முல்லையின் கண்ணீரில் அன்னக்கிளி அவளை நிமிர்த்தி முகம் பார்க்க மௌனமான கண்ணீர் இப்போது விசும்பலாய் வெளிப்பட்டது.
“என்னடாம்மா? ஏன் அழற?…” என்றார் அன்னக்கிளி.
உடனே ஞானம், கௌஷிக், உஷா என மற்றவர்களும் சூழ்ந்துகொள்ள கலைவாணன் பார்த்தபடி தள்ளி நின்றிருந்தார்.
“கிளம்பினதுல இருந்து இவங்க வீட்டுக்கு கால் பண்ணிட்டே இருந்தா. யாரும் எடுக்கலைன்னதும் இங்க வரவரைக்கும் முகமே சரியில்லை. அதான் டக்குன்னு எல்லாரையும் பார்த்துட்டு அழுகை வந்திருச்சு…” அர்னவ் கூற,
“இதுக்கு தான் வேண்டாம்ன்னு சொன்னேன். எல்லாரும் வந்தாச்சுன்னு சொல்லி முல்லையை கூட்டிட்டு வான்னு. கேட்டியா நீ?…” என்றார் மகனிடம்.
முல்லை கண்களை துடைத்துக்கொண்டு அர்னவ்வை முறைத்து பார்க்க இதழ்களை மடித்தபடி புன்னகைத்தான் அவன்.
“சரி, சரி முதல்ல சாமி கும்பிட்டுக்கட்டும். சரியா சாப்பிட்டிருக்கவும் மாட்டா…” உஷா சொல்லவும் தம்பதிகளாய் இருவரும் பூஜை அறைக்கு சென்று தெய்வங்களை வணங்கிவிட்டு வந்தனர்.
மதிய உணவு தடபுடலாக இருந்தது அவர்களுக்கு. அத்தனைபேருடன் வீடு நிறைந்திருக்க கடந்த நொடிகள் எல்லாம் தேனருவி.
அர்னவ்வும் கௌஷிக்கும் தனியே அமர்ந்துவிட்டனர் பேசவென்று. உடன் கலைவாணனும் சேர்ந்துகொள்ள ஆண்களின் கூட்டணி தனியானது.
பெண்கள் அனைவரும் அமர்ந்து அரட்டையில் இருக்க ஞானம் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இருந்தார்.
முல்லையின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அதிலும் தன் தாய் வீட்டினர் முகத்தில் தெரிந்த சந்தோஷமே அவளின் நெஞ்சை நிறைத்துவிட்டது.
இதை போய் பிடிவாதத்தால் தகர்க்க பார்த்தோமே என்று எண்ணியவளுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும் என தோன்றியது.
“தேறிடுவ நீ. எனக்கு தேவை தான்…” என்று சொல்லவும் முல்லை முகத்தில் குறும்பாய் இளநகை.
“உஷாக்கா மாடில இன்னொரு ரூம் அன்னம்மா காமிச்சாங்க. சூப்பரா இருக்கு. நாம அங்க மாறிப்போமா?…” என பூங்கொடி வந்து கேட்க,
“அடி வாங்குவ நீ. காலையில குளிச்சு ரெடியான ரூம்லயே இருப்போம். சும்மா எல்லா ரூமையும் யூஸ் பண்ண முடியாது பூவு…” என அதட்டினாள் உஷா.
“போ க்கா, இங்க வீடே அம்சமா இருக்கு. அப்பாட்ட சொல்லி நம்ம வீட்டையும் இது மாதிரி கொஞ்சம் மாத்த சொல்லனும்…” சிறுபிள்ளையாய் பேச,
“பேசாம படிச்சு முடிச்சு இங்கயே வந்திடு பூவு….” என்றாள் முல்லை புன்னகையுடன்.
“கண்டிப்பா வேலைக்கு இங்க வருவேன் பாருங்க…” என்ற தங்கையின் தலையில் குட்டிய உஷா,
“நீ போ நான் வரேன்…” என அனுப்பி வைத்தாள்.
“சரி, நானும் உள்ள போறேன். மழைக்கு கூட எம்புட்டு குளிருது பாரு…” என இரு கைகளையும் தேய்த்தபடி வீட்டினுள் சென்றாள் உஷா.
