அதிகாலை ஐந்து மணி! மெல்ல கண் விழித்தார் வேம்பு. தன் வயிற்றின் மேல் கையைப் போட்டவாறு தூங்கிகொண்டிருந்த அபியைப் பார்த்தவர், அவள் கைகளை மெல்ல தன் மேல் இருந்து எடுத்துவிட்டு, தூங்கும் அபியையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்தார்.
இந்நேரம் அவளும் எழுந்து விட்டுருப்பாள். இன்று தான் என்னமோ இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாள்.
இப்போதுதான் நடந்தது மாதிரி இருக்கு, இவள் அம்மா பவி, இவளைப் பச்சிளங்குழந்தையாக விட்டு விட்டு மறைந்தது! இதுக்கு இப்போது திருமணம்!
மெல்லிய சிரிப்புடன் அபியின் குழந்தை முகத்தை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தவர், மனதுக்குள் நினைத்தார், இவளை யாருக்கு தான் பிடிக்காமல் போகும்!
அன்று ப்ரநிதாவின் திருமணத்திற்கு சென்று வந்தததில் இருந்தே அவர் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் தான் இருந்தார்.
விஸ்வநாதன் ஆகட்டும், காஞ்சனா ஆகட்டும், எல்லோரும் அபியைக் கொண்டாடிய விதம் அவர்க்கு ரொம்ப சந்தோசத்தைத் தந்தது.
மாப்பிள்ளை பிரபுவின் அண்ணன் விஷ்ணு அவளை ஒரு மகளாகவே எண்ணுவதும் அவருக்கு புரிந்தது. அவன் மட்டுமா அவன் மனைவி அர்ச்சனாவும் தான்!
அபியை தன் ஓரகத்தியாக எண்ணாத ஒரு தங்கையைப் போல் பார்க்கும் காவ்யா!
அவள் கணவன் விஜய்!
அப்புறம் அந்த ராணி! அவள் நம் ஊர்ப்பெண்! அவளுக்கு பவித்ராவைப் பிடித்தது போலவே அபியின் மீதும் மகள் போன்ற அன்பு!
மொத்தத்தில் அபியின் புகுந்த வீடு நிச்சயம் அவளுக்கு சொர்க்கம் தான்! அவளைத் தாங்கு தாங்கு என்று தாங்கப் போகிறார்கள்!
அந்த பொண்ணு ப்ரநிதாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
இங்கு நான் அபியைப் பார்த்துக் கொள்வது போல அவள் தான் கடந்த நான்கு வருடமும் அபியைப் பார்த்துக் கொண்டாள்.
தாய் இல்லாத குறை தவிர வேற ஒன்றுமில்லை அபிக்கு!
மாப்பிள்ளை பிரபுவின் கண்களிலும் அவர் கண்ட அளவில்லாத நேசம் அவருக்கு ரொம்ப சந்தோசத்தையும் நிறைவையும் தந்து, இனி தனக்கு ஏதும் ஆனால் கூட கவலை இல்லை! அபிக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்பாடு செய்த பின்னே தான் போகிறோம் என்ற எண்ணத்தை அவருள் எழ வைத்தது!
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போல் கல்யாண வீட்டில், தான் யாரென்று தெரியாமலே அந்த மாமி, அர்ச்சனாவின் அத்தையும் அந்த பாயம்மாவும் அபியைப் புகழ்ந்தது அவருக்கு சான்றோன் எனக் கேட்ட தாய் உணர்வை ஏற்படுத்தியது!
ஈன்றால் தான் தாயா? அவளைப் பெற்றது வேண்டுமானால் பவியாக இருக்கலாம்! ஆனால் பாலூட்டி சீராட்டி வளர்த்தது அவர் தானே!
தாய்ப்பால் மறவாத அந்த பச்சிளம் குழந்தையை அவர் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தார் என்று ஒரு வரியில் சொல்லிவிட முடியாது!
வயதான காலத்தில், தாயில்லாத ஒரு பச்சிளம் குழந்தையை வளர்ப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் எல்லாம் அருகே இருந்து பார்த்தவருக்கு தான் புரியும்!
காலையிலும் மாலையிலும் ஒரு பெரிய ஈகிள் பிளாஸ்க் நிறைய வெந்நீர் போட்டு வைத்துக் கொள்வார்.
குழந்தை பசிக்கு அழுதால், உடனே அந்த வெந்நீரில் பால் பவுடர் கலந்து பால் புட்டியில் புகட்டுவார்.
