மனதில் கனன்ற கோபத்தை எல்லாம் வாகனத்தை செலுத்துவதில் தான் காண்பித்தான் அர்னவ்.
மீண்டும் ஊர் திரும்பும் பொழுதும் தனக்கு ட்ரைவரை ஏற்பாடு செய்வதாக தான் இருந்தான்.
ஆனால் முல்லையை இறக்கிவிட்டு அவள் கலங்கி நின்ற தோற்றத்தை கண்டவன் உள்ளம் தன்னை குறித்துமே உலைக்களமானது.
“இவனுக்கு தான் தெரியலை கட்டறது. இவளுக்கு தெரிஞ்சது தானே? அவன் கையை விலக்கி விட்டாளா? இதுதான் சாக்குன்னு தாலியை வாங்கிட்டு தான நின்னா?…” என்ற மணிமாறனின் காட்டுக்கத்தல் இப்போதும் அர்னவ்வின் காதில் ஒலிக்க நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தவன் கார் தடுமாறியது.
சட்டென ஒடித்து காரை ஓரம் கட்டியவன் ஸ்டியரிங்கை பிடித்தபடி அதில் தலையை சாய்த்து தன்னை நிதானப்படுத்தினான்.
என்ன முயன்றும் மனது அதற்குள்ளே சுழல இந்த நிலையில் தானே ட்ரைவ் செய்ய முடியாதென யோசித்தவன் சீட்டை பின்னுக்கு சரித்து சாய்ந்துகொண்டான்.
ஒருமணி நேரம் கடந்ததும் தான் தானாகவே எழுந்து மீண்டும் கிளம்பினான் அர்னவ்.
அதனை சிந்திக்காதே சிந்திக்காதே என எத்தனை சொன்னாலும் உள்ளுக்குள் புத்தியில் உரைக்கவில்லை.
அன்றைய நாளில் எத்தனை அவமானம்? எவ்வளவு அசிங்கம்? தன் மீது மட்டுமே இத்தனை நாட்கள் குற்றத்தை சுமந்துகொண்டு இருக்க ஒருநாளேனும் இதனை சொன்னாளா என நினைத்தவனுக்குள் ஆற்றாமை.
இன்னொரு மனமோ வேண்டுமென்றே செய்யும் பெண்ணில்லை என வக்காலத்தும் வாங்கியது மனைவிக்கு.
எதுவும் இருக்கட்டும், தன்னிடம் ஏன் சொல்லவில்லை? எத்தனை கடிதங்கள், எத்தனை புகைப்படங்கள், பரிசுகள் என அவள் அனுப்பியிருக்க அதில் ஒருமுறை கூடவா இதனை சொல்லமுடியாமல் போயிருக்கும்?
இப்படியான வழியில் தான் அவனின் சிந்தனை மேகங்கள் கோபத்துடன் நகர்ந்தது.
ஒவ்வொன்றும் முல்லைக்கு எதிராய் ஒன்றுகூடி நிற்க இரவாகியதும் பத்திரமாக ஊர் வந்து சேர்ந்திருந்தான் அர்னவ்.
திடீரென கிளம்பிவிட்டாகிற்று. வீட்டிற்கும் தகவல் தரவில்லை என எண்ணியவன் மொபைலை எடுத்து பார்த்தான்.
தான் விட்டுவிட்டு வந்ததில் இருந்து முல்லை தான் குறுஞ்செய்திகள் அனுப்பி இருந்தாள் அவனுக்கு.
‘எங்க போய்ட்டிருக்கீங்க? எந்த இடம்? ஊருக்கு போனதும் சொல்லுங்க, மெதுவா கார் ட்ரைவ் பண்ணுங்க. வரும் போது மாதிரி ட்ரைவர் வராங்களா?’ இப்படியாகிய கேள்விகள் படையெடுத்திருந்தது.
இமைக்காமல் அதனை பார்த்தவனுக்கு மீண்டும் மீண்டும் அவளுடன் தான் நின்ற அந்த புகைப்படம். கூடவே தனது பேனாவும்.
எத்தனை கோபமிருந்தும் அவளுக்கு பதிலளிக்காமல் இருக்கமுடியவில்லை அர்னவ்வினால்.
வந்துவிட்டதாய் ஒற்றை வார்த்தை மட்டுமே பதிலை அனுப்பியவன் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு படுத்துவிட்டான்.
மதியம் அவளுடன் உண்டது. வயிறு பசியில் அவனை எரிக்க உணரும் நிலையிலில்லை அர்னவ்.
அங்கிருந்து வந்து உடை மாற்றாமல் கூட ஹாலில் சோபாவிலேயே படுத்துவிட்டான் அர்னவ்.
மணிமாறன் பேச்சும், முல்லையின் பயமும், பதட்டமும் அவனை சரியாய் யோசிக்கவிடவில்லை.
அவள் மீது தவறில்லை என்றால் தன்னிடம் சொல்லத்தானே? என்று மட்டுமே தான் அவனை யோசிக்க வைத்தது.
