரியப் பட்டால் வாங்கிக் கொள்ளட்டும்.
அவள் வேண்டாம் என்றால், வேண்டாம், நீங்க எங்களை தர்மசங்கடப்படுத்த வேண்டாமே!”
“முதல்ல நல்ல படியா கல்யாணம் நடக்கட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்”.
“மேலும் அவள் அப்பா கவுஷிக்கிற்கு தெரியாமல் எதுவும் நாங்க வாங்கிக்க மாட்டோம்” என்று அவற்றை தீர்க்கமாக மறுத்தார் விசுவநாதன்!
“பத்திரமா கொண்டு போய் மறுபடியும் லாக்கரில் வைத்து விடுங்கள்” என்றார் அவர்.
“மற்றபடி, நீங்க எப்ப வேணுமின்னாலும் எங்க வீட்டுக்கு வந்து உங்க பேத்தி அபியைப் பார்க்கலாம் அதுக்கு எந்த தடையும் இல்ல!”
“அவர் சொன்ன மாதிரி பத்திரமாக கொண்டு போய் லாக்கரில் வைங்க” என்றார்.
அதற்குள் அபி அனைவருக்கும் பிரெஷ் ஜூஸ் அடித்துக் கொண்டு வந்து விட்டாள்.
பருகிய பின் ஒரு தாம்பாலத்தில் பழங்கள் ஸ்வீட்பாக்ஸ் வைத்து ப்ரநிதாவின் கல்யாணப் பத்திரிக்கையை வைத்தார்கள் விஸ்வநாதனும் காஞ்சனாவும்.
“முதல் நாளே வந்து விடனும்” என்ற அழைப்புடன்.
சுந்தரியைப் பார்த்து, “உங்க வீட்டு அட்ரஸ் சொன்னால், நாளை வந்து அங்கும் கல்யாணப் பத்திரிக்கை வைக்க வரோம்” என்றனர்.
சுந்தரியோ, “பரவாயில்லை, நீங்கள் ஏன் சிரமப்பட்டு அங்கு வரணும். இங்கேயே கொடுங்கள் வாங்கிக்கிறோம்” என்றார்.
“கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்ல, உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்” என்றார் கூடுதலாக!
“அது மரியாதையாக இருக்காது, நாங்க அங்கேயே வர்றோம்” என்றார் விஸ்வநாதன்
“அட, பரவாயில்ல, வேம்புவும் நானும் பால்ய சிநேகிதிகள் தாம். இதுவும் எங்க வீடு மாதிரி தான்! கொடுங்க” என்று பெற்றுக் கொண்டார்.
“அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள், நாங்க அபி கல்யாணம் பண்ணப் போற மாப்பிள்ளையைப் பார்க்கணுமே” என்றார் சுந்தரி.
தனது எழுபதாம் கல்யாணத்தின் போது எடுத்த அபியும் பிரபுவும் அருகருகே நிற்கும் போட்டோ, அப்புறம் பிரபுவின் தனி போட்டோக்களை காட்டிய விஸ்வநாதன், அவர்களின் போன் நம்பர் பெற்று whatsappலும் ஷேர் செய்தார்.
சுந்தரி உள்ளிட்ட அனைவருக்கும் ரொம்ப திருப்தி, அவர்கள் ஜோடிப்பொருத்தம் கண்டு!
பின் அனைவரிடமும் விடைப் பெற்று திருச்சி திரும்பினார்கள் விஸ்வநாதனும் காஞ்சனாவும்.
அவர்கள் போகும் போது அபியின் முகம் வாடியதைக் கண்டு,
“டேய் அபிக்குட்டி, என்ன இப்பவே அவங்க மேல ஒரே பாச மழையா பொழியுற!” கிண்டலடித்தான் கார்த்தி!
எல்லோரும் சென்றபின், இப்போது வேம்புவும் அபியும் மட்டும் தான் வீட்டில்.
