பெங்களூரில் அந்த தனியார் மருத்துவமனை நள்ளிரவிலும் அதன் பரபரப்பை குறைக்காமல் இயங்கிக்கொண்டிருந்தது.
மருத்துவ வாகனங்கள் இரண்டு உள்ளே வேகமாய் வந்துகொண்டிருக்க ஒன்றில் பிள்ளை வலியில் துடித்தபடி சிகிச்சைக்கு பெண் கொண்டு வரப்பட்டாள்.
உள்ளே வந்ததுமே அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச்செல்லப்பட அந்த மகப்பேறு பகுதிக்கான தளத்தில் மற்றவர்களும் பரபரப்பாகினர்.
அந்த பிரிவின் முன் பகுதியில் இருந்த தகவல் அறியும் மேஜையில் பணியில் இருந்த ஷீலா பிரசவத்திற்கு வந்திருக்கும் பெண்ணின் விவரங்களை பதிவு செய்தார்.
“புது பேஷன்டா ஷீலா…” என்று வந்தார் ஸ்ரீலக்ஷ்மி. அந்த பகுதியின் தலைமை செவிலியர்.
“வாங்க மேம், ரவுண்ட்ஸ் முடிஞ்சதா?…” என்ற ஷீலா,
“பேஷன்ட் புதுசில்லை, டாக்டர் ஷர்மிளா மேம் பேஷன்ட் லேபர் பெயின்ல அட்மிட்டாகி இருக்காங்க….” என சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு தகவல் சொல்ல முயன்றாள்.
“டாக்டர் ஷர்மிளா பேமிலி ட்ரிப் போயிருக்காங்களே. இன்னைல இருந்தே லீவ்…” என லக்ஷ்மி அருகிருந்த இன்னொரு நர்ஸ் புனிதா சொல்ல,
“டாக்டர் அர்னவ்க்கு கால் பண்ணுங்க…” என்றார் லக்ஷ்மி.
“அவர் இன்னைக்கு நைட் ஷிப்ட் தானே…” என புனிதா கேட்ட,
“நான் முதல்ல லேபர் வார்ட் போறேன்…” என ஓடினாள்.
“எஸ் லக்ஷ்மி மேம். ஓகே…” என்றதும் அவனுக்கு அழைத்து விவரத்தை சொல்லியவள்,
“உங்களை அந்த பேஷன்ட் கேஸ் பைல் எடுத்துட்டு உடனே எமர்ஜென்சிக்கு வர சொன்னார் டாக்டர்…” என்றதும் லக்ஷ்மி ஓடினார்.
சற்று நேரத்தில் நீண்ட நடையுடனான எட்டுக்களில் அந்த அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்தான் அர்னவ் சபரிவாசன்.
உள்ளே நுழையும் பொழுதே அவனின் கைகள் லக்ஷ்மியின் கையிலருந்த கையுறையை வாங்கிக்கொண்டது.
உறையை மாட்டியபடி அப்பெண்ணை பார்த்தவன் முகத்தில் அத்தனை கனிவும் ஆறுதலாய் மெல்லிய புன்னகையும்.
வந்ததுமே லக்ஷ்மியிடம் அப்பெண்ணின் பெயரையும் கேட்டு தெரிந்துகொண்டவன்,
“ஹலோ ஷாலினி, நானும் தமிழ் தான். நான் டாக்டர் அர்னவ் சபரிவாசன்….” என தன்னை அறிமுகப்படுத்திவிட்டு,
“நத்திங் டூ வொர்ரிமா. தைரியமா இருங்க…” என்றான் அப்பெண்ணிடம்.
வலியில் அறையே அதிரும்படியான அலறலுடன் அப்பெண் துடிக்க முதலில் பரிசோதித்தவன் புருவங்கள் இடுங்கியது.
“ஓகே, ஓகே. கூல்…” என தைரியம் சொல்லியவன் லக்ஷ்மியை தனியே அழைத்தான்.
“கேஸ் பைல்?…” என அதனை வாங்கிக்கொண்டவன் தனது கண்ணில் மாட்டியிருக்கும் கண்ணாடியை லேசாய் தூக்கி சரி செய்தபடி அதனை பார்வையிட்டான்.
“இவங்களுக்கு குடுத்த டேட்க்கு அட்மிட் ஆகலையே மேம்? நாலு நாள் முன்னவே வந்திருக்கனுமே?….” என்றான் சற்றே டென்ஷனுடன்.
அதனை அவன் முகத்தில் காண்பிக்கவில்லை என்றாலும் அனுபவம் வாய்ந்த லக்ஷ்மி கண்டுகொண்டார்.
“க்ரிட்டிக்கல் போல டாக்டர்…” என்றார் லக்ஷ்மி.
