“என்னவாம்?…” என கேட்டுகொண்டே அடுத்த தோசையை வார்த்தான் அவன்.
“என்ன பன்ற சபரி? வந்துட்டியா வீட்டுக்கு?…” என்றார் அவனின் தாய் அன்னக்கிளி.
“ஹ்ம்ம், இப்ப தான். வந்து தோசை வார்த்திட்டு இருக்கேன்…” என்றவன் இன்னொரு கிண்ணத்தை எடுத்து அதில் தக்காளி தொக்கை இரண்டு கரண்டி வைத்து ஓவனில் வைத்தான் சூடு செய்வதற்கு.
“இன்னும் ஒரு வாரம் அம்மா வந்திருவேன் சபரி…” என்றார் அவர் மகனை எண்ணி.
“நோ இஷ்யூஸ் ம்மா…”
“அப்பா நாளைக்கே அங்க வரதுக்கு இங்கருந்து கிளம்பனும்னு சொன்னார். அதுக்குள்ளே உன் அத்தை வீட்டுல இருந்து பசங்களுக்கு லீவ்ன்னு இங்க வந்துட்டாங்க. எல்லாரும் அகஸ்தியர் பால்ஸ் போறோம் இன்னும் கொஞ்ச நேரத்துல…”
“ஓகே ம்மா. என்ஜாய்…”
“நீயும் வந்திருக்கலாம்ன்னு உன் மாமா கூட சொன்னார்…”
“வரலாமே. நெக்ஸ்ட் டைம் நான் வரப்போ வர சொல்லுங்க. சேர்ந்து போகலாம்…” அமைதியாக எந்தவித டென்ஷனும் இன்றி பேசினான் அவன்.
எப்போதும் உள்ளது தானே? மகனையும், அவன் வராததையும் சொல்லி சொல்லியே பேசும் தன் கணவரின் தங்கை, மற்றும் அவளின் கணவர்.
அதனை பொருட்படுத்தாமல் கோபப்படாமல் என்றைக்கும் போல கண்டுகொள்ளாமல் செல்லும் மகன். என்றைக்கும் இது மாறாதோ என்று தான் தோன்றியது.
“அப்பாவும் பால்ஸ் வர கிளம்பிட்டாங்களா?…” என அர்னவ்.
“எங்க? உங்கப்பாவை பத்தி தெரியாதா? மாட்டேன்னு ஒரேதா சொல்லிட்டார். இதுக்கு தான் நாங்க வரதில்லைன்னு உன் மாமா அதுக்கும் குதிக்கிறார்…”
“பவர் ஸ்டேஷன்ல வேலை இருந்திருக்கும். வரமுடியாதிருக்கும்…” மகனே சமாளிப்பாய் சொல்ல,
“உன் அத்தையும், மாமாவும் நம்பனுமே?…” என புலம்பிக்கொண்ட அன்னக்கிளி,
“சரி நாங்க கிளம்பறோம் சபரி. அப்பறம் பேசறேன். நீ சாப்பிட்டு தூங்கி எழுந்துட்டு எனக்கு மெசேஜ் பண்ணு…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.
கலைவாணன், அன்னக்கிளி தம்பதிகளின் மூத்த மகள் அருந்ததி. இரண்டாவது மகன் அர்னவ் சபரிவாசன்.
கலைவாணன் பாபநாசம் நீர்மின் நிலையத்தில் உயர் பதவியில் பணியில் இருக்க அந்த அன்னக்கிளி வீட்டின் ஆளுமை.
மூத்த மகள் அருந்ததி திருமணம் முடிந்து கணவன் இரு குழந்தைகள் என சிங்கப்பூரில் வசித்து வருகிறாள்.
ஐந்து மாதங்களுக்கு தம்பியின் திருமணத்திற்கு வந்து சென்றவள். அடுத்து எப்போதடா என காத்துக்கொண்டு இருந்தாள் ஊர் வர.
தன்னிரு பிள்ளைகளை கரை சேர்த்துவிட்ட நிம்மதி பெற்றோருக்கு இருந்தாலும் இன்னும் அது முழுமை பெறவில்லை.
“அவன் வாழ்க்கை, அவன் பார்த்துக்க மாட்டானா? சும்மா அவனை தாங்கி தாங்கியே இப்படி பாழாக்காதீங்க. எல்லாம் உங்க மருமக பொண்ணு பார்த்துப்பா…” என அருந்ததியின் அதட்டலில் தான் வாயை மூடி இருக்கிறார் அன்னக்கிளி.
ஆனாலும் உள்ளுக்குள் அத்தனை வேண்டுதல். இதோ இப்போதும் கோவிலுக்கு சென்று மகனுக்காக விளக்கேற்றி வேண்டிக்கொண்டு தான் வந்திருந்தார்.
பாதி நாட்கள் பாபநாசமும் பாதி நாட்கள் பெங்களூருவிலும் தான் அவருக்கு கழியும்.
