பேச்சுக்கள் ஒவ்வொன்றிக்கும் தலையை கோதியபடி வெறும் ‘ஹ்ம்ம்’ மட்டுமே அர்னவ்வின் பதிலாய் இருக்க,
“ரொம்ப வேலைங்களா?…” என்றாள் முல்லை.
“ஆமா, சரி எங்க யாருமில்லாம நீ மட்டும் இங்க இருக்க? அதுவும் இந்நேரம்?…” என்றான் பேச்சை மாற்றும் விதமாய்.
“எல்லாரும் கீழே இருக்காங்க. அம்மாவோட வளையல் என்கிட்டே இருந்தது. நாளைக்கு அம்மாவும், அண்ணன் அண்ணியும் ஊருக்கு கிளம்பறாங்கல. அதான் எடுத்து குடுக்க வந்தேன். நீங்க கூப்பிட்டீங்க…”
“இன்னும் எத்தனை நாள் இங்க இருப்ப முல்லை?…”
“மூணு நாள் லீவ் இருக்கு. அத்தை இருந்துட்டு இங்கருந்தே மாமாவை கொண்டு போய் காலேஜ்ல விட சொல்றேன்னு சொல்லியிருக்காங்க. நான் இங்க வந்து தங்கவே இல்லைல. அதான்…”
“ஓகே, இரு. அவங்களுக்கும் உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணின மாதிரி இருக்கும் முல்லை…”
“அதனால தான் அம்மாவும் சரின்னு சொல்லிட்டாங்க…” என்றாள்.
“ஓகே, என்ஜாய்…” என்றவனோடு பேசிக்கொண்டே கீழே சென்றாள்.
ஒவ்வொருவரும் பேசி முடித்து மீண்டும் முல்லையின் கைக்கு அவள் போன் வரவே இருபது நிமிடமானது.
பேசியபடி பின்னால் படித்துறைக்கு செல்ல ஆற்றில் நீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது.
மாலை நேர காற்று ஜில்லென்ற மோத மழை வரும் போலிருந்தது அந்த வானிலை.
“மழை வரும் போல?…” என்றாள் வானத்தை அண்ணார்ந்து பார்த்து.
“ஹ்ம்ம், வரட்டும்…” என சொல்லியவன் கண்களில் அவள் மேல் சிதறி விழுந்த மழை துளியின் சொட்டுக்கள் பட்டு திரையில் தெறிக்க,
“நமக்கு விருந்து வைக்கனுமாம். நாம சேர்ந்து வந்திருந்தா திருநெல்வேலி வர சொல்லலாம்ன்னு இருந்தாங்களாம்…”
“அவ்வளோ தானா? அவங்க இன்னும் பேசிருப்பாங்களே?…” என்றவன் அவளை அங்கிருந்து கிளப்புவதில் தான் இருந்தான்.
“நான் வைக்கறேன், நீ உள்ள போ. நாளைக்கு பேசறேன்…” என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டு அன்னக்கிளிக்கு அழைத்தான்.
“ம்மா முல்லையை உள்ள கூப்பிடுங்க. வெளில மழை பெய்ய ஆரம்பிக்குது. இவ படித்துறையில உக்கார்ந்திருக்கா…” என்றதும்,
“பாரேன் பேச்சுவாக்குல நான் மறந்துட்டேன். இந்தா போய் கூப்பிடறேன்…” என எழுந்துகொள்ள பார்த்தார் அன்னக்கிளி.
“நீங்க பேசுங்கம்மா, நான் போய் கூட்டிட்டு வரேன்…” என்று உஷா சொல்லி செல்ல,
“ம்மா, நாளைக்கு முல்லை வீட்டுல கிளம்பறதா சொன்னா. கூட ஒருநாள் இருந்துட்டு போயிருக்கலாமே?…”
“அதான் சொல்லிட்டிருக்கேன் பா. நேத்து நைட் தான் வந்தாங்க. இன்னைக்கு பொங்கல். இன்னைக்கு சாயங்காலமே கிளம்பனும்னு சொல்லி நான் தான் பிடிச்சு வச்சிருக்கேன்..”