அப்போது அபிக்கு ப்ரநிதாவிடம் இருந்து போன் வர, எடுத்துக்கொண்டு அவள் ரூமிற்கு போனாள்,
வேம்புவும் தன் போனை எடுத்து, அபியின் சித்தி சாந்திக்கு போன் செய்தார். விஸ்வநாதன் தம்பதி வந்து சென்றதை, சுந்தரி அவர் மகன்களோடு வந்து அவர்களை சந்தித்து நகைகளைக் கொடுக்க முயன்றது, அவர்கள் மறுத்தது எல்லாம் அவளிடம் கூறினாள்.
சுந்தரியிடம் அவர் கண்டாக்ட்டில் இருப்பது, அபி பெரிய மனுசியான விழாவின் போது இருந்து சாந்திக்கும் தெரியும், கவுஷிகிற்கு மட்டுமே இன்னும் தெரியாது.
சாந்தி தான் “சொல்ல வேண்டாம்” என்று விட்டாள். “பிறகு அவர் நல்ல மனநிலையில் இருக்கும் போது ஒரு நாள் சொல்லிக்கொள்வோம்.
“இவரும் ஒரேடியாக அவர்களை அபியிடம் செல்ல விடாமல் தடுப்பதும் தப்பு “என்றாள்.
“ஆனால் டைம் பார்த்து சொல்லலாம். இப்ப வேண்டாம்” என்று விட்டாள்.
சாந்திக்கு, அவர்கள் நகைகளை மறுத்து விட்டு சென்றது ஒரே ஆச்சர்யமாக இருந்தது.
அவர்கள் மேல் நல்ல மரியாதையையும் ஏற்படுத்தியது.
கண்டிப்பாக நல்ல குடும்பமாக தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் தன் அத்தை இதற்கு ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்.
அவளுக்கு, வேம்பு அவர்கள் வீட்டில் இத்தனை நாள் அபியைத் தங்க விட்டதே ஆச்சரியம் தான்.
அதீத நம்பிக்கை இருந்தால் ஒழிய அத்தை இப்படி அனுப்ப மாட்டார்.
எப்படியோ அபிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைவதில் அவளுக்கும் மகிழ்ச்சி தான். ரெண்டாம் தாரம் சித்தி என்றால் கொடுமைக் காரியாக தான் இருக்க வேண்டுமா என்ன?
சாந்திக்கும் அபியை ரொம்ப பிடிக்கும் தான், ஆனால் வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டாள்.
கவுசிக் பெண் பார்க்க வந்த போது, அபியைத் தான் ஒரு தாயாக எல்லாம் சீரியலில் வரும் கதாநாயகி போல எல்லாம் பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று ஜம்பமாக சொன்னாள் தான்!.
ஆனால் திருமணம் ஆகி வந்த மறு நாள், “நீங்க தான் என் சித்தியா? என் டாடிய பாத்துக்க வந்து இருக்கீங்களா? நல்லா பார்த்துப்பீங்களா? என் டாடி ரொம்ப நல்லவர். பாட்டிக்கு எங்க ரெண்டு பேரையும் பாத்துக்க முடியல. வயசாயிட்டுது” என்று அருகே வந்த அபி கொழுக் மொழுக் கன்னங்களோடு, பால் மணம் மாறாத முகத்துடன் ஒரு பிங்க் நிற கவுன் அணிந்து பாப் கட்டிங் தலைமுடியோடு வந்து கேட்ட போது சாந்திக்கு அவளை அப்படியே தூக்கிக் கொஞ்ச வேண்டும் போல தான் இருந்தது.
ஆனால் செய்தால், சித்திக்காரி டிராமா போடுகிறாள் என்று கவுஷிக்கே கூட நினைக்கக் கூடும் என்று நினைத்து, அபியைப் பார்த்து, “ஆமா. என் பேர் சாந்தி. உங்க டாடிய நல்லாப் பாத்துக்கிறேன்.
கவுஷிக்கிற்கு அபி என்றால் உயிர்! மை ஏஞ்செல், மை லிட்டில்பிரின்சஸ் என்று கொஞ்சி, அவளைத் தூக்கி, தூக்கி வைத்துக் கொள்வான்.
அவள் பெரிய மனுஷியான பின்னும் கூட!
வேம்பு தான் திட்டுவார். “டேய் அவள் இன்னும் சின்னப் பிள்ளை இல்லை. இப்படி தூக்கி எல்லாம் வைத்ததுக் கொள்ளக் கூடாது” என்று.