உஷா செல்லவும் அந்த போர்டிகோவில் பக்கத்தில் சுற்று சுவற்றை ஒட்டியிருந்த சின்ன தோட்டத்தை ரசித்தபடி நின்றாள் முல்லை.
மழைக்கும், காற்றிக்கும் லேசாய் அசைந்தாடியபடி நீர் சொட்ட பசேலென்றிருந்த அந்த செடிகளும், மண் வாசனையும் இதத்தை தந்தது.
“ஹோய்…” என அவளின் வலதுபக்க தோளை தட்டி இடதுபக்கம் வந்து நின்றான் அர்னவ்.
“நீங்களா?…” என கேட்டவள் மீண்டும் வாசல் பக்கம் பார்த்தாள்.
“ஏன் வேற யார் வருவா? எல்லாரும் தூங்கறாங்க…” என்றவன் அந்த திண்டில் அமர்ந்தான்.
“வீடு பிடிச்சிருக்கா முல்லை?…” என கேட்க தலையாட்டினாள் ஆமாம் என்று.
“நம்ம சொந்த வீடு தான். இங்க ஜாப்க்கு வந்தப்போ இங்க உள்ள ஒரு ப்ரெண்ட் இந்த வீட்டை கட்டிட்டிருந்தான். அப்பத்தான் பில்டிங் ஆரம்பிச்ச ஸ்டேஜ். சடனா அவனுக்கு பாரின் ஆப்பர்ச்சுனட்டி வரவும் என்கிட்ட கை மாத்திவிட்டுட்டான்…” என்று சொல்ல,
“ஓஹ்…” என்றாள்.
“என்ன ஓஹ்? அவ்வளோ தானா முல்லை?…”
“இதுல வேற என்ன எனக்கு தெரியும்? நீங்க சொல்றதை கேட்டிட்டிருக்கேன்…”
“ஆனா நீ தெரிஞ்சுக்கனும் தானே?…” என்றவன்,
“இந்த ஏரியால இந்த சரௌண்டிங் ரொம்ப பாஷ். அதே நேரம் நான் நினைக்காத ஒரு விலையில ஈஸியா கிடைச்சது. ப்ரெண்டோட அர்ஜன்ட் & சீக்கிரம் போகவேண்டிய கட்டாயம். அந்த நேரம் அவ்வளோ பல்க் அமௌன் என்கிட்ட இல்லை. லோன், மீதி ஊர்ல அப்பாக்கிட்ட ஏற்பாடு பண்ணி தர சொல்லி முடிச்சேன்…” என அர்னவ் சொல்லவும்,
“எங்கப்பா சொல்லுவாங்க நமக்கு வேணும்னு நினைக்கிறதெல்லாம் நமக்கு அமையாது. நமக்குத்தான் கிடைக்கனும்ன்றது கண்டிப்பா கிடைச்சே தீரும். கால நேரம் கூடி வந்தா எல்லாம் தன்னை போல நடக்கும்ன்னு…” என முல்லை சொல்ல,
“அப்படியா?…” என்றான் தெரியாததை போல.
“நிஜமாவே தான். அதுவும் வீடு, நிலம் வாங்கறது, கல்யாணம் இதெல்லாம் நாம முடிவு பன்றது இல்லை. அந்த சாமி முடிவு பண்ணும்ன்னு சொல்லுவாங்க…” என அவனின் முகபாவனையில் இன்னும் விளக்கமாக முல்லை அவனிடம் சொல்ல,
“நம்ம கல்யாணம் நடந்த மாதிரி. உன் வாழ்க்கைக்குள்ள நான் வந்த மாதிரி. ரைட்?…” என்று அர்னவ் கேட்க ஆமாம் என்றாள் தலையசைத்து.
“என்னாச்சு பேச்சு நின்னுடுச்சு?…” என்றவன் அவளின் கை பிடித்து அருகே அமர வைத்தான்.