அர்னவ்வின் எண்ணக்குவியல்கள் தற்போது என்னவாக இருக்கும் என்ற கலக்கத்துடன் விடுதியில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் முல்லை.
கையில் அவனது பேனாவும், அந்த புகைப்படமும். பார்க்க பார்க்க கண்ணீர் தான் பொங்கியது.
துடைக்கவும் தோன்றாமல் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவளும் இரவு உண்ணவில்லை.
நிச்சயம் தன்னை தவறாக தான் புரிந்திருப்பான் என்று அவனின் கோபத்திலும், கேட்ட கேள்வியிலும் தெரிந்திருக்க தனக்கு பேச கூட வாய்ப்பளிக்கவில்லையே என நொந்துகொண்டாள்.
“ப்ராமிஸ், நான் எதுவுமே தப்பு பண்ணலை…” இதழ்கள் முணுமுணுத்தது.
எதுவாக இருப்பினும் இதனை அவனிடம் நேரில் தான் சொல்லவேண்டும் என்ற நினைவுடன் இருந்தவள் எண்ணங்கள் தங்கள் திருமணத்தின் முதல் நாளில் சென்று நிழலாடியது.
அன்று வீட்டிற்குள் வரை ரேடியோ குழாயின் சத்தம் காதை பிளக்க உஷா கதவை சாற்றி இருந்தாள்.
“கொஞ்சம் இந்த சத்தத்தை குறைச்சு தான் வச்சா என்னவாம்? இந்த மணி அடாவடி பெரிய அடாவடியால இருக்கு?…” என எரிச்சலுடன் குருமாவுக்கு தாளித்தாள் உஷா.
“கல்யாண வீட்டுக்காரங்க, நித்தமுமா போடறாங்க? விடேன் உஷா…” கௌஷிக் மகளை வைத்துக்கொண்டு கோதுமை மாவில் உருவம் செய்து காண்பித்துக்கொண்டு விளையாடியபடி இருந்தான்.
“இவன் ஒருத்தன் வீட்டுல தான் கல்யாணம் பன்றாங்களா? ரொம்பத்தான். எல்லாரும் வீட்டுக்கு ரெண்டு குழாய் கட்டுவாங்க. இவன் தெருவுக்கு நாலுல கட்டிருக்கான். என்னவோ ஊர் திருவிழா மாதிரி…” என அங்கலாய்த்தாள்.
“அண்ணி தேய்ச்சிட்டேன்…” என முல்லை சொல்ல,
“சாப்பிட்டு போகலாம்…” என்றாள் உஷா.
“ப்ளீஸ் அண்ணி, சௌமி அக்கா ரெண்டுதடவை கால் பண்ணிட்டாங்க…”
“சத்தியமா அங்க சாப்பிடமாட்டேன். எனக்கு தெரியாதா?…” முல்லைக்கு இப்போது போய்விட்டு விரைவில் வந்துவிட வேண்டுமே என்றிருந்தது.
“இருந்தாலும் வேண்டாம். சௌமி அம்மாவுக்கு தலைகால் புரியலை. மகளை டாக்டருக்கு படிக்க வச்சதுல ஒரு பெருமைன்னா இப்ப மாப்பிள்ளையும் பெரிய வேலையில இருக்கறது இன்னும் மண்டைக்கனம்…”
“உஷா…” கௌஷிக் அதட்ட,
“நீங்க சும்மா இருங்க. எனக்குல பொடுபொடுன்னு வருது. பத்திரிக்கை வைக்க வந்தோமா, வச்சோமான்னு இல்லாம உங்க வீட்டு பொண்ணுக்கு அப்படியெல்லாம் அமையுமான்னு நக்கலா பேசிட்டு போகுது…” என்றாள்.
“சரி விடு, அவங்க புத்தி அது தான்…” கௌஷிக் அவளை சமாதானம் சொல்ல,
முல்லை சாப்பிடும் வரை அவளுக்கு சுட்டு கொடுத்துவிட்டு மகளுக்கும் எடுத்துக்கொண்டு தானும் அமர்ந்தாள்.
“ஆனாலும் ரொம்பத்தான் பெருமை பீத்திக்கறாங்க. கரெக்ட்டா நம்ம வீட்டு வாசல் வரைக்கும் பந்தலை போட்டு வச்சிருக்காங்க பாருங்க. மாப்பிள்ளை வந்து தங்கற வீட்டுக்கு மட்டும் பந்தல் போட்டா ஆகாதா?…” என அதற்கும் கடுகடுத்தாள் உஷா.
“இப்ப நீ வாயை மூட போறியா இல்லையா?…” கௌஷிக் அதட்ட,
“ப்ச், இவர் வேற…” என சலித்த உஷா,
“ஆமா நீ இந்த சுடிதார்ல தான் போக போறியா?…” என முல்லையிடம் கேட்டாள்.