“உன்னை கூட்டிட்டு போக தான் நான் வந்திருக்கேன். நீ வர்ற…” என்றவன் காரை நோக்கி நடந்தான்.
“நான் வெத்தலை பாக்குன்னு பொய் சொல்லலை முல்லை. பாரு நிஜமாவே வாங்கிருக்கேன்…” என காருக்குள் இருந்து ஒரு கவரை எடுக்க சங்கடமும், கோபமுமாக இருந்தவள் முகத்தில் புன்னகை நெளிந்தது.
“மேளம் மட்டும் தான் குறை. வேணுமா?…” என புருவம் உயர்த்தினான்.
“அநியாயம் பன்றீங்க நீங்க…”
“இருக்கட்டுமே முல்லை. நீ கிளம்பி வர வரை வெய்ட் பன்றேன்…” என சொல்லியவன்,
“இந்த நைட்டி வேண்டாம். வேற ட்ரெஸ் மாத்திக்கோ. போய் கிளம்பி வா…” என சொல்லிவிட்டு அவளின் பதிலை எதிர்பார்க்காமல் காருக்குள் அமர்ந்துகொண்டான் அர்னவ்.
ஆயாசமாய் இருந்தது முல்லைக்கு. நிச்சயம் தான் செல்லாமல் அவன் கிளம்ப போவதில்லை என்றும் புரிய சில நொடிகள் மட்டுமே நின்றிருந்தாள்.
அர்னவ் ஒரு மேகஸினை எடுத்து வாசிக்க ஆரம்பிக்க ஒரு பெருமூச்சுடன் உள்ளே செல்ல போனாள் முல்லை.
அவள் செல்லவும் தான் அர்னவ் நிமிர்ந்தே பார்த்தான். அதுவரை எங்கே வருவாளோ இல்லையோ என்னும் கவலை உள்ளூர ஓடிக்கொண்டே இருந்தது.
அன்னக்கிளிக்கு அழைத்து முல்லையுடன் வரும் விவரத்தை சொல்லிவிட்டு அவளுக்காக காத்திருக்க பத்து நிமிடத்தில் வந்துவிட்டாள் முல்லை.
அறைக்கு சென்றதுமே வீட்டினருக்கு அழைக்க அங்கே யாரும் அழைப்பை ஏற்கவில்லை.
மனதிற்குள் சொல்லொண்ணா வேதனை. இப்படி எல்லாம் மாறிவிட்டதே, அவர்களையும் செல்லவிடாமல், தானும் இப்போது கிளம்பி என நினைக்க நினைக்க தன் மீதே கோபம் பிறந்தது.
வேறு வழியின்றி கிளம்பியவள் அம்மா, அண்ணி, அண்ணன் என மூவருக்குமே தனி தனியாய் மெசேஜ் செய்துவிட்டு கிளம்பினால்.
‘நிச்சயம் தன் மீது கோபமாக இருப்பார்கள், அதனால் தான் அழைப்பை ஏற்கவில்லை’ என அதிலேயே தான் மனம் சுற்றிக்கொண்டு வந்தது.
முல்லை வரவுமே அவளின் பேக்கை வாங்கி பின்னால் வைத்தவன் அவளுடன் வந்தமர்ந்ததும் ட்ரைவரிடம் ஒரு இடத்தை கூறினான்.
அதை கவனிக்கும் நிலையில் கூட முல்லை இல்லை. தன் மொபைலில் இருந்து வீட்டிற்கு அழைத்துக்கொண்டே இருக்க,
“யாருக்கு இத்தனை போன்?…” என்றான் அர்னவ்.
“வீட்டுக்கு தான். கோவமா இருக்காங்க போல? கால் அட்டன் பண்ணலை…” தொண்டை கரகரத்தது அவள் சொல்லும் பொழுதே.
“விடு பேசிக்கலாம். அவங்களுக்கும் டைம் குடு…” என்றவனை இன்னுமே முல்லை முறைத்தாள்.
இப்படி தன்னை கூட்டிக்கொண்டு வந்துவிட்டானே என பார்க்க அதையும் புன்னகையுடன் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான் அர்னவ்.