அவளும் “டாடி.. டாடி” என்று அவன் மேல் உயிராக இருப்பாள்.
பிறகு சாந்திக்கும் அருண் வருண் ரெட்டையர்கள் பிறந்த பின், ஒரு நேரம் அவள் டாடியிடம் வருவாள், ஒரு சில நேரம் கிட்டயே வரவே மாட்டாள்.
அது குறித்து, ஒரு நாள் கவுசிக் ரொம்பவே வருத்தப் பட்டான். “அபி என்னை விட்டு விலகி விலகிப் போகிறாள்” என்று.
“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைங்க. அவள் அருண் வருனுக்கும் ஸ்பேஸ் கொடுக்கிறா. நீங்க வர்றதே ரெண்டு மாசம் லீவில். உங்க எல்லா நேரத்தையும் அவளே எடுத்துக்கக் கூடாது, அவங்களுக்கும் அப்பாவிடம் விளையாட ஆசை இருக்கும் என்று விட்டுக் கொடுக்கிறாள்” என்றாள் சாந்தி!
“நீ சும்மா சமாதானம் சொல்ற!” நம்ப மறுத்தான் அவன்.
“நீங்க வேணா பாருங்க, டேய் அருண் வருண் இங்க வாங்கடா, நாம் கடைக்குப் போய் ஸ்நாக்ஸ் வாங்கி வரலாம்” என்று அவர்களை வெளியே அழைத்து சென்றாள். “இப்போ அவளைக் கூப்பிடுங்க” என்றாள்.
டிவி பார்த்துக் கொண்டிருந்த அபியை அழைத்தான் கவுசிக்.
“என்ன டாடி” என்றவாறு அருகே வந்த அபியைக் கேட்டான், “என்னடா தனியா உட்கார்ந்து இருக்க? டாடி மேல கோபமா?”
அபியை அப்படியே அணைத்து உச்சி முகர்ந்தான் அவள் தந்தை!
இரவு தனிமையில் சாந்தியிடம் சொன்னான் “நீ சொன்னது கரெக்ட் தான்”
“அவள் சில விசயங்களில் அப்படியே அத்தை மாதிரி!” சிரித்தாள் சாந்தி.
சாந்திக்கும் தெரியும் ப்ரநிதாவைப் பற்றி, அபியின் மேல் அவளுக்கு இருக்கும் நட்பு தாண்டிய அதீத பாசம் எல்லாம்.
இப்போது அவர்கள் வீட்டிலேயே அபி வாழப் போகிறாள். ரொம்ப சந்தோசம்.
************
ப்ரனிதாவின் திருமண ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்தன.
திருச்சி நகரின் மையத்தில் இருந்த அந்த மிகப்பெரிய ஏசி மண்டபம்!
மிகப்பெரிய பார்க்கிங் வசதி, தங்க பல ஏசி அறைகள், லிப்ட் வசதியுடன்.
பெரிய கேட்டரிங் டீம் வந்து இறங்கியிருந்தது.
அர்ச்சனா கர்ப்பமாக இருப்பதால், விஷ்ணு, அவள், விஸ்வநாதன், காஞ்சனா, ராணி, பரமேஸ்வரன், அர்ச்சனாவின் அத்தை, வேம்பு சாந்தி மற்றும் ஸ்ரீயின் பெற்றோர் இவர்கள் எல்லோருக்கும் கீழ்த்தளத்தில் ரூம் ஒதுக்கப் பட்டிருந்தது.
விஜய் காவ்யா உள்ளிட்ட சிலர் அடுத்த தளத்தில் இருக்க, பிரபுவுக்கோ மூன்றாம் மாடியில் தான் ரூம். அந்த ப்ளோரில் அவன் மட்டுமே இருந்தான்.
திருமணத்தின் முதல் நாள் ஸ்ரீயின் அப்பா வீட்டு வழக்கம் என்று மணப்பெண்ணிற்கு திருவாதிரை சுற்றும் ஒரு நிகழ்ச்சி.
அதற்கு பெண்ணின் தாய் மாமன் சீர் செய்ய வேண்டும்.