பாலை ஆற்றிக் கொடுக்கும் முன் அழுது தீர்த்து விடுவாள் அபி!
கவுஷிக்கோ அல்லது அவள் தாத்தாவோ அழும் அவளை தூக்கி வைத்துக் கொண்டு சமாதானப்படுத்திக் கொண்டு இருப்பார்கள் பால் ஆற்றி எடுத்து வரும் வரை!
சிலசமயம் அவர்கள் ஆற்றிக் கொண்டு வருவார்கள் வேம்பு அபியை வைத்துக் கொள்வார்.
பகல் வேளையில் பெரிதாக தெரியாத இந்த வேலை இரவில் அவள் பாலுக்கு அழும்போது தான் சிரமம் ஆக இருக்கும்!
அதுவும் தடுப்பூசி போட்டு காய்ச்சல் வந்திருக்கும் அந்த நாட்களில் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் வேம்பு குடும்பத்தினர்!
அப்போதெல்லாம் வேம்புவின் தம்பி மனைவியான சரஸ்வதி (அபியின் சித்தியின் அம்மா) துணைக்கு வந்து உதவுவார்!
அபி தவழ ஆரம்பித்த பின், தினமும் கவுசிக் தான் கவனமுடன் வீட்டை நன்கு மாப் செய்து சுத்தம் படுத்துவான், அவள் எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொள்ளப் போகிறாள் என்று!
பின் ஊர்க்காரர்களின் தொந்தரவு காரணமாக, அவர்கள் தஞ்சைக்கு குடி வந்தார்கள்.
அந்த ஏரியா அப்போதுதான் டெவலப் ஆகி கொண்டிருந்தது. ஆனால் இவர்கள் வீட்டருகே நிறைய வீடுகள் வந்து இருந்தன.
பக்க்கத்தில் குடியிருப்போர் ஒருவர்க்கொருவர் மிகுந்த அனுசரணையுடன் தான் பழகினர்!
அதுவும் பக்கத்து வீட்டு நூர்ஜஹான் கேட்கவே வேண்டாம். மிகுந்த அன்புள்ளம் கொண்டவர்!
அவருக்கு ஆறு குழந்தைகள்! மூன்று பெண், மூன்று ஆண்மக்கள்!
அவரது கணவர் EB யில் வேலை செய்து வந்தார். ஆண் பெண் பேதமில்லாது எல்லாக் குழந்தைகளுக்கும் நல்ல கல்வி கொடுத்துக் கொண்டிருந்தனர் அவர்கள்!
அவர்கள் வீட்டு பிள்ளைகள் எல்லோரும் அபியைத் தூக்கி வைத்துக் கொள்வார்கள்.
அந்த வீட்டின் மூத்த பையனைத் தவிர. அவன் யாரிடமும் ஒட்ட மாட்டான். அவன் ஒரு முசுடு என்று அவன் தாயே கூறுவார்.
அவர்கள் வீட்டில் அபிக்கு என்று ஒரு தூளியையும் கட்டி வைத்து இருப்பார்கள்.
அவர்கள் வீடு மட்டுமில்லாமல் அக்கம்பக்கம் உள்ள எல்லோர் வீட்டுக்குமே அபி தான் செல்லப் பிள்ளை. அந்த தெருவுக்கே குட்டி கிருஷ்ணன் மாதிரி இருந்தாள் அபி!
ஒரு நாள் விளையாட சென்றிருந்த அபியை யார் வீட்டிலும் காணாது, தெருவே அல்லோகலப் பட்டது.
வேம்புவுக்கோ பதட்டத்தில் பீபி எகிறிவிட்டது. எல்லோரும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்த நேரம், அபியின் சிரிப்பு சத்தம், நூர்ஜஹான் வீட்டு வாசலில் கேட்டது.
பார்த்தால், அந்த வீட்டின் முசுட்டுப் பையனுடன் பைக்கில் வந்து இறங்கினாள் அபி! கையில் கிண்டர் ஜாய்! தெருவே ஆச்சரியமாக பார்த்தது அவர்களை!
யாரிடமும் ஒட்டாத அந்த பையனையே அபி தூக்கிக் கொஞ்ச வைத்து விட்டாள்!
இது மட்டுமா?
பள்ளியிலும் அவள் டீச்சர்ஸ் பெட் தான்!