சற்று நேரத்தில் கார் நின்றதும் காதில் வைத்த போனுடன் நிமிர்ந்து பார்க்க அது கோவில். மறுபுறம் வந்து அர்னவ் கார் கதவை திறந்து,
“அன்னைக்கு திருச்சி வந்தப்போ நீயில்லாம ப்ரெண்டோட நான் வந்த கோவில் இதான்…” என்று சொல்லி அவளை இறங்குபடி கையை நீட்ட ஒன்றும் பேசாமல் இறங்கி சென்றாள். எதுவுமே மனதை இளக்கவில்லை.
தன் வீட்டில் இப்படி கிளம்பியதில் நிச்சயம் தன் மீது வருத்தப்படமாட்டார்கள் தான்.
ஆனால் அவர்களும் வர எத்தனை ஆசையுடன் இருந்தார்கள் என பேச்சிலேயே தெரிந்ததே.
இந்த வாழ்வில் எதுவுமே தன் விருப்பப்படி, எண்ணப்படி இல்லையோ என தவிப்புடன் இருந்தவள் வீட்டில் யாராவது போனை எடுத்தாலாவது இப்போது கிளம்பி வர சொல்ல முடியுமா என்று யோசித்தாள்.
சாமி கும்பிடும் பொழுதே லேசாய் விசும்பல் வந்துவிட சட்டென தன்னை சீராக்கிக்கொண்டாள்.
“போகலாம்…” என்று அவனை நிமிர்ந்தும் பாராமல் வந்து காரில் அமர்ந்துவிட கார் ஏர்போர்ட் நோக்கி சென்றது. அவனை கேள்வியாய் பார்த்தவளிடம்,
“ப்ளைட்ல தான் போறோம். வரப்பவும் அதுல தான் வந்தேன்…” என்றான் அர்னவ் அவள் கேட்காமலேயே.
“சாப்பிட்டு போயிடலாம் முல்லை. இன்னும் ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலை தானே?…” என சாப்பிட அழைத்து சென்றான்.
அடுத்த ஒருமணி நேரம் சென்று அவர்களை சுமந்தபடி பெங்களூரை நெருங்கியிருந்தது அந்த விமானம்.
விமானத்தில் ஏறும் வரை வீட்டினருக்கு அழைப்பை விடுத்துக்கொண்டே தான் இருந்தாள் முல்லை.
தனியே அவனுடன் இந்த வீட்டில். நினைக்கும் பொழுது அவளை சந்தோஷமும், கொஞ்சம் அச்சமும் கலங்கடித்தது.
“வெல்கம் ஹோம் முல்லை. இது நம்ம வீடு…” என்றான் அர்னவ் புன்னகை முகமாக.
அந்த புன்னகை முல்லையையும் தொற்ற வீட்டினர் இந்த நேரம் உடனிருந்திருக்க வேண்டுமென்ற எண்ணமும் அவளை சூழ்ந்தது.
தனது மொபைலை வைத்துவிட்டு அவனுடன் அந்த வீட்டு வாசலுக்கு வந்து நின்றவள் அவன் கதவை திறக்க காத்திருக்க உள்ளிருந்து கதவு திறந்துகொண்டது.
“பொண்ணு, மாப்பிள்ளை வந்தாச்சு…” என்ற பூங்கொடியின் சத்தமும், அதனை தொடர்ந்த தன் இரு குடும்பத்தினரின் ஆராவாரமும் முல்லையை அதிர செய்ய,
“ஹோம் இப்போ ஸ்வீட் ஹோம் கூட. இல்லையா முல்லை?…” என்றான் அர்னவ் தன் மனைவியிடம்.
ஆத்மி குட்டி வந்து முல்லையின் காலை கட்டிக்கொள்ள அருந்ததிக்கு பதில் உஷாவும், வனிதாவின் மகள் கீதாவும், பூங்கொடியும் சேர்ந்து வந்து ஆரத்தி எடுத்தனர் அவர்களுக்கு.
சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயிருந்த முல்லையின் முகம் பளீரிட நெஞ்சை முட்டியது அவளின் சந்தோஷம்.
அந்த சந்தோஷம் முல்லையின் முகத்தை நிறைத்து அகத்த்தின் விகசிப்பையும் காண்பிக்க ஆரத்தி எடுத்ததுமே முல்லை பூவாய் மலர்ந்து சிரித்தபடி தன் எதிரே நின்ற அன்னக்கிளியை அணைத்துக்கொண்டாள் முல்லை சந்தோஷக்கண்ணீருடன்.