“நீ இப்ப வர்றீயா இல்லையா?” என்ற பிரபுவின் கோபக்குரலைக் கேட்ட அபி, பயந்து தான் போனாள்!
அவள் பயத்துக்கும் காரணம் இருந்தது. மாலையில் ஏதோ பொருள் எடுக்க, அந்த ப்ளோருக்கு வந்த அபியைக் கூட்டிக்கொண்டு போய் தன் ரூமைக் காட்டியிருந்தான் பிரபு!
“இதோ பார்! இது தான் நம் ரூம், பாரு டெக்கரேசன் பண்ண பூ எல்லாம் கூட ரெடி!” என்று அங்கிருந்த பூக்கள் அடங்கிய பெரிய சைஸ் கேரிபேக்குகளை காட்டினான்!
“எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு போன் பண்றேன் வந்துடு” என்றும் சொல்லியிருந்தான்.
“வருவே இல்லே? என் மீது உண்மையிலேயே காதல், நம்பிக்கை இருந்தா வருவே! நான் உன்ன என்ன ஏமாத்தவா போறேன்!”
“அதுக்கு என் வீட்டிலேயே விட மாட்டார்கள்!
முக்கியமா பப்பி, என்னை துவைச்சு தொங்க போட்டுடுவா! அதனால பயப்படாம வா!”
“இது தப்பு இல்லையா?” என்றதற்கு, “அவனவன் இந்த காலத்துல எப்படி எப்படியோ பண்றான்!”
“இந்த காலத்துல இதெல்லாம் ஒண்ணும் தப்பே இல்ல!”
அவளுக்கு ரொம்பவும் பயமாக தான் இருந்தது!
ஆனால் பிரபுவின் கோபத்தையும் அவளால் தாங்க முடியாது.
அவன் பேசாம போனா, அதை தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது.
எனவே “போவோம், போய் முடிந்தவரை எடுத்து சொல்லி புரிய வைப்போம்” என்று எண்ணியபடி அவன் அறைக்கு சென்றாள் அபி!
மிகுந்த பதட்டத்துடனும், பயத்துடனும் வந்த அபியைக் குறும்பு சிரிப்போடு எதிர்க்கொண்டான் பிரபு!
“வா அபி!” என்றவன், “ஸ்ரீயும் நானும் சின்ன வயதில் இருந்தே நல்ல திக் பிரண்ட்ஸ் தான் என்றாலும், எங்களுக்குள் எப்போதும் ஒரு போட்டி இருந்துக் கொண்டே தான் இருக்கும்!”
“படிப்பில், விளையாட்டில், அப்புறம் லவ் பண்ணுவதில், இப்போ கல்யாணம் பண்ணுவதில்!”
“படிப்பிலும் விளையாட்டிலும் நான் தான் ஜெயித்தேன், ஆனால் லவ்வில் அவன் முந்திக் கொண்டான்.
இப்போது கல்யாணத்திலும்!
அதனால் தான் நான் இப்போது இந்த விசயத்தை எடுத்துக் கொண்டுவிட்டேன்”!
அவன் முன் நின்ற அபியோ பயத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்!
“இது..இது எல்லாம் தப்பு! வெளியே தெரிந்தால் நம் இருவரின் மேலும் உள்ள மரியாதையும் போய் விடும்! நம் வீட்டுல இருக்கிறவங்க முகத்துல எப்படி முழிப்போம்? ப்ளீஸ் வேணாமே!” என்று அபி அவனை கன்வின்ஸ் பண்ண முயல,
“அதெல்லாம் யாருக்கும் தெரியப் போவதில்லை! நீ பயப்படாம இரு!” என்றவன்
“சரி.. சரி. உனக்கு ஓகே தானே?” என்றவாறு அவளை நெருங்கிய பிரபு, அவள் உதடு பிதுக்கி ஒரு குழந்தையைப் போல தேம்பி தேம்பி அழ ஆரம்பித்ததைக் கண்டு,
விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்!