“வீடு ஃபுல்லா சுத்தி பார்த்தியா?…”
“ஹ்ம்ம்…”
“நீ மாடிக்கு போகவே இல்லையே. சாமி ரூம், டைனிங் ஏரியா, ஹால் அவ்வளோ தான் இருந்த…”
“இல்லைங்க, பார்த்தேன்…”
“ஓஹ்…” என்றவன்,
“நம்ம ரூம் போனியா?…” என்றதற்கு அவள் விழிக்க,
“எந்த பக்கம் இருக்கு? ஹால்ல இருந்து லெப்ட்டா ரைட்டா?…” என்றான்.
“இதென்ன எக்ஸாம் ஹாலா? இவ்வளோ கொஷின்?…” என முல்லை எழுந்துகொள்ள பார்க்க,
“ப்ச், பதில் சொல்லு முல்லை…” என்றான் அர்னவ் அடக்கப்பட்ட முறுவலுடன்.
“இன்னும் எதையும் பார்க்கலை. வந்ததும் எல்லாரோட இருந்துட்டு சுத்தி பார்க்க தோணவும் இல்லை…”
“சரி இப்ப வா…” என எழுந்து அவளை அழைக்க,
“எல்லாரும் தூங்கறாங்க. டிஸ்டர்ப்பா இருக்கும்…”
“சும்மா வெளில நின்னே பார்க்கலாம் வா…” என சொல்ல வெளியே மழையும் மட்டுப்பட்டது.
அர்னவ்வுடன் உள்ளே செல்ல முதலில் அவன் மாடி பக்கம் அழைத்து சென்றான் மனைவியை.
“கீழே ஒரு ஹால், கிட்சன், பூஜை ரூம், டையனிங் கூடவே ஒரு பெட்ரூம். பர்ஸ்ட் ஃப்ளோர்ல மூணு பெட்ரூம் இருக்கு. அதுக்கு மேல டெரஸ்…” என அழைத்து சென்றவன் முதல் மாடியில் இருந்த பெரிய பால்கனியை காண்பித்துவிட்டு அதற்கு மேல் படியேறினான்.
“அதான் முடிஞ்சதே? அப்பறம் என்ன?…” என்று கேட்க,
“காரணமா தான். வா…” என அழைத்து செல்ல அங்கே முழுவதும் மாடி தோட்டம்.
மாடியில் அத்தனை அழகாய் இருந்தது பார்க்கவே. அவ்வளவும் பூச்செடிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில்.
“உங்களுக்கு இப்படி செடி வளர்க்கறது ஹேபிட்டா?…” என்றாள் அதனை நெருங்கி.
“ஹ்ம்ம், பாபநாசத்துல வீட்டுக்கு பின்னாடி பார்த்த தானே? அதான் இங்கயும் அம்மா வந்து வச்சாங்க. மார்னிங் எழுந்து வந்ததும் மைன்ட் பீஸ் ஃபுல்லா இருக்கும். ஆனா நான் மெயின்டெய்ன் பண்ணலை. ஆள் வருவாங்க…” என ஒவ்வொன்றாய் அவளுக்கு காண்பித்துக்கொண்டே வந்தான்.
“மேல என்ன?…” என்று காண்பித்தாள்.
அதற்கு மேல் ஒரு சிறிய அறை இருக்க அதற்கும் ஆறு படிகள் மட்டுமே இருந்தது.
“இது சும்மா இந்த திங்க்ஸ் வைக்கறது. செடிக்கான உரம், மருந்து இப்படி வைக்க. ஒரு ஸ்டோர் ரூம் மாதிரி…” என்று சொல்லிவிட்டு அர்னவ் செல்ல பின்னால் வந்த முல்லையின் கால் இடறியது.
“ம்மா…” என்ற சத்தத்துடன் அவள் விழ முட்டியில் நல்ல அடி. உடனே அவளை தூக்கி நிறுத்தியவன்,
“என்னாச்சு முல்லை?…” என்றான்.
“இல்ல கால்ல அடிச்சிருச்சு. கவனிக்காம வந்துட்டேன்…” என்றாள் காலை உதறியபடி.
“காலை நல்லா உதறி விடு முல்லை. ரொம்ப வலிக்குதா?…”
“ஹ்ம்ம், தாங்கிக்கற மாதிரி தான்…” என்றவள் நேராய் நிற்க முயல கால் முட்டி எரிந்தது.