எதையும் உணரும் நிலையில் கூட முல்லை இல்லை. உஷாவும் ஞானமும் அவளின் அருகே வந்துவிட உஷாவின் தாய் சம்பூரனமும் வந்துவிட்டார்.
“என்ன பேசற மணி? தாலியை கழட்டவா?…” என சௌமியா அவனை அதட்டினாள்.
“அதான் தெரியாமன்னு சொல்லிட்டாங்க இல்ல. அப்ப கழட்ட வேண்டியது தானே?…” என திமிராய் சொல்லியவன் பேச்சில் அர்னவ்வின் பார்வை முல்லையை பாவமாய் பார்த்தது.
முன்பின் அறியாத பெண். சற்று முன் சௌமியாவின் தங்கை என்று அறிமுகப்படுத்தப்பட்ட பெண்.
அவள் யாரோ எவரோ? இந்த அதிர்ச்சி எப்படி இருந்திருக்கும் என பார்த்தவனுக்கு இப்போது என்ன முடிவெடுப்பது என்றும் விளங்கவில்லை.
அன்னக்கிளி நெஞ்சை பிடிக்காத குறையாய் நடப்பதை பரிதவிப்புடன் பார்க்க அருந்ததி தான் முன் வந்தாள்.
“கொஞ்சம் பொறுப்பா, இஷ்டத்துக்கு பேசற? இங்க என்ன வேணும்னே பொண்ணை மாத்தி தாலி கட்டலையே. யாருமே நினைக்கலை. என் தம்பியுமே பார்க்கலை…”
எத்தனை பொறுமையாய் அர்னவ்வின் பக்க ஆட்களும், ஊரில் பொதுவானவர்களும் பேசினாலும் மணிமாறனின் வாயிலிருந்து வருவது எல்லாம் காது கொடுத்து கேட்க முடியாதவையாய் இருந்தது.
பேசி பேசி சண்டையிட்டு அர்னவ்வை இழுத்துக்கொண்டு சன்னிதானத்தில் இருந்து வெளி வாசல் வரை வந்திருந்தான் மணிமாறன்.
நிதானம் துளியும் இல்லாமல் கொஞ்சமும் இங்கிதமின்றி அத்தனை அவமானப்படுத்தினான் அர்னவ்வை.
“என்ன தெரியாம? கண்ணு தெரியலைன்னா ராத்திரிக்கு…” என்றவன் விட்ட வார்த்தைகள் அர்னவ்வின் தாய், தமக்கை என அருகிருந்த அவன் பக்கத்து பெண்கள் அனைவரையும் பார்த்து சொல்லியதன் அர்த்தம் அர்னவ்வை வெகுண்டெழ செய்திருந்தது.
“யூ ராஸ்கல்…” என்றவன் ஓங்கி அறைந்த அறையிலும், மூக்கில் விட்ட குத்திலும் மணிமாறனின் பற்கள் தெறித்து விழ அர்னவ்வை யாராலும் நிறுத்த முடியவில்லை.
“நானும் தப்பு பண்ணிட்டேன், அமைதியா பேசுவோம்ன்னு இருந்தா என் வீட்டு லேடீஸை வச்சே அசிங்கமா பேசற? பேச வாய் இருந்தா தானே?…” என நொறுக்கிவிட்டான்.
பதிலுக்கு மணிமாறன் அடிக்க அர்னவ் அடிக்க என்று பெரும் கலவரமாகி போனது.
“அதான் மன்னிப்பும் கேட்டுட்டேன்ல. இன்னும் என்ன?…” என்ற பொழுதே வெறியில் மணிமாறன் முல்லையின் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தை பற்ற வர,
“டேய்…” என்று அவனை கீழே தள்ளியிருந்தான் சுதாகரனும்.
“அர்னவ் அந்த பொண்ணை பிடியேன்…” என்று சொல்ல அப்போது தான் முல்லை தன்னிலையில் இல்லை என்பதே புரிந்தது.
கிட்டத்தட்ட மயக்க நிலை. சௌமியா அவளை பார்க்க நெருங்க அதற்குள் சௌமியாவின் தாய் அவளை இழுத்துக்கொண்டு கிளம்ப போனார்.