ஒருவாரம் இங்கென்றால் ஒருவாரம் அங்கு என அவரின் வாழ்க்கை இங்குமங்குமாக தான் ஊசலாட்டம்.
மகனுக்கு பெங்களூரில் சமைக்க, வீட்டை சுத்தம் செய்ய என்று ஒருவரை ஏற்பாடு செய்துவிட்டிருந்தார் தான். ஆனாலும் தன் மகனுக்கு தன்னை போல வருமா என புலம்பாத நாளில்லை.
கலைவாணன் ஓய்வு பெரும் வரை இப்படித்தான் போல என நினைத்திருக்க ஓய்வு பெற்றாலும் என் ஊர் தான் எனக்கு சொர்க்கம் என்றுவிட்டார் கலைவாணன்.
“ரிட்டயர்ட் ஆனோமா, பிள்ளையோட போய் சந்தோஷமா இருந்தோமான்னு இருக்கா இந்த மனுஷனுக்கு? நான் தான் கிடந்து அல்லாடனும்…” என நொந்து பேசும் பொழுதெல்லாம்,
“உன் மவனோட இருக்கனும்ன்னா போய் இருந்துக்க. என்னை ஏன் பழிக்கிற? உன்னை நானா இங்க கட்டி வச்சிருக்கேன்?…” என்பார் கலைவாணன்.
“நான் என்ன சின்ன பிள்ளையாம்மா? என்னை நான் பார்த்துக்க முடியாதா? நீங்க அலையாதீங்க. உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க…” என்பான் அர்னவ்.
இப்போதும் தானே சமைத்து சாப்பிட்டு முடித்தவன் எல்லாவற்றையும் எடுத்து சுத்தம் செய்துவிட்டு தனது படுக்கையறைக்குள் நுழைந்தான்.
வந்தவன் கண்ணை மூடிய நொடி உறக்கம் வந்து தழுவிக்கொள்ள பிற்பகல் வரை எழுந்துகொள்ளவில்லை.
வெகுநேரமாக அடிக்கும் காலிங் பெல் சத்தத்தில் தான் அவனும் விழிக்க சோம்பலுடன் எழுந்தமர்ந்தவன் ஒரு பனியனை எடுத்து போட்டுக்கொண்டு வெளியே வந்து கதவை திறந்தான்.
“ஸார் ரிஜிஸ்டர் போஸ்ட்…” என்று கொரியர் தருபவன் பொறுமையின்றி நிற்கவும் ஒரு பெருமூச்சுடன் கையெழுத்திட்டு அதனை வாங்கிக்கொண்டவன்,
“தேங்க் யூ…” என்றுவிட்டு உள்ளே வந்துவிட்டான்.
வந்திருந்தது பெரிய கவராய் இருக்க இந்த முறை என்னவோ என்ற விதமாக தான் நினைத்தான். அனுப்பியிருப்பது மனைவியல்லவா!!
அதனை ஹாலில் சோபாவில் போட்டுவிட்டு அடுக்களை சென்றவன் தனக்கு ஒரு ஜூஸை போட்டு கையில் எடுத்தபடி மொபைலை எடுத்துக்கொண்டு வந்தமர்ந்தான்.
வேலைக்கு வருபவர் விடுமுறை என்றால் வழக்கமாய் தனக்கு சமைத்து அனுப்பும் மெஸ்ஸில் இருந்து உணவிற்கு சொல்லிவிட்டு ஜூஸை பருகியவன் விழிகள் அந்த கவரில் தான் நிலைத்திருந்தது.
கவரின் மேல் பகுதியில் நீண்டு லேசாய் சாய்ந்திருந்த அந்த கையெழுத்தில் தான் பார்வையை மேயவிட்டிருந்தான் அர்னவ்.
டாக்டர் அர்னவ் சபரிவாசன் என்ற எழுத்திற்கும், அதன் கீழிருந்த முகவரி எழுத்திற்குமான சிறு வித்தியாசத்தை கூட அவன் விழிகள் கண்டுகொண்டது.
திருமணம் முடிந்து அவள் இப்படி அனுப்பவது எல்லாம் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருந்து தற்போது கடந்திருந்தது.
எத்தனை மெதுவாய் பருகியும் பழச்சாறு தீர்ந்துவிட தம்ளரை கழுவி வைத்துவிட்டு வந்தமர்ந்தவன் அந்த கவரை எடுத்தான்.
இத்தனை பெரிதாய் உள்ளே என்ன இருக்கும் என்ற பார்வையிடலுடன் அதனை பிரிக்க உள்ளிருந்து சில புகைப்படங்கள்.
பெரிதாய் இரு புகைப்படம் அவளதுவும், இன்னும் சில புகைப்படங்களும் சேர்ந்தே வந்திருந்தது.
அவள் பயிலும் கல்லூரியில் நிகழ்ச்சி என கண்டுகொண்டவன் முதலில் கூட்டமாய் அனைவருமாக எடுத்திருந்த புகைப்படத்தை தான் பார்த்தான்.
