கிச்சனுக்குள் நுழைந்த, காஞ்சனாவுக்கு ஒரே ஆச்சர்யம்! என்ன ஆச்சு இந்த ராணிக்கு!
இவ்வளவு நறுவிசாக எல்லாம், அவளுக்கு செய்ய வராதே என்றவாறு,
சமையல் மேடையிலிருந்த, ஒரே சீராக நறுக்கி வைக்கப் பட்டுருந்த காய்கறிகளைப் பார்த்து விட்டு தான் அப்படி நினைத்தார்.
ஏனெனில், மிகவும் நேர்த்தியாக சாம்பார், கூட்டு, பொரியல் வகைகளுக்கு காய்கள் வெட்டப் பட்டு தனித் தனியாக அழகாக வைக்கப் பட்டிருந்தன!.
கறிவேப்பிலை, கொத்துமல்லி கூட நன்றாக கழுவி உருவி வைக்கபட்டு இருந்தது! சட்டென சமைத்து விட ஏதுவாக!.
ராணி வேலையெல்லாம், சுத்தமாக பொறுப்பாக செய்வார் என்றாலும், இந்த மாதிரி எல்லாம் செய்ய வராது.
அதனால் தான் காஞ்சனாவுக்கு ஒரே ஆச்சர்யம்!
ராணியை அவர் அழைக்க, “இதோ வந்துட்டேன்மா” என்றவாறே உள்ளே நுழைந்தார், ராணி கைகளில் நாலைந்து உரித்த தேங்காய்களை ஏந்தியவாறு.
“என்ன ஆச்சு உனக்கு, இவ்வளவு சூப்பரா காய் நறுக்கி வச்சுருக்க? அவ்வளவு பொறுமை உனக்கு இருக்காதே?”
“நான் இப்ப தான், தேங்காய் ஒன்று கூட இல்லையென்று, watchman கிட்ட குடுத்து உரித்து வாங்கிட்டு உள்ளயே வரேன்.
நான் ஒண்ணுமே இன்னும் செய்யலையே”
“அப்ப இதெல்லாம் யார் செய்தது?”
“இந்த அபி பாப்பா தான் என்ன மெனு என்று கேட்டுட்டு இருந்துச்சு”.
“நான் தான் ஆன்டி கட் பண்ணி வச்சேன். எல்லாம் சரியா இருக்கா?” என்றாள் அபி.
எனக்கு ரொம்ப போர் அடிச்சது. நீங்க வேற guest கூட பேசிட்டு இருந்தாங்க. அதான் செய்தேன்.”
“நல்லா செய்து இருக்கடா.” என்றார் காஞ்சனா.
அவர்க்கு ரொம்ப சந்தோசம். இன்றைக்குப் பார்த்து அவர் ஊரிலிருந்து ஆட்கள், வயல் குத்தகைப் பணம் கொடுக்க, வந்தவர்கள் பேசிவிட்டு கிளம்பி செல்ல கொஞ்சம் நேரம் ஆகி விட்டது.
ஸ்ரீயை வேறு லஞ்சுக்கு கூப்பிட்டு இருக்கான் பிரபு, சீக்கிரம் சமைக்கக் வேண்டும்.
ராணியை செய்ய சொல்லிட்டு போலாம், ஆனால், ராணிக்கு பொடியாக அழகாக நறுக்க வராது.
நாம் தான் செய்ய வேண்டும் என்று விரைந்து வந்தவர்க்கு, இனிய surprise!.
எல்லா வேலைகளையும் அபி நீட் ஆக செய்து வைத்து விட்டு, சோலோ ஆக பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தாள்.
காஞ்சனா பிறந்த இடம் குளித்தலை அருகே கிராமம். நிறைய நிலபுலன்கள் கொண்ட பண்ணைக் குடும்பம்.
ஒரே அண்ணன் பரமேஸ்வரன். அவரது மனைவி மீனாட்சி பாண்டிச்சேரியை சேர்ந்தவர்.