“நீங்கலாம் நல்லாவே இருக்கமாட்டீங்க. இவ கழுத்துல இது எப்படி இருக்குன்னு பார்க்கறேன். பாவி பாவி என் பொண்ணு வாழ்க்கையை தட்டி பறிச்சிட்டாளே…” என சாபமிட்டபடி அவர் செல்ல,
“ம்மா நல்லதுன்னு நினை. இல்லன்னா இந்த கண்ணு தெரியாதவன்கிட்ட நம்ம அக்கா தான் கஷ்டப்படனும். கட்டிக்க போறவ எவன்னு கூட தெரியாம தாலியை போடுவானா? இதுவே பக்கத்துல இவன் அம்மா….” என்ற பேசிய நொடி மீண்டும் அர்னவ் அடிக்க பாய்ந்தான்.
மணிமாறனும் தன்னுடைய வலியையும் தாங்கிக்கொண்டு அவர்கள் மீது வன்மத்தில் சேற்றை வாரி இரைத்தான்.
சில நிமிடம் முன்பு பவ்யமாக, பணிவாக பேசிக்கொண்டிருந்தவனின் இன்னொரு முகம் அருவருக்க செய்தது.
“வேண்டாம்டா. அவன் சாக்கடை. இன்னும் பேசுவான் போல…” கலைவாணன் மகனை பிடித்துக்கொண்டார்.
“என்ன மனுஷங்க நீங்களாம்? நிதானமா பேச கூடவா உங்களுக்கு பொறுமை இல்லை…” என மணிமாறனின் தந்தையிடம் அர்னவ் பேச,
“வாயை மூடுடா. எம்மவளை அழவிட்டுட்டு நீ பொறுமையா பேசுவ. நான் கேட்கனுமா? உன்னை பார்த்துக்கறேன்டா…” என சொல்லிக்கொண்டிருக்க தகவல் அறிந்து கௌஷிக் மகளுடன் வந்து சேர்ந்திருந்தான் கோவிலுக்கு.
அவன் அத்தனை பதட்டத்திலும், வேகத்திலும் வந்திருக்க எதிரே கௌஷிக்கை பார்த்ததும் சௌமியாவின் தந்தை அவனை பிடித்து கீழே தள்ளியிருந்தார்.
“நீங்கலாம் உருப்படவே மாட்டீங்க…” என்று மண்ணை வாரி அவன் மீது தூற்ற ஆத்மியின் கண்ணெல்லாம் மண் நிறைந்தது.
என்ன ஏதென்று புரியாமல் தந்தையும் கீழே விழுந்திருக்க அவனின் கைகளுக்குள் இருந்த குழந்தை வீறிட்டழ ஆரம்பித்தது.
“அட பாவிகளா? மனுஷ ஜென்மமே இல்லையா நீங்க?…” என்று மணிமாறனின் வீட்டாரை ஏசியபடி அந்த ஊர்க்காரர்கள் கௌஷிக்கை தூக்கி நிறுத்த சௌமியா சம்பந்தப்பட்டவர்கள் கோவிலில் இருந்து கிளம்பி இருந்தனர்.
“மரியாதையா மூட்டை முடிச்சை கட்டிட்டு ஊர் போய் சேரு. இல்லை உசுரோட போகமாட்ட…” என்று வேறு செல்லும் பொழுது மணிமாறன் மயக்கமாகும் முன் சொல்ல அவனை அள்ளிக்கொண்டு மருத்துவமனை சென்றனர்.
உஷா ஓடி வந்து மகளை தன் கையில் வாங்கிக்கொண்டாள் பொங்கிய அழுகையுடன்.
கௌஷிக் முகத்தை துடைத்துக்கொண்டு வந்து என்னவென கேட்டு தங்கையின் கோலம் கண்டு தளர்ந்து போய் அமர்ந்தான்.
இதில் தங்கையும் தவறு சொல்ல முடியாது. நடந்ததை அறிந்ததில் தங்களின் கூட்டிற்குள் தங்கை கணவன் என்று நுழைந்திருப்பவன் மீதும் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை.
