அர்னவ்விடமிருந்து இப்படி வரிசையாக கடிதங்களை எதிர்பார்க்கவே இல்லை முல்லை.
ஒவ்வொரு கடிதத்தின் கீழும் முல்லை மலருமா என்று முடித்திருக்கும் வாக்கியம் மட்டும் அத்தனை தெளிவாய் அழகான கையெழுத்தில் களையாய் கண்களை பறித்தது.
‘மனைவி முல்லைக்கு’ என்ற ஆரம்பமும், இடையே சில சீண்டல்களும் என்று அவளை சீண்டவென்று ஆரம்பித்தவனின் மடல் பயணம் அதற்குள் இன்னுமாய் அவனை ஈர்த்தது.
தன்னுடைய கடிதம் பார்த்து தனக்கு அவள் அனுப்பவேண்டும் என்றிருந்த ஆர்வம், எதிர்பார்ப்பு எல்லாம் ஏதோ ஒரு இடத்தில் நின்றுபோய் அவள் அனுப்பவில்லை என்றாலும் பரவாயில்லை என பிடித்தே தான் எழுதி அனுப்பினான்.
அவ்வப்போது இடையிடையே அவனின் மனதும் ஆங்காங்கே எழுத்துக்களால் இட்டு நிரப்பப்பட்டுக்கொண்டு தான் இருந்தது முல்லையின் மனதில்.
காதலுக்கு வர்ணனைகள், வாக்கியங்கள் தேவையா என்பதை போல இந்த கிறுக்கல்கள் இருவருக்குமான தனி பரிவர்த்தனையை சுகந்தமாய் நிகழ்த்திக்கொண்டிருந்தது.
கணவனின் வேலையை இங்கே மனைவி மேற்கொண்டாள். அனுப்பிய மடல் வந்து சேர்ந்ததன் அறிகுறியாய் அதனை புகைப்படமாக அவனுக்கு அனுப்பி வைக்க ஆரம்பித்தாள்.
அவ்வப்போதும் சின்ன சின்ன சண்டைகளும் நடக்க அவைகளின் சுவாரஸியங்கள் இன்னுமே அந்த உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.
எதுவும் புரியவில்லை என ஆரம்பத்தில் முறைத்து நின்றவளிடம் முகம் மாறாமல் மெல்லிய சிரிப்புடன் பேசும் பொழுது அவன்மேல் கோபத்தை இழுத்துபிடிக்க தெரியாமல் தடுமாறும் மனைவியின் மீது இன்னுமே பிடித்தம் கூடியது அர்னவ்விற்கு.
“பார்த்துட்டே இருங்க, இதை எதாச்சும் மெடிக்கல் ஷாப்ல கொண்டுபோய் காமிச்சு ட்ரான்ஸ்லேட் பண்ணிக்கலை…”
“பண்ணேன், யார் வேண்டாம்ன்னு சொன்னா?…” என்னும் நமுட்டு சிரிப்பில் தான் வீழ்ந்து போவாள் பெண்.
“என் வொய்ப்க்கு அனுப்பினேன்…” என்று மாற்றி சொல்ல இதனை கொண்டே சில நிமிட வாக்குவாதங்கள் இனிமையாய் சுவை கூட்டி செல்லும்.
ஏக்கங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் இன்னுமே சுகமாய் மனதில் வாசம் சேர்க்க நினைக்கும் பொழுதுகள் முகத்தில் செவ்வரிகளை இழுத்துவிட்டு செல்லும்.
நாட்கள் நத்தை வேகத்தில் எல்லாம் செல்லவே இல்லை. அதன் ஓட்டத்திற்கு ஓட தான் இருவருக்கும் நேரம் வாய்க்கவில்லை.
ஒவ்வொரு நாளும் கண்ணை மூடி கண்ணை திறக்கும் முன் பதமாய் நகர்ந்திவிட்டிருக்க ஆங்கில வருடப்பிறப்பு விடுமுறைக்கு என வரவிருந்த அர்னவ் வரவில்லை.
மருத்துவ கலந்துரையாடல் சம்பந்தமாக மலேஷியாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர்களின் மருத்துவமனையிலிருந்து செல்லும் மருத்துவர்கள் குழுவில் அவனும் ஒருவனாய் இருக்க தவிர்க்க முடியாது போனது.
