உடை நிறத்திற்கு பொருத்தமாய் அந்த நிறத்து பொட்டை தேடியவள் நெற்றியில் இட்டுக்கொண்டு மீண்டும் அதனிடத்தில் வைக்க அங்கே அந்த பரிசு தாள் சுற்றப்பட்ட சிறு பெட்டி.
திருமண வாழ்த்துடன் சௌமியா, அர்னவ் என பெயரையும் போட்டு தயாராக வைத்திருந்தாள் முல்லை.
திருமணம் முடிந்து தங்கள் வீட்டிற்கு சௌமியா தன் கணவனுடன் வரும் பொழுது தான் அதனை குடுக்க வேண்டும் என நினைத்தபடி புன்னகையுடன் அதனை மீண்டும் உள்ளே வைத்தாள்.
“முல்லை இன்னுமா கிளம்பற?…” என உஷா அழைக்கவும் வெளியே வந்துவிட்டாள் முல்லை.
“ரெடி, ரெடி. போய்ட்டு வரேன்…” எனவும் அவளுக்கு பூவை வைத்துவிட்ட உஷா,
“போய்ட்டு அரைமணி நேரத்துக்குள்ள வந்திரு. ரொம்ப நேரம் இருக்கவேண்டாம். புரியுதா?…” என்றதும் தலையாட்டியவள்,
“ஆத்மியை தூக்கிட்டு போகவா?…” என கேட்டாள்.
“ம்ஹூம், அங்க போனா இந்த வாண்டு சேட்டை பண்ணும். அங்க யாரும் அதட்டினா எதிர்த்து பேசுவா. வீட்டுல மாதிரி அடங்கி ஒடுங்கி இருக்கறவளையா நான் பெத்து வச்சிருக்கேன்….” என மகளை உஷா சொல்லவுமே ஆத்மி முறைப்புடன் தாயின் முன் வந்து நின்றாள்.
“என்னடி? என்ன முறைப்பு?…” என மகளிடம் உஷா பாய,
“ம்மா, உஷ்…” என வாயில் விரலை வைத்து எச்சரித்து,
“ரௌடி பேபி பாட்டு…” என்று சொல்லிவிட்டு மீண்டும் சேரில் அமர்ந்துகொண்டு பாட்டை கேட்கலானாள் ஆத்மி.
“என் ஒரிஜினல் மாமியா இவ. என்னை வாய திறக்க விடறாளா?…” என தலையில் அடித்துக்கொண்ட உஷா,
“போனை வைப்ரேட்ல போட்டு கையில வச்சிரு. அதான் கூப்பிட்டாலும் டக்குன்னு எடுப்ப…” என சொல்லி அனுப்ப முல்லை தெருவில் இறங்கி நடந்தாள்.
அந்த வீதியின் முனையிலிருந்த இரண்டாம் வீட்டில் வாசலை அடைத்து கோலம் போட்டு வண்ணவண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சௌமியாவின் அத்தை முறை வீடு அது. அங்கே தான் மணமகனும் அவன் பக்க சொந்தங்களும் தங்க இருந்தனர்.
அருகிலிருக்கும் இன்னொரு காலி வீட்டையும் சுத்தம் செய்து அங்கேயும் மாப்பிள்ளை சொந்தங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள் பெண் வீட்டினர்.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே அடுத்த வீதிக்குள் நுழைந்தாள் முல்லை.
தங்கள் வீடிருக்கும் வீதியில் இருந்து அடுத்த வீதி முழுவதும் அடைக்க பந்தல் போட்டு தோரணங்கள், சீரியல் பல்புகள், ட்யூப் லைட் என தெருவே திருவிழா போலிருந்தது.
அதில் நடுவில் வீற்றிருக்கும் அந்த பெரிய வீட்டின் முன் வாழை மரங்கள் வைத்து கட்டப்பட்டு திருமண வீட்டின் சர்வ லட்சணத்துடன் இருந்த இல்லத்திற்குள் நுழைந்தாள் முல்லை.
“உங்க அவரே சொன்னாரா மதுரை தாண்டியாச்சுன்னு?…” முல்லை முகத்தில் அத்தனை கேலி.
“ஆமாமா சொல்லிடுவார், சொல்லிடுவார். நீ வேற? நேத்து ஒரு டாக்குமென்ட் அனுப்பியிருந்தார். காலையில குட்மார்னிங் சொன்னதுக்கு பதில் சொல்லாம நான் அனுப்பினத படிச்சாச்சா? யூஸ்ஃபுல்லா இருந்ததான்னு கேட்கறார்…”
சௌமியாவின் முகத்தில் தெரிந்த பாவனையில் முல்லைக்கு சிரிப்பு பீறிட்டது.
“பாவம்க்கா நீங்க…” என்று வேறு கிண்டல் செய்தாள்.
“ஏன் சிரிக்கமாட்ட? உன்னை அவர்கிட்ட பேச விட்டிருக்கனும். அடுத்து நீ என்ன படிக்கலாம்ன்னு ஆரம்பிச்சு பெரிய லெக்சரே நடத்திருவார். நீ தான் எஸ்கேப் ஆகிட்டே இருக்க…”
“உங்கட்டையே அவர் ரெண்டுநிமிஷம் சேர்ந்தாப்ல பேசலை. என்கிட்டே நல்லா பேசினார் போங்க…” என்ற முல்லை,
“நீங்க கல்யாணம் முடிஞ்சதும் எங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்கீங்க தானே விருந்துக்கு. அன்னைக்கு பேசுவேன். கூடவே உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கூட இருக்கு. டாக்டருக்கும் தான்…” என்றாள்.