கட்டிலில் போய் உட்கார்ந்துக் கொண்டு வயிறைப் பிடித்துக்கொண்டு விடாமல் சிரித்தான்!
“ஏய்.. அபி! என்ன பயந்திட்டியா? நான் உன்னை சும்மா பிரான்க் (Prank) பண்ணினேன்!”
“இது ஸ்ரீக்கும் தெரியும்! சிஸ்டர் பாவம் என்று தான் அவனும் சொன்னான்! நான் தான் இப்படி உன்னிடம் விளையாடினேன்! சாரி..” என்று மீண்டும் சிரிக்க ஆரம்பிக்க,
“அப்ப இந்த பூ எல்லாம்?”
“அது வயலூர் முருகன் கோவிலுக்கு! ராணிம்மா தான், கல்யாண மாலைகளோடு கலந்து விடப் போகிறது, இதை தனியே உன் ரூமில் வைத்திரு” என்று சொல்லி வைத்து விட்டுப் போனார்கள்.
அபி அந்த கேரிபேக்குகளை பிரித்துப் பார்த்தாள்.
சம்பங்கியும் விருட்சிப் பூக்களும் வைத்து கட்டியிருந்த சுவாமி மாலைகள் மற்றும் கதம்ப சரங்கள்!
பார்த்த அபி பத்ரகாளியானாள்!
“டேய் மாமா உன்னை..” என்று அவன் மேல் பாய்ந்து, அவனைக்கண்டபடி அடிக்க ஆரம்பித்தாள்.
நறுக்கென்று அவன் தலையில் அவள் ட்ரேட் மார்க் குட்டுக்கள் விழுந்தன!
மேலும் கோபம் அடங்காமல் அவன் கன்னத்தைக் கடிக்க முயல, “ஏய் அபி ப்ளீஸ் நாளைக்கு பப்பி கல்யாண போட்டோல நான் பிளாஸ்டர் போட்டுக் கொண்டு நிற்க முடியாது!
விஜய் கிட்ட போய் TT போட சொன்னா அவன் ஆயிரம் கேள்வி கேட்பான்! ஐ யாம் பாவம்!”
“நான் பாவம்னு நினைச்சியாடா? சாயந்திரம் நீ சொல்லிவிட்டு போனதில் இருந்து நான் எப்படி டென்சன்ல இருந்தேன்!” மேலும் அடிகள் கொடுத்தாள்.
அப்போது பிரபுவின் போன் அடித்தது, வைபரெட்டில். எடுத்தால், ஸ்ரீ!
உடனே அதை ஸ்பீக்கரில் போட்டாள் அபி!
“என்னாச்சுடா? சிஸ்டர் அங்க வர்றத பாத்துட்டு தான் இருந்தேன்” என்ற ஸ்ரீயிடம்
“டேய் ஸ்ரீ வந்து என்னை காப்பாத்துடா? இங்க அபி என்னை கும்மி எடுத்துக் கொண்டுருக்கா!”
“வந்தா அவனுக்கும் இதே கதி தான்! அண்ணன்னும் பாக்க மாட்டேன், நாளைக்கு கல்யாண மாப்பிள்ளைன்னும் பாக்க மாட்டேன். மேடையில் இருந்தாலும் எனக்கு ஒரு ஹின்ட் கொடுத்து இருக்கலாம்ல?” அபி ஸ்ரீ யையும் மிரட்டினாள்.
ஸ்ரீ அண்ணா என்ற மரியாதையைக் காணோம்!
அதைக் கேட்ட ஸ்ரீ, “சாரி சார், நான் தான் அன்டயத்துல ராங் நம்பர் போட்டுட்டேன். நான் வச்சுடறேன்” என்று “எஸ்” ஆகி விட,
“அடேய் மித்ர துரோகி! இருடா நீயும் ஒரு நாள் பப்பிகிட்ட அடி வாங்காமலா இருக்க போறே!” என்று சொல்லி விட்டு, அபியின் கைகளை இழுத்து, ஒருவாறு அவளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான் பிரபு! அவளும் அடித்து அடித்து டயர்டாகி இருந்தாள்!