அன்று அவன் மலேஷியா கிளம்பும் நாள். இன்னும் இரு நாளில் ஆங்கில வருடப்பிறப்பு.
முல்லைக்கு இதன் விஷயமாக முதலிலேயே கடிதம் அனுப்பியிருந்தவன் போனில் அழைத்தும் சொல்லியிருந்தான்.
அர்னவ் செல்லும் விமானம் கிளம்பும் நேரத்திற்கு முன்பே அவனுக்கு அழைத்துவிட்டாள் முல்லை.
“கொஞ்சம் வொர்க் பிரஷர் தான். அதோட இங்க இருக்கற வரைக்கும் ட்யூட்டியும் கரெக்ட்டா பார்க்கனுமே? நைட் ஒரு டெலிவரி. கொஞ்சம் காம்ப்ளிகேட்டட் ஆகிடுச்சும்மா. ரெஸ்ட் இல்லை…”
நீண்ட நெடிய விளக்கமாக அவன் சொல்லவும் மௌனமாக கேட்டுக்கொண்டவள் அமைதியில்,
“எதிர்பாராத ட்ரிப். பட்…” என அர்னவ் இழுக்க,
“அதுல என்ன இருக்கு? இந்த வருஷம் இல்லைன்னா அடுத்த வருஷம்…” என்றாள் சாதாரணமாக.
முல்லை அவன் எங்கே வருந்துவானோ என தன் வருத்தத்தை மறைத்துக்கொண்டு பேச அவனுக்கும் புரியாமலில்லை.
முதல்நாள் தான் திண்டுக்கல் வந்திருந்தாள் முல்லை கல்லூரி விடுமுறை என்பதால்.
வரும் பொழுதே அர்னவ்விற்கு கொடுக்க அவ்வளவு பரிசுகள், அவன் அத்தனை முறை கேட்ட கடிதங்கள் என சேர்த்து வைத்திருக்க கொடுக்கமுடியாமல் போனதில் மீண்டும் தன்னை நொந்துகொண்டாள்.
‘அப்படி என்னடி உனக்கு வீம்பு? வேணும்னு ஒன்னும் பண்ணலையே அவர். எவ்வளவு கேட்டார்? ஒண்ணாச்சும் அனுப்பியிருக்கலாமே? இப்ப உக்கார்ந்து அழு’ என தன்னை தானே திட்டிக்கொண்டாள்.
தவறு தன் மீதும் தானே இருந்தது அந்த புகைப்படம், பேனா இரண்டையும் பற்றி அவனிடம் சொல்ல முடியாமல் மணிமாறன் சொல்லியதை போல நினைத்துவிடுவானோ என அஞ்சி தானே தானும் மறைத்தது.
தான் அப்படியாகிவிடுமோ என நினைக்கலாம், இதையே கணவன் அப்படித்தானா என கேட்டால் ஏன் அதை புரிந்துகொள்ளாமல் போனாய்? என அவனுக்காக அவள் மனமே வாதிட்டது.
இன்னொரு மனமோ அதற்கு உன்னை அப்படி நடுவீதியில் வீசி எறிவதை போல இறக்கிவிட்டு செல்லலாமோ? என கேள்வி எழுப்ப தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
ஒருபக்கம் சுயகௌரவம், இன்னொருபக்கமோ கணவன் மீதான நேசம் கொஞ்சும் நெஞ்சம்.
இரண்டுக்குமிடையே பெண்ணின் தடுமாற்றம் முற்றிலும் தகர்ந்தது அவனின் பேச்சுக்களில்.
காதலாய், கவிதையாய், கணவன் மனைவிக்குள்ளான ஆழமான பேச்சுக்கள் என பரிமாற்றங்கள் எதுவும் நிகழ்ந்ததில்லை. அன்றாட பேச்சுக்கள், சில வார்த்தை விளையாட்டுக்கள் என்று தான் இருவரின் மொழிகள் சங்கமித்த நிமிடங்கள்.
இப்போது இதிலும் சிறு இடைவெளி என்று தான் சொல்ல வேண்டும் அர்னவ் சொல்லியதை வைத்து பார்க்க.
“என்ன முல்லை சைலன்டாகிட்ட?…” என்றான் அர்னவ்.
