ஆழமில்லை என்றாலும் மேல் தோல் உரிந்திருந்தது. முதலில் அதனை சுத்தம் செய்துவிட்டு மருந்தை போட்டுவிட்டவன்,
“கட்டு போடற அளவுக்கு இல்லை. ஓகே தான்…” என்று இன்னும் தன் மடியில் அவளின் காலை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“அதான் உங்க ட்ரீட்மென்ட் முடிஞ்சதே. என் காலை விடுங்க. கீழே வச்சுக்கறேன்…” முல்லை சொல்ல,
“அப்படியா?…” என கேட்டுக்கொண்டே பாதத்தை பிடித்தவன் விரல்கள் அழுத்தம் கூட்ட,
“இன்னும் இந்த வருஷம் கம்ப்ளீட் பண்ணலை நான்…” என்றாள் முல்லை அவன் சொல்லியதை ஞாபகப்படுத்தும் விதமாக முணுமுணுப்பாய்.
அவன் எங்கே வருகிறான் என முல்லைக்கு புரிய மெல்லிய நடுக்கம் அவள் உடல் முழுவதும் நரம்புகளுடன் பின்னி பிணைய தன் விரலின் மோதிரத்தை சுழற்ற ஆரம்பித்தாள் முல்லை.
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள அப்பப்ப அம்னீஷியா வந்து போறது குட் ஃபார் ஃபேமிலி முல்லை…” என்றான் அர்னவ் நமுட்டு சிரிப்புடன்.
“இன்னும் அந்த போட்டோ, உங்க பென் அது,,, அந்த விஷயம் அப்படியே தான் இருக்கு…” என்றாள் மனத்தாங்கலுடன்.
“இருந்துட்டு போகட்டும். எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்…” என்றவன் இப்போது அவளின் காலை கட்டிலில் வைத்துவிட்டு எழுந்துகொண்டான்.
“உனக்கு என்னை முன்னாடியே தெரிஞ்சிருக்கு. பிடிச்சிருக்கு. அந்த பிடிப்பு எந்தவகைன்னு எனக்கு தெரிஞ்சுக்க வேண்டாம். ஆனா உன் மனசுல எப்பவோ நுழைஞ்சிருக்கேன். அது போதும்…” என்று சொல்லிவிட்டு அவளிடம் ஒரு மாத்திரையை நீட்டினான். (www.drogueriasanjorge.com)
“என்ன இது?…” என நிமிர்ந்து அவனிடம் கேட்க,
“ஜஸ்ட் பாராசிட்டமால் தான். இந்த பெங்களூர் க்ளைமேட், மழை எல்லாம் உனக்கு புதுசு. இதுல காயம் வேற. அதான் ஒரு முன்னெச்சரிக்கை…” என சொல்லிவிட்டு தண்ணீரை கொண்டுவந்து தந்தான்.
“கண்டிப்பா போடனுமா?…”
“ஹ்ம்ம், ஆமா. அதுவும் மாடில இருக்கும் போது லேசா தூறல் வேற. போட்டுக்கோ…” என நிற்கவும் வாங்கி போட்டுக்கொண்டாள்.
“குட்…” என்று அவளின் கன்னம் தட்டிவிட்டு நகர்ந்தவன் கையை பிடித்தவள்,
“இப்படி அடி பட்டதை வீட்டுல சொல்லவேண்டாம்…”
“சொல்லமாட்டேன். நீ தூங்கு…”
“நீங்க?…” என அவனை நிறுத்தியதும் புன்முறுவல் புரிந்தவன்,
“இங்க தான் இருப்பேன். ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன் முல்லை…” என்று பாத்ரூம் சென்றான்.
மீண்டும் அர்னவ் வரும் பொழுது முல்லை இன்னும் கொஞ்சமே சரிந்தும் சாய்ந்த நிலையில் தான் கண்களை மூடி இருந்தாள்.
