சாப்பிட்டு முடிக்கவுமே ஆத்மிகா கையில் பட்டாசை தூக்கிக்கொண்டு வந்துவிட சிறிது நேரம் அதனை போட்டுக்கொண்டு இருக்க அர்னவ்விற்கு அதற்கு மேல் வாசலில் நின்று வெடிக்க முடியவில்லை.
“ஓகே, நான் உள்ள இருக்கேன். நீங்க பட்டாசு வெடிங்க…” என வந்துவிட முல்லையும் வந்துவிட்டாள்.
“என்னாச்சு? வந்துட்டீங்க?…”
“எனக்கு டஸ்ட் அலர்ஜியாகும் முல்லை. அதான் அதுக்கு மேல இருக்க முடியலை. நீ ஏன் வர? நான் இருந்துப்பேன்…”
“இருக்கட்டும்…” என்று அவனுக்கு எதிரே அமர்ந்தாள்.
“கையை வாஷ் பண்ணிட்டு வரேன்…” என அவன் செல்ல உறங்குவானோ என்று அவனுக்கு ஒன்றுபோல் தயார் செய்தாள்.
“நான் பார்த்துக்கமாட்டேனா?…” என்றவன் தனது கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு சாய்ந்தமர்ந்து தலையை பின்னால் சரித்தான்.
“என்ன லெட்டர் பார்மெட் நோட்பேட்?…” என கேட்கவும் செய்தான்.
அவன் கேட்கவும் தன்னுடைய நோட்பேட்களை எடுத்து அர்னவ்விடம் காண்பித்தாள் முல்லை.
நடுவில் வெள்ளை தாளும், அதன் ஓரங்கள் எல்லாம் வேலைபாடுகளுடன் என கிட்டத்தட்ட பெயர்கள் அச்சடிக்காத பத்திரிகை போலிருந்தது.
“வாவ்…” என்றவன்,
“எனக்கு நீ அனுப்பற லெட்டர்ஸ் கூட இந்த பேப்பர்ஸ் தானே?…” என கேட்டான் அவளிடம்.
“ஹ்ம்ம்…”
“எப்படி இது?…” என்றவன் எழுந்து வந்து அதில் இருந்த இன்னும் சில நோட்பேட்களை பார்த்தான்.
“ப்ரெண்ட் அப்பா பிரிண்ட்டிங் ப்ரெஸ் வச்சிருக்காங்க. நான் இப்படி டிசைன் பண்ணி குடுத்து நோட்பேட் அடிச்சு வாங்கிப்பேன்…”
“ஹ்ம்ம், சூப்பர்ப்…” என்றவன்,
“இதனால தான் லெட்டர்ஸ் பழக்கமா?…” என கேட்டான்.
“அப்படின்னு சொல்ல முடியாது. அப்பாவுக்கு இதுதான் பழக்கம். போன் வந்தாலும் வாழ்த்து மடல், இன்னும் சில விஷயங்கள்ன்னு அவங்க ப்ரெண்ட்ஸ்க்கு இப்படித்தான் அனுப்புவாங்க…”
“உங்கப்பாட்ட இருந்து உனக்கும் அந்த பழக்கம்!! குட் ஹேபிட்…” என்றான் புன்னகையுடன்.
அப்படியே அங்கிருந்த சிறு ஆல்பங்களை எடுத்து பார்க்க சின்ன வயதிலிருந்து குடும்பத்துடன், தனியே என்று முல்லையின் விதவிதமான புகைப்படங்கள்.
“அப்பவே டான்ஸ் கத்துட்டிருந்தியா முல்லை?…” என கேட்டுக்கொண்டே பக்கங்களை திருப்ப பள்ளி சீருடையிலும் அவளின் புகைப்படம்.
சில நொடிகள் கூர்ந்து கவனித்தவன் புருவங்கள் சுருங்க முல்லை அவனையும், அந்த புகைப்படத்தையும் மாறி மாறி பார்த்தாள்.
“இது எப்போ எடுத்தது முல்லை?…” என கேட்க,
“ப்ளஸ் டூல எடுத்த போட்டோ…” என்றவள் விழிகள் அவன் முகத்தையே வட்டமிட்டது.
“ஓஹ்…” என்றான்.
அதில் அடுத்த பக்கத்திற்கு தாவினாலும் மீண்டும் அந்த பள்ளி உடையில் நின்றவளை திருப்பி பார்த்தான்.
“அப்ப இருந்ததுக்கும் இப்பவும் எவ்வளோ வித்தியாசம் உன்கிட்ட?…” என்று சொல்ல ஏறி இறங்கிய நெஞ்சுக்குழி சற்றே ஆசுவாசம் பெற்றது.
“என்ன முல்லை, ரெஸ்ட்லெஸா தெரியற?…” என கேட்டவன்,
“கிட்ட வா…” என்று சொல்லி அவள் நெற்றியில், கன்னத்தில் கை வைத்து பார்த்தான்.
சில்லிட்டிருந்தவள் உடல் வெடவெடக்க மெல்லிய நடுக்கத்தை இவன் விரல்கள் உணர்ந்தது.
அவளின் அச்சத்தை புன்சிரிப்புடன் கண்டுகொண்டவன் கை விரல்கள் முல்லையின் கழுத்தில் வந்து நின்றதும் நகர விடாமல் சட்டென பிடித்துக்கொண்டாள் அவள்.