“ஏய் அபி! உன் மரியாதை கெட நானே காரணமாக இருப்பேனா? உன் ப்ரபுவ பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க!”
“சும்மா விளையாட தான் இப்படி சொன்னேன். மற்றபடி நம் இருவர் குடும்பமும் நம் இருவரின் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கை, மரியாதையை கெடுத்துக் கொள்வேனா?”
“ஒரு போதும் எல்லை மீற மாட்டேன்!”
இப்போது தான் அபி கொஞ்சம் சமாதானம் ஆனாள்.
“சரி சரி நேரம் ஆகிட்டுது, உன்னை தேடப் போறாங்க, நான் கிரௌண்ட் ப்ளோர் வரை வந்து விட்டுட்டு போறேன்” என்று அவளை அழைத்துக்கொண்டு கீழே போனான்.
லிப்டில் போகும் கேப்பில், “அபி நீ போட்டுருக்க லிப் க்ளாஸ் என்ன ப்ளேவர் ன்னு மட்டும் தெரிஞ்சுக்கிறேனே! ப்ளீஸ்!”
“ஏன் வாங்கியது பத்தலியா?” என்றாள் அபி!
நல்லவேளையாக யாரும் விழித்து இருக்க வில்லை, அபி மெல்ல நடந்து போய் அவள் குடும்பம் தங்கியிருந்த ரூமில் போய் தன் தம்பிக்களுடன் படுத்துக் கொண்டாள்!
***********
மறுநாள் காலை முஹூர்த்தம்.
எல்லாவித மத சடங்குகளுடன், எந்த குறையுமின்றி, நல்ல விதமாக ப்ரனிதா ஸ்ரீராமின் திருமணம் நடந்தது.
குறித்த முஹூர்த்த வேளையில், ஸ்ரீயின் பெற்றோர், அத்தைமார்கள், விஸ்வநாதன், காஞ்சனா, விஷ்ணு, அர்ச்சனா,விஜய், காவ்யா, பிரபு உடன் மாமா பரமேஸ்வரன் மற்றும் ராணிம்மாவின் ஆசிர்வாதத்துடன் ப்ரனியின் கழுத்தில் மங்கல நாண் அணிவித்தான் ஸ்ரீ!
நல்ல வேளை! பேட் வைப்ஸ் (bad vibes) மீனாட்சி மட்டும் மிஸ்ஸிங்!
விஸ்வநாதனுக்கும் காஞ்சனாவுக்கும் கண்கள் கலங்கியிருந்தன!
விஷ்ணு, விஜய்யுடன் பிரபுவுக்கும் தான். இத்தனை நாள் தங்கள் வீட்டு செல்ல இளவரசியாக இருந்தவள், இனி வேறு வீட்டுப் பெண்!
அபிக்கும் தான் அழுகையாக வந்தது! கடந்த நான்கு வருடமாக, அவள் பெரும்பாலும் அவள் அவளின் ப்ரனிக்காவுடன் தான் இருந்திருக்கிறாள்!
ப்ரனிதா அவளுக்கு ஒரு தோழி என்பதைத் தாண்டி, ஒரு தாயாக அல்லவா இருந்திருக்கிறாள்!
அபிக்கு சாதம் பிசைந்து தந்து, மடியில் தூங்க வைத்து, பவியின் இடத்தில் அல்லவா அவளை அபி நினைத்து இருந்தாள்.
அதனால் அவளுக்கும் அழுகையாக தான் வந்தது.
எப்போதும் தைரியமாக இருக்கும் ப்ரனிதா கூட, அந்த தாலிக்கட்டும் வேளையில் கொஞ்சம் இமொசன் ஆகத்தான் செய்தாள்.
