“போலாமாடி?…” ஞானமும் தண்ணீர் குடித்த மேவாயை புடவை தலைப்பால் துடைத்தபடி வாசலுக்கு வந்தார்.
“சுகர் மாத்திரை போட்டாச்சாம்மா?…”
“போட்டுட்டு தான் தண்ணியை மண்டிட்டு வாரேன். கதவை இழுத்து பூட்டு…” என வாசலுக்கு வந்துவிட்டார்.
இருவருமாக கதவை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு கோவிலை நோக்கி நடந்தனர்.
“ஊர் மொத்தமும் மண்டபத்துல தான் ம்மா. என்னன்னு உள்ள போய் கல்யாணத்தை பார்க்கவோ?…” முல்லைக்கு அவள் கவலை.
“இப்ப என்ன? முடிஞ்சா உள்ள போவோம். இல்லன்னா கூட்டம் குறைஞ்சதும் உள்ள போவோம்…” என்றவர் கையிலிருந்த சிறு பையை அப்போது தான் பார்த்தாள்.
“இதுல என்னம்மா?…” என கேட்க,
“வாரா வாரம் உனக்கு நல்ல இடம் அமையனும்னு விளக்கு போடறேன்ல. இன்னைக்கும் போடனும். கல்யாணம் முடிஞ்சு எல்லாம் கிளம்பவும் விளக்கை போட்டுட்டு உன் பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு மண்டபத்துக்கு போகலாம்ன்னு…”
“ஏன் சாயங்காலம் விளக்கு போட்டா பத்தாதா? இப்பவே போடனுமா?…”
பேசிக்கொண்டே கோவிலுக்குள் நுழைந்துவிட அங்கே சௌமியாவை பார்க்க முடியவில்லை.
மணமகன் வீட்டாரின் சொந்தங்கள் என மொத்தமும் அவளிடம் இருக்க இன்னொரு பக்கம் அர்னவ் மனதில் மூண்ட எரிச்சலை அன்னக்கிளியிடம் முகம் மாறாமல் ஒட்டவைத்த சிரிப்புடன் கொட்டிக்கொண்டிருந்தான்.
“கோவில்ல கல்யாணம்ன்னு சொல்றாங்க. ஆனா ஏன் சன்னிதில வச்சு தான் தாலி கட்டனுமா? என்னம்மா இது? இதுக்கு மண்டபத்துலையே வச்சிருக்கலாம்…” என்றான்.
“நானும் கோவில்ல தாலி கட்டறோம்ன்னு சொல்லவும் இங்க ஒரு இடத்துல உக்கார்ந்து நடத்தறதுன்னு தான் நினைச்சேன். இது தான் அவங்க வழக்கமாம்…” என்றார் மகனின் தோளை தடவியபடி.
“ப்ச், இதை முதல்லையே இவங்க சொல்லலையா?…” என்றான் யோசனையுடன்.
“கொஞ்ச நேரம் தானே? தாலி கட்டி முடிச்சு கிளம்பிருவோம் சபரி…”
“அதுக்கில்லைம்மா…” என்றவன் சௌமியாவின் தந்தை வருவதை கண்டு,
“ஓகே, பார்த்துக்கலாம்…” என்றான்.
“கோவில்ல நடக்கறது இன்னும் விசேஷம் தானே சபரி?…” அன்னக்கிளி சொல்ல,
“என்ன சபரி உடைஞ்சிருக்க கண்ணாடியை போடாதன்னு சொன்னேன்ல? கழட்டி குடு…” என கேட்டு வாங்கிக்கொண்டார்.
“சரி, ஏதோ ஞாபகத்துல எடுத்து போட்டுட்டேன்…” என்றான்.
“இன்னும் இரிட்டேட்டிங்கா இருக்கா?…” என்றதற்கு தலையசைத்தவன் சௌமியாவின் தந்தை வரவும் பேச்சை மாற்றினான்.