“ஏர்போர்ட்ல அநோன்ஸ் பண்ணிட்டாங்களா?…”
“இல்லையே ஏன்?…”
“இல்ல ஏதோ ப்ளைட்க்கு சொன்ன மாதிரி இருந்தது. அதான்…” முல்லையின் குரல் இயல்பாய் இருப்பதாய் காட்ட முயல்வதை அர்னவ்வுமே உணர்ந்தான்.
“உனக்கு எத்தனை நாள் லீவ் முல்லை?…” என்றவன்,
“ஆனாலும் இப்போதைக்கு முடியாது தானே? லாஸ்ட் செமஸ்டர் வேற?…” என அவனே சொல்லிகொண்டான்.
‘இல்லையே, வரலாம். நான் பார்த்துக்கறேன். வரேன்’ என உள்ளுக்குள் கூச்சலிடும் மனதின் சத்தம் வார்த்தையாய் அர்னவ்வை அடையவில்லை.
“ஹ்ம்ம்…” என்றுமட்டுமே இயம்பினாள்.
“ஓகே, இன்னொரு டைம் பார்க்கலாம். நீ வந்தாலும் பெரும்பாலும் தனியா இருக்கவேண்டியதாகிடும். அதுக்கு நீ அங்கயே இருக்கலாம்…” என்று முடித்தான்.
“நீங்க சொன்னா சரி தான்…” என்று கூறியவள் அதன் பின் அவன் எப்போது திரும்புவான், அங்கே எங்கு தங்குகிறான் என்னும் விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டாள் முல்லை.
“ஓகே, உன் அக்கவுண்ட்க்கு அமௌன்ட் ட்ரான்ஸ்பர் பண்ணிருக்கேன். உனக்கு பிடிச்ச ட்ரெஸ் பர்ச்சேஸ் பண்ணிக்கோ. அப்படியே எனக்கும் நீயே எடுத்திடு…” என்று சொல்ல,
“பொங்கலுக்கு அண்ணி ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சிருக்காங்களே…”
“ஓகே, அவங்களுக்கு நீ எடுத்து குடு. இப்ப தான் நீ குடும்பத்தலைவியாகிட்ட தானே?…” என்றவனின் சிரிப்பில் மயங்கிய மனதை இழுத்து பிடித்தாள்.
“ஹ்ம்ம்…” என்று மட்டும் கூற,
“முல்லைமலர்…” என்றவனின் ஆழ்ந்த குரல் அவளை அவனருகே அழைத்தது.
“அங்க போய்ட்டு கால் பண்ணுங்க…” என சொல்லி வைத்துவிட்டாள்.
அதிகபட்ச உணர்ச்சியின் பிடியில் இருக்கும் பொழுதுகளில் இப்படியான துண்டிப்புகளை அர்னவ்வுமே கவனித்ததுண்டு.
இன்றும் அப்படி அவள் இருப்பது புரிந்துபோக பெருமூச்சுடன் அழைப்பு நின்றுவிட்ட திரையை பார்த்தான்.
மனைவியின் புகைப்படம். அவள் அனுப்பியது தான். நீக்கமற நெஞ்சில் நிறைந்திருக்கும் அந்த பிம்பம்.
இதழ்களில் அரும்பிய புன்னகையுடன் தனது விமானத்திற்கான அறிவிப்பு வரவும் எழுந்து சென்றான் சக மருத்துவர்களுடன்.
பதினைந்துநாள் பயணம் மேற்கொண்டவனுக்கு உடன் வந்தவர்களால் மேலும் மூன்று நாட்கள் பயணம் நீடித்திருந்தது எரிச்சலாக இருந்தது.
தை பொங்கலுக்கு முல்லையை கலைவாணன் வந்து அழைத்து சென்றிருந்தார் பாபநாசத்திற்கு.
தலை பொங்கல் அங்கே வைத்து என்பதால் முல்லையின் குடும்பத்தினரும் பாபநாசம் வரவிருக்க அதற்கு இருநாட்கள் முன்பே ஒருவாரம் விடுமுறை வேறு என கிளம்பி இருந்தாள் முல்லை மாமனாருடன்.
அவர்கள் அறையில், அவன் மனைவி மட்டும் தனியே. வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தவள் முகம் பசை போட்டதை போல ஒட்டிக்கொண்டது அர்னவ் மனதில்.