அதற்கு தலையசைத்தவன் உடனடியாக ஷாலினியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை பரிசோதித்தான்.
“ஸ்கேன் பண்ணனும்…” என்றான். பரிசோதனை எல்லாம் முடிந்தது.
“கண்டிப்பா சி.செக்ஷன் தான் லக்ஷ்மி மேம்…” என்றவன்,
“இவங்க பேமிலிக்கிட்ட ப்ரசீஜர்ல சைன் வாங்கிடுங்க. ஆப்பரேஷன் தியேட்டர் க்விக்கா ரெடி பண்ணுங்க…” என உத்தரவு பிறப்பித்துவிட்டு,
“டேமிட், ஹவ் கேர்லெஸ்?…” என்று நொந்துகொண்டான் அந்த மகப்பேறு மருத்துவன்.
ஆப்பரேஷன் தியேட்டர் தயாராகி ஷாலினியை அங்கே மாற்ற தானும் அதற்கான உடையில் வெளியே வந்தவன் அங்கே லக்ஷ்மி அந்த குடும்பத்தினரிடம் என்னவோ வாக்குவாதம் புரிந்துகொண்டு இருந்தார்.
“வாட் ஹேப்பன்ட்?…” என வந்து நின்றவன் தனது முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கை விலக்கி கேட்க,
“ஹலோ டாக்டர். நான் ஷாலினி ஹஸ்பண்ட். பெய்ன் வரவும் தானே அட்மிட் பண்ணியிருக்கோம். அதுவும் வாட்டர் பேக் கூட ஓப்பனாகிருச்சுன்னு என் அம்மா சொன்னாங்க. அப்பறம் ஏன் சி.செக்ஷன்?…” என்றான் அவன்.
“உங்க வொய்ப்க்கு டெலிவரிக்கு குடுத்த டேட்க்கு தாண்டி கொண்டுவந்து அட்மிட் பண்ணியிருக்கீங்க? இதுவே பெரிய தப்பு. இப்ப நார்மலுக்கு சுத்தமா வாய்ப்பில்லை…” என்றான் அர்னவ் பொறுமையாக.
“அதெப்படி டாக்டர் எங்கம்மாவே சொன்னாங்க. இதுதான்…” என அவன் பேச,
“டாக்டர் அந்த லேடிக்கு ப்ளீடாகிருச்சு. நவ் ஷி இஸ் அன்கான்ஷியஸ்…” என்று வந்தார் புனிதா பதட்டத்துடன்.
“காட்…” என்று பதறிய அர்னவ்,
“இங்க பாருங்க. இப்ப ஆர்க்யூ பண்ண டைமில்லை. உங்க வொய்ப் சுட்சுவேஷன் கிரிட்டிக்கல். உடனே குழந்தையை வெளில எடுக்கனும். இல்லைன்னா ரெண்டு உயிருக்கும் ஆபத்து…” என சொல்ல ஷாலினியின் கணவனின் முகத்திலும் பதட்டம் தொற்றியது.
“டாக்டர்…” என பயப்பார்வை பார்க்க அவன் மீது அந்த நிமிடம் பொங்கிய கோபத்தை கட்டுக்குள் வைத்த அர்னவ்,
“இங்க பாருங்க, நிலைமை இது தான். குழந்தை கழுத்துல கொடி சுத்திருக்கு. ஹார்ட் பீட் குறைவா இருக்கு. நீங்க முன்னாடியே குடுத்த டேட்ல வந்திருந்தா கூட நார்மலுக்கு வாய்ப்பிருந்திருக்குமோ என்னவோ? இப்ப ஒரு ப்ரெசென்ட் கூட இல்லை….” என்றான் அர்னவ்.
நிலைமை விபரீதம் என அவன் சொல்லியதிலேயே மற்றவர்களுக்கு புரிந்தாலும் ஷாலினியின் குடும்பத்தில் மற்றவர்கள் யோசித்தனர்.
“குழந்தையும் வெய்ட் அதிகம். உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா நீங்க அந்த பொண்ணை வேற ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகலாம். அப்பவும் ஒரு பார்ம்ல இப்படி உங்க முழு விருப்பத்தோட தான் பேஷண்டை கூட்டிட்டு போறதா சைன் பண்ணிட்டு தான் போகமுடியும். எங்க ஹாஸ்பிட்டல் ரூல்ஸ்…”
அர்னவ் கறாராக சொல்ல மீண்டும் அடுத்த நர்ஸ் ஓடி வரும் பொழுதே கையெழுத்து இட்டுவிட்டான் அந்த கணவன்.
அவனை கண்டனத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு வேறு பேசும் நேரமற்று வேகமாய் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் சென்றுவிட்டான் அர்னவ் சபரிவாசன்.