அவரது தந்தைக்கு ஒரே மகள். அவர்கள் வீட்டில் பெரிய ஜவுளிக்கடை வைத்து இருக்கிறார்கள். பரமேஸ்வரனுக்கு ஒரு பையன் – செந்தில் முருகன். மகள் வினிதா.
அண்ணி மீனாட்சி பரமேஸ்வரனை கொஞ்சம் கொஞ்சமாக சாமர்த்தியமாக பேசிப் பேசியே அவள் அம்மா வீட்டுக்கே ஒரேடியாக அழைத்துப்போய் செட்டிலாகி விட்டார்.
இத்தனை நிலபுலன்கள், இங்கே கவனிப்பார் அற்று கிடக்க, அவர்கள் ஜவுளிக்கடையை நிர்வகிக்க என்று அழைத்துப் போய் விட்டார்.
இது முற்றிலும் மீனாட்சியின் முடிவு மற்றும் ஆசை.
ஆனால், வெளியில் என்னவோ பரமேஸ்வரன் தான் விவசாயம் பிடிக்காமல், இந்த முடிவை எடுத்தார் என்பதுபோல பேசுவார்கள்.
ஏன் பரமேஸ்வரனே அப்படி தான் நினைத்துக்கொண்டு இருக்கார்!
அந்த வீட்டில் எப்போதும் “மதுரை” ஆட்சி தான்! ஆனால் வெளிப்படையாக அல்ல.
அந்த அளவுக்கு வாக்கு சாமர்த்தியம் மற்றும் தந்திர புத்தி உள்ள ஆள் மீனாட்சி!
இதையெல்லாம் நன்றாகவே அறிவார் காஞ்சனா!
தன் அப்பா அம்மாவைப் பற்றிக் கூட நினைக்க வில்லை பரமேஸ்வரன்!
காஞ்சனா தான் அவர்களைப் பார்த்துக் கொண்டார் அவர்கள் இறுதிக் காலம் வரை.
முதலில் ஊரிலேயே அவ்வபோது போய் பார்த்துக் கொண்டவர், பின் அவர்கள் ரொம்பவும் தளர்ந்து விட்ட பின், இங்கே தன் வீட்டில் வைத்துக் கவனித்துக் கொண்டார் ராணியின் துணையுடன்.
தன் அண்ணனுடன் ஆன உறவு தன் காலத்திற்குப் பின் இல்லாமலே போய் விடக்கூடாது, தன் பிள்ளைகளுக்கு தாய் மாமன் உறவு நிலைத்து இருக்க வேண்டும் என்றே, அவர் வினிதாவை பிரபுவுக்கு கல்யாணம் செய்ய நினைத்தார்.
சில ஒன்று விட்ட உறவினர்கள் கூட இதை கணித்து விட்டு எச்சரித்தார்கள்.
வேண்டாம் காஞ்சனா, அது ஒரு மாதிரி “அல்லி ராஜ்ஜியம்” நடக்கிற குடும்பம். உன் அண்ணன் மாமனாரே அங்கே வீட்டோடு மாப்பிள்ளை ஆக சென்றவர் தான்.
உன் பையனுக்கு வேற இடம் பாரு”
ஆனால், பரமேஸ்வரனும் ஒரேடியாக அன்பே இல்லாதவர் என்று சொல்லிவிட முடியாது. அவர்க்கு, என்னவோ அந்த சிட்டி லைப் ஸ்டைல் பிடித்து இருந்தது.
மற்றபடி, தங்கை மேல் பாசம் எல்லாம் இருக்க தான் செய்தது.
மீனாட்சிக்கு தான் இவர் மேல் கொஞ்சம் பொறாமை!
காஞ்சனாவின் பிள்ளைகள் எல்லாம் நன்கு படித்து நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என்று.
அவள் பையன் செந்தில் ஒரு தண்டம். படிப்பும் வரலை. கடையில் உட்கார்ந்து பிசினஸ் ஐ கவனிக்கவும் வணங்கவில்லை.
இன்னமும் ஒரு ஆர்ட்ஸ் டிகிரி கூட வாங்க முடிய வில்லை அவனால்.
வினிதா தட்டுத் தடுமாறி ஏதோ BBA முடித்து இருக்கிறாள் கல்யாணப் பத்திரிக்கையில் போட ஏதுவாக.