அவள் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது அவள் வகுப்பு ஆசிரியை அவளைக் காலாண்டு லீவுக்கு தன் ஊர் திருவிழாவிற்கு தன்னுடன் அனுப்பி வைக்க சொல்லி ஒரே கெஞ்சல்! அழுதுக் கூட பார்த்து விட்டாள் அந்த டீச்சர்!
ஆனால் வேம்பு சம்மதிக்க வில்லை.
“இல்லைமா, அவள் பெட்டில் உச்சா போய் விடுவாள், வீணா உனக்கு சங்கடம்! அதுவும் இல்லாமல் அவள் அப்பா விட மாட்டான்” என்று மறுத்து விட்டார்.
அவர் முதல் முறையாக ப்ரனிதா அபியின் நட்பு பாசம் தெரிந்து, அவளின் வீட்டு மனிதர்கள் மேல் இருந்த மரியாதைக் காரணமாக அபியை அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்!
இப்போது அவர்கள் வீட்டினர் அனைவருக்கும் அபியைப் பிடித்து, இப்போது திருமணத்தில் வந்து நிற்கிறது!
வேம்பு, இன்னும் சில நாட்களில் அபி திருமணம் ஆகி சென்று விடுவாள் என்று, அவளுக்கு பிடித்ததை எல்லாம் பார்த்து பார்த்து சமைத்து ஊட்டியும் விட்டார். தன் மடியில் படுக்க வைத்து கொஞ்சினார்.
“பாட்டி உனக்கு கால் வலிக்கும்” என்ற அபியிடம், “பரவாயில்லடா, படுத்துக்கோ” என்று !
அவளுக்கு சமையல் பக்குவங்களையும் சொல்லிக் கொடுத்தார். கூடவே புகுந்த வீட்டில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளோடு!
இவ்வளவு சொன்ன அவரும், தன் சம்மதத்துடன் அபியின் திருமணம் நடக்க இருப்பதை சொல்ல தவறி விட்டார். அவரும் அவளுக்குத் தெரியும் என்றே நினைத்துக் கொண்டு!
இங்கே வேம்பு, இப்படி இருக்க, அங்கே சாந்தியும் ஒரு தவறு செய்துக் கொண்டிருந்தாள்! ஒரேடியாக தவறு ஏன்றும் சொல்லி விட முடியாது தான். சூழ்நிலை அப்படி!
அவள் ப்ரநிதாவின் திருமணத்திற்கு போய் விட்டு வந்த பின், தன் தாய் தந்தை, அண்ணன் அண்ணியிடம், அபியின் திருமண ஏற்பாடு பற்றி, விஸ்வநாதன் குடும்பத்தைப்பற்றி பெருமையாக கூறிக்கொண்டு இருந்தாள்.
சுந்தரி குடும்பம் சீர் செய்ய வந்தும், அவர்கள் ஏற்காதது, கவுஷிக்கிற்கு அவர்கள் கொடுத்த மரியாதை, அவர்கள் வீட்டினர் தன்னையும் அத்தையையும் ரொம்ப மரியாதையாக நடத்தியது, அவர்கள் உறவினர்களிடம் தன்னை சம்பந்தி என அறிமுகப்படுத்தியது, எல்லாம் பெருமையாக சொன்னாள்.
அருண் வருண் இருவரும் விஜய் காவ்யாவுடன் நன்கு ஒட்டிக் கொண்டனர்! அவர்களுக்கு அமெரிக்கா பற்றிய பெரிய கனவு இருந்தது!
விஜய் காவ்யா இருவரும் அமெரிக்க டாக்டர்கள் எனவும் அவர்களுக்கு ஒரே குஷி!
காவ்யாவைப் பார்த்து “நீங்க ஜோதிகா மாதிரி இருக்கீங்க!” என்றார்கள் வெள்ளந்தியாய்!
அவளுடன் தங்களுக்கு தெரிந்த ஹிந்தியில் பேசினார்கள்! பெரியவர்கள் ஆனதும், அங்கே அவர்களை தாங்கள் அங்கே அழைத்து செல்வதாகவும் ஆனால் அதற்கு அவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்று விஜய் சொன்னதை எல்லாம் அவர்களும் வீட்டில் சொல்லினர்!
பிரபுவையும் அவர்களுக்கு பிடிக்காமல் இல்லை, அவனுடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள்!
அவனுக்கு கொஞ்சம் வேலை இருந்ததால், இவர்களோடு ரொம்ப நேரம் ஸ்பென்ட் பண்ண வில்லை.