நாட்டிய நிகழ்ச்சி. அவள் பங்குபெற்றதை அவளுடையை அலங்காரத்தை வைத்து கண்டுகொண்டான் அர்னவ்.
அவள் பரிசு வாங்கிய புகைப்படமும் சேர்ந்தே இருக்க பார்த்தவன் இதழில் சிறு புன்னகை.
“கங்க்ராட்ஸ்…” என தானே அவனின் இதழ்கள் இயம்ப அடுத்த பெரிய புகைப்படத்தை எடுத்தான்.
அவள் மட்டுமே அபிநயம் பிடித்து நின்றிருந்த விதம். ஆனால் நாட்டிய உடையன்றி சாதாரண காட்டன் புடவை தான்.
பயிற்சியின் போது எடுத்தது என புரிந்தது. லேசாய் கலைந்திருந்த கூந்தலும், காதோர கூந்தல் அவளின் நெற்றியில் விழுந்து வியர்வையில் நெற்றியில் ஒட்டியிருந்தது.
அவனறியாமலே அவன் விரல்கள் அவள் முகத்தில் படிந்திருந்த கூந்தல் கற்றையை ஒதுக்கிவிட முயல புகைப்படத்தில் குறும்பாய் புன்னகைத்த அந்த முகத்தில் விரல்களை மீண்டும் கைகளுக்குள் இழுத்துக்கொண்டான்.
“ஊஃப்…” என தன்னை நொடி பொழுதில் ஆசுவாசப்படுத்தியவன் அதனை கவருக்குள்ளயே வைத்துவிட்டு அடுத்ததை எடுக்க அவளின் அந்த கடிதம்.
“இன்ட்ரெஸ்ட்டிங்…” அவளின் முதல் கடிதம் வந்த பொழுது நினைத்ததை போலவே தான் இம்முறையும் தோன்றியது.
“ஹலோ டாக்டர். எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன். இந்த நாள் இனிய நாளாக அமைய முல்லையின் வாழ்த்துக்கள்…” என ஆரம்பித்திருந்தாள்.
அடுத்ததாய் நிகழ்ச்சியை பற்றியும் அவனுக்கு முந்தைய கடிதம் அனுப்பிய பின் நடந்த நிகழ்விலிருந்து தற்போது வரை சுருக்கமாய் சில வரிகளில் அவள் எழுதி இருந்தாள்.
கதை படிப்பதை போல சுவாரஸியம் குறையாமல் அவள் எதிரில் நின்று சொல்வதை போலிருக்க சாய்ந்தமர்ந்து அதனை வாசித்துக்கொண்டிருந்தான் அர்னவ்.
காதில் அவள் குரல் ஒலிக்க, கண்முன் அவளின் விழிகளும் பாவனை புரிய எழுத்துக்களில் ஊர்ந்த விழிகள் கீழே கடைசியாய் அவளின் கடித முற்றுமையில் வந்து நின்றது.
“இப்படிக்கு மலரும் முல்லை…” முற்றுபெற்றது அந்த மடல்.
வழக்கமான அந்த வார்த்தையில் இடறியவன் கடிதத்தை மடித்து உள்ளே வைத்து அந்த கவரையும் இன்னொரு அறையில் இருக்கும் லாக்கரில் வைக்க செல்ல அங்கே அவள் இதற்கு முன் அனுப்பியவைகள் அதில் அணிவகுத்திருந்தது.
பார்த்ததும் மீண்டும் பார்வைக்கு எடுத்துக்கொள் என அவனை அழைக்க தலையை உலுக்கிக்கொண்டவன் இதழ்கள்,
“முல்லைமலர்…” என முணுமுணுத்தது.
அந்த அலமாரி முன்னே நின்றிருந்தவன் கவனத்தை வெளியே அழைப்பு மணி கலைக்க சட்டென பூட்டிவிட்டு வெளியே வந்தான்.
அவனுக்கான உணவு வந்திருந்தது. வாங்கிவிட்டு மீண்டும் சாப்பிட்டு படுத்தவனுக்கு உறக்கம் தான் விழிகளை எட்டவில்லை.
புரண்டு படுத்தவன் அதற்கு மேல் முடியாமல் தனது மொபைலை எடுத்து மனைவிக்கு குறுஞ்செய்தியை அனுப்பிவைத்தான்.
“கொரியர் வந்திருச்சு முல்லைமலர்…” என்று அனுப்பியவன் அவள் பார்க்கிறாளா இல்லையா என்று கூட கவனிக்கவில்லை.
போனை வைத்துவிட்டு தோட்டத்தின் பக்கம் சென்றுவிட்டான் அர்னவ் சபரிவாசன்.
மனமெல்லாம் இன்னும் இருபது நாளில் வரவிருக்கும் தங்களின் தலைதீபாவளியில் தான் சென்று நின்றது.