“அடி தான் உனக்கு. நீ என் கூடவே தான் வந்து நிக்கனும்…” என சொல்லிக்கொண்டிருக்க இருவருமாக சௌமியாவின் கையிலிருந்த மருதாணியை பஞ்சை வைத்து ஈரம் செய்து எடுத்தனர்.
மேலும் பத்து நிமிடங்கள் சென்றிருக்கும் சௌமியாவின் கல்லூரி தோழிகள் என்று கும்பலாய் பத்து பேர் போல வந்துவிட அதற்கு மேல் அங்கே இலகுவாய் முல்லையால் இருக்க முடியவில்லை.
“ஓகே சௌமிக்கா, நான் கிளம்பறேன்…” என முல்லை எழுந்துகொள்ள அவளை தன் தோழிகளிடம் அறிமுகம் செய்த சௌமியா,
“ஏன் அதுக்குள்ளே கிளம்பற முல்லை?…” என்றாள்.
“இல்லைக்கா. நாளைக்கு வரேனே? நீங்க இங்க பாருங்க…” என்று சொல்லிவிட்டு கிளம்ப,
“சாப்பிட்டாச்சும் போயேன் முல்லை…”
“அதெல்லாம் வேண்டாம். வரப்பவே முடிச்சுட்டு தான் வந்தேன்…”
“அதுக்கென்ன? சும்மா தான் இருக்கு. தரேன்…” என்று கௌஷிக் உள்ளே செல்ல உஷா அழைக்கவே இல்லை அவனை.
“உள்ள வா மணி…” என ஞானம் மட்டுமே அழைக்க,
“இருக்கட்டும் இருக்கட்டும். வேலை நிறைய கிடக்கு…” என்றுவிட்டான்.
முல்லையும் உஷாவும் மௌனமாக நின்றிருக்க ஆத்மி தான் அங்குமிங்கும் ஓடிகொண்டிருந்தாள்.
“பாட்டு இல்ல? பாட்டு காணும்?…” என மணியிடம் கேட்க,
“நாளைக்கு போடுவோம் பாப்பா…” என்றான் அவன் குழந்தையிடம்.
“இம்புட்டு நேரம் இங்க ஒரே ஆட்டம் பாட்டை கேட்டுட்டு. அதான் நிப்பாட்டவும் இல்லையான்னு கேட்கறா…” ஞானம் சிரித்தபடி கூற,
“மாப்பிள்ளைக்கு, அவங்க சொந்தக்காரங்களுக்கு போன் பேச முடியலையாம். அவங்களாம் முக்கியமானவங்க. அதான் பாட்டை நிறுத்தி வச்சிருக்கு. நம்மளை மாதிரியா?…” என்றான் பெருமையும், கர்வமுமாக.
“அதுவும் சரித்தான். வெளிநாட்டு வேலை வேற…” ஞானம் சொல்ல,
“ம்மா, அது ஒன்னும் வெளிநாடு இல்லை. வெளி மாநிலம்…” தாயின் சொல்லை திருத்தினாள் முல்லை.
“இந்த ஊருல பொறந்து வளந்தவங்களுக்கு வெளி மாநிலமும், வெளிநாடும் ஒன்னுதான? அதத்தான சித்தி சொல்லுது. நீ சொன்னாங்காட்டி அவங்களுக்கு புரிஞ்சிருமாக்கும்?…” என்றான் மணிமாறன் நக்கலாக.
“புரிஞ்சாலும் இல்லைன்னாலும் எங்கம்மாவுக்கு நான் உண்மையை சொல்லனும்ல. வெளிமாநிலம் எல்லாம் வெளிநாடாகிட்டா…” என்று முல்லையும் பதில் கொடுக்கும் முன் கௌஷிக் வந்துவிட்டான்.
“அவனுக்கு ம்ம்ன்னா உடனே பெருமை பேச ஆள் கிடைக்கேன்னு பேசிட்டு நம்மளை மட்டமும் தட்டுவான், இது தேவையா?…” என்று அலுப்புடன் உள்ளே வந்தாள்.
“சரி சரி, போய் தூங்குங்க…” என்று கௌஷிக் கதவை பூட்டிக்கொண்டு வந்தான்.
மறுநாள் கிளம்ப வேண்டுமே என்னும் ஆர்வத்துடன் அதிகாலை அலாரம் வைத்து நான்கு மணிக்கெல்லாம் எழுந்துகொண்டாள் முல்லை.
உஷாவும் அப்போது தான் எழுந்து வந்திருக்க கையில் ஆத்மி வேறு சிணுங்கிக்கொண்டே இருந்தாள்.
“என்னண்ணி நீங்க கிளம்பிருப்பீங்கன்னு பார்த்தா இன்னும் தலையை கூட துவட்டலை?…” என்ற முல்லையிடம்,
“முல்லை இவளை வச்சிட்டு என்னதான் செய்ய? லேசா காய்ச்சல் மாதிரி இருக்கு. விட்டுட்டும் போக முடியாது. நான் பார்த்துக்கறேன். நீ வாசலை மட்டும் கூட்டி தெளிச்சி சின்னதா ஒரு கோலம் போடேன்…”
“நான் பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்க…” என்று முல்லை வாசலுக்கு வந்தாள்.
பரபரவென வாசலை பெருக்கி தண்ணீர் தெளிக்க இருட்டில் உறக்க கலக்கத்தில் செய்துகொண்டிருந்தவள் எதிரே மூவர் நடந்து செல்ல,
“ஹலோ, வெய்ட் ப்ளீஸ்…” என்றொரு குரல்.
நிச்சயம் அவன் தான் என பார்த்ததும் கண்டுகொண்டவள் கைகள் கீழே இறங்கிவிட அவளின் வீட்டை கடந்து சென்றான் அர்னவ்.
“டாக்டர் வாக்கிங்கா? கல்யாண டென்ஷன் கொஞ்சமும் இல்லாம இருக்காரே?…” என்றபடி தெளித்து முடித்து கோலத்தையும் வேகமாய் போட்டு முடிக்க மீண்டும் அந்த மூவரும் பேசிக்கொண்டே வீட்டை கடந்து சென்றனர்.
விடிந்தால் திருமணம். கௌஷிக் உஷாவுடன் குழந்தையை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
முகூர்த்த நேரம் பார்த்து முல்லையும், ஞானத்துடன் தயாராகி திருமணம் நடக்கவிருக்கும் அந்த கோவிலை நோக்கி சென்றாள்.