ஆனால், காஞ்சனாவின் பையன்கள் இருவர் love marriage செய்ததை வைத்து கொஞ்சம் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் காஞ்சனாவை மட்டம் தட்டுவார்!
“என்ன பெரிய சாப்ட்வேர் கம்பெனிக்கு CEO, அப்புறம் அமெரிக்கா டாக்டர் என்றாலும், உங்க தங்கச்சி பிள்ளைங்க எல்லாம் அதது இஷ்டத்துக்கு தானே கல்யாணம் செய்துகிச்சுங்க! என்று அதை வைத்து மட்டம் தட்டுவார்!
ஆனால் என்ன செய்தாலும் மீனாட்சியின் சாமர்த்தியம் தன்னிடம் பலிக்காது எனவும் அவர்க்கு நம்பிக்கை.
அதனால் தான் வினிதாவை மருமகள் ஆக்கிக் கொள்ள ஆசைப்பட்டார்.
இன்று வந்திருந்த ஊர்க்காரர்கள் கூட என்னம்மா, உன் அண்ணன் ஊர்ப் பக்கமே வர மாட்டேங்கிறார்.
அவர் வயலையாவது யாருக்கேனும் குத்தகைக்கு விடலாம் தான். அதை கூட செய்ய அவர் ஊர்ப்பக்கம் வருவதே இல்லை.
உண்மையில் யாரை நம்பியும் குத்தகைக்குக் கூட விட மாட்டார் மீனாட்சி. காஞ்சனாவையும் ஏற்பாடு பண்ண விடுவதில்லை
போன முறை சென்ற போது VAO கூட வருத்தப்பட்டார். இப்படி வயலை சும்மா போட்டு வைத்திருக்கார் என்று!
பூர்வீக வீட்டைக் கூட காஞ்சனாதான் ஆளப் போட்டு பராமரித்து வருகிறார்.
இதையெல்லாம் நினைத்த படியே, சரி சமையலை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று வந்தவர்க்கு,
அபி செய்து முடித்து வைத்திருந்த வேலைகளால், சற்றே கொஞ்சம் நிம்மதி ஆனது.
“அபிம்மா சூப்பர் டா தங்கம்! ஆன்ட்டிக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணி இருக்க!”
“நீங்க வேற ஆன்டி, ரொம்ப குழந்தை புள்ளையா இருக்கீங்க!
எலி ஏன் “nude” ஆக ஓடுதுன்னு தெரியலையா?” என்று சிரித்தாள் அபி
“அப்படீன்னா?’
“அப்பா தானே நீங்க evening பால் கொழுக்கட்டை செய்து தருவீங்க!”
“உங்களுக்கு ஐஸ் வைக்க தான்..
பாட்டிகிட்ட கூட ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால் இப்படி தான் ஏதாவது செய்வேன்!”
“அடேயப்பா, பெரிய காரியம் தான். இதுக்குப் போய் எதுக்கு ஐஸ் எல்லாம்?”
இல்ல, பாட்டியை செய்ய சொன்னால், “போடி அது ஒரு நச்சுப் பிடித்த வேலை, உன் சித்தி வரப்ப செய்ய சொல்றேன்” என்பார்.
சித்தி வரும்போது கட்டாயம் செய்ய சொல்வார்.
மேலும் சித்தியும் அபிக்கு பிடிக்கும் என்று அவளின் signature dish ஆன திரட்டுப் பால் கட்டாயம் ஒரு முறை செய்வாள்.
என்னதான் அபியை அம்மா இல்லாத குறை இல்லாமல் வளர்த்தாலும், சில சில விஷயங்களை, வயது மூப்பின் காரணமாக அவரால் செய்ய முடிவதில்லை.
இந்த பால் கொழுக்கட்டை மட்டுமல்ல. மேலும் சிலவற்றில்.
அபிக்கு அவர் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டு டிவி பார்க்க வேண்டும் என இருக்கும்.
அவரோ, “அபிம்மா பாட்டிக்கு கால் வலிக்குதுடா கொஞ்சம் உட்கார்ந்துகொண்டு பாரேன்” என்பார்.