நியாயஸ்தன் யாரை என்று சொல்ல முடியும்? இனி தங்கையின் வாழ்க்கை என்னாகுமோ?
கௌஷிக்கின் மனதிற்குள் அவை மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. ஒருவேளை தெரியாமல் நடந்துவிட்டது என இதனை விட்டுவிடுவார்களா? அதன் பின் தங்கை எதிர்காலம்?
யார் இவர்கள் என்று தெரியாமல், விசாரிக்காமல் தங்கையை தன்னால் மட்டும் அங்கே அனுப்பிவிட முடியுமா? இப்படி பலவாறான கேள்விகள் அவனை சுருட்டியது.
“நான் அர்னவ் அக்கா வீட்டுக்காரன். பேர் சுதாகரன்…” என்று கௌஷிக்கின் கையை பிடித்தான் சுதாகரன்.
அந்த புதியவனை கௌஷிக் பார்த்த பார்வையில் ‘என்ன சொல்ல போகிறானோ?’ என அத்தனை அலைப்புறுதல்.
“உங்க பேர்?…” என்றான் சுதாகரன்.
“கௌஷிக்…”
“ஓகே, கௌஷிக், நடந்தது நடந்திருச்சு. மத்ததை உங்க வீட்டுக்கு போய் பேசலாமா?…” என்று சுதாகரன் கேட்கவுமே அனைவரின் கவனமும் இங்கே குவிய,
“அத்தான்…” என்றான் அர்னவ் சத்தமாக.
“இப்ப நிலைமை சரியில்லை அர்னவ். எதுவானாலும் உன் மாமியார் வீட்டுக்கு போய் பேசலாம்…” என்று சொல்லிவிட்டான் சுதாகரன்.
அதுவரை அல்லாடிக்கொண்டிருந்த இதயங்கள் சில சுதாகரனின் இந்த பதிலால் சமன்பட்டது.
அடுத்தது என்ன என்னும் தெளிவும் கிடைக்க ஒரு பெருமூச்சுடன் அந்த முடிவை மனதார ஏற்றுக்கொண்டனர் அர்னவ் குடும்பத்தினர்.
அர்னவ்வின் இதயம் பலமடங்காய் தவித்து ததும்பியது. இது எப்படி சரிப்பட்டு வரும் என்று ஏற்க முடியாமல் திண்டாடினான்.
அவன் விழிகள் சற்று முன் தான் தவறுதலாய் மனைவியாக்கிக்கொண்டவளை தேட தனக்கு சற்று தள்ளி கீழே அருந்ததியின் அருகில் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தாள் முல்லை.
பார்த்தவன் பார்வை அவளின் கன்னத்தில் கூர்மை பெற்றது. கன்னமும், கழுத்திலும் என்னவோ காயம்.
முல்லையின் கன்னத்தில் யாரோ அடித்ததன் தடம் வேறு. உள்ளம் கலங்கியது அர்னவ்விற்கு.
“முல்லை வீட்டுக்கு போகலாம்டா…” என கௌஷிக் தங்கையின் அருகே வர அந்த காயத்தை பார்த்தான்.
“என்னாச்சு? யார் அடிச்சா?…” என கௌஷிக் கோபமாக உஷாவிடம் கேட்க,
“சௌமியா அம்மா தான். இந்த பொண்ணை அடிச்சு தாலியை…” என அருந்ததி சொல்லும் பொழுதே அர்னவ்வின் கோபம் பன்மடங்காகியது.
தவறிழைத்தது தான். இந்த பெண்ணை காயப்படுத்த முயன்றிருக்கின்றனரே காட்டுமிராண்டி கூட்டம் என நினைத்தான்.
தூரத்தில் நின்றிருந்த பெண்ணை அருகே அழைத்து நிறுத்தியது சௌமியா. கவனிக்காமல் மாங்கல்யத்தை அணிவித்தது தான். இதில் இந்த பெண் என்ன செய்தாள்?
அர்னவ் முகமெல்லாம் அடுத்து என்ன என்று யோசிக்க அதற்குள் ஆளும்பேருமாய் அவர்களை அழைத்துக்கொண்டு முல்லையின் வீடு வந்து சேர்ந்தனர்.