ஸ்ரீ அவள் கைப்பற்றி சமாதானப் படுத்தினான்.
மணமக்கள் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிப் பெற்றனர். காஞ்சனாவின் அத்தை, அபியுன் பாட்டி வேம்பு உட்பட!
இன்னமும் அழுகையை நிறுத்தாத அபியின் காதில், ப்ரநிதா, “ஏய் அழாதேடி, நீயும் பிரபு அண்ணாவைக் கல்யாணம் செய்தபின் என் கூட பெங்களூர் வரத் தானே போறே!” என்று சமாதானம் செய்தாள்.
சிஜூ வெளிநாட்டில் இருந்து வீடியோ காலில் வந்து வாழ்த்தினான்.
“ஸ்ரீ மச்சான், ப்ரநிதாவை நல்லா பாத்துகோங்க அவளுக்கு என்னையும் சேர்த்து நான்கு அண்ணன்கள்!” என்றான்.
“நாலு இல்லப்பா ஐந்து!” என்றார் சிரித்தபடி ராணிம்மா, அவர் கையிலும் போன்! அவர் மகன் சதீஷ் லைனில் இருந்தான்!
விஷ்ணு, விஜய்யின் வெளிநாட்டு நண்பர்களுக்காக லைவ் டெலிகாஸ்டும் ஏற்பாடு செய்து இருந்தனர்!
விருந்தினர்களை பிரேக் பாஸ்ட் சாப்பிட டைனிங் ஹாலுக்கு அழைத்து சென்றனர் விஷ்ணுவும் பிரபுவும்.
கூட விஸ்வநாதனின் ஊழியர்களும் உதவிக்கொண்டிருந்தனர்.
அர்ச்சனாவும் காவ்யாவும் ரிசப்சனில் உட்கார்ந்து வரவேற்கும் வேலையை ரிட்டர்ன் கிப்ட் தரும் வேலைகளை செய்துக் கொண்டிருந்தார்கள். துணைக்கு விஜய்.
கல்யாண வீட்டில் அபி இங்கும் அங்கும் ஓடியாடி வேலை செய்வதையும், காஞ்சனா, அர்ச்சனா, காவ்யாவுடன் அபியும் ஒரே மாதிரி பட்டுபுடவை அணிந்து இருப்பதையும், பிரபு வீட்டு ஆட்கள், வேலையாட்கள் உள்பட, “அபி.. அபிம்மா” என்று அவளைத் தேடுவதையும் பார்த்து, மனம் முழுக்க சந்தோசம் பீறிட்டு மகா நிறைவுடனும் நிம்மதிடனும் பார்த்துக் கொண்டிருந்தார் வேம்பு!
அவர் அருகில் அமர்ந்திருந்த இருந்த, அர்ச்சனாவின் அத்தை, அவர் யாரென்று தெரியாமல், “இதோ போறாளே, இந்த குழந்தை, இவளைத் தான் பிரபுவுக்கு பார்த்திருக்கு! என்ன அருமையான பெண் தெரியுமா இவள்!”
“அத்தனை ப்ரியம் எல்லோரிடமும்! அத்தனை பாந்தமா, கல்மிஷம் இல்லாத குணம், இப்படி ஒரு பெண்ணை இந்த காலத்துல பாக்க முடியாது தெரியுமோ?
அவா ஆத்துல ரொம்ப நன்னா வளர்த்து இருக்கா இந்த பெண் குழந்தைய!”
“அர்ச்சனா மாமியார் காஞ்சனா கோவில் கோவிலா சுத்துன புண்ணியம், நல்ல மாட்டுப்பொண்ணுகளா வந்து இருக்காங்க!” என்று சொல்லிக்கொண்டே போனார்!
“ஆமாங்க மாமி” என்று பின்னிருந்து ஒரு குரல்! அவர் நிஷா ஆன்டி!