பரமேஸ்வரன் மட்டுமே வந்திருந்தார் அவர் வீட்டிலிருந்து, தன் தங்கையை விட்டுக்கொடுக்காமல்.
ப்ரநிதாவிற்கு பட்டுபுடவை மற்றும் ஒரு வைர செட் சீர் செய்தார்.
அபி தன் பாட்டி, சித்தி, மற்றும் தம்பிகள் அருண் வருண் ஆகியோரோடு வந்து விட்டிருந்தாள்.
சுந்தரி பாட்டி, திருச்சியில் வேற ஒரு கல்யாணத்திற்கு சென்று விட்டு இங்கே வருவதாக சொல்லியிருந்தார்.
அழகான ஆக்வா ப்ளூ கலரில் லெகங்கா அணிந்திருந்தாள். பிரபுவும் அதே கலரில் குர்தா பைஜாமா அணிந்து இருந்தான்.
மணப்பெண்ணுக்கு திருவாதிரை சுற்றி, பின் பரிசம் போடும் நிகழ்வு.
எல்லாம் முடிந்து, எல்லோரும் டின்னர் சாப்பிட கலைந்தார்கள்.
போட்டோக்ராபர் டீம், மணமக்களை போட்டோ சூட் எடுக்கிறேன் என்று பாடாய் படுத்திக் கொண்டிருந்தார்கள்.
பிரபுவுக்கு வந்தவர்களை வரவேற்கும் கவனிக்கும் வேலை இருந்தாலும் அவ்வபோது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அபியையும் வம்பு செய்துக் கொண்டிருந்தான் யாரும் அறியாமல்.
அபிக்கு ஒரே டென்சனாக இருந்தது! எல்லோரும் டின்னர் சாப்பிட டைனிங் ஹால் நோக்கி சென்ற கேப்பில், அவன் அபியிடம் வந்து சொல்லிவிட்டுப் போயிருந்தான்,
“பப்பிக்கும் ஸ்ரீக்கும் வேணா முதல்ல கல்யாணம் நடக்கலாம்! ஆனா பர்ஸ்ட் நைட் நமக்கு தான் முதலில். அதனால், இன்னிக்கு நைட் எல்லோரும் தூங்கிய பின், தேர்ட் ப்ளோரில் நான் இருக்கும் என் ரூமுக்கு வந்துடு. நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்”. என்று!
அடப்பாவி நிஜமாவா சொல்றான்? சும்மா வம்பு பண்றான் என்று தான் முதலில் நினைத்து “ ம்ம் ஆசை தோசை..” என்று கிண்டலடித்த அவள், பின் சீரியசா தான் சொல்றான் என்பது போல் உணர்ந்தாள்!
பெரியவர்கள் எல்லாம் சாப்பிட்டு முடித்து அநேகம் பேர், போட வேண்டிய மாத்திரைகளையும் போட்டுவிட்டு உறங்கி விட, இன்னும் போட்டோ சூட் என்னவோ முடியவில்லை.
அபியும், ப்ரநிதாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பியுட்டிசியன் லேடியும் மட்டுமே அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வழக்கமாக எட்டரைக்கே “மலையேறிவிடும்” அபிக்கு, பிரபு சொல்லிவிட்டுப் போன விஷயத்தால் ஏற்பட்ட டென்சன் காரணமாக தூக்கம் வரவே இல்லை.
அடிக்கொருமுறை, பிரபுவிடம் இருந்து போன் வேறு, “இன்னும் கிளம்பலையா?” என்று!
“இதோ வரேன். இதோ வரேன் …” என்று சொல்லிக் கொண்டிருந்தாள் இதோடு, மூன்று முறை!
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த பியுட்டிசியன் லேடி கொஞ்சம் திட்ட ஆரம்பித்து விட்டார்.
“காலை ஆறரைக்கு முஹூர்த்தம். கொஞ்சமாவது தூங்கினால் தான் பேஸ் நல்ல பிரெஷ் ஆக இருக்கும். போதும் சீக்கிரம் முடிங்க ” என்று சொல்ல, “இதோ இன்னும் நாலே நாலு தான்” என்று அவர்களும் எடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
மீண்டும் பிரபுவிடம் இருந்து போன், “நீ இப்ப வர்றீயா இல்லையா” கோபமாக!