“இல்லைண்ணி. திட்டற அளவுக்கு பண்ணலை. ஆனா இது என்னோட…”
“பர்ஸனலா?…” உஷா தெளிவாய் கேட்க முல்லையிடம் மௌனம்.
“சொல்ல விருப்பமில்லைன்னா வேண்டாம்…” உஷா மீண்டும் சொல்ல,
“விருப்பம், விருப்பமில்லைன்ற கேட்டகிரி இல்லையே அண்ணி. இது சொல்ல முடியாதது. சொல்லக்கூடாதுன்னு தோணுது…” என ஆழ்ந்த குரலில் சொல்லவும் தான் உஷாவிற்கு திடுக்கிட்டது.
“முல்லை, என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?…” உஷா பதட்டமாக கேட்டாள்.
அன்று அன்னக்கிளியுமே கோடி காட்டியிருந்தார் இருவருக்குள் என்னவோ என்று. இப்போது முல்லை பேசுவதை வைத்து பார்க்க பயந்துவிட்டாள் உஷா.
“அதெல்லாம் இல்லையே. ப்ளீஸ் அண்ணி பதறாதீங்க. பதட்டப்படற அளவுக்கு இல்லை…” முல்லை சமாளிக்க,
“இப்ப நான் வந்தா அது காலத்துக்கும் என்னை உறுத்தும். நான் வரலை…” என்றாள் முல்லை.
“நீ வராம நாங்களும் போக முடியாது முல்லை. எங்க எல்லாரையும் கூப்பிட்டிருக்காங்க…” என்ற உஷா,
“ஓகே வரலை தானே? விடு, நாங்களும் போகலை…” என சொல்லிவிட்டாள்.
“அண்ணி…”
“என்ன அண்ணி? நீ வராம நாங்க மட்டும் அங்க போய் என்ன செய்ய? அந்த வீட்டுக்காரியே நீ தான். உனக்கப்பறம் தான் எங்களுக்கு உரிமை. நீ இருந்து எங்களை வாங்கன்னு கூப்பிடனும்…” உஷா பேசவும்,
“எனக்கே அந்த உரிமை இருக்கான்னு தெரியலை…” என்றுவிட்டாள் முல்லை வாய் தவறி.
“எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கனுமே. அதுக்காக தான் வரலைன்னு சொல்றேன்…” என்ற முல்லைக்கு அதற்கு மேல் உஷாவிடம் பேசமுடியவில்லை.
“நான் வைக்கறேன் அண்ணி. அப்பறம் பேசறேன்…” என சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டாள்.
‘தன்னை அவன் அழைக்கவே இல்லை’ என சொல்லி தன் குடும்பத்தினரிடம் கணவனை விட்டுக்கொடுத்தும் பேச முடியவில்லை.
கணவனாகவே இருந்தாலும் முதன் முதலில் அவன் வாழும் இடம் செல்லும் பொழுது அவனாக அழைக்காமல் அதுவும் தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பூசலை சரி செய்யாமல் போவதை குறைவாக நினைத்தாள்.
தன்னை அழைக்கவில்லை என அவர்களிடம் சொல்லாமல், செல்லாமல் இருப்பது அவனுக்காக மட்டுமில்லை.
தன் குடும்பத்தினருக்காகவும், முக்கியமாக தனக்காகவும் கூட. சுய கௌரவம் என்ற ஒன்று அவள் முன்னின்று தடையை பிறப்பித்திருக்க அதை உடைக்க முடியவில்லை.
விழியிலிருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு வர அதனை துடைத்துக்கொண்டாள் முல்லைமலர்.
அதன் பின் யாரிடமிருந்தும் அழைப்பு வராதிருக்க அன்று விடுமுறை வேறு என்பதால் மொபைலை பார்க்கவும் யாருக்கும் அழைப்போமா என யோசிக்கவுமாக இருந்தாள்.
முதல்நாள் இரவெல்லாம் உறக்கமில்லை. செல்வதாக இருந்திருந்தால் இந்த நேரம் வீட்டினருடன் ட்ரெயினில் சென்றுகொண்டிருப்போம் என்பது வரை சிந்தனைகள் சிறகடித்தது.
காலை விடியும் முன்பே எழுந்ததுமே இதயம் அதற்குள் தான் சுழன்றது. நினையாதே என்றாலும் மனது அடங்கவில்லை.
ஆனால் இத்தனையிலும் கூட ஊருக்கு சென்றிருக்கலாம் என தோன்ற மட்டும் இல்லை முல்லைக்கு.
அழைக்கவில்லை வரவில்லை என்றதற்கு சரி வா என்று கூட கூறாதவன் மேல் இன்னுமே கோபம்.