முகூர்த்த நேரமும் நெருங்க மணமக்கள் இருவரையும் சன்னிதிக்கு அழைத்து சென்றனர்.
ஞானமும், முல்லையும் பின்னால் செல்ல முதலில் அவளை கவனிக்காத சௌமியா பின் பார்த்துவிட்டாள்.
“இங்க வா முல்லை…” என தன்னருகே அழைக்க,
“உன்னை தான் கூப்பிடறா. போ…” என்றார் ஞானம்.
“அதெல்லாம் வேண்டாம்மா. அவங்க சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க…” என சங்கடப்பட்ட முல்லை தாயிடமும் மறுத்து சௌமியாவிடமும் வரவில்லை என தலையசைத்தாள்.
இரண்டு மூன்று முறை அழைத்த சௌமியா மணிமாறனிடம் சொல்லி அவளை வர சொல்ல அதனை பார்த்த முல்லைக்கு திக்கென்றது.
யோசிக்காமல் கூட்டத்தில் பேசிவிடுவானே என பார்க்க அதற்குள் சௌமியா பேசியதை வைத்து அர்னவ்வே யார் என்று கேட்டுவிட்டான்.
“என் தங்கச்சி. இங்க வான்னு சொன்னா வரமாட்டேன்னுறா. அதான் மணிட்ட சொல்லி கூப்பிட சொன்னேன்…” என முல்லையை சுட்டி காட்ட அவள் காட்டிய திசையில் பார்த்த அர்னவ்வும் புன்னகை சிந்தினான்.
“முல்லை மணி முறைச்சிட்டே வரான்…” ஞானம் சொல்ல,
“ப்ச், சரி இந்த போனை பிடிங்க. நானே போறேன். அங்க கூட்டத்துல கீழ போட்டுட்டா போச்சு…” என்றபடி முல்லை கூட்டத்தை விலக்கிக்கொண்டு மெல்ல எறும்பாய் நகர்ந்து செல்ல உள்ளே திருமாங்கல்யம் கோர்த்த தங்க சங்கிலி சன்னிதானத்தில் பூஜையில் இருந்தது.
“எப்ப கூப்பிட்டேன் உன்னை?…” என்ற சௌமியாவின் அதட்டல் கூட முல்லைக்கு கேட்கவில்லை அத்தனை அருகில் இருந்தும்.
மாலை கழுத்துடன் மணமகளாய் நின்றவளை பார்க்க அத்தனை சந்தோஷமாய் இருந்தது.
எதையும் வெளிக்காட்டாமல் அர்னவ்வின் முகம் சாதாரணமாக இருந்தாலும் உள்ளுக்குள் அந்த நெரிசல் சலிப்பை தந்தது.
எப்போதடா திருமணம் முடிந்து கிளம்புவோம் என்றிருக்க தலை வேறு வலியில் இரண்டாய் பிளப்பதை போலிருந்தது.
இத்தனைக்கும் மாத்திரையும் எடுத்தாகிற்று. கண்ணெரிச்சலில் சாம்பிராணி புகை வேறு மேலும் படுத்த கண்ணை சிமிட்டி சிமிட்டி விழித்தபடி நின்றான் அவன்.
அனைவருக்கும் தொட்டுக்கொள்ள திருமாங்கல்யம் தட்டில் வைத்து அட்சதை அரிசி, பூக்களுடன் வர ஆளாளுக்கு எடுத்துக்கொண்டனர்.
முல்லை சௌமியாவின் பின்னால் நின்றதனால் அவளுக்கு கிடைக்காமல் போக மணிமாறன் தான் அவளுக்கு நீட்டினான் முறைப்புடன்.
இத்தனை கூட்டத்தில் இவளை கொண்டுவந்து தன் அக்கா நிறுத்தவேண்டுமா என்றிருந்தது அவனுக்கு.
அதே போல அவனின் பெற்றோருக்கும் இருந்தாலும் மகளுக்கு முல்லை எத்தனை பிடித்தமென்பது அறிந்தது தானே என விட்டுவிட்டனர்.