விஸ்வநாதனின் முஸ்லீம் நண்பரின் மனைவி!
“நான் கூட அவங்க எழுபதாம் பிறந்த நாள் விழாவில் பார்த்து இருக்கேன் இந்த பொண்ண! ரொம்ப தங்கமான பொண்ணு!”
இதைக் கேட்ட வேம்பு, ரொம்ப பெருமிதமாக உணர்ந்து, “நான் தான் அவள் பாட்டி” என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்!.
பின் அவர்கள் சேர்ந்தே சாப்பிட்டார்கள்.
காலை உணவுக்கு பிறகு பெரும்பாலான விருந்தினர் கிளம்பிவிடவே, ரொம்ப நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இருந்தனர் மண்டபத்தில்!
சிலர் திருச்சியில் இருக்கும் சில கோவில்களை பார்க்க ஆசைப்பட்டனர்.
அவர்களுக்கு வாகன வசதிகள் ஏற்பாடு செய்தனர் பிரபுவும் விஸ்வநாதனும்.
அபியின் தம்பிகள் ஆசைப்பட்டதால், சாந்தி அவர்களோடு மலைக்கோட்டை செல்ல முடிவெடுக்க, வேம்புவினால் படியேற முடியாது ஆதலால் அவர், அர்ச்சனாவின் அத்தையுடன் உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு சென்றார்.
மண்டபத்தில் இப்போது உள்ளூர் சொந்தங்கள் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, பிரபு மாடியில் அவன் தங்கியிருந்த அறைக்கு செல்வதைப் பார்த்த அபி, அவன் பின்னால் சென்றாள் யாரும் அறியாத வண்ணம் கேசுவலாக போவது போல்.
அறையில் எதையோ எடுத்துக்கொண்டிருந்த பிரபுவைப் போய் பின்னாலிருந்து கட்டிக்கொண்டாள் அபி!
“மாமா..” என்றாள்.
“ம்ம் “ என்றான் பிரபு
“ப்ரநிக்காவுக்கு தாலிக் கட்டும்போது அங்கிள் அப்படியே இமொசன் ஆகி அழுதுவிட்டார் தெரியுமா?”
“அப்பாக்களுக்கு அப்படிதான் இருக்கும். ஏன் எனக்கே அப்படி தான் இருந்தது, பப்பிம்மா, இனி வேற வீட்டுப்பெண் ஆகும் போது!”
“அப்ப, நம்ம கல்யாணத்தின் போது, என் டாடியும் இப்படிதானே அழுவார்?”
“ஆமா”
“எனக்கு என் டாடி ஞாபகம் வந்துருச்சு!”
“நீ என் டாடி மாதிரி என்னை கொஞ்சேன்!”
“என்ன” என்பது போல ஆச்சரியமாக பிரபு திரும்பினான்.
“ப்ளீஸ் இப்படி கன்னத்தைக் கிள்ளி நெற்றியில் கிஸ் பண்ணிக் கொஞ்சனும்”
“ப்ளீஸ் ப்ளீஸ்..”
“கீழே நாதஸ்வர டீம் பெமேன்ட்டுக்காக வெயிட் பண்றாங்கடி, நான் போகணும்”
“அதெல்லாம் முடியாது. நான் விட மாட்டேன்” அடம் பிடித்தாள் அபி!
“சரி வா “என்று அவளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, அவள் சொன்ன மாதிரியே கொஞ்சினான்.
“தாங்க்ஸ் மாமா” என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் அபி!
அவளைப் பொறுத்தவரை அவனே தந்தை, தாய், காதலன், கணவன், நண்பன், பணியாள், அடிமை இப்படி எல்லாமுமாக ஆனான் அவளின் அன்பு பிரபு!
தன் மடிமேல் குமரி உருவத்தில் ஒரு குழந்தையாக, தன் கழுத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் அபியை நேசம் பொங்க பார்த்தான் பிரபு!