அந்த கோபம் தன்னை அவன் புரிந்துகொள்ளாததிலும் சேர்ந்து கை கோர்த்துக்கொண்டது.
‘ஒரு போட்டோ, பென் போதுமா? இப்படித்தான் இருக்கும் என்று யூகம் செய்துகொள்ள’ என அவ்வளவு ஆற்றாமை.
காலை எழுந்து குளித்து தலையை உலர்த்திக்கொண்டிருந்தவளுக்கு கீழே ரிசப்ஷனில் இருந்து அழைப்பு வந்திருக்க அப்படியே சென்றாள் முல்லை.
“மேம், வர சொல்லிருந்தீங்கன்னு கூப்பிட்டாங்க…”
“ஆமாம்மா, உன்னை தேடி உன் ஹஸ்பன்ட் வந்திருக்கார்…” என வார்டன் சொல்லவுமே விழிகள் சட்டென விரிந்துகொண்டது.
“ஹஸ்பண்டா?…” திகைத்தவள் முகம் பார்த்து வார்டனுக்கும் சிரிப்பு வர,
“ஆமா, வெளில தான் வெய்ட் பன்றார். போய் பார்த்துட்டு வா…” என அனுப்பி வைக்க நிஜம் தானோ என வேகமாய் வாசலுக்கு செல்ல ஏதோ ஒரு கார் மட்டுமே நின்றுகொண்டிருந்தது.
“இந்தம்மா வேற யாரையோ என் புருஷன்னு நினைச்சிருச்சோ? இல்லை வேற யாரையோ பார்க்க வந்து என்னை கூப்பிட்டுட்டாங்களோ?…”
இப்படி யோசித்தபடி இன்னும் கீழிறங்கி அந்த இரும்பு கேட்டை தாண்டி செல்ல அந்த காரின் உள்ளே வேறு யாரோ அமர்ந்திருந்தனர்.
ஓட்டுனர் இருக்கையில் இருந்தவரை பார்த்துவிட்டு முடிவுக்கே வந்துவிட்டாள் வேறு யாரோ ஒரு முல்லையை அழைக்க வந்திருப்பார் போலும் என்று.
அந்த விடுதியில் இன்னும் இரண்டு பேர் அவளின் பெயரிலேயே தங்கி இருக்க தன்னை இல்லை என ஏமாற்றமும், பெருமூச்சுமாய் மீண்டும் உள்ளே நுழைய திரும்ப,
“முல்லைமலர்…” என்றான் அர்னவ்.
அவனின் அழைப்பில் கனவில்லை அவன் தான் என திரும்பி பார்க்க காதில் மொபைலுடன் மகிழம்பூ மரத்தடியில் நின்றிருந்தவன் சுட்டுவிரலை நீட்டி ஒரு நிமிடம் என்றான் அர்னவ் சபரிவாசன்.
‘நிஜமாவே தான் வந்திருக்காங்க. அதுவும் இவ்வளோ காலையிலையே’ என நொடிபொழுதில் உள்ளுக்குள் ஒரு சந்தோஷ கூவல்.
அடுத்த நொடியே எதற்காக இருக்கும் என்னும் யோசனை அடுத்து பதட்டத்தை தான் தந்தது.
வீட்டிலிருந்து உஷா பேசிய பின் தனக்கு யாரும் அழைக்கவில்லை. ஊரிலும் அன்னக்கிளி அழைக்கவில்லை.
யாருக்கும் எதுவுமோ என எண்ணி பயந்து போய் கேட்டை தாண்டி அவனருகே சென்றாள் முல்லை.
அதுவும் அவனின் வாகனத்தில் வராமல் அது வாடகை கார் என பார்த்ததும் புரிந்துபோக இன்னுமே உள்ளே உதறியது அவளுக்கு.
“ஓகே நானே அப்பறமா பேசறேன். கொஞ்சம் டைம் குடுங்க…” என சொல்லிக்கொண்டிருந்தவன் முல்லை தன்னை நெருங்குவதையும் கவனித்து போனை வைத்தான்.
முல்லையின் முகமெல்லாம் பதட்டத்தில் வியர்த்து, விழிகள் கலங்கி இருக்க அவன் பேசும் முன் கண்ணிலிருந்து நீர் கொட்டிவிட்டது.
“என்னாச்சு முல்லை?…” என அர்னவ் கேட்டான் அவளிடம்.
“என்னாச்சுன்னா? நீங்க தான் சொல்லனும். யாருக்கும் ஒண்ணுமில்லையே? திடீர்ன்னு வந்திருக்கீங்க?…” என்று கேட்க அவன் பதில் சொல்ல எடுத்த நொடிகளின் இடைவெளியில் அவளின் செவிமடலெல்லாம் கனத்துவிட்டது.