“ஆமா சபரி, இதென்ன ஊர்ல நாட்டுல இல்லாத தலை பொங்கலா இருக்கு? அதெப்படி சபரி வராம இருப்பான்? அதுவும் மகனில்லாம பொண்ணையும், அவ குடும்பத்தையும் மட்டும் சீராட்டறீங்கன்னு நக்கலா பேசி வாங்கி கட்டிட்டு போனா…”
“சரி விடுங்க. அவங்க குணமே அதானே?…”
“சூழ்நிலையும் அப்படி அமையுது பாரு. அதான் முடியலை. சரிப்பா நீ உடம்பை பார்த்துக்கோ. வேலை முடிஞ்சது நேரமிருந்தா முல்லையை நேர்ல பாரு…”
“இன்னும் லாஸ்ட் செமஸ்டர் மட்டும் தானேம்மா? முடிஞ்சிரும். அப்பறம் என்னோட தானே இருப்பா?…”
“எல்லாம் நல்லா தான் பேசற. எத்தனை தான் இருந்தாலும் நீ இல்லாம அந்த பொண்ணு மட்டும் இங்க இருக்க எவ்வளோ கஷ்டம்? எல்லாம் விசாரிக்கறோம்ன்னு வந்து கேலி பேசிட்டு போறாங்க. நானும் எவ்வளோ சமாளிக்க?…” என்றார் மகன் மீது கண்டனத்துடன்.
“ப்ச், சூழ்நிலை ம்மா. பார்த்துக்கலாம் விடுங்க…” என்றவன் முல்லை உள்ளே வந்தாகிற்றா என கேட்டுவிட்டு பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
அன்னக்கிளி சொல்லியது தான் யோசனையிலும் யோசனை. இன்னும் மூன்று நாட்கள் இங்கே ஏன் என தோன்றியது.
கான்பெரன்ஸ் முடிந்து கிளம்ப வேண்டியது தான். உடன் வந்திருப்பவர்கள் இளைப்பாற எடுத்த மூன்று நாட்களை தான் மட்டுமே ரத்து செய்துகொண்டான்.
இந்த விடுமுறையை விட்டால் அடுத்து மனைவியின் இறுதி தேர்வு வரை பெரிதாய் அவளுடன் உடனிருக்கமுடியாது.
சட்டென ஒருநிலைப்பாட்டில் வந்து நின்றவன் வேகமாய் ஊர் செல்வதற்கான விமானங்களை பார்வையிட்டான்.
தன்னுடன் வந்திருக்கும் மருத்துவர்களிடம் பேசிவிட்டு மேனேஜ்மேண்டில் தகவலை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் அர்னவ்.
இங்கிருந்து கேளிக்கைகளில் நேரம் செலவிடுவதை ஏற்கனவே தேவையில்லாதது என்று நினைத்திருந்தவன்.
அதில் நாட்டமில்லாமல், மற்றவர்களுக்காக இருக்க நினைத்து இப்போது ஒருமனதாய் முடிவெடுத்து கிளம்பியும் விட்டான்.
யாருக்கும் சொல்லவில்லை. மலேஷியாவில் இருந்து சென்னை வந்து சேர்ந்தவன் அங்கிருந்து மதுரைக்கு விமானம் மாறி பாபநாசம் வந்து சேர ஒருநாள் முழுதாய் சென்றிருந்தது.
யாருக்கும் சொல்லாமல் வருவதும் கூட ஒருவித சுவாரஸியமாக இருக்க வீட்டு வாசலில் வந்து இறங்கியவனுக்கு லேசாய் சாற்றியிருந்த கதவு தான் தென்பட்டது.
வந்த பின்னுமே உள்ளிருந்து ஒருவரும் வாசலுக்கு வரவில்லை. கதவை திறந்து பயண பெட்டியை உள்ளே வைத்தவன் ஒவ்வொரு அறையாக தேட பின்பக்கம் மட்டுமே சப்தம் கேட்டது.
எல்லோரும் பின்னால் இருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன் செல்ல அங்கே மனைவி மட்டுமே வனிதாவின் மகள், மற்றும் அக்கம்பக்கத்து பிள்ளைகளுடன் நடனமாடிக்கொண்டிருந்தாள்.
முதன் முதலில் அவளின் நாட்டியம் பார்ப்பவன் பார்வையில் ரசனை விளைய சத்தமின்றி நின்றிருந்தான் அர்னவ்.
கீதாவுக்கு சொல்லி தந்து கொண்டிருந்தாள் முல்லை. தப்பும் தவறுமாய் கீதா கற்றுக்கொண்டிருக்க ஒவ்வொன்றையும் திருத்தி சொல்லியபடி இருக்க பிள்ளைகள் ஒவ்வொன்றும் எனக்கு என்று முன் வந்தது.
மறைவாக நின்று சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு கால்கள் வலிக்க முன்னால் சென்றான்.
“நானும் வரலாமா?…” என கேட்கவும் அத்தனைபேரும் சட்டென திரும்பி பார்க்க பார்த்ததும் அர்னவ்வை வந்து சூழ்ந்துகொண்டனர் பிள்ளைகள்.
முல்லையின் கண்கள் விரிந்து சுருங்கி கனவா, நிஜமா என கிள்ளி பார்த்துக்கொண்டிருக்க அந்த பாவனையை இதழ்விரியா புன்னகையுடன் உள்வாங்கிக்கொண்டான் அர்னவ்.