திருமாங்கல்யம் சுற்றி மணமக்கள் அருகே வர ஞானம் என்னவோ சைகை செய்தார் மகளிடம்.
முல்லையின் கவனம் அதில் இருக்க கூடவே பின்னிருந்து நெரிசல் வேறு. உஷா வந்துவிட்டதை கவனித்தவள் அதை சொல்ல தான் அழைத்திருக்கிறார் என்று தலையசைத்தாள் ஞானத்திடம்.
கெட்டிமேள சத்தம் முழங்க ஆரம்பிக்க அத்தனை பேரும் மாங்கல்யம் பூட்டும் நிகழ்வை பார்க்க நெருக்கியடித்து மோதினர்.
அந்த நொடி அர்னவ் கண்ணிற்குள் எதிரே தூவப்பட்ட அட்சதை அரிசி சட்டென்று விழ கண்ணை மூடியவன் லேசாய் குனிந்தபடி திருமாங்கல்யத்தை அருகில் நின்றவள் கழுத்தில் அணிவித்து முடித்தான் தாமதியாமல்.
பின்னால் இருந்தவர்கள் எட்டி பார்க்க முயன்று முன்னே நகர மாப்பிள்ளை, பெண் இருக்கிறார்கள் என்று கூட இடம் தராமல் அவர்கள் ஆர்வத்தில் சௌமியா லேசாய் விலக முல்லை தள்ளப்பட்டாள் முன்னால்.
அர்னவ் அருகில் இப்போது நின்றதென்னவோ முல்லை. அவன் தாலியை அணிவித்ததும் முல்லைக்கு.
முல்லையின் கைகள் சௌமியாவிற்கு அட்சதை தூவ உயர்ந்திருக்க தன் கழுத்தில் என்னவோ விழுந்ததை கூட உணர முடியாதளவிற்கு அட்சதை மழை.
சட்டென்று ஒரு நிசப்தம். கண்ணை துடைத்துக்கொண்டு அர்னவ் அருகே பார்க்க அதிர்ந்த முகத்துடன் முல்லையும், முல்லையின் அருகில் விக்கித்த பார்வையுடன் சௌமியாவும்.
இருவரையும் மாறி மாறி பார்த்தவன் மனதிற்குள் பெரும் புயல். என்ன காரியம் செய்துவிட்டேன்? என யோசிக்கும் முன் மணிமாறன் அர்னவ்வின் சட்டையை பிடித்திருந்தான்.
“என்னடா பண்ணிருக்க? எங்கக்காவை விட்டுட்டு இன்னொருத்தி கழுத்தில தாலி கட்டிட்ட?…” என்று மரியாதை பறக்க மூர்க்கமாய் பாய்ந்துவிட்டான்.
அர்னவ் கழுத்தில் அணிவித்திருந்த மாலை பிய்த்து எறியப்பட அந்த இடமே கலவரமானது.
“தம்பி கொஞ்சம் பொறுப்பா. இரு, தப்பு நடந்து போச்சு தான். பேசுவோம். கை வைக்காத…” என அன்னக்கிளியில் இருந்து அர்னவ் சம்பந்தப்பட்ட அனைவருமே பொறுமையாக பேச வர,
“என்னங்க தப்பு? இது என் அக்காவோட வாழ்க்கை பிரச்சனை. ஈஸியா சொல்றீங்க?…” என்றான் மணிமாறன்.
அவனுக்கு ஒத்து ஊத அவனின் தந்தையும், மணிமாறனின் சில சொந்தங்கள், நண்பர்கள்.
“மணிமாறன் கொஞ்சம் அமைதியா நான் சொல்றதை கேளுங்க. நான் கவனிக்கலை. இந்த கூட்ட நெரிசல். அதோட…” அர்னவ் தன் மீது தான் தவறு என்று அவனிடம் மன்னிப்பும் கேட்டு அமைதியாய் பேச முயன்றான்.