இரு நாட்களாக ஜலதோஷத்தில் இருந்தவள் அன்று காய்ச்சல் வேறு வந்திருக்க முகமெல்லாம் வாடி இருந்தது.
முல்லைமலர் திருச்சி பொறியியல் கல்லூரி ஒன்றில் முதுகலை படிப்பில் இறுதி வருடத்தில் இருக்க ஜெகதா அவளின் உடன் பயிலும் வகுப்பு மாணவியும் தோழியும்.
இருவருமே தனியார் பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். அன்று விடுமுறை என்பதால் வெளியில் செல்லாமல் விடுதியில் இருந்தனர்.
முல்லைமலர் கலைந்திருந்த தன் கூந்தலை அள்ளி கொண்டையிட்டவள் எழுந்து முகம் கழுவிவிட்டு வர ஜெகதா இடுப்பில் கைவைத்து முறைப்புடன் பார்த்தாள் அவளை.
“என்னதான்டி உன் பிரச்சனை? டேப்லெட் போட்டதுல கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். இப்ப என்ன? சூடா சாப்பிடனும். அதானே?…”
“இதுக்கா நான் சாப்பிட முன்ன உனக்கு எடுத்துட்டு வந்து குடுத்துட்டு எழுப்பிவிட்டுட்டு போனேன்?…” என ஜெகதா சத்தம் போட்டாள்.
முல்லை ஒரு சார்ஜிங் டிபன் கேரியரில் ஜெகதா கொண்டுவந்திருந்த ரசம் சாதத்தை அதில் போட்டு ப்ளக்கை மாட்டி ச்விட்சை போட்டுவிட்டு எப்படி என புருவம் உயர்த்த தலையில் அடித்துக்கொண்டாள் ஜெகதா.
“அதான் சாப்பிட போறேன்ல. போ போ…” என்றவள் உணவு சூடாகவும் கொஞ்சமாய் சாப்பிட வாய் கசப்பில் சுத்தமாய் இறங்கவில்லை.
கண்ணில் கத்தியை வைத்துக்கொண்டு பார்ப்பதை போலிருக்கும் தோழியை வைத்துக்கொண்டு வேண்டாம் என்றும் சொல்லமுடியாமல் விழுங்கியவளிடம் அடுத்ததாக மாத்திரையை நீட்டினாள் ஜெகதா.
“உன்னோட ரோதனைடி…” முல்லை அலுத்துக்கொள்ள,
“உங்கம்மாவுக்கு கால் பன்றேன். அவங்கட்ட சொல்லேன்…”
“ஆத்தீ, அதெல்லாம் வேண்டாம். நேத்தே என்ன டல்லாருக்கன்னாங்க அம்மா. தலைவலின்னு சமாளிச்சிட்டேன். சும்மா இருக்கமாட்டியா நீ…” என அதட்டிய முல்லை மாத்திரையையும் விழுங்கிவிட்டு மீண்டும் மொபைலுடன் வந்து படுத்துக்கொண்டாள்.
“நாளைக்கு டெஸ்ட் இருக்கு முல்லை, உடம்பு சரியானா தான் செய்ய முடியும். ஒழுங்கா தூங்கு…” என அவள் கையிலிருந்த மொபைலை பிடுங்கி வேறிடத்தில் வைத்துவிட்டு தன் கட்டிலில் படுத்தாள்.
“மணி மூணாக போகுது. இப்ப தூங்கினா நைட் தூக்கமே வராது ஜெகா…” என்ற முணுமுணுப்பு ஜெகதாவை எட்ட,
கல்லூரியில் முல்லையின் திருமணம் அறிந்திருந்த இரண்டாம் ஆள் அவள் தோழி ஜெகதா மட்டுமே.
எங்கே அர்னவ்விற்கு அழைப்பு விடுத்து சொல்லிவிடுவாளோ என்ற அச்சத்துடன் கண்ணை மூட சற்று நேரத்தில் மருந்தின் வீரியத்தில் உறங்கியும் இருந்தாள்.