‘அந்த போட்டோ, பென் அப்படியே இருக்கு’ என அவள் சொல்லும் பொழுதே கன்றிய முகத்தை பார்த்தவனுக்கு எதையும் தெரிந்துகொள்ள தோன்றவில்லை.
‘அப்படியே இருக்கட்டுமே? இருந்தால் என்ன?’ என்று தான் எண்ணங்கள் அவள்பால் செல்ல முல்லையின் அருகே வந்து படுத்துவிட்டான்.
மறுநாள் இரவு வரை அங்கே அவர்களுடன் வெளியில் சென்றிருந்தவனால் விடுமுறை எடுக்க முடியாது போக மருத்துவமனைக்கு கிளம்பினான்.
அடுத்த நான்கு நாட்கள் வீடு நிறைய ஆட்கள், பேச்சுக்கள், கலகலப்பு என நேரம் சென்றதே தெரியவில்லை.
ஊருக்கு கிளம்பிய அன்று அனைவரையும் அனுப்ப வந்து நின்றவன் பார்வை முல்லையை விட்டு நகரவில்லை.
செல்ல மனமின்றியே முல்லையும் கிளம்பினாள். உடனிருந்த நிமிடங்கள் ஒவ்வொன்றும் அவளின் பொக்கிஷ தருணங்கள் தான்.
அத்தனை தாங்கினான் அவள் கணவன். அந்த வீட்டை ஒவ்வொரு நிமிடமும் அவளதாக உணர வைத்தான்.
தனக்கு எத்தனை முக்கியம் அவள் என்று முல்லையின் மனதிற்குள் அர்னவ் பதியம் போட்டிருக்க முல்லைக்கு தான் விட்டு செல்ல மனமில்லை.
ஆனாலும் உள்ளுக்குள் ஒரு தவிப்பு. தன்னை என்ன நினைத்துவிட்டான் இவன் என்று.
பஸ் கிளம்ப ஆயத்தமாகிவிட முல்லையின் வீட்டினர் எல்லாம் பஸ்ஸில் ஏற ஆரம்பித்தனர்.
திருச்சி சென்று அங்கே முல்லையை விட்டுவிட்டு அதன் பின்னர் திண்டுக்கல் செல்வதென முடிவாகியிருந்தது.
அன்னக்கிளியும், வனிதாவும் மட்டும் பெங்களூரில் இன்னும் இரு நாட்கள் கழித்து ஊர் செல்லலாம் என இருந்தனர்.
இத்தனை பேர் இருந்துவிட்டு உடனே ஒரே நாளில் எல்லோரும் கிளம்பிவிட்டால் மகனுக்கு கஷ்டம் என சொல்லித்தான் பாபநாசம் கிளம்பி சென்றிருந்தார் கலைவாணன்.
அதன்படி அனைவரும் கிளம்ப முல்லையின் விரலை பற்றியபடி நின்றிருந்த அர்னவ்,
“அடுத்த லெட்டர் எப்போ முல்லை?…” என்றான் அவளிடம்.
“லெட்டரா?…”
“ஹ்ம்ம், ஆமா. உன்னோட லெட்டர். லாஸ்ட் வீக் வரவேண்டியது. இன்னும் வரலையே?…” என கேட்கவும்,
“இனிமே எதுக்கு லெட்டர். நான் தான் உங்களை இம்ப்ரெஸ் பண்ணிட்டேனே?…” என கிண்டலாக சொல்ல அவள் சொல்ல வருவதும் அர்னவ்விற்கு புரிந்தது.
“அப்படின்னு நீயா முடிவு பண்ணிட்டா எப்படி?…” என கேட்க,
“உங்களுக்கு ரூம்ல ஒன்னு வச்சிருக்கேன். போய் படிங்க…”
“என்ன?…”
“நேர்ல தான் சொல்லனும், பேசனும்னு இருந்தேன். ஆனா பேசவோ, சொல்லவோ சந்தர்ப்பமும் அமையலை. சில நேரம் சொல்ல தோணவே இல்லை. ரெண்டுதடவை நீங்க சொல்ல விடலை. ஆனாலும் உங்களுக்கு தெரியனும் தானே?…”
“இதுக்கான பதிலை நீ இங்க நான் வந்தன்னைக்கே சொல்லிட்டேன் முல்லை…” என்று சொல்ல பஸ் ஹார்ன் சத்தம் காதை பிளந்தது.