அது போல், இரவில் அவர் மேல் கால் போட்டு தூங்கி பழகியவள், இப்போதெல்லாம்,
“அபிம்மா நீ பெரிய பிள்ளையாகிட்டே போற, பாட்டி ரொம்ப கிழவியாகிட்டே போறேன். கால் போட்டு படுக்காதடா.” என்று பாட்டி சொல்வதால் கொஞ்சம் ஏங்கிப் போய் தான் இருந்தாள்.
இப்ப ப்ரனிதா அவளிடம் அன்பு காட்டுவதால், ப்ரனிதா மடியில் படுத்துக்கொண்டு போன் பார்ப்பாள்.
இரவில் கால் போட்டுக் கொண்டு தூங்குவதும் உண்டு. காலேஜ் இல் கூட stone bench இல் உட்கார்ந்துகொண்டு மற்ற தோழிகளுடன் அரட்டை அடிக்கும் போது கூட அபி, ப்ரனியின் மடியில் உட்கார்ந்துகொண்டு இருப்பாள்.
அதனால் தான் அபியை கல்லூரியிலும் கூட ப்ரனியின் teddy bear என்றே கிண்டல் செய்வார்கள்!
இப்போது அபி ஆசைப்படுகிறாள் என்றவுடன் காஞ்சனாவும்
“ராணி, இவளுக்கு பால் கொழுக்கட்டை வேணுமாம். அரிசி ஊறப்போட்டு வை” என்றார்.
ராணியும் சிரித்த படியே “சரிம்மா” என்றார்.
“ஆன்டி sink ல இருக்க tap லீக் ஆகிக் கொண்டே இருக்கு பார்த்திங்களா?”
“ஆமா அபி, ஆறுமுகம் புது pipe எல்லாம் வாங்கி வந்துட்டார், அதுக்குள்ள அங்கிள் ல pickup பண்ற வேலை வந்துட்டதுனால், வந்து மாட்டி விடறேன்” என்று போய் விட்டார்.
அபி “எங்க அது” என்று கேட்டு, தானே, அந்த பைப்பை pipe wrench கொண்டு கழற்றிவிட்டு புதுசை மாற்றி விட்டாள்.
பார்த்து கொண்டுருந்த இருவரும் “பரவாயில்ல அபி கைவசம் நிறைய தொழில் வச்சுருக்க!” ஆச்சரியப்பட்டார்கள்.
பாட்டி, அடிக்கடி சொல்வார், “கண் பார்ப்பதை கை செய்ய வேண்டும்” என்று.
மேலும் கொஞ்சம் self-dependent ஆக இருக்க வேண்டும். எல்லாத்துக்கும் யாரையாவது சார்ந்தே இருக்கக் கூடாதுன்னு.
“இந்த மாதிரி சின்ன வேலைக்கெல்லாம் கூப்பிட்டா, பிளம்பர் உடனே வர மாட்டாங்க. அதான், இதை நானே கத்துக்கிட்டேன். lock down சமயத்தில் ரொம்ப உதவியது.”
“வடைக்கு நான் அரைத்து தரவா?” என்றுக் கேட்டு வாங்கி , அதை மிக்சியில் போட்டு, சரியான பதத்தில் அரைத்துக் கொடுத்தாள்.
வாங்கிக் கொண்ட காஞ்சனா, இப்படியெல்லாம் அந்த வினிதா பொண்ணு இருக்குமா. மனதுக்கு இதமா பேசி,
கைக்கு தோதா வேலை செய்து..
கொஞ்சம் பெருமூச்சு கிளம்பியது.
இந்த அபி விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும், வீட்டு காரியங்களில் பொறுப்பாகவே இருக்கா.
இந்த அபி மாதிரி வினிதா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.
இருப்பாளா இல்ல அவள் அம்மா மாதிரி இருப்பாளா? என்று,
இன்று கவலைப்படும் அவரே, “அபி மாதிரி” எல்லாம் வேண்டாம். அபியே தான் வேண்டும் சொல்லப் போகிறார்!