அன்றுப் பார்த்து வெண்ணிலாவின் பள்ளியில் ஒரு ஆசிரியைக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, அவளுக்கு சிகிச்சை அளித்த பின் அவளோடு வெண்ணிலாவையும் துணைக்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.
அவளை வீட்டில் விட்டுவிட்டு வழக்கமான நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வீட்டிற்கு வந்த அவள், வீட்டில் அபியைப் பற்றிப் பேச்சு கேட்கவும், உள்ளே போகாமல் வாசலில் நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள்!
உள்ளே எல்லாவற்றையும் கேட்ட ஹேமாவின் மனதிலும், நம்ம வெண்ணிலாவுக்கு நாம் அவசரப்பட்டு விட்டோமோ, சாந்தி சொல்வது போல கொஞ்சம் பொறுத்து நல்ல மாப்பிள்ளையாக, அவளுக்கு பிடித்த மாதிரி பார்த்தால் தான் என்ன என்ற எண்ணம் உருவாகவே செய்தது!
அதை எப்போதாவது அவர் வெண்ணிலாவிடம் வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால் செய்ய தவறி விட்டார்.
வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த வெண்ணிலாவை சாந்தி பார்த்து விட்டு, அவள் பொறாமை பற்றி தெரிந்திருந்ததால், பேச்சை மாற்றி விட்டாள்.
ஆனால் வெண்ணிலா தான் எல்லாவற்றையும் கேட்டு விட்டாளே!
அவளுக்குள் பொறாமைத்தீ பற்றி எரிந்தது!
ப்ரநிதாவை தான் அவள் வீடியோ காலில் பார்த்து இருக்கிறாளே! செம ஸ்டைலிஸா, அழகா இருப்பாள்! முகத்தில் அப்படி ஒரு பணக்காரத் தனம் தெரியும்!
அவள் அண்ணன் என்றால் அவனும் ரொம்ப அழகா, ஸ்டைலாக தான் இருப்பான்! பணக்காரன் வேறு!
இந்த அபிக்கு மட்டும் எப்படி எல்லாமே பெஸ்ட் ஆக அமைகிறது!
இப்போது தான் பஸ்ஸில் வரும் போது, அந்த சக்தியின் அக்கா ஆடு மேய்த்துக் கொண்டு போவதைப் பார்த்திருந்தாள் அவள்!
அவள் மனம் அந்த பெண்ணை ப்ரநிதாவோடு கம்பேர் செய்து நொந்தது!
மேலும் சக்தி வீட்டினர், சீர் செனத்தி விசயத்திலும் கொஞ்சம் எதிர்பார்ப்போடுதான் இருந்ததும் அவளுக்கு தெரியும்!
ஆனால் விஸ்வநாதன் குடும்பம் அபியை அவளுக்காகவே திருமணம் செய்வதாக சொல்லி சுந்தரி அம்மாள் கொடுக்க வந்ததை மறுத்து விட்டதும் அவளுக்கு ஆச்சர்யம் தான்! கிட்டத்தட்ட இருநூறு பவுனாவது இருக்கும்! அத்தனையும் வேண்டாம் என்றார்களா? ஆச்சர்யப் பட்டாள் அவள்!
நைசாக அருண் வருணிடம் பேசி பிரபுவின் போட்டோவை செல்லில் வாங்கிப் பார்த்தாள் அவள்!
அவளுள் பொறாமை விருட்சமாக வேரூன்றி வளர்ந்தது!
****************
கல்யாணத்தில் ,ப்ரனிதா ஸ்ரீயுடன் தானும் பிரபுவும் இருக்கும் ஒரு போட்டோவை, பெரிதாக லேமினேட் செய்து வாங்கியிருந்தாள் அபி!
இப்போது அதை ஹாலில் மாட்ட, ஒரு ஸ்டூலில் மீது ஏறி முயல, ஸ்டூலின் உயரமும் போதவில்லை!
யோசிக்கும் போதே, தன்னை யாரோ தூக்கி விடுவது போல இருக்க, அந்த தொடுகை பிரபுவோடது தான் என்பதை அபி அறிவாள்! ஆனால் அவன் எப்படி இங்கே! அவன் தான் பெங்களூரில் இருக்கானே!
ரெண்டு நாள் ஆகி விட்டது அவனிடம் போனில் பேசிக் கூட, அவ்வளவு பிசியாக இருந்தான் அவன்!