“நான் கிளம்பனும்…” என கண்ணில் நிறைந்துவிட்ட நீருடன் அவனின் கையை பிடித்திருந்தாள் முல்லை.
“டேக் கேர் முல்லை…” என தன் விரல்களை விடுவிக்க முல்லையின் கைகளுக்குள் சிக்கியிருந்தது அவனின் உள்ளங்கை.
“முல்லை…” என்றவன் பார்வை பஸ்ஸை, சற்று நகர்ந்து நின்றிருந்த தனது தாயை, அருகிருந்த மனைவியை என மாற்றி மாறி தவிப்புடன் பார்க்க,
“போகட்டுமா?…” என்றாள் முல்லை.
எங்கே அழுதுவிடுவாளோ என பயந்துபோனவன் சட்டென அவளை தோளோடு தோள் சேர்த்து அணைத்து விடுத்தான்.
“இப்பத்தான் இதெல்லாம் கேட்பியா நீ?…” என அவளின் உள்ளகையில் வலிக்க கிள்ளியவன்,
“போய்ட்டு வா. அழாம…” என அவளின் கண்களில் இருந்து வழியவிருந்த நீரை துடைத்துவிட்டு அனுப்பினான்.
பேருந்தின் உள்ளே சென்றவள் பார்வையில் இருந்து அவன் மறைந்தாலும் அர்னவ் அங்கேயே தான் நின்றிருந்தான்.
“போவோம் ப்பா சபரி…” என அன்னக்கிளி வரவும் தன்னை சுதாரித்துவிட்டு அவர்களுடன் வீடு சென்றான்.
வெறிச்சோடி இருந்த வீட்டின் அமைதி அவனை இம்சிக்க பெருமூச்சுடன் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
கட்டிலின் அருகிருந்த டீப்பாயில் அவனின் மெடிக்கல் சம்பந்தப்பட்ட புத்தகமும் அதனடியில் முல்லை எப்போதும் அனுப்பும் அந்த லெட்டர்பேடின் காகிதமும் தெரிய ஓரங்கள் மட்டுமே இவனின் பார்வைக்கு இருந்தது.
எப்போதும் அவள் அனுப்பும் மடலில் இறுதியாய் எழுதும் மலரும் முல்லை இதில் இல்லை.
மேலிருந்த எதையும் படிக்க கூட தோன்றாமல் அதனை அப்படியே மடித்து அலமாரிக்கு சென்று உள்ளே வைத்துவிட்டு வந்தான் அர்னவ்.
‘அத்தனை பிடிவாதமா உனக்கு?’ என்றிருந்தவனின் மடல் அந்த வார இறுதியில் முல்லையின் முகவரிக்கு சென்றிருக்க விழி பிதுங்கியது முல்லைக்கு அதனை வாசிக்கும் முன்.
அவள் அனுப்புவதை போலவே அச்சடித்திருப்பான் போலும் என பார்த்ததும் கண்டுகொண்டவள் சந்தோஷம் அந்த எழுத்தில் கழன்றுகொண்டது.
“இதென்ன உங்க ப்ரிஸ்க்ரிப்ஷனா? ஒண்ணுமே புரியலை. என்ன எழுதியிருக்கீங்க?…” அவனை அழைத்தே கேட்டுவிட்டாள்.
“முக்கியமான விஷயமெல்லாம் இப்படித்தான் எழுதுவாங்க. நீ பொறுமையா படிச்சிட்டு பதில் அனுப்பு முல்லை…”
“மாட்டேன்…”
“இந்த முல்லை மலரும் வரை என்னோட ப்ரிஸ்க்ரிப்ஷன்ஸ் தொடரும்…” என்று வைத்துவிட்டான் அர்னவ் சபரிவாசன்.