மனமெல்லாம் வேண்டுதலும், தாய், சேயை மீட்டுவிடவேண்டும் என்னும் நிதானமும் அவனை செயல்பட வைக்க அடுத்த சில மணி துளிகளில் அவன் கைகள் கூசும் பட்டின் மென்மையுடன் கையில் பிறந்த குழந்தை.
“வெல்கம் மை கேர்ள்…” என்று சொல்லியவன் கையில் குழந்தை அசைந்து நெகிழ்ந்தது.
வெளிச்சத்தில் கூசும் கண்களை திறக்க முடியாமலும், என்னடா இது புதிதாய் ஒரு உலகம் என கண்ணை திறந்து பார்ப்பதுமாய் இமைகளை விரிக்க கசக்கவுமாய் இருந்தது அந்த சிசு.
அன்றைக்கு ஒரு புது உயிரை கொண்டுவந்ததில் உடலெல்லாம் புல்லரிக்க அதனை பார்த்தவன் முகத்திலும் புன்னகை பரவியது.
“புனிதா…” என்று அவளிடம் குழந்தையை நீட்டினான்.
‘அச்சோ கொழுகொழுன்னு எவ்வளோ அழகு’ என லேசாய் உணர்ச்சிவசப்பட்ட புனிதா அதனை வாங்கிக்கொள்ள,
“காம் டவுன்…” என்றான் அர்னவ் அவளின் மனநிலை புரிந்து அவளை பாராமலே ஷாலினியில் கவனம் வைத்து.
“நத்திங் டாக்டர்…” என்றவள் அங்கிருந்து குழந்தையுடன் நகர ஷாலினிக்கான மேற்படி சிகிச்சையை முடித்தவன் ஒரு திருப்தியுடன் வெளியே வந்தான்.
“டாக்டர் ஷாலினி எப்படி இருக்கா?…” என அவள் கணவன் அர்னவின் அருகே வேகமாய் வர,
“மயக்கத்துல இருக்காங்க. ரூம்க்கு ஷிப்ட் பண்ணவும் போய் பாருங்க…” என்று சொல்லியவன்,
“இனியாவது கேர்லெஸா இருக்காதீங்க. ரெண்டு உயிர். டாக்டர்ஸ் நாங்க ஒன்னும் விளையாட்டுக்கு இந்த தேதிக்குள்ள அட்மிட் பண்ணனும்னு சொல்லலை. குழந்தை வளர்ச்சி, அவங்களுக்கான தேவை கருவறையில எத்தனை நாட்கள்ன்னு இப்படி எத்தனையோ இருக்கு. கொஞ்சமாவது புத்திசாலித்தனமா இருந்திருக்கலாம்…” என்றான் சுருக்கென்று.
“ஸாரி டாக்டர்…” என அவன் மன்னிப்பு கேட்க அவனின் பெற்றோர் குழந்தையை பார்த்துக்கொண்டிருந்தனர்.
“புனிதா…” என்று அர்னவ் சொல்லவுமே அவள் குழந்தையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.
“தேங்க்ஸ் டாக்டர்….” என ஷாலினியின் கணவன் சொல்லவும் ஒரு தலையசைப்புடன் அதனை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் அர்னவ்.
கிட்டத்தட்ட விடியும் நேரம் நெருங்கிவிட்டது. தன்னறைக்கு நுழைந்தவன் தன்னை சுத்தப்படுத்திவிட்டு அமர்ந்தான்.
இண்டர்காமை எடுத்து காபிக்கு சொல்லியவன் சற்று நேரம் கண்ணை மூடி ஓய்வெடுத்தான்.
காபி வரவும் குடித்துவிட்டு மீண்டும் அவனுக்கான வேலைகள் இழுத்துக்கொள்ள எழுந்து பார்வையிட சென்றுவிட்டான்.
மருத்துவமனையிலிருந்து கிளம்பும் முன் அன்று அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய விவரங்களை பகல் நேர மருத்துவரிடம் காண்பித்துவிட்டு அதனை குறித்த ஆலோசனையை முடித்துக்கொண்டு கிளம்பினான் அர்னவ்.
மருத்துவமனையிலிருந்து வீடு வந்து சேர அரைமணி நேரமெடுத்தது. காலை நேர பரபரப்பில் சிக்கிக்கொண்டவன் மெதுவாய் தனது வாகனத்தையும் அதற்குள் நுழைத்து தனது இல்லமிருக்கும் ஜெயநகர் வந்து சேர்ந்தான்.
கேட்டை திறந்து வைத்துவிட்டு காரை உள்ளே நிறுத்தியவன் வீட்டை திறந்து உள் நுழைந்தான்.
அவன் வந்து குளித்து முடித்து சாப்பிட சமைப்பதற்கு ப்ரிட்ஜில் இருந்து மாவை எடுக்க அலைபேசியில் அழைப்பு.