மனதிற்குள் நினைவெல்லாம் அவனிடம் மட்டுமே நிலைபெற்றிருக்க மூடிய இதழ்களில் வந்து மோதியது சிறு புன்னகை.
இரண்டு நாட்களாக ஜலதோஷம் கண்டு, இதோ காய்சாலும் லேசாய் இருக்க வீட்டிற்கும் தகவல் சொல்லவில்லை. கணவனுக்கும் சொல்லவில்லை.
எதையும் தெரியப்படுத்த விரும்பவில்லை முல்லைமலர். இப்போது தான் தனது திருமணம் குறித்தான பேச்சுக்கள் அடங்கி இருந்தாலும் இன்னும் இருவரும் தனி தனியே இருக்க அந்த பேச்சையும் தன் குடும்பம் கடந்துவர வேண்டி இருந்தது.
எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டதாக இருந்தாலும் மனதிற்கு பிடித்தமான திருமணமே.
அதை எங்கேயும், யாரிடமும் அந்த திருமணத்தை அவள் மறுக்கவில்லை. அவனிடம் கூட.
இப்போதும் தனது செயல்களை அவனிடம் சிறுக சிறுக சேர்ப்பித்து கொண்டு தான் இருக்கிறாள் தனக்கு விருப்பமான விதத்தில்.
இப்படியே காலம் கடந்தாலும் சரி. கொண்ட உறவு கலைந்துவிடாமல் இருந்தால் போதுமானதாக இருந்தது.
கடிதங்கள் மூலம் பேசும் பெண்ணவள் அலைபேசியில் பேசிய வார்த்தைகள் விரல்விட்டு எண்ணிவிட கூடியவையாகவே இருந்திருந்தது.
அதற்கு அவனும் பெரும் காரணம் என்றால் மிகையில்லை. அவனாக அழைப்பவன் ஓரிரு பதில். இல்லை குறுஞ்செய்தி.
இருவரின் குரல்கள் ஒன்றையொன்று ஸ்பரிசித்துக்கொண்ட தருணம் என்பது திருமணம் முடிந்த பொழுதில் மட்டுமே.
ஐந்து மாதத்திற்கு பின் இதோ இந்த தலைதீபாவளியில் தான் சந்திக்க போவதாக இருக்க அவன் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை.
‘வரமாட்டாங்க. கண்டிப்பா எதாச்சும் ரீசன் சொல்லிருவாங்க’ என நினைத்தவள் அதற்கான பதிலை அவனிடம் கேட்கவும் இல்லை.
நன்றாக உறங்கி எழுந்தவள் மனதும், உடலும் தெளிவாய் இருக்க எழுந்ததும் வீட்டிற்கு அழைத்துவிட்டாள்.
“பாப்பா, எப்படிடா இருக்க?…” என தாய் ஞானம் கேட்க,
“நல்லாயிருக்கேன் ம்மா. நீங்க என்ன பன்றீங்க?…” என்றாள்.
“ஆத்மி குட்டிக்கு சாப்பாடு ஊட்டறேன். நீ தூங்கி இப்ப தான் எழுந்தியா? நேத்து தலைவலின்னு சொன்ன? இப்ப பரவாயில்லையா? ஆமா நைட் சாப்பிட்டாச்சா? இனிமே தானா?…”
வரிசையாய் கேள்விகள் தாயிடமிருந்து. தன் அண்ணன் மகளுக்கு உணவை ஊட்டிக்கொண்டிருந்தவர் மகளிடம் இத்தனை கேட்க,
“தலைவலி இப்ப இல்லை. இனி தான் சாப்பிடனும். ஜெகதா பாத்ரூம் போயிருக்கா. வரவும் கீழே போகனும். நீங்க சாப்பிட்டாச்சா?…”